கருப்பைக் குழந்தைக்குக் காப்பியம் கற்பிக்கும் காவிகளின் மூட முயற்சி! – கவர் ஸ்டோரி

2023 மார்ச் 16-31,2023 முகப்பு கட்டுரை

மஞ்சை வசந்தன்

ஒன்றிய ஆட்சி ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியல் வடிவமான பி.ஜே.பி.பிடியுள்ள 10 ஆண்டுகளில் அவர்களின் மூடப்புராண புனைவுகளையெல்லாம், அறிவியல் ஆக்க முயற்சிக்கின்றனர்.அறிவியலின் உச்சத்தை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கின்ற இக்காலத்தில்கூட அப்பட்டமான மூடநம்பிக்கைகளை அறிவியல் என்றும், இன்றைய அறிவியலுக்கு அவைதான் அடிப்படை என்றும் கூறிவருகின்றனர்.

குளோனிங்

குளோனிங் முறையில் ஆடு உருவாக்கப்பட்டு, கடவுள் இல்லையென்று உலகுக்கு உணர்த்திய நிலையில், இந்தியாவில் உள்ள காவிக் கூட்டம் என்ன சொல்லிற்று தெரியுமா? குளோனிங் முறைக்கு இந்து மதம்தான் அடிப்படை என்றது.எப்படி என்பதற்கு,கவுரவர்கள் 101 பேர் பிறந்த மகாபாரதக் கதையை எடுத்துக் காட்டுகிறார்கள்.
கவுரவர்கள் எப்படிப் பிறந்தார்கள்

தெரியுமா? கவுரவர் பிறப்பு

குந்திக்குத் தருமன் பிறந்ததைக் கேட்ட திருதராட்டிரன் மனைவி காந்தாரி, தான் இரண்டு ஆண்டுகள் கர்ப்பம் (கரு) தரித்தும் குழந்தை பிறக்காததைக் கண்டு வயிற்றில் இடித்துக் கொண்டாள். அதனால் கருக்கலைந்து பெண்ணுறுப்பு வழியே அந்தக் கழிவு வந்தது. அந்தக் கழிவை 101 கலசங்களில் அள்ளி வைத்தனர். அதில் 101 குழந்தைகள் பிறந்தன என்கிறது இந்துமதம்.

இதில் இரண்டு செய்திகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

1. இரண்டு ஆண்டுகள் குழந்தை பிறக்காமல் கருவாகவே இருந்தது.
2. கலைந்த கருவை கலயத்தில் அள்ளி வைத்ததும் 101 குழந்தைகள் பிறந்தன என்கிறது இந்து மதத்தின் மகாபாரதம்.
கரு 10 மாதத்திற்குமேல் வயிற்றில் இருக்காது. 10 மாதத்திற்கும் முன்பேகூட குழந்தை பிறந்துவிடும். அப்படிப் பிறக்காமல் போனால் தாயும் குழந்தையும், இறந்து போவர். இதுதான் உலகம் அறிந்த அனுபவ உண்மை. ஆனால், இரண்டு ஆண்டுகளாக கரு வயிற்றில் இருந்தது என்பது அறிவியலுக்கு ஏற்றதா?அடுத்து, கருவைச் சுமந்து கொண்டுள்ள பெண் தன் வயிற்றில் அடித்தால், கரு கலையும். கலைந்த கரு இறந்துபோகும். இதுதான் அறிவியல்.
ஒரு கருவுற்ற பெண் தடுமாறி, கீழே விழுந்தால் அவள் வயிற்றிலுள்ள கரு கலைந்து போகும். அந்தக் கருவை அள்ளி ஒரு கலயத்தில் போட்டு மூடினால், அது குழந்தையாக மாறுமா?
அது மட்டுமல்ல, கலைந்த கரு கலசத்தில் அள்ளி வைக்கப்பட்ட முறையைக் கொண்டுதான் குளோனிங் முறையைக் கண்டுபிடித்தார்கள் என்பது அதைவிட அறிவற்ற பிதற்றல் அல்லவா?

உறுப்பு மாற்று

இன்றைய அறிவியல் உலகில் மனிதனின் எந்த உறுப்பு பழுதானாலும், அதை மாற்றி, வேறு ஒருவரிடமிருந்து கொடையாகப் பெற்ற அவ்வுறுப்பைப் பொருத்தும் மிகச் சிறந்த மருத்துவ அறிவியல் வளர்ச்சியை நாம் படிப்படியாக முயன்று பெற்றுள்ளோம்.
ஆனால், இந்துத்வா பேர்வழிகள் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு எங்கள் இந்து மதமே அடிப்படை (முன்னோடி) என்று சொல்லி விநாயகர் புராணத்தைக் காட்டுகிறார்கள். அக்கதை இதோ:

ஒரு நாள் சிவனின் பெண்சாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப்போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்கைத் திரட்டி, உருட்டி, அதை ஓர் ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஓர் ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து, “ நான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே!… என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்தச் சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனைப் பார்த்து, பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக்கூடாது… என்று தடுத்ததாகவும், அதனால், பரமசிவக் கடவுளுக்குக் கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போன தாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, ‘‘காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்…?’’ என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், ‘‘காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்’’ என்று சொன்னதாகவும், இதுகேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியே வந்து பார்க்க, வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்டவைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்தார் என்பதே அப்புராணக் கதை.
இக்கதைக்கும் அறிவியலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது உயிருடன் உள்ள மனிதனின் பழுதுபட்ட உறுப்புகளுக்கு மாற்றாக உயிர்ப்புடன் உள்ள மனித உறுப்பை எடுத்துப் பொருத்துவது. ஆக, மனித உறுப்புக்கு மாற்றாய் மனித உறுப்பே பொருத்தப்படும். வேறு விலங்கு உறுப்பு பொருத்தப்படுவதில்லை; பொருந்தவும் பொருந்தாது. அப்படியிருக்க, மனித உடலுக்கு யானைத் தலை பொருந்தியதாய்ச் சொன்னது கற்பனையாகும். அறிவியலுக்கு முரணாகும்.

அப்படியிருக்க இப்படிப்பட்ட மூடத் தனமான, முட்டாள்தனமான கற்பனைக் கதைகளையெல்லாம் அறிவியலுக்கு அடிப்படை என்று அடிமுட்டாள்தனமாய்க் கருத்துக் கூறுவது அமைச்சருக்கு அழகா?
இப்படி எல்லா மூடப்புனைவுகளையும் அறிவியல் ஆக்க முயற்சித்து வருபவர்கள், அண்மையில் கருப்பையில் உள்ள குழந்தைக்கு பகவத் கீதையையும், இராமாயணத்தையும் கற்பிக்க முயற்சிக்கின்றனர்.

பசுமாட்டிற்கே பாடம் நடத்திய பத்தாம்பசலி கூட்டம்தானே! அவர்கள் இதையும் செய்வார்கள்; எதையும் செய்வார்கள்.
அரசியல் சாசனத்தின் அடிப்படையையே தகர்க்கும் முயற்சியின் ஆழ்நிலை சதித்திட்டம் இது.
ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையும், பகுத்தறிவுச் செயல்முறைகளும் கொண்டு வாழவேண்டும் என்று அரசியல் சாசனத்தின் அடிப்படை நோக்கு அமைந்துள்ளது. ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்றும் அது விரும்புகிறது.
ஆனால், ஆரிய பார்ப்பனர்கள், அறிவியல் சிந்தனைகளை அறவே அழித்து மூடநம்பிக்கைகளை, மூடச்சடங்குகளை மக்களிடையே வளர்க்க என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து வருகிறார்கள். அதன்மூலம் அரசியல் சாசனத்தின் அடிப்படையைத் தகர்க்க முயற்சிக்கின்றனர்.

அரசியல் சாசனத்தை அகற்றிவிட்டு, சனாதன, மனுதர்மச் சட்டங்களை நடைமுறைப்படுத்த விரும்பு ஆர்.எஸ்.எஸ். காவிக்கும்பலுக்கு, அறிவியல் சிந்தனைகளை அழிப்பதே முதல் பணியாகக் கொண்டு செயல்படுகின்றனர்.
பகுத்தாய்ந்து சிந்தித்தால் உண்மை தெரியும்; உண்மை தெரிந்தால் விழிப்பு வரும்; விழிப்பு வந்தால் வேகம் வரும்; வேகம் வந்தால் உண்மைக்கு மாறானவற்றை ஒழிக்கத் தோன்றும், ஆதிக்கத்தை அழிக்கத்தோன்றும். ஆதிக்கம் அழிக்கப்பட்டால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆரியப் பார்ப்பனர்கள் கட்டிக் காப்பாற்றி வரும் ஆதிக்கக் கோட்டை தகர்த்து தரைமட்டமாக்கப்படும். அதுவே அவர்கள் அச்சம்.
ஆரிய ஆதிக்கத்தின் அடிப்படையே மூடநம்பிக்கைகள்தான். மூடநம்பிக்கைகளை ஒழித்தால் ஆரிய ஆதிக்கம் அடிப்படையே இல்லாது அகன்று போகும். அதனால்தான் அவர்கள் அன்றையிலிருந்து இன்றுவரை மூடநம்பிக்கைகளை வளர்ப்பதில் முனைப்புக் காட்டுகின்றனர்.
பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் அறிவுத்திறனுடைய மாணவர்களுக்கே ஜோதிடத்தையும், வாஸ்துவையும் அறிவியல் என்று சொல்லிப் பாடமாக்குகின்றனர். அறிவியல் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானவை_ எதிரானவை சோதிடமும், வாஸ்துவும். அப்படிப்பட்டவற்றை அறிவியலாகக் கூறி பாடத்திட்டத்தில் சேர்க்கின்ற மனித எதிர்செயல், மாணவர் எதிர்செயல் வேறு என்ன இருக்க முடியும்?

சூரியன் நிலையாக நின்று தன்னைத்தானே சுற்றுகிறது. பூமி முதலான மற்ற கோள்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன என்பது உறுதி செய்யப்பட்ட அறிவியல் உண்மை. உண்மை அப்படியிருக்க, சூரியன் கோள்களைச் சுற்றிவருகிறது என்று கூறும் சோதிடம் எப்படி அறிவியல் ஆகும். அறிவியலுக்கு முரணான சோதிடத்தை உயர்கல்வி நிறுவனங்களில் பாடமாக வைப்பது எப்படிப்பட்ட மோசடிச் செயல், மாணவர் அறிவு வளர்ச்சிக்கு எதிரான செயல், அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல்!

ஒன்பதுக்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டபின் இன்னும் ஒன்பது கிரகங்களை வைத்துக் கணிக்கப்படும் சோதிடம் எப்படி அறிவியலாகும்? சோதிடத்தில் இல்லாத கிரகங்களைக் கணக்கில் கொள்ளாமல், கணிக்கப்படும் சோதிடம் எப்படிச் சரியாகும்? விடுபட்ட கிரகங்களையும் கணக்கில் கொண்டு சோதிடம் கணித்தால் கணிப்பு வேறு விதமாகத்தானே இருக்கும்?

பிறந்த நேரம் அறுவை சிகிச்சையால் பிறக்கும் குழந்தைக்கு தப்பாகிவிடுமே! அந்தக் குழந்தைக்கு சோதிடக்கணிப்பு எப்படிச் சரியாகும்? இக்காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறப்பதால் சோதிடம் தேவையற்றதாக, பொருத்தமற்றதாகிவிடுகிறதே!
இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு விடையில்லாத சோதிடத்தை உயர்கல்வியில் பாடமாக வைப்பது எவ்வளவு பெரிய தலைமுறைத் தப்பு!
தேவைக்கும், வசதிக்கும், உடல் நலத்திற்கும் ஏற்ப வீடு கட்டுவதற்குப் பதில், அறிவியல் அடிப்படையில்லா வாஸ்து மூடநம்பிக்கையை பாடத்திட்டத்தில் சேர்த்து, உயர்கல்வியில் பாடமாக வைப்பது எவ்வளவு பெரிய தப்பு! மாணவர்கள் அறிவைக் கெடுக்கும் செயல்!
இப்படி கல்வி நிலையங்களிலும், அரசின் செயல்பாடுகளிலும் அறிவுக்கும் அறிவியலுக்கும் பொருந்தாதவற்றைப் புகுத்துவதும், நடைமுறைப்படுத்துவதும் மாணவர்களின், மக்களின் சிந்தனைகளை பல நூற்றாண்டு பின்னோக்கிக் கொண்டு செல்லும் மக்கள் விரோதச் செயல் அல்லவா?

கருப்பைக் குழந்தைக்கு கலாச்சாரப் பாடமாம்!

இப்படித் தொடர்ந்து அறிவிற்கும் அறிவியலுக்கும் எதிரான செயல்களைச் செய்து, மக்களை மூடநம்பிக்கையிலேயே மூழ்கச் செய்யும் இந்த ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாளர்கள் தற்போது கருவுற்ற பெண்களைக் குறிவைத்து தங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முற்படுகின்றனர்.
இனவெறி கொண்டு எதிரிகளை அழிக்க முற்படுகின்றவர்கள், இன எதிரிகளின் கருவுற்ற பெண்களின் வயிற்றைக் கீறி, கருப்பையில் உள்ள குழந்தையை எடுத்து அதையும் துண்டுதுண்டாக வெட்டி வன்மம் தீர்ப்பார்கள். அப்படி மக்களைச் சிந்திக்கவிடாமல் மூடநம்பிக்கையிலேயே வைத்திருக்க விரும்பும் இந்த காவி வெறிக் கூட்டம், பிறந்து, வளர்ந்து, வாழும் மக்களுக்கு மூடநம்பிக்கையைக் கற்பித்து முட்டாள்கள் ஆக்கியதுபோதாதென்று, கருவில் உள்ள குழந்தைக்கும் மூடத்தனத்தைக் கற்பிக்க திட்டம் வகுத்துச் செயற்படுத்த முற்படுகின்றனர்.
ராஷ்ட்ர சேவிகா சமிதியுடன் தொடர்-புடைய சம்வர்த்தினி நியாஸ் என்ற அமைப்பு கர்ப்பிணிகளுக்காக ‘கர்ப் சன்ஸ்கார்’ என்ற பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.

ராஷ்டிர சேவிகா சமிதி என்பது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்(ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பின் பெண்கள் பிரிவாகும்.
சம்வர்த்தினி நியாஸின் தேசிய அமைப்புச் செயலாளர் மாதுரி மராத்தே, “கர்ப்பிணிப் பெண்களுக்காக கர்ப் சன்ஸ்கார் என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைக்கு கருவிலேயே கலாச்சாரம் மற்றும் ஒழுக்கம் கற்பிக்கப்படும் என்று கூறியதாக பிடிஅய் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

மகப்பேறு மருத்துவர்கள் ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்-களின் உதவியுடன் கர்ப்ப காலத்தில் கீதை, ராமாயணம் படிப்பது மற்றும் யோகா செய்வது ஆகியவற்றின் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு நல்ஒழுக்கங்களைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு திட்டத்தை சம்வர்த்தினி நியாஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ராஷ்ட்ர சேவிகா சமிதியால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிப் பட்டறையில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 80 மகளிர் மருத்துவ நிபுணர்களும் பங்கேற்றனர்.
பெண்கள் கருவுற்ற காலந்தொட்டு பிள்ளைக்கு இரண்டாவது வயது நிறையும் வரை இந்தத் திட்டம் தொடரும். இதில் கீதை, சௌபாய் ராமாயண வசனங்கள் படிப்பது இருக்கும். கருப்பையில் வளரும் குழந்தை 500 வார்த்தைகள்வரை கற்றுக்கொள்ளும் என மாதுரி மராத்தே பிடிஅய் செய்தி முகமையிடம் கூறியுள்ளார். இது எவ்வளவு பெரிய அறியாமை!

கருப்பையில் வளரும் குழந்தையால் வார்த்தைகளை அல்லது மொழியைப் புரிந்துகொள்ள முடியுமா? பிறந்த குழந்தைக்கே நாம் பேசுவது புரியாது. அது வளர வளர, நாம் பேசுவதை நாளடைவில் ஒவ்வொன்றாகக் கேட்டு, அறிந்து பல மாதங்களில் மொழியைக் கற்றுக்கொள்கிறது. சொல்லில் பொருள் புரிந்துகொள்கிறது. அப்படியிருக்க, கருவிலுள்ள குழந்தைக்கு நாம் கூறுவது எப்படிப் புரியும்? இது குறித்து மகப்பேறு, உடற்கூறு வல்லுநர்கள் கருத்து என்ன?

கருவில் வளரும் குழந்தையின் உடல் வளர்ச்சியுடன், அதன் காதுகளும் வளரும். எனவே ஒலி அலைகள் காதுகளைச் சென்றடையும். ஆனால், அந்த ஒலியின் அர்த்தம் குழந்தைக்குப் புரியாது. இப்படியான சூழலில், சமஸ்கிருத அல்லது வேறு ஏதேனும் மந்திரத்தை தாய் சொன்னால் அது எப்படி குழந்தைக்குப் புரியும்?’’

ஹார்மோன்களின் தாக்கம் தாய் மூலமாக குழந்தைகளைச் சென்றடையும். அதாவது மன அழுத்த ஹார்மோனாக இருந்தாலும், மகிழ்ச்சி ஹார்மோனாக இருந்தாலும் அது குழந்தையின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிவியல் கூறுகிறது.
மகாராஷ்டிராவில் உள்ள நரேந்திர தபோல்கர் துவக்கிய அமைப்பான அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியில் நிருவாகியாக முக்தா தபோல்கர், கர்ப்பிணிப் பெண்களுக்கான நிகழ்ச்சியில், ‘‘சத்தான உணவு, நல்ல எண்ணங்கள், மனதை அமைதிப்படுத்துதல் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். மாறாக, கருப்பையில் உள்ள குழந்தைக்கு கருத்துகளைக் பதியவைக்க முற்படுவது பயனற்றது. பகுத்தறிவிற்கு ஒவ்வாதது.
கருப்பையில் இருக்கும் குழந்தையால் மொழியைப் புரிந்துகொள்ள முடியாது எனும்போது தாய் மந்திரத்தின் பொருளோ, கதையின் கருத்தோ, ஸ்லோகப் களின் அறிவுரையோ எப்படிக் குழந்தைக்குப் புரியும்? “தாய் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம், அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது குடும்பத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும். அவருடைய உணவு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றும் முக்தா தபோல்கர் அறிவுக்கும், தாய்_ குழந்தை நலத்திற்கும் ஏற்ற சரியான கருத்தைக் கூறியுள்ளார்.

ஆனால், இந்தக் காவிக்கூட்டம், தங்கள் புராணங்கள், இதிகாசங்களில் கூறப்படும் எல்லாரும் உண்மை, அறிவுக்கு ஏற்றது என்று சாதிக்க முற்படுகிறார்கள். அறிவியலுக்கு அவைஎதிரானவை, ஏற்புடையவை அல்ல என்று அவர்களுக்குத் தெரிந்தாலும், தங்கள் புராணங்களை, இதிகாசங்களை, ஸ்லோகங்களை அறிவியலுக்கு உகந்ததாக நிலைநாட்ட முற்படுகின்றனர்.
யாகம் செய்வதால் எழும் புகை நச்சுகளைக் கொல்லும், ஏன் அணுகுண்டின் நச்சுக்கூட பாதிக்காது என்று வாதிட்டு வருகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட மந்திரம் சொன்னால் ஆயுள் வளரும், ஒரு குறிப்பிட்ட மந்திரம் சொன்னால் கல்விவரும், இன்னொரு மந்திரம் சொன்னால் நினைவாற்றல் பெருகும், வேறொரு மந்திரம் சொன்னால் வேதனைகள் தீரும் என்று கூறுகின்றனர்.

மகாபாரதத்தில் சுபத்திரையின் கர்ப்பத்தில் இருந்த அபிமன்யு சக்கர வியூகத்தை உடைக்கும் கலையைக் கேட்டதாக உள்ளது, மேலும், கருவிலிருந்த பிரகலாதன் நாரதர் சொன்ன நாராயண மந்திரத்தைக் கேட்டு நாராயணன் பக்தன் ஆனான் என்றும் கதையுள்ளது. இக்கதைகளைப் பிடித்துக்கொண்டு இன்று தாயின் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கும் ஹிந்துத்துவ கருத்துகளைத் திணிக்கப்போகிறோம் என்று கிளம்பி உள்ளார்கள்.
இந்தக் கதையை உணமையாக்கும் முயற்சியில் தான் கருவில் உள்ள குழந்தை மீது ஒலி மற்றும் இசை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிய உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் கேள்வி

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி.யின் கருக்குழந்தைக்குக் கற்பிக்கும் திட்டத்திற்கு எதிராய்….

(விடுதலைப் பகுதி)

மேற்கு வங்க மாநிலத்தின் குழந்தைகள் உரிமைக்கான ஆணையத்தின் சட்ட ஆலோசகர் நஸீப்கான். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கர்ப்ப சன்ஸ்கார் திட்டம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல என்றும், பழைய நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் குறித்த பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகளும், இதை நிரூபிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரிடம் அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று கேள்வி எழுப்பினர்.

ஆனால், நீதிபதிகளின் இந்தக் கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
கருவிலுள்ள குழந்தைக்கு தாயின் வழி நல்ல ஊட்டச்சத்து கிடைக்கச் செய்ய வேண்டும்; தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்; தாய் இசை போன்றவற்றைக் கேட்கச் செய்ய வேண்டும்; தாய் போதிய உடற்பயிற்சி செய்யவேண்டும்.இவற்றிற்குத்தான் அரசு திட்டம் தீட்ட வேண்டும். அதுவே நலமான குழந்தைப் பிறக்க உதவும். அதைவிட்டுவிட்டு, கருவிலுள்ள குழந்தைக்கு கலாச்சாரம் போதிக்
கிறோம் என்பது கண்டிக்கத்தக்கது. கட்டாயம் கைவிடப்பட வேண்டியது! மக்களும் நீதிமன்றமும்
இததற்கு எதிராய் நிற்க வேண்டும்.