தமிழினத்தின் தலைமைக் கவிஞன்!

2023 ஏப்ரல் 16-30,2023 கட்டுரைகள் மற்றவர்கள்

வி.சி.வில்வம்

தமிழ்நாட்டின் சிறந்த கவிஞர் பாரதியார், சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்
வாஞ்சிநாதன், சிறந்த முதல்வர் ராஜாஜி‌‌, சிறந்த குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன்…
இப்படி ஒவ்வொரு துறையிலும் அறிவாளிகளாக இருந்தவர்கள் அக்கிரகாரத்தில் பிறந்தவர்கள் மட்டுமே என்கிற “விஷமப்” பிரச்சாரம் இங்கு வேரூன்றப்பட்டுள்ளது.

இந்த மண்ணிற்கும், இவர்களுக்கும் தொடர்பில்லை என வரலாறு தெளிவாகச் சொல்கிறது. மனிதர்கள் புலம் பெயர்ந்து வாழ்வது இயற்கையான ஒன்றே‌! எனினும் வசிக்கிற நாட்டிற்கு நம்பிக்கையோடும், நாணயத்
தோடும், அன்போடும், பிரியத்தோடும் இருப்பவர்களே மனிதர்கள்!

ஆனால் இந்த மண்ணில் குடியேறி 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். தங்கள் இனத்தை
உச்சபட்ச அதிகாரத்திலும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.இதன் பின்னரும், இந்த நாட்டின் பூர்வகுடி மக்களை அடக்குமுறை செய்து,கேவலப்படுத்தி வருவதுதான் ஆரிய சித்தாந்தம். உலகில் எத்தனையோ அடிமை முறைகள் இருந்துள்ளன. இதில் முதல் நிலை ஆதிக்க வெறித்தனம் என்றால் அது பார்ப்பனீயம் தாம்!

2 ஆயிரம் ஆண்டுகள் தடம் பதித்து, இவர்கள் உருவாக்கி வைத்திருக்கிற இப்பெரு நாசகார மலையை, 100 ஆண்டுகள் வரலாறு கொண்ட திராவிடர் இயக்கம், தம் சித்தாந்த உளியால் சிறுகச் சிறுக உடைத்து, தம் இனத்தை மேலே‌ கொண்டு வருகிறது!

இந்த முயற்சியில் இன்னமும் இவர்களோடு போராடிக் கொண்டிருக்கிறோம்! முறைப்படி இந்த மண்ணில் வாழ வந்தவர்கள், நம்மிடம் தான் கோரிக்கை வைக்க வேண்டும்! ஆனால் இங்கு எல்லாமே தலைகீழாக இருக்கிறது. இவர்களின் ஒட்டு மொத்த வரலாறுமே பொய்களால் நிரப்பப்பட்டவை! பிம்பம் மட்டுமே இவர்களின் அஸ்திவாரம்!
அந்த வகையில் கவிஞர் என்றாலே சுப்பிரமணிய பாரதி தான் என்பார்கள்; இன்னும் சற்றுக்கூட்டி “மகாகவி” என்பார்கள். இருக்கட்டும்… அவருக்குள்ள ஆற்றல், அவருக்குள்ள திறமை அவரிடமே இருக்கட்டும். அதை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அதேநேரம் இந்தப் பாரதியார் பிம்பத்தை வைத்து, நம்முடைய இனக்கவிஞர், உண்மையான புரட்சிக்கவிஞரை இரட்டடிப்பு செய்துவிட்டார்களே என்கிற கோபம் தலைமுறைக்கும் நம்மிடம் இருக்கும் தானே!

பாரதிதாசன் என்பவர் ஒரு மாபெரும் கவிஞர், மனிதர்களை நேசித்தவர், பகுத்தறிவைப் படைத்தவர், சுயமரியாதை மிக்கவர்… இப்படியான ஒரு கவிஞர் “பெரியாரிஸ்டாகவே” இருக்க முடியும்! அந்த ஒரே காரணம்தான் ஆரியம் புரட்சிக் கவிஞரை மறைக்க நினைத்தது!

“தமிழுக்கும் அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாடினால் சமஸ்கிருதத்திற்கு எப்படி பிடிக்கும்? தவிர உலகத் தொழிலாளர்களைப் பாடியவர், பெண்ணுரிமையைப் போற்றியவர், ஜாதி, மதக் கொடுமைகளைச் சாடியவர்! ஒரு கவிஞராய் மட்டுமின்றி, போராளியாய் வாழ்ந்து மறைந்தவர்!

எந்த ஒரு மனிதரும் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும். அந்த வகையில் பாரதிதாசனின் கவிதைகள் மனித வாழ்வுக்கானது! பாரதியாரோடு ஒப்பிட்டு பாவேந்தரை எழுதுகிறோம் என்றல்ல; மாறாக பார்ப்பனீயத்தின் இரட்டடிப்பு நம் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது!
எந்த ஒருவரையும் இழித்தும், பழித்தும் பேசும் பழக்கம் திராவிடத்திற்கு‌ கிடையாது! அவ்வாறு செய்யும் ஆரியத்தை எதிர்ப்பது தான் நம்முடைய போராட்டமாக இருக்கிறது!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தங்களின் அடையாளமாக பாரதியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இருவரையும் வைத்திருப்பார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை வடிவ அமைப்புதான் தமுஎகச.அவர்கள் தங்கள் செயற்குழுவில் “இனி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களையும் நாம் இணைந்தே முன்னெடுக்க வேண்டும்”, என முடிவெடுத்து இப்போது அவர்களிடத்தில் பாரதிதாசன் இருக்கிறார்! நம் குழந்தைகளிடத்திலும் அதிகமாக பாவேந்தரின் கவிதைகளைக் கொண்டு சேர்ப்போம்!

“வறியவர்க்கெல்லாம் கல்வியின் வாடை
வரவிடவில்லை மத குருக்களின் மேடை
நறுக்கத் தொலைந்தது அந்தப் பீடை
நாடெலாம் பாய்ந்தது கல்வி நீரோடை”
என்று நமக்காக எழுதிய‌ நம் தலைமைக் கவிஞன்தான் புரட்சிக்கவிஞன்!

 

(29.04.1891 – பிறந்த தினம்
21.04.1964 – நினைவு தினம்)