ஜாதியை ஒழிக்க கை கோர்ப்போம்!

டிசம்பர் 16-31

அறைகூவல் விடுத்த தருமபுரி மாநாடு!!

தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் அடித்தளமே  ஜாதிகள் ஒழிந்த சமூகநீதியில் கட்டப்பட்டது தான். தனது இறுதி மூச்சு அடங்கும் வரையில் ஜாதி இழிவைப் போக்கவே அவரது முழக்கம் ஓயாமல் ஒழித்தது.அந்தத் தலைவன் உழைத்த மண்ணில் அரசியல் வளர்க்க சிலர் ஜாதிவெறியைத் தூண்டும் அவலம் நிகழ்ந்துள் ளது. தருமபுரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட அந்தத்தீயை அணைக்க பெரியார் தொடங்கிய  திராவிடர் கழகம் களம் இறங்கியது.

 

பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்களை உடனடியாகச் சென்று சந்தித்த தி.க.தலைவர் கி.வீரமணி அந்த மண்ணிலேயே ஜாதி ஒழிப்பு-தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.

தமிழ்த் தேசியம் என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டு பிறவியிலேயே ஆண்டாண்டுக் காலமாகத் தீண்டத்தகாத மக்களாக, ஒடுக்கப் பட்ட மக்களாக ஆக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மற்றவர்களை ஒன்றுபடுத்து வதை முறியடிக்கவும்,   மனிதனை மனிதனாகப் பார்க்காமல் ஜாதி வெறிக் கண் கொண்டு பார்ப்பது பாசிச நோயின் சேட்டையாகும் இதை கண்டித்தும்டிசம்பர் 9 நாள்  தருமபுரியில் ஜாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு கருத்தரங்கம் மற்றும் மாபெரும் மாநாடு தொடங்கியது. தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந்து போராட வேண்டும் ஏன்? என்ற பொதுத் தலைப் பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பெ. ஜெகதீசன் தலைமை வகித்து உரையாற்றினார். சமூகநீதிப் பார்வையில் என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் பிறைநுதல்செல்வி, அண்ணல் அம்பேத்கர் பார்வையில் என்ற தலைப்பில் ஆதவன் தீட்சண்யா, புரட்சிக்கவிஞர் பார்வையில் என்ற தலைப்பில் இரா. கண்ணிமை, தந்தை பெரியார் பார்வையில் என்ற தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆகியோர்  உரையாற் றினர். அன்று

மாலை நடபெற்ற மாபெரும் மாநாட்டில்

மக்கள் உரிமைக்கழகத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் தொடக்கவுரை நிகழ்த்தினார்.அதில் அவர்,தக்க நேரத்தில் இந்த மாநாட்டை அறிவித்து எழுச்சி யுடன் நடத்துகின்ற திராவிடர் கழகத் துக்கும், அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும்  நன்றி யையும், பாராட்டு தலையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்,“ இது அரசியல் தேர்தல் கூட்டணியல்ல – மாறாக ஜாதி ஒழிப்புக் கூட்டணி – தீண்டாமை ஒழிப்புக் கூட்டணி – பாதிக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆதரவுக் கூட்டணி – இந்தக் கூட்டணியில் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் தலைமையிலே இவற்றிற்காக நாங்கள் அணி வகுத்து நிற்கத் தயார்.

காதலை எதிர்த்து. ஜாதி சங்கங்களைக் கட்டுவது, கண்டிக்கத்தக்கதாகும். திராவிட என்பதை எதிர்த்துப் பேச ஆரம்பித்துள்ளனர் சிலர் – அதுவும் தவறான கருத்தாகும். திராவிடர் என்பது – ஒரு குறியீடாகும்.

ஜாதியை எதிர்த்து தந்தை பெரியார் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். போராடினார். நூறு ஆண்டு களுக்கு மேலாக இதற்கான இயக்கம் நடத்தப் பட்டுள்ளது.

சமூகத்தின் எதிரிகள் பார்ப்பனீயமும், முதலா ளித்துவமும்தான் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார்.

28 ஆண்டு காலமாக உள்ள தீண்டாமை ஒழிப்பு வன்முறை கொடுமைத் தடுப்புச்சட்டம் ஓட்டைகள் கொண்டதாக உள்ளது. அது சரி செய்யப்பட வேண்டும்.
காவல்துறையிலும் ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கம் காணப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் இருக்க வேண்டும்.

தருமபுரியில் தாழ்த்தப்பட்டவர் குடியிருப் புகள் கொளுத்தப்பட்டதே – பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றுவர்கள் யார்? செல்லாதவர் கள் யார்? என்பதிலிருந்தே ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டவர் களுக்காகப் பாடுபடவில்லை என்று செய்யப்பட்ட பிரச்சாரம் உண்மையல்ல. அது தவறு என்று இப்பொழுது நிரூபிக்கப் பட்டுவிட்டது. தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களை நோக்கி நாம் கேட்கும் வினா இதுதான்.

தலித் அல்லாதவர்கள் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டனரே! அப்படியென்றால் தலித்துகள் தமிழர்கள் இல்லையா? என்ற நறுக்கான வினாவை முன் வைத்தார் பேராசிரியர் மார்க்ஸ்.அடுத்துப் பேசிய தி.க.செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தமது உரையில், “1973 டிசம்பர் 8,9 நாட்களில் அதாவது – இதே நாளில் தந்தை பெரியார் சென்னை யில் தமிழர் சமுதாய இழிவுஒழிப்பு மாநாட்டை நடத்தி அதில் ஜாதி ஒழிப்புத் தீர்மானத்தை நிறை வேற்றினார்.

தீண்டாமை ஒழிக் கப்படுகிறது என்ப தற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எடுத்துக் காட்டி,உலகில் தொழில் பிரிவுகள் உண்டு. ஆனால் இந்து இந்தியாவில் தான் தொழிலாளர்கள் ஜாதி யாகப் பிரிக்கப்பட் டனர் என்று தெரிவித்தார்.

அவரை அடுத்து உரையாற்றிய தி.க.துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்,“சமூகநீதிக் களத்தில் தாழ்த்தப் பட்டோர் பிற்படுத் தப்பட்டோர் ஒன்றி ணைந்து போராடி உரிமைகள் பெறுவ தற்கான கடமைகள் உண்டு. குறிப்பாக கோயில் கருவறைக்குள் தாழ்த் தப் பட்டவரும், பிற் படுத்தப்பட்டவரும் நுழைய முடியாது. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் முடக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுத்துறைகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறவில்லை.

மத்திய அரசுத் துறைகளில் 102 செயலாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடம் பூஜ்ஜியம். கூடுதல் செயலாளர்கள் 113 என்றால், அதில் தாழ்த்தப்பட்டோர் 5, மலைவாழ் மக்கள் 3, பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு இடம் கூடக் கிடையாது.

இயக்குநர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர்  50, மலைவாழ்மக்கள் 20, இதர பிற்படுத்தப் பட்டோ 29 மீதி 578 இடங்கள் உயர்ஜாதியினர். குறிப்பாக பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில்.

குரூப் ஒன்று பதவிகளை எடுத்துக்கொண் டால், தாழ்த்தப்பட்டோருக்கு 11.5 விழுக்காடு, மலைவாழ் மக்களுக்கு 4.8 விழுக்காடு, இதர பிற்படுத்பட்டோர் 6.9 விழுக்காடு.

இதுபோன்ற தகவல்கள் ஏராளம் உண்டு. ஒரு பிரிவில்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ள சட்டப் படியான இடங்கள் பிற்படுத்தப்பட் டோருக்கு சட்டப்படியான இடங்கள் கிடைக்கவில்லையே.

தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் இணைந்து போராட வேண்டிய அவசியத்தை இவை உணர்த்த வில்லையா? இந்த அடிப்படை உரிமைகள்பற்றிச் சிந்திக் காமல், கவலைப்படாமல், பாதிப்புக்கு ஆளான இரு பிரிவினர் ஒன்றிணைந்து போராடுவதை விடுத்து, அவர்களுக்குள் மோதலை உருவாக்கும் போக்கு சரிதானா? இதன் விளைவு ஆதிக்கக் காரர்களுக்கு தானே இலாபம்?

தந்தை பெரியார் பெயரை, அண்ணல் அம் பேத்கர் பெயரை உச்சரித்தால் மட்டும் போதுமா? அந்தத் தலைவர்கள் கூறிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ஒன்றுபட்டுக் கருத்தில் நிற்க வேண்டாமா? என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன்.

திராவிட இயக்கத்தமிழர் பேரவை தோழர் சிங்கராயர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலக் குழு உறுப் பினர் தோழர் ஜி.ஆனந் தன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தோழ ரும், சமூக சமத்து வத்துக்கான டாக்டர் கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத், மேனாள் அமைச்சரும் தி.மு.க. செய்தித் தொடர்பாளருமான அ.இரகுமான்கான்  ஆகியோர் உரையத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் உணர்ச்சிபூர்வ உரையை வழங்கினார்.

நிறைவாக தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரையை ஆற்றினார். அவர் தமது உரையில்,“இந்த மாநாட்டை நாங்கள் ஒன்றும் மகிழ்ச்சியாக நடத்திடவில்லை. நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 2012இலும்  ஜாதி தீண்டாமையை எதிர்த்து மாநாடு நடத்த வேண்டியுள்ளது என்ற வேதனை ஒருபுறம்; அதே நேரத்தில் இந்தக் கால கட்டத்தில் நடத்தித் தீர வேண்டிய மாநாடு – இது திராவிடர் கழகத்தின் கடமை.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 12 தீர்மானங்களும் மிகுந்த தொலைநோக்கோடு நிறைவேற்றப்பட்டுள்ளன. மேக்னகார்டா என்று சொல்லத் தக்கது. இத்தீர்மானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்படும்.

மக்களின் சிவில் உரிமைகளுக்காக 1945 முதல் பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1955இலும், 1989இலும் சட்டம் வருகிறது.

மனித உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு என்ற வகையில் இயற்றப்படும் சட்டங்கள் பிற்காலத்தில் தேவைப் படாதவைகளாக ஆக வேண்டாமா? அப்பொழுதுதானே மனித உரிமைகள் பேணப்படுகின்றன. தீண்டாமைக்கு இடம் இல்லை என்ற பெருமிதமான நிலை உருவாகும்.

இங்கே என்னடா என்றால் எல்லாம் – தலைகீழாக அல்லவா உள்ளன.

தீண்டாமை என்றால் என்னென்ன? எவை வன்கொடுமைகள் என்று வெளியிடப்படும் பட்டியலைப் பார்த்தால் மக்கள் மத்தியில் மோசமான, அநாகரிகமான எண்ணங்களும், உணர்வுகளும் தான் வளர்ந்து வந்திருக்கின்றன என்று நினைக்கக் கூடிய அளவுக்குத் தான் நிலைமைகள் இருந்து வருகின்றன.

தாழ்த்தப்பட்டவர் வாயில் மலத்தைத் திணிக்கும் அளவுக்கல்லவா தீண்டாமைக் கொடுமை வளர்ந்துள்ளது? இதற்காக வெட்கப்பட வேண்டாமா?

தந்தை பெரியார்தான் கேட்டார், நாயைக் கொஞ்சுகிறான், பூனையைக் கொஞ்சுகிறான் மனிதன். ஆனால் தம் சக மனிதனைத் தீண்டத்தகாதவன் என்ற வெறுக்கிறானே இது கொடுமையல்லவா என்று கேட்டார்.

வெளிநாட்டுக்காரன் நம்மைப்பற்றி என்ன தான் நினைப்பான்?

நம் நாட்டு ஜாதி அமைப்பு முறையைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் மிக அழகான வார்த்தையால் படம் பிடித்தார். படிக்கட்டு முறை ஜாதி அமைப்பு முறை.

ஏணியின் உச்சியில் ஒருவன் இருக்கின்றான், அவன் பிராமணன் – பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் இரண்டாவது இடத்தில் இருப்பவன் பிர்மாவின் தோளில் பிறந்த சத்திரியன்; மூன்றாமவன் பிர்மாவின் இடுப்பில் பிறந்த வைசியன், நான்காவது ஆள் சூத்திரன் – பிர்மாவின் காலில் பிறந்தவன் – அதற்கும் கீழ்தான் பஞ்சமன் – தீண்டத்தகாதவன் – அதற்கும் கீழே இருப்பவர்கள் நம் நாட்டுப் பெண்கள்.

மேலே இருப்பவன் கொஞ்சம் ஏணியை அசைத்தால் போதும் முதல் ஆள் இரண்டாவது ஆள்மீது, இரண்டாவது ஆள்,  மூன்றாவது ஆள்மீது, நான்காவது ஆள் அய்ந்தாவது ஆள்மீதும் விழுகிறான்.

5ஆவது இடத்தில்இருப்பவன் தன்மீது விழுந்த நான்காவது ஆளோடு சண்டைபோடும் நிலை. 4ஆவது ஆளுக்கும், 5 ஆளுக்கும் இடையேதான் சண்டை நடக்கும் இவர்கள் தானே பக்கத்துப் பக்கத்தில் இருக்கின்றனர். நான்காவது ஆளும், அய்ந்தாவது ஆளும் அடித்துக் கொண்டு நிற்கும்போது    ஏணியின் உச்சியில் இருக்கிற முதல் ஆள் சர்வ சாதாரணமாக – ஒன்றும் தெரியாதவன் போல், அங்கு என்ன நடக்கிறது, சண்டையா என்று கேட்கிறான்.

அண்ணல் அம்பேத்கர் சொன்ன ஏணிப்படி ஜாதிய அமைப்பு முறை இதுதான். எப்பொழுதும் மூலகாரண கர்த்தாக்களை மறந்துவிடக் கூடாது.

இன்றைக்கு இந்து ஏட்டில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது. தேனி மாவட்டம் டி.கல்லுப்பட்டியை அடுத்த சிற்றூரில் கயிலாயநாதர் கோயில் – அங்குள்ள பூசாரிக்குத் துணையாக குட்டிப் பூசாரி – தாழ்த்தப்பட்டவர் ஏழு ஆண்டுகளாக அந்தக் கோயிலில் பணி புரிந்து வந்துள்ளார். தலைமைப் பூசாரி வராத நாட்களில் இவரே பூசைகளை நடத்துவதுண்டு.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்சினையே கிளப்புகிறார்கள். தாழ்த்தப்பட்டவன் எப்படி கோயில் பூசாரியாக இருப்பது என்று கூறி தாழ்த்தப்பட்ட அந்தத் தோழரை தாக்கி இருக்கின்றனர்.

தென் கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்டதற்கு ரசீது தரப்பட்டது – ஆனால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வழக்கை வாபஸ் வாங்குமாறு வற்புறுத்துகிறார்.

பாதிக்கப்பட்ட அந்தத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பூசாரி மதுரையில் உள்ள எவிடன்ஸ் என்ற அமைப்பின் துணையை நாடுகிறார். அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடுகின்றார்.

இதை அறிந்தவுடன் மேலும் அந்தப் பூசாரிக்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றனர். முடிவு என்னவென்றால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பூசாரி தூக்கில் தொங்கினார் என்று செய்தி வந்துள்ளது.

நம் நாட்டில் அதிகார வர்க்கம், போலீஸ்கூட யாருக்குத் துணைபோகிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு நிகழ்வு. ஏழு தாழ்த்தப்பட்ட தோழர்களை படகில் ஏற்றிக் கொண்டு போய் கங்கையின் நடுப் பகுதியில்  தள்ளிக் கொலை செய்துள்ளனர். ஒரு ஆள் மட்டும் நீந்தித் தப்பிப் பிழைத்துள்ளார். வழக்குப் போடப்படுகிறது. ஒரே ஒருவர் தான் சாட்சி என்பதால் மாவட்ட நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்கிறார். உயர்நீதிமன்றத்திலும் அதே தீர்ப்பு. வழக்கு உச்சநீதிமன்றம் வரைசெல்லுகிறது.

உச்சநீதிமன்றமோ குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அளித்து இப்பொழுது தீர்ப்பு வழங்கியுள்ளது.

30 ஆண்டுகளுக்குப்பின் இப்படி ஒரு தீர்ப்புக் கிடைத்துள்ளது. எனவே சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பி விடலாம் என்று யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம் – காலந் தாழ்ந்தாவது குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

நீங்கள் அரசியல் மூலம் எந்தப் பதவிக்கும் செல்லுங்கள் முதல் அமைச்சர் மட்டுமல்ல. பிரதமராகக் கூடச் செல்லுங்கள் – அதில் எங்களுக்கு என்ன சங்கடம்?
எங்கள் கல்லறைமீது பதவி நாற்காலி போட்டு உட்கார வேண்டும் என்று மட்டும் ஆசைப்படாதீர்கள்.

அடுத்து நாம் எங்கு செல்ல வேண்டும் என்கிற வளர்ச்சியைப் பற்றி சிந்தியுங்கள். கி.மு.க்கு நாட்டை நகர்த்த வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்.

நாளைக்கே உங்களுக்குப் பிரச்சினை, சங்கடம் என்றால், உங்களைக் காப்பாற்ற நாங்கள்தான் வருவோம்.

எங்கள் தாக்குதல் என்பது தத்துவத்தின் மீது தானே தவிர தனி மனிதர்கள்மீது அல்ல.

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட் டவர்களும் சரி – இருவரும் யார்? உழைப்பாளி மக்கள்தானே – அடிமை மக்கள்தான் என்பதை ளுநசஎஉந ஊடயளள என்றே குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் புரிந்து கொள்ளாமல் நாம் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு சாக வேண்டுமா?

நாங்கள் மாநாடு நடத்துவது நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்ள அல்ல.
நாம்  ஒன்றுபட்டு போராடுவோம் – நாம் பெற வேண்டிய உரிமைகள் ஏராளம் உள்ளன என்று பொறுப்போடு அழைப்பு விடுப்பதுதானே இந்த மாநாட்டின் நோக்கம்?

இங்கே பேசிய விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் சகோதரர் திருமாவளவன் எவ்வளவுப் பொறுப்புணர்ச்சியுடன் பேசினார். நான் அதனை மிகவும்  பாராட்டுகிறேன்; வரவேற்கிறேன்.

எங்களோடு, இரட்டைக் குழலொடு, மூன்றாவது குழலாக அவர் முழங்குவார்.

மாண்புமிகுகள் வரும்  – போகும், மானமிகு என்பதுதான் முக்கியம், அது நிலைக்க வேண்டும் அதற்காகத்தான் இந்தக் கூட்டணி.  கிராமம் தவறாமல், ஊர் தவறாமல் நமது ஒற்றுமைக்காக நல்லிணக்கத்துக்காக கருத்துப் பிரச்சாரத்தை, விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்வது தான் இனி எங்களின் முழு மூச்சான வேலை. அந்த வேலையைத்தான் செய்து கொண்டுள் ளோம் என்றால் ஒத்த கருத்துள்ளவர்களோடு கூட்டுப் பணியாகத் தீவிரமாகச் செயல்படு வோம்.

வாருங்கள் சேர்ந்துழைக்கலாம் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

தமிழர்களின் ஒற்றுமைக்குத் தீ வைக்கும் ஜாதியை ஒழிக்க தக்க தருணத்தில் களம் இறங்கியுள்ளது திராவிடர் கழகம்.வலது கையும் இடது கையும் மோதிக்கொள்ள ஒருபோதும் அனுமதிக்க முடியாது.தமிழ் தேசியங்கள் மவுனம் காக்கும் காலத்தில் திராவிட இயக்கமே தமிழர்களை ஒன்றாக்க மீண்டும் முனைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *