கவிதை : வெல்க திராவிடம்!

2022 அக்டோபர் 01-15 2022 கவிதைகள்

முனைவர் கடவூர் மணிமாறன்

 

இரட்டை ஆட்சி மாநிலங்கள்
எங்கும் இயக்கிடத் துடிக்கின்றார்!
புரட்டால் வஞ்சக வலைவிரிப்பார்!
புளுகை மெய்யெனப் புகன்றிடுவார்!

அரசியல் சட்டம் சீரழித்தே
ஆளுநர் மூலம் ஆட்டத்தைப்
பரபரப் பாக நடத்துகிறார்!
பாதையில் முள்ளைப் போடுகிறார்!

பெரியார் சிந்தனை நாடெங்கும்
பெருமை சேர்த்திடக் காண்கின்றோம்!
புரியா மடமைக் கூட்டத்தார்
புழுதிச் சேற்றுள் புரள்கின்றார்!

சமத்துவ தருமம் விரும்பாமல்
சனாதன தருமம் அரங்கேற
நமக்குள் கலகம் மூட்டுகிறார்;
நான்கு வருணம் திணிக்கின்றார்!

உரிமை யாவும் பறிக்கின்றார்
ஒன்றிய ஆட்சியர் அதிகாரச்
செருக்கில் ஒன்றும் விளங்காமல்
சிறுமை விளைத்தே சிரிக்கின்றார்!

நாட்டைக் குழிக்குள் தள்ளுகிறார்!
நஞ்சினை நெஞ்சில் பாய்ச்சுகிறார்
கேட்டைத் துணிந்து செய்கின்றார்!
கிழக்கை மேற்கெனக் கிளத்துகிறார்!

ஆரியம் மீண்டும் வேரூன்ற
அனைத்து வகையிலும் முயல்கின்றார்;
வீரியம் கொண்டே எழுவோம் நாம்
“வெல்க திராவிடம்” முரசறைவோம்!

நாற்பதும் நமதே! நாளை இந்த
நாடும் நமதென முழங்கிடுவோம்!
போற்றும் ஆட்சி புலர்ந்திடுமே
பொய்யர் கூட்டம் கலங்கிடுமே!