முகப்புக் கட்டுரை : கருத்துரிமையைப் பறிக்கும் ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக!

ஜுலை 16-31,2021

மஞ்சை வசந்தன்

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2019, பிப்ரவரி 12ஆம் தேதி மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அது நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு கடந்தாண்டு மார்ச் மாதம் அறிக்கையை சமர்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021 இந்திய ஒன்றிய அரசுக்கு சில திருத்த அதிகாரங்களை வழங்குகிறது. ஒரு படத்துக்கு வழங்கிய சான்றை, பார்வையாளர்களின் புகாரின் பேரில் திரும்பப் பெற முடியும்.

இச்சட்டம், ஏற்கெனவே இருக்கும் சென்சார் நடைமுறைக்கு மேல் கூடுதலாக ஓர் அடுக்கை உருவாக்குகிறது.

நிறைய மிரட்டல்கள், காழ்ப்புணர்ச்சி, சுரண்டல், கூட்டாகச் சேர்ந்து காட்சிகளை நீக்கக் கோருவது போன்ற பிரச்சினைகள் எழும் என்பதால் இச்சட்டம், திரைத் துறையை அரசின் முன் பலவீனமான துறையாக நிறுத்தும் நிலையில் உள்ளது.

எதிர்ப்பது ஏன்?

ஒளிபரப்பு சட்டத் திருத்த வரைவு மசோதா கடந்த 18-ஆம் தேதி வெளியிடப்பட்டதில் இருந்தே இந்தியா முழுக்க உள்ள பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், இயக்குநர் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட 1400 கலைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, கடிதம் எழுதினர்.

திரைக்கலைஞர்களின் ஜனநாயக உரிமைகளும் கருத்துச் சுதந்திரமும் பறிக்கப்படும் அபாயம் இருக்கிறது. படைப்பாளிகள் அதிகாரத்தின் கைப் பாவைகளாகவும், அரசை எதிர்த்துக் கேள்விகேட்க முடியாத நிலைக்கும் தள்ளப்படுவார்கள்.

ஒரு கலைப்படைப்பை அரசு எடைபோட்டு, எது மக்களுக்கு ஏற்றது _ ஏற்றதல்ல என்று முடிவு செய்தால் எப்படியிருக்கும்? ஆம், சென்சார் செய்யப்பட்ட படமே ஆயினும், அரசு நினைத்தால் அதில் மாற்றங்களைக் கொண்டு வரமுடியும், திருத்தங்கள் செய்ய முடியும். குறிப்பாக அது வெளியாகாமலே நிரந்தரமாகத் தடை செய்ய முடியும். இப்படி ஒரு வழிமுறை வருமாயின், ஆளும் அரசுக்கு எதிரான குரல்கள், விமர்சனங்கள் இனி திரைப்படங்களில் எப்படி இடம்பெறும், இது ஒரு பாசிச அரசின் போக்கு அல்லவா?

குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய கல்விக் கொள்கை, புதிய டிஜிட்டல் கொள்கை என வரிசையாக நிகழ்ந்துவரும் சட்டத் திருத்தங்களின் அடுத்த கட்டமாக இந்த ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சினிமா போன்றதொரு வெகுஜன ஊடகத்தை அரசு தன் இரும்புக்கரங்களால் ஒடுக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஆளும் அரசை விமர்சித்து வரும் படங்கள், அந்த மத்திய, மாநில அரசுகளாலேயே தடை செய்யப்படும் எல்லைக்குக்கூடச் சென்றிருக்கின்றன. இப்படிச் சிக்கலில் மாட்டிய படங்கள் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்த பின்னரே வெளியாகியிருக்கின்றன. இந்த ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 என்பது கலையுலகின் மீது விழுந்த இரண்டாம் அடிதான். முதல் அடி, திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை (Film Certification Appellate Tribunal) கலைத்தபோதே விழுந்துவிட்டது.

சென்சார் போர்டே சில சமயம், தனிநபர் விரோதத்திற்காகவோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகவோ ஒரு கலைஞனின் படைப்பை வதைப்பதுண்டு. அப்படியெல்லாம் ஒரு கலைஞன் இன்னல்களைச் சந்திக்கையில் அவனுக்குக் கைகொடுத்தது இந்தத் திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்தான்.

மத்திய அரசு தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தின் படி, இந்தத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்டதால், தற்போது திரைப்படத் தணிக்கையில் ஒரு படைப்பாளருக்கு மாற்றுக் கருத்து இருப்பின் அவர் நேரடியாக நீதிமன்றத்தின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கும்.

அடுத்தடுத்து உரிமைப் பறிப்பு!

 

இப்படியான பிரச்சனைகளை கவனிப்பதற் கென்றே பிரத்யேகமாகச் செயல்பட்ட ஒரு தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டதால், சட்டப் போராட்டமே ஒரே வழி என்ற நிலை உருவாகிவிட்டது. இதனால், சர்ச்சைக்கு உள்ளான படம் வெளியாவதற்கு இனி பல வருடங்கள் ஆகலாம். இந்தப் போக்கால் தயாரிப்பாளர்களுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. இப்படி ஒரு தீர்ப்பாயத்தின் பணியை நீதிமன்றத்துக்குத் தருவதை எதிர்த்து அப்போதே பல கலைஞர்களின் குரல்கள் ஒலித்தன. அந்தக் குரல்கள் அடங்கும் முன்னரே தற்போது நீதிமன்றத்தையும் தாண்டிய ஓர் அதிகாரத்தை மத்திய அரசு பெற்றுவிட எத்தனிக்கிறது.

இந்தப் புதிய சட்டத்திருத்த வரைவில், இந்தப் பிரிவு 5 (1)அய் மீறும் எந்தவொரு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழையும் புதிய பிரிவு 6 (1)இ-ன் படி, ஒன்றிய அரசு திரும்பப் பெற முடியும். அதாவது சென்சாரே ஒப்புதல் அளித்திருந்தாலும் ஒன்றிய அரசு நினைத்தால் ஒரு படம் வெளியாவதைத் தடுக்க முடியும். சென்சார் போர்டின் முடிவை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிட முடியும்.

திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில் இப்படியொரு சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, சென்சார் செய்து சான்றிதழ் பெற்றுவிட்ட ஒரு படத்தைச் சீராய்வு செய்யவோ, அதில் மாற்றங்கள் செய்யவோ ஒன்றிய அரசுக்கு அதிகாரங்கள் கிடையாது. இதற்கு முன்னர், கர்நாடக உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் அரசு இப்படிச் செய்வதற்கான அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. அதையே உச்சநீதிமன்றமும் வழிமொழிந்தது. இதனால், இப்போது ஒன்றிய அரசு கொண்டுவர நினைக்கும் இந்தச் சட்டத் திருத்தம் உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு எதிரானதாகவும் பார்க்கப்படுகிறது.

இந்தச் சட்ட வரைவில் சொல்லியிருக்கும் பிற திருத்தங்கள் என்னென்ன?

ஏற்கெனவே இருக்கும் ‘U’, ‘U/A மற்றும் ‘A’’ சான்றிதழ்களுடன் வயது வாரியாக சில புதிய சான்றிதழ்களும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. அதன்படி,  ‘U/A 7+’, ‘U/A 13+’ and ‘U/A 16+’ என ‘U/A’ சான்றிதழை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். இதற்கு முன்னர், ஒன்றிய அரசு தன் புதிய டிஜிட்டல் கொள்கையில், ஓடிடி உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் பிளாட்பாரங்கள் இப்படி வயதுவாரியான ரேட்டிங்கைத் தங்களின் படைப்புகளுக்குக் காட்டவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். அதே முறைதான் தற்போது சென்சார் பெறும் திரைப்படங்களுக்கும் வரவிருக்கிறது.

இந்த வரைவில் சேர்க்கப்பட்டிருக்கும் பிரிவு 6AAயின்படி, “ஒரு படைப்பாளியின் எழுத்துபூர்வ அனுமதியில்லாமல், அதை நகல் எடுக்கவோ, அதை வீடியோவாகவோ, ஆடியோவாகவோ பதிவு செய்யவோ, ஒளிபரப்பு செய்யவோ கூடாது. மீறினால், 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.3,00,000 அல்லது படத்தின் தயாரிப்புச் செலவில் 5 சதவிகிதம் வரை அபராதமும் வசூலிக்கப்படும்.’’

தற்போதுள்ள சட்டத்தின்படி, ஒரு படத்தின் சென்சார் சான்றிதழ் 10 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர், அதைப் புதுப்பிக்க வேண்டும். புதிய வரைவில் இது மாற்றப்பட்டு, சென்சார் சான்றிதழ் இனி காலக்கெடு ஏதுமின்றி ஆயுள் முழுவதுக்குமான சான்றிதழாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்த வரைவுச் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board of Film Certification) மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் உள்ளதால், இந்த வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதாவைத் திரும்பப் பெறுமாறும், இது தொடர்பான முயற்சிகளைக் கைவிடுமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கண்டனம்

ஒளிப்பதிவு வரைவு மசோதாவில் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், திரைப்படத் தயாரிப்பாளர்களின் படைப்பு, சுதந்திரம், திறமைகள் மீதான தாக்குதல்களாகும். மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 5-_பி(1)ஆவது பிரிவினை மீறக்கூடிய விதத்தில் திருத்தும் அதிகாரங்களுக்கு உரிமை கொடுக்கும் ஒரு ஷரத்தைச் சேர்க்க விரும்புகிறது. இதன்படி ஏற்கெனவே, சான்றிதழ் வழங்கப்பட்டு முடிவு பெற்ற திரைப்படங்களைக் கூடக் திரும்பப் பெறுவதற்கு வழிவகுக்கும்.

அண்மைக் காலங்களில் வலதுசாரி சக்திகள் தங்களுக்கு விருப்பம் இல்லாத திரைப்படங்கள் மீது கூட்டுக் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டு வருவதைப் பார்த்து வருகிறோம். இப்போது அரசு தங்கள் கொள்கைகளை விமர்சித்து வெளிவரும் திரைப்படங்கள் வெளியிடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறது.

திரைப்படத் திறன், அதன் கருத்து சுதந்திரங்களைப் பறிக்க முயற்சிக்கப்படும் இத்தகைய கொடூரமான திருத்தங்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் ஆட்சி மன்றக் குழு கடுமையாக எதிர்க்கிறது.  ஒன்றிய அரசின் தாக்குதல்களுக்கு எதிராகத் துணிவுடன் குரல் எழுப்பியுள்ள திரைப்படத் துறையினரின் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திரைப்பட நடிகர் சூர்யா கண்டனம்

“சட்டம் என்பது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்காக. அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல’’ என்று நடிகர் சூர்யா ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட்டரில் கருத்தினைப் பதிவிட்டுள்ளார்.

ஒளிப் பதிவுத் துறை என்பது சுதந்திரமாகக் கருத்துச் சொல்லும் உரிமை பெற்றிருப்பது கட்டாயம். அதில் ஒடுக்குமுறை, அடக்குமுறை உட்புகுத்தப்படுவது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிப்பதற்குச் சமம். தங்கள் விருப்பப்படிதான் திரைப்படங்கள் உள்பட ஊடகங்களின் கருத்துக்கள் இருக்க வேண்டும் என்ற பாசிச செயல்பாட்டின் அடையாளம்தான் இச்சட்டத் திருத்த முயற்சி.

நேர்மையும், சமுதாய அக்கறையும் உடைய நடுநிலையாளர்கள் தணிக்கைக் குழுவிலும், மேல்முறையீட்டுக் குழுவிலும் இருந்தாலே ஒளிப்பதிவுத் துறை செம்மைப்படுத்தப்படும். மாறாக, ஒன்றிய அரசின் ஒரு தலைச் சார்பு கருத்துக் திணிப்பு கண்டனத்திற்குரியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *