பெண்ணால் முடியும் : தமிழ்நாட்டின் வாள் வீச்சி ராணி

ஜுலை 1-15,2021

ஒலிம்பிக்கில் வாள்வீச்சு விளையாட்டு என்பது இந்தியர்களைப் பொறுத்தவரை யாரும் அதிகமாக தேர்வுச் செய்யாத விளையாட்டு. அந்த விளையாட்டில் தமிழகத்திலிருந்து, முதன்முறையாக ஒலிம்பிக்கில் இந்தியர் ஒருவர் வாள்வீச்சுப் போட்டியில் கலந்துகொள்வதை உலகமே காணப்போகிறது. அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர் சென்னையைச் சேர்ந்த பவானி தேவி.

சென்னையில் வட சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் பவானி தேவி. தண்டையார்பேட்டையில் முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.

அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு வாள்வீச்சு மய்யத்துக்கு வந்த பவானி தேவி. 16 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்காக வாளைப் பிடித்து உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கில் விளையாடுவார் என்று யாரும் நினைத்துப் பார்த்திருப்பார்களா என்பது அய்யம்தான். இந்த உயரத்தை அடைவதற்குள் பவானி தேவி சந்தித்த மேடு, பள்ளங்கள் மிக அதிகம். அதனை சற்று திரும்பிப் பார்க்கையில்,

2004ஆம் ஆண்டில் முதன்முதலாகத் தேசிய சப் ஜூனியர் பிரிவில் பங்கேற்றுத் தங்கப் பதக்கத்தை வென்று தன் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கிய பவானி, தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வந்தார். சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த நிலையில், கல்லூரிப் படிப்புக்காகக் கேரளத்துக்குச் சென்றார்.

கேரள அணி சார்பாகத் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வந்தார். மீண்டும் சென்னைக்குத் திரும்பி முதுகலை படித்தபோது, நிதி உதவி கிடைக்காமல் பல வாள்வீச்சுப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் திண்டாடும் சூழல் பவானிக்கு ஏற்பட்டது. ஆனால், அவருடைய அம்மா அளித்த ஊக்கம்தான் பவானியை அந்த விளையாட்டில் அவரை நீடிக்க வைத்தது. அந்தக் காலகட்டத்தில் கடன் வாங்கி போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

தேசிய அளவில் வாள்வீச்சில் சாதனை புரிந்த பவானி தேவி, சர்வதேச அளவில் காலடி எடுத்து வைத்தபோது, தொடக்கமே அவருக்குச் சறுக்கல்தான். துருக்கியில் நடைபெற்ற தொடரில் 3 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக, ‘பிளாக் கார்டு’ காட்டப்பட்டு தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார். வாள்வீச்சில் வெற்றிக் கொடியைப் பறக்க விட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார். அதற்காகக் கடுமையாக உழைத்தார்.

வாள்வீச்சில் ஒன்பது முறை இந்தியாவின் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற பவானி, 2009ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமல்வெல்த் தொடரில் முதல்முறையாக வெண்கலம் வென்று சர்வதேச அரங்கில் கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து 2010இல் பிலிப்பைன்ஸில் ஆசிய வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலம், 2012இல் ஜெர்ஸி காமன்வெல்த்தில் வெள்ளி_தங்கம், 2014இல் பிலிப்பைன்ஸில் வெண்கலம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, 2015இல் மங்கோலியாவில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் எனத் தொடர்ச்சியாகப் பல சர்வதேசத் தொடர்களில் பதக்கம் வென்று வாள்வீச்சில் இந்தியாவின் முதல் வீராங்கனையாக உருவெடுத்தார்.

2016இல் ரியோ ஒலிம்பிக்கில் எப்படியும் இடம் பிடிக்க வேண்டும் என்று தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுவந்தார். சீனாவில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியான ஆசியா _ ஓசியானாவின் காலிறுதியில் தோல்வியைத் தழுவினார்.

தன்னுடைய முயற்சி தோல்வியடைந்தது பற்றி பவானி தேவி இப்படி கூறியிருந்தார். “வெற்றி பெறுகிறவரை முயல வேண்டும். 2016 ரியோ ஒலிம்பிக் எனக்கானது அல்ல. அதற்காக 2020 ஒலிம்பிக் போட்டிக்கு நான் தகுதி பெறமாட்டேன் என்று அர்த்தம் கிடையாது. முயன்றால் நிச்சயம் இலக்கை அடைய முடியும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளேன்.’’

அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் சொன்னதுபோல இப்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டார்.

2016 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற முடியாமல் போன பிறகு இதை உணர்ந்த பவானி தேவி. இத்தாலியில் தங்கித் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார். இத்தாலி பயிற்சியாளர் நிக்கோலா ஜெனாட்டியிடம் ஆட்ட நுணுக்கங்களைக் கற்று வருகிறார். தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் வாள்வீச்சில் இறக்கி பயிற்சி செய்கிறார் பவானி.

உலகத் தர வரிசையின் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆசியா_ஓசியானா பிரிவில் இரு இடங்கள் இருந்தன. தற்போது வாள்வீச்சு உலகத் தரவரிசையில் 45ஆவது இடத்தில் இருக்கும் பவானி தேவி அவற்றில் ஓரிடத்தை உறுதிப்படுத்தி, ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான இடத்தைப் பிடித்துவிட்டார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.

வாள்வீச்சு பயிற்சியில் இன்னும் சிறப்புப் பயிற்சி பெற தமிழ்நாடு அரசிடம் நிதியுதவி கேட்டிருந்தார். இதனை பரிசீலித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை பவானிதேவியின் தாயாரிடம வழங்கி ஊக்கப்படுத்தினார். இதனை அறிந்து இத்தாலியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பவானிதேவி உடனே வீடியோ மூலம் தமிழ்நாடு அரசு வழங்கிய நிதியுதவிக்காக முதல்வருக்கும் மின்துறை அமைச்சர் மற்றும் அரசு நிருவாகிகளுக்கும் மனம்கனிந்த நன்றி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் பவானி தேவி நிகழ்த்தவிருக்கும் சாதனையை எதிர்நோக்கி தமிழ்நாடே ஆர்வத்தோடு காத்திருக்கிறது.

                                               (தகவல்: சந்தோஷ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *