உணவே மருந்து

ஜுலை 16-31,2021

சிறுதானிய உணவும் உடல்நலமும்

இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொள்வதை வழக்கமாகக் கொள்வது அவசியம். பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கருப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளை கட்ட வைத்து உண்ணலாம். இந்தத் தானியங்களை நன்றாகக் கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து, பின் ஈரமான பருத்தித் துணியில் சுற்றி வைத்துவிட்டால் போதும், முளைவிட்டு இருக்கும். ஆரோக்கியத்தையும், அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உணவு.

புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ், விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும். கண் பார்வை மேம்படும்.

முளைவிட்ட கொண்டைக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். முளைவிட்ட கருப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். முளைவிட்ட கொள்ளு உடல் பருமனைக் குறைத்து, மூட்டுவலியைக் கட்டுப்படுத்தும்.


இரத்தத்தைத் தூய்மையாக்கும் கொத்தவரை

கொத்தவரங்காய் பீன்ஸ் வகையை சேர்ந்தது.  இதில் பல மருத்துவக் குணங்கள் உள்ளது. கிளைகோ நியூட்ரியென்ட் எனும் வேதிப்பொருள் கொத்தவரையில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இதில் மிகுந்துள்ள சுண்ணாம்புச்சத்து எலும்புத் தேய்மானம் மற்றும் மூட்டுவலி ஏற்படாமல் பாதுகாக்கும்.

இதயத்திற்கு இதமானது. ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது.

கொத்தவரையில் நார்ச்சத்து மிகுந்து இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் சர்க்கரை, கொழுப்புச்சத்து ஆகியவை உள்ளதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். பெண்களுக்கு, குறிப்பாக கருவுற்ற பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் கொத்தவரையில் மிகுந்திருக்கிறது. இதில் அதிக அளவு போலிக் அமிலம் இருப்பதால் குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு ஆகியவை சீராக வளர்ச்சி பெற உதவும். வைட்டமின் கே குழந்தை நன்கு வளரவும் எலும்புகள் வலிமை பெறவும் உதவும்.

கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்க்க ரத்த ஓட்டம் சீராவதுடன் ஹீமோகுளோபின் உற்பத்திக்கும் உதவுகிறது. செரிமானத்திற்கு உதவுவதுடன் இரைப்பையில் தங்கிப் புற்றுநோயை உருவாக்கும் கிருமிகளை வெளியேற்றவும் உதவுகிறது.

மன உளைச்சல், படபடப்பைப் போக்கிட உதவுகிறது. ஆசனவாய்ப் புற்றுநோயை தவிர்க்கும் வல்லமை கொத்தவரைக்கு உண்டு. கொத்தவரங்காய் போலவே அதன் இலைக்கும் மகத்துவம் உண்டு. கொத்தவரையின் இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்கும்.

வலி நிவாரணியாகவும், கிருமி நாசினியாகவும் இதன் இலை செயல்படுகிறது. ஒரு கைப்பிடி அளவு இலையுடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் ஆஸ்துமா எனும் மூச்சிரைப்பு குறையும். இரவு நேரப் பார்வைக் கோளாறைத் தடுக்கும்.

கொத்தவரை விதையைக் கொதிக்க வைத்துக் குடித்தால் உடலில் ஏற்பட்ட வீக்கங்கள் குறையும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களுக்கு கொத்தவரங்காய் மருந்தாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *