மனுதர்ம (விஸ்வகர்மா) யோஜனாவிற்கு எதிராய் மக்களுக்கு விழிப்பூட்டிய பரப்புரைப் பயணம்

2023 நவம்பர் 16-30, 2023 முகப்பு கட்டுரை

… மஞ்சை வசந்தன் …

குலத்தொழிலை மீண்டும் கொண்டுவர மறைமுகத் திட்டம் ஒன்றை ஒன்றிய பா.ஜ.க. அரசு, “விஸ்வகர்மா யோஜனா” என்னும் பெயரில் கொண்டுவந்துள்ளது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடனே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், இதன் பாதிப்பைத் துல்லியமாக உணர்ந்து, அதை எதிர்த்து விழிப்பூட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதுபற்றிய கண்டனத்தைத்தெரிவித்து, அதன் தொடர்ச்சியாக அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

விஸ்வகர்மா திட்டத்தின் ஆபத்தை மக்களுக்குத் தெளிவூட்ட கீழ்க்கண்டவாறு இரண்டு கட்ட பரப்புரைப் பயணத்தையும் ஆசிரியர் அவர்கள் மேற்கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் ஆசிரியர் அவர்கள் பேசிய கருத்துகளின் சுருக்கம்:

ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டங்களைப் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அவர்கள் அமைக்க விரும்பிய வருணாசிரம ஹிந்து ராஷ்டிராவை அமைக்கப் பெருமுயற்சி எடுத்து வருகிறது.

வருணாசிரம தர்மமான – ஜாதியைக் காப்பாற்றி நிலைக்க வைக்கும் சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதே கடந்த 9 ஆண்டுகளாக நடந்துவரும் ஆர்.எஸ்.எஸ். _ பா.ஜ.க. ஆட்சியின் முக்கிய நோக்கமாகும்.

கண்ணுக்குப் பளிச்சென்று படமுடியாத இனிப்பு தடவிய நச்சு உருண்டைகளைக் கல்வி, தொழில், பொருளாதாரத் துறைகளிலும் புகுத்தி வருகிறது. அதன் தீய விளைவுகள்தாம் நீட், க்யூட், நெக்ஸ்ட் தேர்வுகளும், உயர் ஜாதியினருக்கான இடஒதுக்கீடு போன்ற ஏற்பாடுகளும்! இவற்றை, உடனடி மரணத்தைத் தராத, படிப்படியாக ஒவ்வொரு உறுப்பையும் சிதைத்து இறுதியாக மரணத்தைத் தரும் மெல்லக் கொல்லும் நஞ்சுகளைப் (Slow Poision) போல பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அப்படியான மற்றும் ஒரு நஞ்சுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்லூரிக் கல்விக் கனவைத் தகர்க்கும் ‘‘விஸ்வகர்மா யோஜனா’’ திட்டம்.

மோடி ஆட்சியில் குலதர்மப் பாம்பு படமெடுக்கிறது !

ஆரியத்தின் ஆணிவேரான பிறவி பே(வ)தத்தினை – ‘Graded inequality’ என்று டாக்டர் அம்பேத்கர் தெளிவுபடுத்திய படிக்கட்டு ஜாதி முறையை நிலைநிறுத்தி, மனித சமத்துவத்தை வெடி வைத்துத் தகர்த்து, உயர்ந்தவன் – தாழ்ந்தவன், தொடக்கூடியவன் – தொடக்கூடாதவன் என்று மனிதர்களை வேற்றுமைப்படுத்தி, அடிமைப்படுத்திய குலதர்மப் பாம்பு, பிரதமர் மோடி ஆட்சியில் திடீரெனப் படமெடுத்தாடி, தன் நச்சுப் பல்லை நீட்டிக் காட்டுகிறது – இப்போதும்!

ஆட்சிக்கு வந்தவுடன் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தில் பாரம்பரியக் குடும்பத் தொழில்களுக்கு விலக்கு என்கிற பெயரில் குலத்தொழிலுக்குள் குழந்தைகளைத் திணிக்கும் கொடுமைக்கு வழி ஏற்படுத்தினார்கள்.

‘‘விஸ்வகர்மா யோஜனா” என்ற பெயரில் குலதர்மத் தொழிலை இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள்மீது சுமத்தப்பட்ட பிறவி இழிவை மறைமுகமாகப் புதுப்பித்து, “அவரவர் குலத்தொழிலைக் கிராமங்களிலும், நகரங்களிலும் 30 லட்சம் பேர் செய்வார்கள் – அதற்கு நிதி, மானியம் உதவி உண்டு” என்று 2023 ஆகஸ்ட் 15ஆம் நாளில் டில்லி செங்கோட்டை உரையில் பேசியுள்ளார் பிரதமர் மோடி அவர்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 2023- _ 2024 நிதியாண்டு முதல் 2027- _ 2028 நிதியாண்டு வரை அய்ந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புதிய திட்டமான “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டம் பற்றிய செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

“கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்கள் தங்கள் கைகள் மற்றும் கருவிகள் மூலம் பணிபுரியும் பாரம்பரியத் திறன்களின் அடிப்படையிலான, குரு – சிஷ்யப் பரம்பரை அல்லது குடும்ப அடிப்படையிலான பயிற்சியை வலுப்படுத்துவதையும் வளர்ப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும் விஸ்வகர்மாக்கள் உள்நாட்டு மற்றும் உலகளவில் மதிப்புத் தொடர்களுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் இதர நோக்கங்களாகும்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம், தவணை) 5% சலுகை வட்டி விகிதத்துடன் கடன் வழங்கப்படும். மேலும் இத்திட்டம் திறன் மேம்பாட்டுக் கருவிகளுக்கு ஊக்கத் தொகை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத் தொகை மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவையும் வழங்கும்.

இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்கும். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின்கீழ் பின்வரும் பதினெட்டு பரம்பரைத் தொழில்கள் முதலில் இடம் பெறும்.
அவையாவன:

(பட்டியலில் அடைப்புக் குறிக்குள் இருப்பவை வடநாட்டில் வழங்கப்பெறும் ஜாதிப் பெயர்கள்)
(i)தச்சர் (சுத்தார்)
(ii) படகு (தோணி) தயாரிப்பாளர்
(iii) கவசம் தயாரிப்பவர்
(iv) கொல்லர் (லொஹார்)
(v) சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர்
(vi) பூட்டு தயாரிப்பவர்
(vii) பொற்கொல்லர் (சோனார்)
(viii) குயவர் (கும்ஹார்)
(ix) சிற்பி (மூர்த்திகார், கல் தச்சர்), கல் உடைப்பவர்
(x) காலணி தைப்பவர் (சர்ம்கார்) காலணித் தொழிலாளி, காலணிக் கைவினைஞர்
(xi) கொத்தனார் (ராஜமிஸ்திரி)
(xii) கூடை /பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு நெசவாளர்
(xiii) பொம்மை தயாரிப்பவர் (பாரம்பரிய)
(xiv) முடி திருத்தும் தொழிலாளர் (நாயி)
(xv) பூமாலை தொடுப்பவர் (பூக்காரர்)
(xvi) சலவைத் தொழிலாளி (டோபி)
(xvii) தையல்காரர் (டர்ஜி) மற்றும்
(xviii) மீன்பிடி வலை தயாரிப்பவர்
பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். கூறும் ஹிந்து ராஜ்யம் என்பதன் அடிப்படையே வருணாசிரம தர்மம் தான்! வருணாசிரமம் என்பது பிறப்பின் அடிப்படையிலானது; பரம்பரை பரம்பரையாகச் செய்து வரும் ஜாதித் தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பது தான். பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா (திட்டம்) பற்றி ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கும் கையேட்டின் அறிமுகப் பகுதியிலேயே பாரம்பரியம், குரு – சிஷ்ய பரம்பரைத் தொழில் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் கவனிக்கவும்.

1.1 A significant section of the workforce of the Indian Economy consists of artisans and craftspeople, who work with their hands and tools, are usually self-employed and are generally considered to be a part of the informal or unorganised sector of the economy. These traditional artisans and craftspeople are referred to as Vishwakarmas’ and are engaged in occupations like Blacksmiths, Goldsmiths, Potters, Carpenters, Sculptors, etc. These skills or occupations are passed from generation-to-generation following a guru shishya model of traditional training, both within the families and other informal groups of artisans and craftspeople.

தமிழாக்கம்:

இந்தியப் பொருளாதாரக் களத்தில் பெரும்பாலான தொழிலாளிகள் கைவினைஞர்களும் கைவினைத் தொழிலாளர்களும்தான். தங்கள் கரங்களையும் சில கருவிகளையும் பயன்படுத்தி அவர்கள் உழைக்கிறார்கள். பொதுவாக சுயதொழில் செய்பவர்களாகவே இவர்கள் கருதப்படுகிறார்கள். பொருளாதாரக் களத்தின் முறைசாரா அல்லது அமைப்பு சாரா துறையின் ஒரு பகுதி என்றும் இவர்களைக் குறப்பிடலாம். பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுமான அவர்கள் ‘விஸ்வகர்மாக்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் பலர் கருமான்களாக, பொற்கொல்லர்களாக, குயவர்களாக, தச்சர்களாக, சிற்பிகளாக உழைத்து வருகின்றனர். இந்தத் திறன்களும் தொழில்களும் ‘‘குரு-சிஷ்ய அமைப்பு’’ என்ற ஒரு மாதிரியைப் பின்பற்றி தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இத்தகைய பாரம்பரியப் பயிற்சியுடன் பலர் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து தொழில் புரிகிறார்கள். எந்த ஒரு முறையையும் அமைப்பையும் சாராத குழுக்களிலும் பல கலைஞர்கள் அந்தப் பயிற்சியைப் பயன்படுத்தி தொழில் செய்து வருகின்றனர்.
பிஜேபியின் விஸ்வ கர்மா திட்டத்தின் மூலம் பூனைக் குட்டி வெளியில் வந்துவிட்டது. கருமாதி செய்யும் பார்ப்பனர்கள் ஏன் இந்தப் பட்டியலில் வரவில்லை? பாரம்பரியத் தொழில்கள், பரம்பரைத் தொழில்கள் என்றால் இவற்றின் பொருள் என்ன?

17 வயதில் பள்ளி முடித்து 18 வயதில் கல்லூரிக்குள் நுழைய முனையும் தருணத்தில் அப்படியே அவர்களை மறித்துப் பிடிப்பதுதான் திட்டம். அதற்குத்தான் 1 லட்சம், 2 லட்சம் கடன்கள், வட்டி குறைவு என்றெல்லாம் தூண்டில் எவ்வளவு லாவகமாக அமைக்கப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? இந்த 1 லட்சம், 2 லட்சத்தை வைத்து பெரிய தொழில் முன்னெடுப்புகளைச் செய்ய முடியுமா? ஸ்டார்ட் அப்கள் உருவாக்க முடியுமா? நவீன கருவிகள் வாங்க முடியுமா? முடியவே முடியாது. முற்றிலும் ஜாதித் தொழிலுக்குள் முடக்கவே பயன்படும்.

இத்திட்டத்தில் யாருக்கு வாய்ப்பு?

நம் நெஞ்சங்கள் சமூகநீதிக்காகப் போராடிப் போராடி, சலவைத் தொழிலாளியின் மகன் மீண்டும் அதே தொழிலில் போய் அவமானத்தையும், தற்குறித்தனத்தையும் பெறாமல், திராவிடம் முயன்று அவரைப் படிக்க வைத்து அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஆக்கி வெற்றி கண்டது!
திராவிடத்தின் அடிப்படை என்பது, ஆரிய வர்ண தர்மமும், குலத்தொழிலும் அல்ல! ஆடு மேய்ப்பவர்களையும் – அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். ஆக்கி, அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படவேண்டும் என்பதே!

அதுதானே உண்மையான சமூக மாற்றமாக இருக்க முடியும்? இளைஞர்களே, நீங்கள் உங்கள் குலத் தொழிலைச் செய்தாக வேண்டும் என்றால், நிரந்தர இழிவும், அடிமைத்தனமும்தான் உங்களுக்குக் கிட்டும் _ இந்த ஆரிய ஆர்.எஸ்.எஸ். சனாதன ஆட்சியில்!

இதுபற்றிக் கண்டனக் குரலினை ஜாதி ஒழிந்த முற்போக்கு -_ சமத்துவ சமுதாயம் காண விரும்பும் அனைவரும் – ஒன்றுபட்டு உடனடியாக ஓர் அணியில் திரண்டு எழுந்து எதிர்ப்புக் கடலாய்ப் பொங்கி இத்திட்டத்தைக் கருவிலேயே அழித்து, குலத்தொழில் பாதகத்தை ஒழித்துக் கட்டவேண்டும்.
பாரம்பரியத் தொழிலைச் செய்ய ஏன் வற்புறுத்த வேண்டும்? செருப்புத் தைப்பவர், துணி வெளுப்பவர், முடி திருத்துபவர் பிள்ளைகள் வேறு படிப்பைப் படித்து முன்னேற முடியாமலே இப்படி முட்டுக்கட்டை போடுவதை எப்படி ஏற்க முடியும்?

தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளுக்கு முன் புதைகுழிக்கு அனுப்பப்பட்ட குலக் கல்வித் திட்டம், ஆரிய ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின்மூலம் மீண்டும் புதிய அவதாரம் எடுத்து, இந்தியா முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்டோரை வதைக்க -_ அவர்கள் டாக்டராக, பொறியாளராக, வழக்குரைஞராக, நீதிபதியாக ஆகாமல் தடுப்பதற்கான ஒரு திட்டமாக வந்திருப்பதே குலதர்மத் தொழிலைப் புதுப்பிக்கும் இந்தப் புதிய திட்டமாகும்!

பெற்றோர்களே, புரிந்துகொண்டு, விழித்துக் கொள்வீர்! விடியல் ஏற்படுத்த ஆயத்தமாவீர்!

இல்லையேல், ‘நல்ல படிப்பு படித்து, சமூகத்தில் உயர்நிலை எய்த வேண்டும் என் பிள்ளை’ என்ற கனவைத் தகர்த்துவிடுவார்கள். குலத்தொழில் செய்து கஷ்டப்படும் யாருக்கும் மீண்டும் அடுத்த தலைமுறையிலும் தன்பிள்ளை அதே தொழிலைச் செய்து அடிமை வாழ்வு வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்காது. பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கும் முதல் தலைமுறையினரை இப்போதுதான் கண்டு வருகிறோம். பள்ளியை விட்டு வெளியே வரும்போதே நம் பிள்ளைகளை வலை விரித்து பிடிக்கப் பார்க்கும் பார்ப்பனச் சதிதான் விஸ்வகர்மா யோஜனா எனப்படும் புதிய குலக்கல்வித் திட்டமாகும்.

கே.எஸ். அழகிரி, தலைவர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

எவ்வளவோ தொழில்கள் உள்ளன. அதற்கெல்லாம் கடன் கொடுக்காமல், குறிப்பிட்ட தொழிலுக்கு மட்டும் ஜாதியின் பெயரால் கொடுப்பது அநீதி அல்லவா? மனிதத் தத்துவத்தை முதலில் மதிக்க வேண்டும். இதை மதிக்காத ஓர் அமைப்பு இருக்கிறது என்றால், அது ஆர்.எஸ்.எஸ்.தான்.
நாம் எப்போதும் கீழ் நிலையிலே இருக்க வேண்டும், மாறிவிடக்கூடாது என நினைக்கிறார்கள். அதுதான் அவர்கள் கொள்கை.‌ இதில் உறுதியாக இருக்கிறார்கள்.
நாமும் ஸநாதனத்திற்கு மாற்றான சமதர்மக் கருத்துகளை உறுதியாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன்,தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம், கடன் கொடுத்து குலத்தொழிலைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். மனுதர்மத்தை நிலை நிறுத்தும் இதுபோன்ற நுட்பமான சிக்கல்களை மக்களுக்கு எடுத்துக் கூறும் ஆற்றல் திராவிடர் கழகத்திற்கு எப்போதும் உண்டு.
2024 தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி கூட்டத்தில் இதுகுறித்து நாங்கள் சுட்டிக்காட்டிப் பேசினோம். விஸ்வகர்மா திட்டத்திற்குத் தமிழ்நாடு தான் முதலில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நீட் பிரச்சினை, சமஸ்கிருதமயமாக்கல் என எதுவாக இருந்தாலும் நாம் முன்னோடியாக இருக்கிறோம். பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஆளுமையும் தமிழ்நாட்டிற்கு உண்டு.

மோடி, அமித்ஷா போன்ற பார்ப்பனர் அல்லாதவர்கள் தான் ஸநாதன வளர்ச்சிக்குப் பயன்படுகிறார்கள். ராஜாஜி கொண்டு வந்ததன் பெயர் குலக்கல்வி. இப்போது கொண்டு வந்ததன் பெயர் குலத்தொழில். “இந்தத் தொழில் எனக்குத் தெரியும். அதைத் தொடர்ந்து செய்வேன்”, என்போருக்குக் கடன் தருகிறார்கள்.
பொதுவாக இரும்புத் தொழில், பொற்கொல்லர், தச்சு வேலை, பாத்திர வேலை, சிற்பம் ஆகிய அய்ந்து வேலைகளையும் செய்பவர்கள் விஸ்வகர்மா என அழைக்கப்-படுகிறார்கள்.

யாரும், எதையும் செய்யலாம் என்பது திறமையின் அடிப்படையில்! ஆனால், பழைய சமூகக் கட்டமைப்பை, சமூக ஒழுங்கைப் பாதுகாக்க நினைக்கிறார்கள் இவர்கள்.

இந்த ஸநாதனத்தைக் காக்கவே, இந்தக் குலத் தொழிலை வளர்க்கிறார்கள்.‌ நாம் சமத்துவ ஜனநாயகத்தை விரும்புகிறோம். இவர்கள் சமத்துவமற்ற ஸநாதனத்தை விரும்புகிறார்கள். இந்து மதத்தின் பெயராலே இந்தியாவை அழித்து விடுவார்கள் என்றார் அம்பேத்கர்.‌ ஒடுக்கப்பட்ட மக்களின் குடிசைகளை எரிப்பதை விட, ஸநாதன எதிர்ப்பில் தீவிரம் காட்ட வேண்டும்.

இந்துத்துவா என்பது பிராமணத்துவா, ஆர்.எஸ்.எஸ். என்பது பிராமணர் சங்கம். இதை இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

சந்திரயானை நிலவுக்கு அனுப்பிவிட்டு, தேசத்தைப் பாதாளத்திற்கு அனுப்பிவிட்டார்கள். 22ஆம் நூற்றாண்டை நோக்கி உலகம் போய்க் கொண்டிருக்கும் போது, இந்தியாவை மட்டும் 20 ஆம் நூற்றாண்டிலேயே வைத்திருக்கப் பார்க்கிறார்கள்.
தொழிலுக்குத் தானே கடன் கொடுக்-கிறோம் என்கிறார்கள். கடன் கொடுக்க எத்தனையோ அரசு நிறுவனங்கள் இருக்க, நீங்கள் ஏன் கடனோடு, ஜாதியையும் இழுத்து வருகிறீர்கள்?
நாம் மணலில் எழுதிய போது, பார்ப்-பனர்கள் சிலேட்டுக் குச்சியில் எழுதினார்கள். நாம் குச்சி பயன்படுத்தும் போது அவர்கள் பென்சிலுக்கு மாறினார்கள்.
நாம் பென்சிலுக்கு வந்தபோது, அவர்கள் பேனா பிடித்திருந்தார்கள், நாம் பேனாவுக்கு மாறிய போது அவர்கள் தட்டச்சு செய்தார்கள்.
தட்டச்சுக்கு நாம் மாறிய பிறகு, அவர்கள் கணிப்பொறி பயன்படுத்தினார்கள். நாம் கணிப்பொறிக்கு வந்தபோது, அவர்கள் அமெரிக்கா சென்று விட்டார்கள்.
ஆனால், நம்மை மீண்டும் குலத் தொழிலுக்குள் தள்ள முயற்சிக்கும் இவர்கள் முயற்சி பலிக்காது. இந்தியாவிற்கே தமிழ்நாடு தான் வழிகாட்டுகிறது. காரணம், நாங்கள் அணிந்திருப்பது ஈரோட்டுக் கண்ணாடி!

பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு,பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கானமாநில மேடை

ஒவ்வொருவரின் தொழிலைப் போட்டு, அதனருகே ஜாதியை எழுதுகிறார்கள். அதை சமஸ்கிருதம், இந்தியிலும் வேறு எழுதியுள்ளார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 17 தீண்டாமையை ஒழிக்கக் கூறுகிறது. எனில் ஜாதியை இவர்கள் குறிப்பிடுவது சட்ட விரோதம் அல்லவா?
கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளது. மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி எனத் தொடங்கி, பல்கலைக் கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள் என அபார வளர்ச்சி அடைந்துள்ளோம்! சந்திரன், சூரியன் ஆய்வுகள் வரை நம்மாட்கள் உயர்ந்திருக்கிறார்கள்.

வீர முத்துவேல் (‘‘சந்திரயான் 3’’ திட்ட இயக்குநர்) அவர்களின் அப்பா என்ன தொழில் செய்தார்? மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவின் சந்திரயான் திட்ட இயக்குநராக இருந்தாரே!
அதுதான் இவர்களுக்குப் பொறுக்க முடியவில்லை. இன்னொரு மயில்சாமியும், இன்னொரு வீரமுத்துவேலும் வந்து விடக்கூடாது எனப் பதறுகிறார்கள். செருப்புத் தைக்கும் 50 வயது மனிதரிடம் சென்று கடன் வேண்டுமா என்றால் ஏற்றுக் கொள்ளக்கூடும். ‘‘உங்கள் பிள்ளையும் செருப்பு தைக்கட்டும், கடன் தருகிறோம்’’ என்றால் விரட்டி அடிப்பார்கள்.

“என் தொழில் என்னோடு போகட்டும். என் பிள்ளை நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குப் போகட்டும்” என்பார்கள். அதுதான் தமிழ்நாட்டு அப்பா! அவர் இந்து உணர்வோடு இருக்கலாம், திருநீறு அணிந்திருக்கலாம். ஆனால், அவரை ஜாதியால் ஒடுக்கலாம், குலத்தொழிலைத் திணிக்கலாம் என நினைத்தால் அது நடக்காது! காரணம், இது பெரியார் மண்!’’

மேற்கண்ட தலைவர்களின் கருத்துகள், ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதித் திட்டங்கள் எல்லாம் தேன் தடவிய விஷ உருண்டைகள் என்பதை உணர்த்துகிறது. இந்தியாவில் மக்களும், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஏமாற்றப்படுவதே வழக்கமாக நடக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில், பெரியார் இயக்கமாம் திராவிடர் கழகத்தை வழி நடத்தும் அதன் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஒன்றிய அரசின் செயல்திட்டங்கள் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கி அதிலுள்ள பாதிப்புகளைத் துல்லியமாக, நுட்பமாக, மிகச் சரியாக அறிந்து அதை உடனடியாக மக்களுக்குக் கொண்டு சென்று விழிப்பூட்டி அதைத் தடுக்க _ நீக்க வழி காண்பதை வழக்கமாகச் செய்து வருகிறார்கள்.

‘விஸ்வகர்மா யோஜனா’ எனப்படும் மனுதர்ம யோஜனாவின் உள்நோக்கத்தையும் சதிமுயற்சியையும் அப்படித்தான் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினார்கள். அதன் தொடர் முயற்சியாய் மக்களுக்கு நேரடியாக விளக்கி விழிப்பூட்ட தொடர்பயணம் மேற்கொண்டு ஒருநாளைக்கு இரு ஊர்களில் இரு கூட்டங்கள் என்ற அடிப்படையில் உரை நிகழ்த்தினார்கள். ஒவ்வொரு கூட்ட நிகழ்விலும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கு கொண்டு ஆதரவு தெரிவித்ததோடு இத்திட்டத்தை எதிர்த்தும், மேற்கண்டவாறு உரையாற்றினார்கள்.
இந்தியாவிலே இத்திட்டத்திற்கு எதிரான முழுத் தெளிவு தமிழ்நாட்டில் ஆசிரியர் அவர்களால் அளிக்கப்பட்டுள்ளது. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்றி, ஒன்றிய அரசின் குலக்கல்வியை, வர்ணாஸ்ர மீட்டுருவாக்கத்தைத் தகர்த்தெறிய வேண்டும். இது உடனடியாகச் செய்ய வேண்டிய கட்டாயச் செயலாகும் – ஒடுக்கப்பட்ட மக்களைக் காக்கும் செயலாகும்.♦