தமிழ்ப் பெயர் சூட்டுவோம்! தமிழர் என்று காட்டுவோம்!

2024 Uncategorized முகப்பு கட்டுரை ஜனவரி 1-15, 2024

— மஞ்சை வசந்தன் —

அண்மைக் காலமாக தமிழர் வீடுகளில் பிள்ளைகளுக்குப் பிற மொழிகளில் பெயர் சூட்டப்படுவது மிகவும் வேதனைதரத்தக்கதாய் உள்ளது. குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக இப்போக்கு மிக மிகப் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இது குறித்து மிகக் கவலையோடும், பொறுப்புணர்ச்சியோடும், தமிழர் நலன் சார்ந்த அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சிந்தித்து உடனடியாகத் தீர்வு காணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உயர்ஜாதிக்காரர்களுக்கு உயர்வான பெயர்களையும் சூத்திரனுக்கு இழிவான பெயர்களையும் இடவேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்தின.
பிராமணனுக்கு மங்களத்தையும், க்ஷத்திரியனுக்குப் பலத்தையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டியது.

பிராமணனுக்குச் சர்ம்மவென்பதையும் க்ஷத்திரியனுக்கு வர்ம்ம என்பதையும் வைசியனுக்கு பூதியென்பதையும் சூத்திரனுக்குத் தாசனென்பதையும் தொடர்ப்பேராக இடவேண்டியது.”

(மனுதர்மம் அத்-2 ஸ்லோகம் 31, 32)

இவ்வாறு மனுதர்மம் கூறுவது நடைமுறையில் 60 ஆண்டுகளுக்கு முன்புவரைக்கூட நடப்பில் இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மண்ணாங்கட்டி, தொப்புளான், அம்மாவாசி, இருளன், செடிசேம்பு, கருப்பாயி, காத்தாயி, மூக்காயி என்று பெயர் சூட்டப்பட்டன

புராண காலத்திற்குமுன், ஆரிய பார்ப்பனர்கள் தமிழர்களுடன் ஊடுரு-வுவதற்குமுன் தமிழர் பிள்ளைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர்களே சூட்டப்பட்டன. ஆரிய பார்ப்பன ஊடுருவலுக்குப்பின் கடவுள், இதிகாசம், சாஸ்திரம், புராணம் என்று புகுத்தப்பட்டபின் அந்நிலை முற்றாக மாறியது.

புராணங்கள், இதிகாசங்கள் கோலோச்சிய 100 ஆண்டுகளுக்கு முன சைவ, வைணவ கடவுளர் பெயர்களே ஆண் _ பெண் குழந்தைகளுக்கும் சூட்டப்பட்டன. வெங்கடேசன், பரமசிவம், வேல்முருகன், கணபதி, சீனிவாசன், கலியபெருமாள், நமச்சிவாயம், விசாலாட்சி, மீனாட்சி, காமாட்சி, தெய்வயானை, சரஸ்வதி, லட்சுமி, பரமேஸ்வரி போன்ற பெயர்கள் எல்லா வீடுகளிலும் குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டன.

இருபதாம் நூற்றாண்டு முற்பகுதிவரை இந்நிலைதான் நீடித்தது. தமிழ்நாடு மொழி வழி மாநிலமாகப் பிரிக்கப்படுவதற்குமுன், வடக்கே திருப்பதி மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தது; அடுத்து மதுரை, இராமேஸ்வரம். எந்தெந்த கோயில்கள் செல்வாக்குப் பெற்றனவோ அந்தக் கோயில் கடவுள்களின் பெயர்கள் பிள்ளைகளுக்குச் சூட்டப்பட்டன.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், தனித்தமிழ் இயக்கங்களும் உருவாக்கப்பட்டபின் சமஸ்கிருதப் பெயர்களை விலக்கி தமிழ்ப்பெயர்களைச் சூட்டும் ஆர்வம் உருவாக்கப்பட்டது. அவ்வாறு சூட்டிக்கொள்வதும், சூட்டுவதும் பெருமையாக எண்ணப்பட்டது. அதன் விளைவாய் தமிழர் வீடுகளில் பிள்ளைகட்கு நல்ல தமிழில் பெயர்கள் சூட்டப்பட்டன.

திராவிட இயக்கத் தலைவர்களே தங்கள் பெயர்களை மாற்றி தூய தமிழ்ப்பெயர்களைச் சூட்டிக்கொண்டனர்.

இராமையா அன்பழகன் என்றும், தட்சணாமூர்த்தி கருணாநிதியென்றும் நாராயணசாமி நெடுஞ்செழியன் என்றும், சாரங்கபாணி வீரமணியென்றும் தூயதமிழில் பெயர்களை ஏற்றனர். தலைவர்களே தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டதைக் கண்ட தமிழர்கள், அந்த உந்துதலில் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர்களையே பெரும்பாலும் சூட்டினர்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு, சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு தமிழ்நாட்டில் உச்சம் பெற்றபோது தமிழ் உணர்வும் மேலோங்க, தமிழில் பெயர் சூட்டப்படுவதும் அதிகம் பரவியது.

இப்படிப்பட்ட நிலையில் தொலைக்காட்சி வந்தபின், வீடுதோறும் தொலைக்காட்சி நுழைந்தது. குறிப்பாக செயற்கைக்கோள் வழி தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நிகழ்த்தப்பட்டபின், திட்டமிட்டு ஆரிய கலாச்சார ஊடுருவல், திணிப்பு அதிகம் நிகழ்ந்து வருகிறது.

தொலைக்காட்சியில் இடைவிடாது ஒளிபரப்பாகும் தொடர்கள்மூலம் கடவுள், பக்தி, சோதிடம், வாஸ்து, பரிகாரம், பெண்ணடிமைத் தனம் போன்ற அறிவுக்கும், சமத்துவத்திற்கும், தமிழ்ப்பண்பாட்டிற்கும் ஒவ்வாத கருத்துகள், நடைமுறைகள் புகுத்தப்பட்டன. தொலைக்காட்சித் தொடரில் முழுக்க முழுக்க சமஸ்கிருதப் பெயர்கள் வீடுதோறும் ஒலிக்கத் தொடங்கின.

கிருத்திகா, ஹர்ஷனி, ஹாஸினி, வர்ஷா, ரூபா, தன்யஸ்ரீ, சதீஷ், ராக்கேஷ், மகேஷ், ஸ்ரீதர் போன்ற சமஸ்கிருதப் பெயர்கள் தமிழ்ப் பிள்ளைகளுக்குச் சூட்டப்படும் கேவலம், பெருமையாகக் கொள்ளப்படும் அவலம் அதிகரித்து வருகிறது.

திராவிட இயக்கப் பற்றுடைய, தமிழ், தமிழர் மேம்பாட்டுக்கு உழைக்கக் கூடியவர்களின் பேரக்குழந்தைகளுக்குக்கூட சமஸ்கிருதப் பெயர்கள்; அவர்கள் பிறந்த குடும்பச் சூழலுக்கு ஏற்ப சூட்டப்படும் அவலம் உருவாகியுள்ளது.

பெயர் என்பது சுட்டிக்காட்டுவதற்கு மட்டுமல்ல; ஒருவருக்கான அடையாளம் என்பதையும் தாண்டி, ஒருவருக்கு உணர்வூட்டுவதாயும், உரமூட்டுவதாயும், மிடுக்கு அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.

இதை நன்கு அறிந்தே சனாதனக்கும்பலும், அவர்களுடைய சாஸ்திரங்களும் மிடுக்கான, உயர்வான, பெருமை தரும் பெயர்களைத் தாங்கள் மட்டுமே சூட்டிக்கொள்ள வேண்டும்; சூத்திரர்களுக்கு இழிவான பெயர்களைச் சூட்டவேண்டும் என்று சட்டமாக்கினார், கட்டாயப்படுத்தினர்.

“மண்ணாங்கட்டி” என்று ஒருவருக்குப் பெயர் சூட்டினால் அவர் உள்ளம் இயல்பாகவே தாழ்வுகொள்ளும். இது உளவியல் சார்ந்த உணர்வு. எனவே, ஒருவருக்குச் சூட்டப்படும் பெயர் உணர்வூட்டுவதாய், எழுச்சியும், மிடுக்கும் தருவதாய் இருக்கவேண்டும்.

இது எவ்வளவு முதன்மையானதோ அவ்வாறே தாய்மொழியில் ஒருவருக்குப் பெயர் இடவேண்டும் என்பதும் முதன்மையானது வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கு அடையாளமாய் அமையும் பெயரை, அந்நிய மொழியில் இட்டுக் கொள்வது கேவலம், அவலம், இழிவு என்பதைச் சரியாக உணர்ந்தால் சமஸ்கிருதப் பெயர்களை இடுவார்களா?

வேற்று மொழியில் பெயர் இட்டுக் கொள்வதைப் பெருமையாகக் கருதும் போலி கவுரவமும், மடமையும் முதலில் ஒழிக்கப்பட வேண்டும்.
தன்னைப் பெற்றவனை தந்தையென்று காட்டாமல், வேறு ஒருவரைத் தந்தையென்று காட்டிப் பெருமை கொள்ளும் அவலமே, வேற்றுமொழியில் பெயர் சூட்டுவது.
புரியாத மொழியில் பேசுபவர்களை உயர்வாக எண்ணும் அறியாமை போன்றதுதான்_ புரியாத மொழியில் பெயர் சூட்டிக்கொண்டு பெருமை கொள்வதும்.
அதுமட்டுமல்ல, அடுத்தவர் மொழியில் பெயர் இட்டுக் கொள்வது தாய்மொழியைத் தாழ்த்தி அயல் மொழியை உயர்வாக எண்ணும் அவலமும், அறியாமையும் அதில் அடங்கியுள்ளது என்பதையும் பிறமொழியில் பெயர் சூட்டிக்கொள்ளுகின்றவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உண்மையில் பார்த்தால் உலகில் உயர்வான மொழி, வளமான மொழி, உலகில் பெரும்பாலான மொழிகளுக்கு மூலமொழி தமிழ் மொழி. அப்படியிருக்க தமிழை ஒதுக்கிவிட்டு, தமிழில் பிச்சை பெற்று உருவாக்கப்பட்ட சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டிக்கொள்வது எவ்வளவு பெரிய அறியாமை! அவலம்!
அழைக்க, சுட்ட இனிமையான, மேன்மையான, பொருளுடைய தமிழ்ப் பெயர்களைத் தமிழர்கள் சூட்டிக்கொள்வதே தமிழர்க்குச் சிறப்பையும், உயர்வையும், தன்மான உணர்வையும் தரும்.

யாழினி, மகிழினி, தேன்மொழி, அறிவழகன், நன்மாறன், எழில்வேந்தன், கலையழகன் போன்ற தமிழ்ப் பெயர்களை விடவா சமஸ்கிருதப் பெயர்கள் இனிமையாக இருக்கின்றன? தமிழில் இல்லாத இனிமை, அழகு வேறு எந்த மொழியில் உள்ளது.

தண்ணீரை ஜலம் என்றும், சோற்றை சாதம் என்றும் கூறுவதை உயர்வு என்று எண்ணுகின்ற மடமையே இதற்குக் காரணம்.
கேசவன் என்று வடமொழியில் பெருமையாகப் பெயர் சூட்டிக் கொள்கிறான். கேசவன் என்றால் ‘மயிரான்’ என்பதே சரியான பொருள். மயிரான் என்று தமிழில் பெயர் வைத்துக்கொள்வானா? பொருள் புரியாமல் பெருமையாய் எண்ணும் அறியாமையின் அவலம் அல்லவா இது!

‘கிருஷ்ணவேணி’ என்று பெருமையாகப் பெயர் வைத்துக் கொள்கிறார்கள் அதன் பொருள் என்ன? “கருஞ்சடைச்சி” என்று பொருள் தெரிந்தால், இப்படி பெயர் வைப்பார்களா? ‘பிருதிவ்’ என்று பெயர் வைத்துக்கொள்கிறார்கள். அதன் பொருள் என்ன? “மண்ணாங்கட்டி!” பொருள் தெரிந்தால் இப்படி பெயர் வைப்பார்களா?
இயக்கம் காணவேண்டும்

தொல். திருமாவளவன் அவர்கள் தமிழில் பெயரிடுவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டு 5000 தமிழர்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டினார். இது தமிழர் வரலாற்றில் இடம் பெறும் சிறப்பான செயல் திட்டம். ஆனால், அச்செயல் திட்டத்தை அவர் தொடர்ந்திருக்கவேண்டும், மற்ற தமிழர் அரணாகவுள்ள அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் செய்திருக்க வேண்டும் என்பதை உளச்சான்றோடு அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
நாம் அரசியல் சார்ந்தவற்றில் காட்டுகின்ற முனைப்பை, பண்பாடு சார்ந்தவற்றில் காட்டத் தவறுவதே இந்தப் பின்னடைவிற்குக் காரணம்.
மூன்று விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இனம், 24 ஆயிரம் பேர் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருதத்தை 140 கோடி மக்கள் மீது திணிக்க தொடர்ந்து முற்படும்போது, 140 கோடி மக்கள் எவ்வளவு பொறுப்போடு’ நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஆழமாகச் சிந்தித்தால், இனியும் நாம் பொறுப்பற்று இருக்கக்கூடாது; உடனே இதற்கான செயல் திட்டங்கள் வகுத்து களத்தில் இறங்கி பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்புதானே வரும்-?

இனியும் தாமதிக்காமல் தமிழர் நலன் காக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உடனடியாக ஒன்று சேர்ந்து கலந்துபேசி செயல்திட்டங்களை உடனே வகுக்க வேண்டும். இந்த மாபெரும் பணியை வழக்கம் போல திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும். 2024 ஜனவரி முதல் தமிழில் பெயரிடவேண்டும் என்பதைச் செயல்படுத்த அனைத்து தமிழ் உணர்வுள்ள அமைப்புகளையும் உள்ளடக்கிய இயக்கம் காணப்படும் என்று சில தினங்களுக்கு முன் அறிவித்திருப்பது இதற்கான முன்னெடுப்பாகும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் இதில் முழுக்கவனம் செலுத்தி வெற்றி பெரும் அளவிற்கு செயல்திட்டங்களை விரைந்து செய்ய வேண்டும். திருமாவளவன் போன்றவர்கள் களப்பணியில் முன்னின்று முனைப்புடன், விடாது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

உணர்வு ஊட்டப்படவேண்டும்:

தமிழர் பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர்களே இடவேண்டும் என்ற உணர்வை ஒவ்வொரு இயக்கமும், அரசியல் கட்சிகளும் ஊட்ட வேண்டும். தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படம், சமூக ஊடகங்கள் அனைத்தும் இதில் முனைப்புக் காட்டி மக்களுக்கு உணர்வூட்ட வேண்டும். மாற்றுமொழிப் பெயரை நாம் இட்டுக் கொள்வது எவ்வளவு இழிவு என்பதை ஒவ்வொரு தமிழரும் உணரும்படி செய்ய வேண்டும்.

தடைகள் தகர்க்கப்பட வேண்டும்

பெயர் ராசி, வேண்டுதல், நேர்த்திக்கடன் என்பன போன்ற மூடநம்பிக்கைகள் தமிழில் பெயரிடுவதற்குத் தடையாய் இருப்பதால், இது குறித்து பகுத்தறிவு இயக்கங்கள் மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும். பெயர் என்பது ஒருவருக்கான அடிப்படையான அடையாளம் மட்டுமே. மற்றபடி பெயரில் இராசி, அதிர்ஷ்டம், வாழ்வின் வளர்ச்சி, வீழ்ச்சி இவையெல்லாம் வருவதில்லை என்பதை உணர்த்த வேண்டும்.
அழைக்க சிறப்பான, மேன்மை தரும், ஊக்கந்தரும், ஒலிக்க இனிமையான பெயர்களைத் தேர்வு செய்வதே நல்லது. அது நம் தாய்மொழியான தமிழில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

தமிழ்ப்பெயர்கள் தொகுக்கப்பட்ட நூல்கள்

ஆண்களுக்கும், பெண்களுக்கும் உரிய நல்ல தமிழ்ப் பெயர்களைக் கொண்ட நூல்கள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்து, தரமான நூல்களை இந்த இயக்கத்தை முன்னெடுக்கும் தமிழ் அறிந்த பெருமக்கள் தேர்வு செய்து பரிந்துரைத்தால், தமிழர்கள் அந்தப் பெயர்களைப் படித்து, அதில் தங்களுக்கு விருப்பமான பெயர்களைத் தேர்வு செய்து சூட்டிக்கொள்வர்.
தமிழ்ப் பெயர் இட்டுக் கொள்ளாதவர்களை இழிவாகப் பார்க்கின்ற ஓர் உளப்பாங்கை நாம் உருவாக்க வேண்டும்.

அரசின் முதன்மைப் பணிகள்

முதற்பணி: புதிதாகச் சூட்டப்படும் பெயர்கள் தமிழ்ப்பெயராக இருக்கும்படி மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும். அது மிக எளிது. நாம் எளிதாக ஒரு சிறந்த தமிழ்ப் பெயரைத் தேர்வு செய்து சூட்டிக்கொள்ளலாம்.

இரண்டாவது பணி:

தமிழ்ப் பெயராக பெயரை மாற்றுதல்
ஏற்கனவே சமஸ்கிருதப் பெயரைச் சூட்டிக் கொண்டவர்கள், தங்கள் பெயரைத் தமிழ்ப் பெயராக மாற்றிக் கொள்வதில் உள்ள சட்டச் சிக்கல்களை எளிமைப்படுத்தி, விரைவாக அந்தப் பெயர் மாற்றத்திற்கு ஏற்பளிப்பும், தேவையான பதிவேடுகளில் திருத்தங்கள்செய்துகொள்ளவும் வழி வகைகளை அரசு செய்ய வேண்டும். அரசு பெயர் மாற்றத்திற்கான செயல்முறையை எளிமைப்படுத்தி அறிவித்தால் லட்சக்கணக்-கானோர் தங்கள் பெயர்களைத் தமிழ்ப் பெயர்களாக மாற்றிக்கொள்வர்.

முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கின்றவர்களின் பெயர்களை மாற்றிக்கொள்ளவும், பிறப்பு பதிவேடுகளில் திருத்தம் செய்யவும் அரசு அதற்கான சட்ட விதிகளை வகுத்துத் தந்தால், சூட்டப்பட்ட சமஸ்கிருதப் பெயர்களை அழகான, இனிமையான தமிழ்ப்பெயர்களாக பலரும் மாற்றிக்கொள்வர். இதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!

ஆயுதப் படையெடுப்பைவிட பண்பாட்டுப் படையெடுப்பு மிக மோசமான விளைவுகளை உருவாக்கும். ஆயுதப் படையெடுப்பு தாக்கப்படும் ஆள்களை மட்டும் அழிக்கும். ஆனால், பண்பாட்டுப் படையெடுப்பு இனஅழிப்பையே’ செய்யும்.
ஒடுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட தமிழினம், திராவிட இயக்கங்களால் மீண்டும் தலைநிமிர்ந்துவரும் நிலையில் மீண்டும் பண்பாட்டு படையெடுப்புக்குப் பலியாகாமல் தடுத்து, தமிழர்களின் பண்பாட்டை, உயர்வை, சிறப்பைக் காக்க வேண்டும்.
பெயர்தானே! அதில் என்ன பாதிப்பு வந்துவிடப் போகிறது என்ற அலட்சியம் கூடாது. பெயர் என்பது இனத்தின் அடையாளம். மொழியென்பது இனத்தின் உயிர்நாடி. எனவே மொழி சார்ந்தவற்றில் எச்சரிக்கையும், விழிப்பும் கட்டாயம்.
நம்மீது எந்த ஒரு மொழியும் ஆதிக்கம் செலுத்துவதை நாம் அனுமதிக்கக் கூடாது. அதை அனுமதித்தால் அது இன அழிவுக்கு இட்டுச் செல்லும்.
எனவே, நம் இனத்தின் விழாக்கள், மொழி, பண்பாடு, கலை, வாழ்வியல் இவற்றை நாம் பாதுகாத்து, வளர்த்து நிலைநிறுத்த வேண்டும். அந்தக் கடமை உணர்வு ஒவ்வொருவருக்கும் கட்டாயம் வேண்டும்.
தமிழர்கள் தமிழில் பெயர் இட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதே கேவலம் என்பதை உணரவேண்டும். தமிழர்களுக்குத் தமிழில்தான் பெயர் இடவேண்டும் என்ற உணர்வு தானே வரவேண்டும்.
அரசும், தமிழர் நலன் காக்கும் இயக்கங்களும் அந்த உணர்வை மக்களுக்கு உருவாக்க வேண்டும். அதற்கான செயல் திட்டங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இது இன்றைக்குக் கட்டாயக் கடமையாகும்! றீ