பெரியாரிய வாசனை

டிசம்பர் 01-15

 

காலம் ஏற்றிவைத்த
கலங்கரை அய்யாவென்றால்
அக்கலங்கரையின்
வெளிச்ச விழுதே ஆசிரியர்

இரவுகளை ஊடறுத்து
பகுத்தறிவு தீபமேற்றும் ஆசிரியர்
ஒளிகளின் பிரசங்கி

ஆதாரமில்லாமல்
அவர் எதையும்
பேசுவதில்லை என்பதால்தான்
அன்னை தமிழகம்
ஆதாரமாக அவரைப்
பற்றிப் படர்கிறது

ஆரிய புளுகுகளுக்கு
அவர் ஒருவர்தான் இன்றுவரை
புள்ளி விவரங்களால்
கொள்ளி வைப்பவர்

பாடப் புத்தகங்களைப்போல
அய்யாவின் கருத்துக்களை
அவர் வகுப்பெடுக்க
ஆரம்பித்ததால்தான்
நம்மில் பலபேர் தேர்ச்சியானோம்

அவர் மதிப்பெண்களைவிட
நமக்கெல்லாம் மதிப்புகளை வழங்கவே
குறியாயிருப்பவர்

எந்த நேரத்திலும்
தமிழையும் தமிழனையும்
அவர் நினைத்துக்கொண்டிருப்பதால்தான்
கருஞ்சட்டைகள் அவரை
மறவாமல் இருக்கின்றன

அவர் எழுத்துக்கள்
அவ்வப்போது வீசும்
காகித குண்டுகளால்தான்
ஏமாற்ற எண்ணுகிற எதிரிகள்
எதிரே வராமலிருக்கிறார்கள்

அவர்
மூச்சுக்குள் பரவிக்கிடக்கும்
பெரியாரிய வாசனை
நம்மை விடுதலையாகவும்
அவரை உண்மையாகவும்
வைத்திருக்கிறது

ஆரிய கழுகுகள் நம்மைக்
கொத்த வருகிற போதெல்லாம்
பெரியாரின் கைத்தடியைப்
பயன்படுத்தும் ஆசிரியர்
திரும்பத் திரும்ப
தமிழர்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்.

கருப்பு சட்டைக்காரன்
காவலுக்கு கெட்டிக்காரன்

அய்யா வழி நடக்க
ஆசிரியர் கைபிடிப்போம்
பொய்யை பலிகொடுக்க
பொழுதுமே களமமைப்போம்.

– கவிஞர் யுகபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *