வரலாற்றுச் சுவடுகள் – அகில இந்திய சங்கீத மகாநாட்டில் பார்ப்பனிய விஷமம்

2023 மற்றவர்கள் மே-16-31,2023 வரலாற்றுச் சுவடுகள்

– தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள்

சென்னையில் கிறிஸ்துமஸ் வாரத்தில் அகில இந்திய சங்கீத மகாநாடு என்பதாக ஒன்றைக் கூட்டுவதாக சில பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்து சங்கீத வித்வான்களுக்கெல்லாம் அழைப்புக் கடிதம் எழுதியதுடன், அங்கு பாட வேண்டுமென்றும் சில பிரபல சங்கீத வித்வான்களைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுள் தென் இந்திய சங்கீத மணியாகிய ஸ்ரீமான் காஞ்சிபுரம் சி. சுப்ரமணியபிள்ளை அவர்களும் ஒருவர். ஆனால், அவர் பார்ப்பன சங்கீத வித்துவான்களால் பலவித துன்பமும் இடையூறும் அனுபவித்துப் பழகியவரானதால் சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்
பட்டுத்தான் தாம் வரமுடியுமென்று எழுதி விட்டார்.

நிபந்தனைகளாவன : 1. தனக்குப் பாடுவதற்கு 2 மணி நேரம் கொடுக்க வேண்டும், 2. கச்சேரி முடிந்தவுடன் தனக்குச் செய்ய உத்தேசித்திருக்கும் மரியாதையைச் செய்ய வேண்டும் என்பது. மகாநாட்டு உபதலைவராகிய ஸ்ரீமான் சி.ஆர். சீனிவாசய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனர்ஸ்ரீ சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு “அந்தப்படியே நடக்கும். ஆட்சேபணை இல்லை. தாங்கள் சொல்லும்படி வைத்துக்கொள்ள மாட்டேன். அவசியம் வரவேண்டும்’’ என்று எழுதி விட்டார். அந்தப்படியே ஸ்ரீ பிள்ளை அவர்களுக்கும்

4:00 மணி முதல் 6:00 மணி வரை சாவகாசம் கொடுத்திருப்பதாய் சம்மதம் எழுதிவிட்டார்கள்.

அந்தப்படியே ஸ்ரீமான் பிள்ளையவர்கள் சரியாய் 03:55 மணிக்கு கொட்டகைக்குப் போனார். உடனே ஸ்ரீ சீனிவாசய்யங்கார் எழுந்து வந்து ஸ்ரீ பிள்ளையவர்களை வெகுமரியாதையாய் அழைத்துப் போய் மேடையில் உட்கார வைத்து, இது சமயம் வேறு ஒருவர் பாடிக் கொண்டிருப்பதால் சற்று பொறுக்கும்படி கேட்டார். ஸ்ரீ பிள்ளையும் சம்மதித்து உட்கார்ந்திருந்து சரியாக 04:30க்கு பாட அனுமதி கிடைத்ததும் பாடத் தொடங்கினார். ஸ்ரீ சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் பாடுவதைக் கேட்ட ஜனங்கள் ஆனந்த பரவசமாகிக் கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த பார்ப்பன சங்கீத வித்வான்களுக்கு மனம்பொறுக்காமல் எப்படியாவது இதை நிறுத்திவிட வேண்டும் என்பதாக சூழ்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தாங்களாக நேரில் வந்து எதுவும் செய்ய முடியாததால் வடநாட்டு சங்கீத வித்துவானாகிய ஸ்ரீ திகம்பரர் என்பவரைப் பிடித்து ஸ்ரீ பிள்ளையவர்கள் பாடிக் கொண்டிருக்கும்போது அவரிடம் போய் நிறுத்திவிடச் சொல்லும்படி ஏவி விட்டு விட்டு இவர்கள் மறைந்து கொண்டார்கள்.

அவர் இந்தப் பார்ப்பனர்பேச்சைக் கேட்டுக்கொண்டு, கொஞ்சமும் மரியாதை இல்லாமல், பாடிக் கொண்டிருந்த ஸ்ரீ பிள்ளையிடம் வந்து, நிறுத்திவிடு நேரமாய் விட்டது’ என்று சொன்னார். அவ்விடம் சபையில் அக்கிராசனம் வகித்திருந்த சபைத் தலைவர் டாக்டர் யூ. ராமராவ் அவர்கள் ஸ்ரீ திகம்பரரை ஆட்சேபித்து, “அவர்களுக்கு 7:00 மணி வரையும் பாடும்படி நான் அனுமதி கொடுத்திருக்கிறேன். சபையோர்கள் 07:30 மணிவரையில் அவர்கள் பாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் அவர் பாடட்டும், நீங்கள் ஆட்சேபிக்காதீர்கள்” என்று எல்லோருக்கும் தெரியும்படியாகவே பிளாட்பாரத்திற்கு எழுந்து வந்து சொன்னார். ஸ்ரீ திகம்பரர் இதற்கு ஒப்புக் கொள்ளாமல் சத்தம் போட்டார், சபையோர் கேட்டுக் கொண்டும், தலைவர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் கேட்காமல் ஸ்ரீ திகம்பரர் சத்தம் போட்டதால் ஸ்ரீ பிள்ளை அவர்கள் ஸ்ரீமான் சி.ஆர். சீனிவாசய்யங்காரைத் தேடிச் சுற்றிலும் பார்த்தார். அவர் மறைந்து கொண்டார். பிறகு நிவர்த்தியில்லாமல் ஸ்ரீ பிள்ளை அவர்கள் சபையோர் இஷ்டத்திற்கும் தலைவர் இஷ்டத்திற்கும் முன் ஏற்பட்ட கண்டிஷன்களுக்கும் விரோதமாய் பேசாமல் அவமானத்துடன் எழுந்து போக வேண்டியதாய் நேர்ந்து விட்டது.

தவிர கச்சேரி முடிந்தவுடன் சன்மானம் செய்வதாய் ஒப்புக் கொண்ட இந்த பார்ப்பன வித்துவானான ஸ்ரீ சீனிவாசய்யங்கார் அங்கு
ஏதாவது கொடுப்பதானால் ஸ்ரீபிள்ளையைப் பற்றி ஏதாவது சில வார்த்தைகள் பெருமையாய்ப் பேச வேண்டிவருமே என்கின்ற பொறாமையாலும், சபையோருக்கு ஸ்ரீ பிள்ளை அவர்களை அறிமுகப்படுத்த வேண்டி வருமே என்கின்ற கெட்ட எண்ணத்
தாலும் பேச்சுப்படி நடக்காமல் ஒளிந்து கொண்டார். தவிர, மகாநாட்டுக்கு வந்திருந்த வித்வான்களுக்கு எல்லாம் பதக்கம் வழங்குவதற்கு ஒரு தினத்தை ஏற்பாடு செய்து அன்று வரும்படி எல்லா வித்வான்களுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பிவிட்டு ஸ்ரீசுப்பிரமணியபிள்ளை அவர்களுக்கு மாத்திரம் அனுப்பவேயில்லை. பல வழிகளிலும் சூழ்ச்சி செய்வதல்லாமல் சங்கீத வித்தையிலும் கூட பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்களை  முன்வரவொட்டாமலும் அவர்களது

யோக்கியதையை வெளியாக விடாமலும் அழுத்தி வைக்க எவ்வளவு மோசங்கள் செய்து வருகின்றார்கள் என்பதை பொது ஜனங்கள் உணருவதற்காகவே இதை எழுதுகிறேன்.

‘குடிஅரசு’, 19.02.1928