கவிதை: திராவிட ஒளிச்சுடர்

2022 கவிதைகள் டிசம்பர் 1-15 2022

தீந்தமிழ்போல் வாழ்க!
முனைவர் கடவூர் மணிமாறன்

அய்யா பெரியார் செதுக்கிய சிற்பம்
மெய்யாய்த் தமிழர் மேன்மைக் குழைப்பவர்!
அருங்குணச் சான்றோர்; ஆற்றல் சுரங்கம்;
பெருமைக் குரிய தமிழர் தலைவர்
பெயருக் கேற்ப வீரம் மிக்கவர்!
அயர்வே இல்லா அஞ்சா நெஞ்சினர்;
ஓடும் குருதியில் உணர்வில் செயலில்
பீடுறு திராவிடம் பிறங்கும் ஒளிச்சுடர்!
பெரியார் பள்ளியில் பிழையறப் பயின்றவர்
அரிய திறமெலாம் அவரிடம் கற்றவர்;
சட்டம் பயின்றவர்; சால்பு மிக்கவர்;
பெட்புற மனத்தில் பெரியார் கொள்கை
இருத்திய அரிமா; ஏழை எளியோர்
வருந்தும் போக்கைத் தடுக்கத் துடிப்பவர்!
எழுத்தில் பேச்சில் முத்திரை பதிப்பவர்
பழுதிலா ஆளுமைப் பகுத்தறி வாளர்!
ஒடுக்கப் பட்டோர் உரிமை மீட்க
மிடுக்குற இயங்கும் மீட்சிக் கதிரோன்!
தூண்கள் போல்வன மாநிலம் என்னும்
மாண்பை அறியா மதியிலிக் கூட்டம்
மாநில உரிமை பறித்தே யாவுமே
தானெனும் தருக்கில் தவறுகள் செய்வோர்,
நுனிமரம் ஏறி அடிமரம் வெட்டும்
மனிதப் பதர்கள்; மண்ணின் களைகள்;
இந்தி, வடமொழி திணிக்க நினைக்கும்
சிந்தனை மலடுகள்; சிறுமை நரிகளை
என்றும் எதிர்த்தே இடுப்பை முறிக்கும்
பன்முக ஆற்றலர்! பழமை வாதிகள்
பரப்ப எண்ணும் கீழ்மை வீழ்த்திட
எடுப்பார் சவுக்கை, தடுப்பார் இழிவை!
இடஒதுக் கீடு, சமூக நீதி,
மடமை ஒழிப்பு, மாந்த நேயம்
மகளிர் உரிமை, மாநில மேன்மை
தகவுறு சமத்துவம் யாவற் றுக்கும்
பெரியார் போலும் பேரிகை முழங்கும்
அருவினை யாளர் தமிழர் தலைவர்!
நடுநிலை நோக்கில் நாட்டோர் போற்றும்
விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு,
திராவிடப் பொழிலெனத் தேர்ந்த இதழ்களால்
திராவிடக் கருத்தியல் திக்கெட் டெங்கும்
பரவிடச் செய்யும் பான்மை மிக்கவர்!
உரத்த சிந்தனை உலைக்களம் ஆனவர்;
பகுத்தறி வுணர்வைப் பரப்புரை செய்யும்
தகுதிப் பாட்டில் தலைநிமிர்ந் துழைப்பவர்!
ஆரியப் பதர்கள் அலறிடச் செய்திடும்
வீரியம் கெழுமிய வெந்திறல் மறவர்!
கருப்புடை அணிந்து கடமை நினைந்து
இருபதே அகவை இளைஞன் போலும்
தொண்ணூ றகவை தொடுகிற போதும்
எண்ணிய யாவும் இனிதே ஆற்றிடும்
கண்ணியம் கடமை கட்டுப் பாட்டினை
உண்மை யாகவே உணர்த்தும் தலைவர்!
அய்யா அவர்கள் அச்சுப் பதிப்பாய்
மெய்யாய் நாளும் மிடுக்குறச் செயல்படும்
அறிவுச் சோலை! அக்கிர காரக்
குறுமதி யாளர் குலையும் நடுங்கிட
எதிர்ப்புக் குரலை இடியென முழங்கி
மதியிலிக் கூட்டம் மருளச் செய்பவர்!
தன்மா னத்தைத் தமிழர் பெற்றிட
என்றும் அறிவால் எதையும் ஆய்ந்திடும்
வல்லமை நமக்கே வனப்புற வழங்கும்
சொல்லின் செல்வர்! சோதனை, வெம்பழி
கண்ட களங்கள் கணக்கில் அடங்கா!
மண்டும் நெருப்பாம் மடமைச் சுமப்போர்
பண்டைப் புகழைப் பறிக்க நாளும்
வெறுப்பு அரசியம் நடத்தும் தீயர்! பொல்லா
ஆரியக் கூட்டம் அடங்கும் ஓர்நாள்;
நேரிய ஒன்றிய அரசும் அமைந்திடும்!
மன்னா உலகில் மன்னுதல் எய்திப்
பன்னூ றாண்டுகள் பைந்தமிழ் போலும்
இற்றைப் பெரியார், இனநல ஆசான்
வெற்றிகள் குவித்து வெல்க! வாழ்கவே!