பெரியார் பேசுகிறார் – டாக்டர் அம்பேத்கர் உலகறிந்த பேரறிஞர் ஆவார்

2023 ஏப்ரல் 1-15,2023 கட்டுரைகள் பெரியார் பேசுகிறார்

தந்தை பெரியார்

அம்பேத்கர் அவர்கள் மனிதத் தன்மையில் தீவிரமான கருத்தும் தைரியமான பண்பும் கொண்டவர் ஆவார். அவர் சமுதாயத் துறையில் தைரியமாக இறங்கிப் பாடுபட்டவர். மக்களால் பெருமையாகப் பாராட்டப்பட்ட காந்தியாரையே பிய்த்துத் தள்ளியவர்! எப்படி ஜின்னா அவர்கள் நடந்து கொண்டாரோ அது போல மதத்துறையினை சின்னாபின்னப்படுத்தியவர். காந்தியாரால் சமுதாயத் துறைக்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை. கேடுகள் தான் வளர்ந்து இருக்கின்றது என்று புத்தகம் எழுதியவர்.
இவர் ராமாயணத்தையும் மனுதர்மத்தையும் கொளுத்தியவர்.
பார்ப்பனர்களால் பெருமையாகக் கொண்டாடப்படும் கீதையை பைத்தியக்காரன் உளறல் என்று துணிந்து கூறியவர்.
எப்படி காந்தி ஒருபார்ப்பானால் கொல்லப்பட்டாரோ அது போலவே இவரும் கடைசியாக பார்ப்பன சூழ்ச்சியால் கொல்லப் பட்டார். அது அதி
சயம் இல்லை. இது போன்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்களால் கொல்லப்பட்டுள்ளார்கள். சமண, பவுத்தர்கள் கொல்லப்பட்டது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

அம்பேத்கர் அவர்கள் வட்ட மேஜை மாநாட்டில் காந்தியார் அரிஜனங்களின் தலைவர் என்று கூறியபோது, ‘‘நான் உங்களுக்குப் பல தடவைகள் கூறி இருந்தும் நீங்கள் மனம் கூசாது, அரிஜனங்களின் தலைவர் என்று கூறிக் கொள்கிறீர்களே’’ என்று கேட்டார். காந்தியால் எதிர்த்துப் பேசமுடியவில்லை. இங்குள்ளவர்கள் எல்லாம் அம்பேத்கர் அப்படிப் பேசியதற்காக கூப்பாடு போட்டார்கள். அம்பேத்கர் கூறினார். “தாழ்த்தப்பட்டவர்களுக்கு. நீங்கள் உண்மைத் தலைவராக இருந்தால் என்னை ஏன் இங்கு அழைத்து இருக்கின்றார்கள்” என்று காந்தியைக் கேட்டவர்.

சமுதாயக் கேடுகள் ஒழிய, ஜாதி ஒழிய, கடவுள், மதம் சாஸ்திரங்கள் ஆகியவை ஒழிய வேண்டும் என்று துணிந்து கூறியவர் ஆவார். இந்தத் தென்னாட்டில் அல்ல; இதை விட மூடநம்பிக்கைகள் மலிந்த வடநாட்டில் துணிந்து எடுத்துக் கூறிப் பாடுபட்டவர்.
அம்பேத்கர் அவர்களின் நாளை கொண்டாடுகின்றோம் என்றால் அவர் கொள்கையை நாம் தெரிந்து கொள்ளவேயாகும். எப்படி திராவிடர் கழகம் காங்கிரசை வெளுத்து வாங்கி வந்ததோ அதுபோல அம்பேத்கரும் காங்கிரசின் வண்டவாளங்களை எல்லாம் எடுத்து வெளுத்துக் கட்டியவர். சமுதாயத் துறையில் பிற்படுத்தப்பட்டவர்கள், சமுதாயத் துறையில் முன்னேற்றம் அடைவதைத் தடை செய்ய ஏற்படுத்தப்பட்டது தான் காங்கிரஸ் என்று கூறியவர்.

பானர்ஜி என்ற காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர் காங்கிரஸ் தலைமையுரையில் அரசியல் பற்றிப் பேசும் போது சமுதாயத்தைப் பற்றிப் பேசுவது தப்பு என்று கூறியுள்ளார். காந்திக்கு முன்பு வரை அரசியல் மாநாடு தனியாகவும், சமுதாயச் சீர்திருத்த மாநாடு தனியாகவுமே நடந்து வந்தன. திலகர், “காங்கிரஸ் மாநாட்டுக் கொட்டகையில் சமுதாயச் சீர்திருத்த மாநாடு நடைபெறக்கூடாது. நடைபெற்றால் தீவைத்து விடுவோம்’’ என்று மிரட்டியுள்ளார்.

ஒரு சமுதாயத்தில் நாம் என்றென்றைக்கும் இழிமக்களாகவும் வசதியற்றவர்களாகவும் இருக்க ஓர் இனம் சகல துறையிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதுதானே காங்கிரஸ் என்று எடுத்துக் காட்டியவர்.
தனித்தொகுதி முறை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவசியம் தேவை. தாழ்த்தப்பட்ட மக்களே ஓட்டு அளித்து தேர்ந்து எடுக்க வேண்டும் என்று திட்டம் நிறைவேற்றப்பட்டது. காந்தியார் அவர்கள் இப்படி தனித் தொகுதி முறை ஏற்பட்டால் நான் சோறு தின்ன மாட்டேன் என்று பட்டினி கிடந்தார். அப்போது நான் பாரிசில் இருந்தேன். பேப்பரில் பார்த்துவிட்டு உடனே நானும் ராமநாதனும் அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தோம் —இப்போதுதான் உங்கள் இனத்துக்கு நல்வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏமாந்து கையெழுத்துப் போட்டுவிடாதீர்கள் என்று. எப்படியோ கையெழுத்துப் போட்டு விட்டார். காந்தியார் பட்டினி கிடந்து இறந்து விடுவாரோ என்பதற்கு மட்டும் அல்ல; அவரையே கொலை செய்யவும் சதிகள் நடைபெற்றன. எனவே, யையெழுத்துப் போட்டு விட்டார்.

அம்பேத்கர் வெகுநாளைக்கு முன்னமேயே இந்த இந்து மதத்தை விட்டுவிட்டு முஸ்லிம் மதத்தில் சேர்ந்துவிட முடிவு கட்டினார். நான் “குடிஅரசு” ஆஃபீசில் இருந்து தந்தி கொடுத்தேன். இஸ்லாத்தில் சேர்ந்தால் இஸ்லாமியர்களுக்கு அடங்கி
இருக்க வேண்டுமே ஒழிய, இந்துக்களையும் திருத்த முடியாது; முஸ்லிமாக இருந்து இந்து மதத்தைத் தாக்க முடியாது என்றேன். பிறகு மாளவியா, காந்தி எல்லாம் அவரிடம் சென்று ரொம்ப வேண்டிக்கொண்டதால் கைவிட்டார். மதம் மாறுவது மட்டும் உறுதி. ஆனால், எந்த மதம் என்று மட்டும் இப்போது சொல்லுவதற்கு இல்லை என்றார்.

பிறகு புத்த மதத்தில் சேருவதாக இருந்த போதிலும் என்னையும் அழைத்தார். நான் கூறினேன், “நாம் புத்தனாக மாறிவிட்டால் இந்து மதத்தின் குறைபாடுகளை எல்லாம் பேச முடியாது. எப்படி இந்துவானவன் முஸ்லிம் மதத்தைப் பற்றி பேசினால் முஸ்லிம் சண்டைக்கு வருகின்றானோ, அதுபோலத்தான் நாம் புத்தனாக மாறி இந்து மதத்தைப் பற்றிப் பேசினால் எதிர்ப்பார்கள். நாம் இந்து மதத்தை இந்துவாக இருந்து எதிர்ப்பதனால் எவனும் நம்மைத் தட்டிக் கேட்க முடியவில்லை என்று கூறினேன்.

பர்மாவில் நடைபெற்ற பவுத்த மாநாட்டுக்கு நானும் போய் இருந்தேன். அம்பேத்கரும் வந்து இருந்தார். அவர் என்னைக் கேட்டார், “கையெழுத்துப்போடு, புத்தராக ஆகிவிடுவோம்” என்றார். நான் கூறினேன்  “நாம் மட்டும் சேர்ந்தால் போதுமா? நம்மைப் பின்பற்ற பல லட்சம் மக்களைத் தயார் செய்து கொண்டு அல்லவா இறங்க வேண்டும். இப்போது நமது நாட்டில் மதத்தின் பெயரால் எவ்வளவு மூடத்தனமான நம்பிக்கையும் சடங்குகளும் நடைபெறுகின்றதோ அதுபோலத்தானே இன்று பர்மாவிலும் புத்த மதத்தின் பேரால் நடைபெறுகின்றதைக் காண்கின்றோம். நமது கருத்துப்படி அமைய நாம் நமக்கு பலத்தைத் திரட்டிக் கொண்டு பிறகுதான் இறங்க வேண்டும்’’ என்றேன். ‘‘என்னமோ நாம் இப்படியே இருந்து விட்டால் போதுமா? ஏதாவது செய்து விட்டுச் சாக வேண்டாமா?’’ என்று கூறினார்.

தாம் புத்த மதத்தில் சேரப் போவதாகவும், தாம் மைசூரில் பெரிய பவுத்த பல்கலைக்கழகம் ஏற்படுத்தப் போவதாகவும், மைசூர் மகாராஜா உதவ இருப்பதாகவும் கூறினார்.

நாங்கள் இப்படி பர்மாவில் பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு புத்த பிட்சு அந்த இடத்துக்கு வந்தான். அவனுக்கு அம்பேத்கர் என்னை ஈ. வெ.ராமசாமி என்று அறிமுகப்படுத்தினார். அந்த பிட்சு உடனே என்னைப் பார்த்துக் கேட்டான், “நீ என்ன புத்தமதத்தைக் காப்பாற்ற வந்தாயா அல்லது ஒழிக்க வந்தாயா?” என்று கேட்டான். அவன் போன பிறகு அவன் யார் என்று விசாரித்தபோது அவன் வங்காளத்தில் இருந்து வந்து இருக்கின்றான். இவன் பார்ப்பானாக இருந்து புத்த பிட்சுவானவன் என்று தெரிவித்தார். இப்படித்தான் பார்ப்பனர் அன்றும் புத்த மதத்தில் சேர்ந்து புத்த மதத்தையே ஒழித்தனர்.

கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் அங்கு அம்பேத்கர் கடைசி காலத்தில் திருமணம் செய்து கொண்ட பார்ப்பன மனைவி வந்தாள். என்னை அம்பேத்கர் அறிமுகப்படுத்திய உடனே அந்த அம்மாள் சொன்னாள், ‘‘நீங்கள் யாரையோ தேடிக்கொண்டிருந்தீர்களே அப்போதே நினைத்தேன், இந்த ஆசாமியைத் தான் தேடிக் கொண்டிருந்திருப்பீர்கள்’’ என்று கூறினாள்.
தோழர்களே! அம்பேத்கர் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருப்பாரேயானால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வளவோ நலந்தரும் மாறுதல்கள் இன்னும் செய்திருப்பார். அம்பேத்கர் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 100க்கு 16 வீதம் வாங்கிவிட்டார். நான் அவரைக் கேட்டேன், “உங்கள் ஜாதிக்கு 16 வாங்கிக் கொண்டீர்களே… எங்கள் ஜாதியைப்பற்றி மறந்து விட்டீர்களே” என்று கேட்டேன். “ராமசாமி நீ சொல்லுவது தப்பு. இந்தக் கமிட்டியில் இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பான்கள். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, கோபால்சாமி அய்யங்கார், முன்ஷி என்ற நாலு விஷப்பாம்புகள் இருந்தார்கள். ஒரு சாயபு. இவர் ஓர் அனாமதேயம். அவர்கள் இனத்தாருக்குக்கூட அவரால் எதையும் செய்ய முடியவில்லை.

‘‘நான்தான் எதையும் எடுத்துச் சொல்லி ஆக வேண்டும். பார்ப்பான்கள் எல்லாம் மெஜாரிட்டியாக இருப்பதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை’’ என்றார்.

மேலும் கூறினார். “நான்தான் அரசியல் சட்டத்தை உண்டாக்கினேன். இம்மாதிரியான ஓட்டைகள் எல்லாம் ஏற்பட்டுவிட்டது. இந்த அரசியல் சட்டத்தை எடுத்து கொளுத்துவதாக இருந்தால் நான் முன்னணியில் இருந்து தீ வைக்கத் தயார்” என்றார்.
பிறகு பார்லிமெண்டிலேயே கூறினார், “நான் தான் இந்த அரசியல் சட்டம் உண்டாக்கியதாகக் கூறுகின்றார்கள். அதை தீ வைக்க வேண்டும் என்று கூறினால் நானே முன்நின்று வைப்பேன்’’ என்று கூறினார்.
இப்படி அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட இயக்கம் நடத்துவதை வகுப்புவாத இயக்கம் என்று பார்ப்பனர் கூறிப் பழித்தனர்.

இப்படிப்பட்ட ஒப்பற்ற தலைவரைபின்பற்றுபவர்களாகிய -தாழ்த்தப்பட்டவர்களாகிய – நீங்கள் கடவுள், மதம், சாஸ்
திரங்களில் நம்பிக்கை வைக்கக்கூடாது என்றும், காமராசர் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் செய்யப்படும் நன்மைகள் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.

(அரக்கோணத்தில் 16.4.1961 அன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் ஆற்றி உரை).– ‘விடுதலை’, 4.5.1961