ஆசிரியர் பதில்கள்

2023 Uncategorized ஆசிரியர் பதில்கள் டிசம்பர் 1-15, 2023
குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரே இடவேண்டும் ! பிரச்சாரப் பேரியக்கம் ஷனவரியில் !
1. கே : ஒரு நாட்டின் பிரதமரே தரம் தாழ்ந்து பேசிய நிலையில் அதற்கு எதிர்வினையாக இன்னொரு தலைவர்
பேசியதற்கு எதிர்கட்சித் தலைவருக்கு மட்டும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது சரியா?   – டில்லிபாபு, செங்குன்றம்.
ப : தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் யாரால் தேர்வு செய்யப்படுகிறார்கள்; ஓய்வு பெற்ற அவர்கள் எங்கிருந்து இந்த புதிய பொறுப்பிற்கு வந்தார்கள் என்பதை முழுமையாக நீங்கள் அறிந்திருந்தால், இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள்!
2. கே : அய்யா, தங்களின் பிறந்த நாள் செய்தியாகக் கூற விரும்புவது என்ன? –  வேணுகோபால், தஞ்சாவூர்.
ப : 1. பெரியார் விட்ட பணி முடிப்பது நம் அனைவர் கடன்.
2. பெரியார் என்ற பேராயுதத்தின் மூலம் கடந்த 9 ஆண்டுகால ‘ஆரியமாயை’யை _ ஆரிய அரசினை அகற்ற ஒவ்வொருவரும் வரும் 5 மாத காலத்திற்கு சோர்
வறியாமல் உழைத்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி, ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும். இது வெறும் தேர்தல் அல்ல; ஹிந்துத்துவ இந்தியா
வுக்கும் திராவிட இந்தியாவுக்கும் இடையே நடைபெறும் கொள்கை லட்சியப் போர்.
3. பெரியாரை உலகமயமாக்குவதும் உலகத்தைப் பெரியார் மயமாக்குவதும்தான்!
கே :  உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறிய பின்பும் ஆளுநர் கோப்புகளுக்கு ஏற்பளிப்பு தராமல் இருப்பதோடு, பெரியார் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவை ஆசிரியர்களே புறக்கணிக்கும் நிலை நீடிக்கிறதே! முடிவு எப்போது? –  ஆர். சாந்தி, மாயவரம்.
ப : 2024இல் ஆட்சி மாற்றமே அனைத்துக்கும் ஒரே மாற்று; ஒரே மருந்து!
3. கே: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சிங்கப்பூரில் ‘பெரியாரும் அறிவியலும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை பற்றித் தங்கள் கருத்து என்ன? –  பாக்கியா, ஓட்டேரி.
ப  :  அவ்வுரை ஒரு சிறந்த நூலாகவே பெரியார் மணியம்மை (நிகர்நிலை)ப் பல்கலைக்கழகம் மூலம் வெளிவந்துள்ளது. அதில் வேந்தர் என்கிற முறையில் நான் அணிந்துரை தந்துள்ளேன்.அதைப் படியுங்கள்.
4. கே : பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள்,’சமுதாய மாற்றத்திற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியவர் பெரியார் என்றும், கர்நாடக இசைக்கு உள்ள முக்கிய இடம் தமிழிசைக்கும் கிடைத்தாக வேண்டும்’ என்றும் கூறியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள் ?  –  வேணு, கரூர்.
ப : அக்ரகாரத்தின் அதிசய மனிதர்_ சுதந்திர சிந்தனையாளர் -_ சமூகநீதி வெற்றி பெற விரும்பும் மனிதநேயர். அவரது கருத்துக்கள் _ கட்டுரைகள் _ நூல்கள் பல படித்துள்ளேன். பாராட்டி மகிழத்தக்க முற்போக்குக் கருத்தியல் ஆவணங்கள் அவை!
5. கே : நிர்மலா சீதாராமனின் பொய்ச் செய்திகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் குறித்து தங்கள் கருத்து என்ன?
–  மஞ்சுளா, கோயம்புத்தூர்.
ப : இதுபற்றி நீதிக்கட்சியின் 107ஆம் ஆண்டு விழா உரையிலேயே விளக்கியுள்ளேன். ஆரியம் திராவிட மாடல் ஆட்சிமீது அவதூறுச் சேற்றை அனுதினமும் வாரி வீசுவதில்  அம்மையாரின் பங்குதான் இந்த ஆதாரமற்ற அவதூறும் கூட!
கோயபெல்சின் குருநாதர்களின் விஷமப்பிரச்சார பலூன்கள் வெடிப்பதற்கு அதிக காலம் பிடிக்காது.
6. கே : ‘சேரி மொழி’ என்று மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கூறியது பற்றித் தங்கள் கருத்து என்ன? –  பானுப்ரியா, வேளச்சேரி.
ப: வன்மையான கண்டனத்திற்குரியது; அதைவிட மோசம் _ அதற்கு விளக்கம் என பிரெஞ்ச் மொழி அப்படி இப்படி என்று உளறி, குளிக்கப்போயி சேற்றைப் பூசி வந்த கீழிறக்கம் குஷ்பு பெற்றது_ சேரக்கூடாத இடந்தன்னில் சேர்ந்ததால் வந்த வினை போலும்!
7.கே : கடந்த 20 ஆண்டுகளாக தமிழர் குழந்தைகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களே சூட்டப்பட்டு வருவதைத் தவிர்க்க தீவிர நடவடிக்கை மேற்கொள்வீர்களா?
–  கார்த்திக், குன்றத்தூர்.
ப : நிச்சயமாக. மற்ற இனவுணர்வாளர்கள், மொழி உணர்வாளர்கள், பகுத்தறிவாளர்கள் அனை
வரையும் கலந்து ஒரு தனி இயக்கம் _’குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டல்’ பிரச்சார இயக்கம் 2024இல் துவக்குவோம்!  ♦