பெண்ணால் முடியும்! : இராணுவ அதிகாரியாய் விவசாயியின் பெண்!

2022 பெண்ணால் முடியும் ஜூன் 16-30 2022

லட்சியக் கனவோடு பயணம் செய்யும் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எத்தனை இடர்ப்பாடுகள் வந்தபோதும் சோர்வடையாது, அந்தப் பயணத்தில் வெற்றிக் கனியை ஒருநாள் வென்றே தீருவர். அப்படி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு குக்கிராமத்-தில் பிறந்து, குடும்பம், விவசாயம், கால்நடைகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் 23 வயதேயான சரண்யா, மிக விரைவில் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக நுழையவிருக்கிறார்.

அண்மையில் நடந்த எஸ்.எஸ்.பி (Service Selection Board) எனப்படும் ராணுவ உயரதிகாரி-களுக்கான தேர்வில் நாடு முழுவதும் இருந்து 190 பேர் கலந்துகொண்டனர்; அய்ந்து பேர்தான் வெற்றி பெற்றனர். அதில் சரண்யாவும் ஒருவர். அவருடைய பயணத்தைப் பற்றிக் கூறுகையில், “அப்பா, அம்மா, நான் விவசாயக் குடும்பம். அப்பா, அம்மா எட்டாம் வகுப்புவரை படிச்சிருக்காங்க. தங்கச்சி பள்ளியில் படிக்-கிறாள். ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடுறது, தண்ணி காட்டுறது, சொட்டு நீர் டியுப் இழுக்கறது, களை எடுக்கறதுனு எல்லா விவசாய வேலைகளையும் செய்வேன். சின்ன வயசுல இருந்தே கபடியில ஆர்வம் அதிகம்.
காலேஜ் படிக்கறப்ப நான் என்.சி.சி உறுப்பினரா இல்ல, இருந்தாலும் மிலிட்டரினா என்ன, எப்படி இருக்கும்னு நிறைய பேர்கிட்ட கேட்டுட்டே இருப்பேன். சிவில் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, ஒரு அய்.டி. கம்பெனில வேலை-பார்த்தேன். நல்ல சம்பளம். ஆனாலும், அங்க வேலை செஞ்சப்போ கபடி விளையாட முடியல. எனக்கு ஒரே இடத்துல உக்காரப் புடிக்காது என்பதால், வேலை என் இயல்பை ரொம்பப் பாதிச்சது. அதனால வேலைய விட்டுட்டு மறுபடியும் கபடி விளையாட ஆரம்பிச்சுட்-டேன். ஸ்டேட் மேட்ச் வரை ஆடினேன்’’ என்கிறார்.
மேலும், சரண்யா கூறுகையில், “வேலைய ரிசைன் பண்ணிட்டு, ஆறு மாசம் கபடி விளையாடிட்டு இருந்தேன். போன ஜூன் மாசம், ராணுவத்துக்கான தகுதித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கிற, கோவையில் உள்ள தனியார் ‘ஆபீசர்ஸ் ப்ரிபேரிங் அகாடமி’யில சேர்ந்தேன். ஆரம்பத்துல ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. மூணு நிமிஷத்துக்குத் தொடர்ச்சியா இங்கிலீஷ்ல பேசி தினமும் வீடியோ எடுத்து அனுப்பணும். ஆரம்பத்துல நான் 50, 60 முறை-யெல்லாம் வீடியோ டேக் எடுத்திருக்கேன்.

மூணு மாசம் கழிச்சு, மறுபடியும் போய்ச் சேர்ந்தேன். இதுக்கப்புறம் அவங்க நம்மைத் தூக்கக் கூடாதுனு உறுதியோட, ஒவ்வொரு டாஸ்க்கையும் பண்ணினேன். என் முன்-னேற்றத்தை என்னாலேயே உணர முடிஞ்சது. அகாடமியில எனக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுத்தாங்க. போபால், பெங்களூர்னு அடுத்தடுத்து ரெண்டு தேர்வுகள். ஆனா, ரெண்டுலயும் ஸ்கிரீன்டு அவுட் (Screened out) ஆகிட்டேன். என்ன தப்பெல்லாம் பண்ணி-னேனோ அதையெல்லாம் சரி-பண்ணிட்டு மூணாவது அட்டெம்ப்ட்டுக்காக அலகாபாத் போனேன். ஸ்கிரீனிங், கான்ஃபரன்ஸ்னு ரெண்டு தேதிகள்லயும் ரிட்டர்ன் டிக்கெட் புக் பண்ணிருந்தேன். ஸ்கிரீன்டு இன் ஆனப்போ, அவ்ளோ சந்தோஷத்தோட அன்னிக்கு புக் பண்ணியிருந்த டிக்கெட்டை கேன்சல் பண்ணினேன். மொத்தம் 4 நாள்ல 17 டெஸ்ட். ஒவ்வொரு டெஸ்ட்டையும் முடிச்சப்போ வேற லெவல் கான்ஃபிடன்ஸ் கிடைச்சிருந்தது’’ என்ற சரண்யா நன்றியுடன் தன் பயிற்சியாளர், முன்னாள் ராணுவ வீரர் லெப்டினன்ட் ஈசனுக்கு நன்றி கூறினார்.

சரண்யா, “190 பேர் அலகாபாத்ல ரிப்போர்ட் பண்ணினோம். 26 பேர்தான் ஸ்க்ரீன்டு இன் ஆனோம்.அதுல அஞ்சு பேர்தான் க்ளியர் பண்ணி ராணுவப் பணிக்கு ரெக்கமண்ட் ஆகியிருக்கோம். அந்த அஞ்சு பேர்லயும் மூணு பேர் ராணுவப் பின்னணியில இருந்து வந்தவங்க. இன்னொருத்தரோட அப்பா பிசினஸ்மேன். கிராமத்து விவசாயக் குடும்-பத்துல இருந்து போய் அந்த அஞ்சு பேருல நானும் ஒருத்தியா நிக்குறது ‘கெத்தா’ இருக்கு. என் பெயரை அறிவிச்சப்போ, கண்ல இருந்து தண்ணி நிக்காம வந்துட்டே இருந்துச்சு’’ என்று பரவசமானவர்.
“அடுத்து மெரிட் பயிற்சி. டாப் மெரிட்ல வரணும். எல்லை ஒருங்கிணைப்புல இன்ஜினீயர்ஸ் பிரிவுக்குப் போகணும். யாருமே போக முடியாத காட்டுக்குள்ள எல்லாம் போய் நம்ம ராணுவத்துக்காக ரோடு போடுறது. கண்ணி வெடி எடுக்குறதுன்னு நிறைய வேலைகள் இருக்கும். சவால்கள் அதிகரிக்க அதிகரிக்கத்தான் என் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்’’ என்கிறார் சரண்யா.