பெரியார் பேசுகிறார் – கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் – தந்தை பெரியார்

2023 ஆகஸ்ட் 16-31,2023 பெரியார் பேசுகிறார்

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்,பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் கூறி வருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின்மேல் நிற்பது போல் துள்ளுகிறார்கள், துள்ளிக் குதிக்கிறார்கள், அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து ஏவி விடுகிறார்கள்.

பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாக பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்; எதிர்பார்க்கிறேன். காரணம், போராட்டம் துவக்கினால் எனது மேற்கண்ட பிரச்சார வேலைக்கு உதவியாகும் என்பதோடு, மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவதுதான்.
கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காக கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால், எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ள வேண்டும்? “உண்டாக்கியவன் முட்டாள்ÕÕ என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கிறவனே! நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய், ஆத்திரப்படுகிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம் ஆதாரம் என்ன?

முண்டமே! நீ நினைக்கிற கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்கின்றாயா? அல்லது அது ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது கடவுள் யாராலும் உண்டாக்கப்படாமல், யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்லுவதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால் எதற்காக வரும்? நான் சொல்லுவதை கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால் தானே உண்டாக்கினவனை நான் முட்டாள் என்கின்றேன் என்று நீ கோபிக்க வேண்டும்.மற்றும், கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத்தானே கோபம், ஆத்திரம் வரவேண்டும். நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக்கொள்கின்றாய் என்றுதானே அர்த்தம்?

அது மாத்திரமல்லாமல், நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்றுதானே கருத்தாகிறது?
இப்போது நீ நினைத்துப் பார்! கடவுள் உண்டாக்கப்பட்டதா? (கிரியேஷனா) (Creation)அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா) (Invention) அல்லது கடவுள் இயற்கையாய் தோன்றினதா? (நேச்சரா) (Nature) இதை முதலில் முடிவு செய்துகொள்.

நான் சொல்லுவதன் கருத்து கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதுமல்ல; தானாகத் தோன்றியிருப்பதுமல்ல; முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை அதாவது கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக்கொண்டாலோதானே, கடவுளை
உண்டாக்கினவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக்கொள்ள வேண்டும்?

நீ இருப்பதாகக் கருதிக்கொண்டிருக்கும் ‘கடவுள்’ ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல; “தானாக- சுயம்புவாகத் தோன்றியிருக்கிறது”
என்பதுதான் இன்று கடவுள் நம்பிக்கைக்காரர்களின் கருத்தாக இருக்கிறது.ஆகையால், நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு, அதற்காகக் கோபிப்பவனை, ஆத்திரப்படுபவனை இரட்டை முட்டாள்என்று சொல்லவேண்டியவனாக இருக்கிறேன்.

இப்படி நான் சொல்லுவதால், கடவுளால் எவன் பெரிய ஜாதியாய் இருக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறானோ அவனுக்கும், கடவுள் பெயரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக்கியத்தனங்களை மறைத்துக் கொள்ள வேண்டியவனுக்கும்தான் கோபம் வரவேண்டும். அதை நான் சமாளித்துக் கொள்கின்றேன்.