சிந்தனைக்களம் : கீழ்ப்பாக்கத்து இதழின் கீழ்மை!

2022 மற்றவர்கள் ஜூன் 16-30 2022

எல்லாவற்றிலும் மேலோட்டமான பார்வையும் அரைகுறையாகத் தெரிந்து-கொண்டு பொருளற்ற வாதங்களை முன்வைப்பதும் மெய்ம்மையிலாக் கூற்றுகளை முன்மொழிவதும் இன்றைய இதழ்கள் பலவற்றின் போக்காக-வுள்ளது.
கீழ்ப்பாக்கத்திலிருந்து வெளிவரும் அந்த இதழ் ஒருகாலத்தில் இந்திய நாட்டிலேயே மிகுதியாக விற்பனையாகும் இதழாகக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. நூலிழையில் தமிழர் மேலாண்மையிலிருந்து தடம் மாறித் தமிழ், தமிழர் என்றாலேயே கசப்பும் காழ்ப்புணர்வும் வெளிப்படுத்து வோரிடம் தற்போது சிக்கிக்கொண்டுள்ளது.
நேரடியாகத் தமிழின வெறுப்பை வெளிப்படுத்துவதுடன் மக்கள் மன்றத்தில் செல்வாக்குப் பெற்றுவிட்ட எழுத்தாளர்களின் வழுவும் பிழையும் மலிந்த கூற்றுகளை மறுபதிப்புச் செய்து, தமிழியக்கத்தின் மீது வெறுப்பை உமிழ்வது இந்த இதழுக்கு மிக விருப்பமான பொழுதுபோக்கு.
தமிழ்நாட்டின் திரைப் பாவலர்களுள் உண்மையாகவே அரசோச்சிவந்த உடுமலை நாராயணகவி, இனிய தமிழ்நடையில் இசைப் பாடல்களை யாத்தளித்த காமாட்சிநாதன், அனைவர் உதடுகளையும் தம் கவிதையின் உறைவிடமாக மாற்றிய பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், தெள்ளுதமிழ்ப் பாக்களைத் துள்ளும் சந்தத்தில் படைத்த கா.மு.செரீஃப், படிமம், குறியீடு ஆகியவற்றைத் திரைப் பாடல்களிலேயே வழங்கமுடியும் என மெய்ப்பித்துக் காட்டிய கம்பதாசன், அணிநலன் செறிந்த பாக்களைத் திரைப்படங்களிலும் அறிமுகப்படுத்த முடியும் என்பதற்குச் சான்றாக விளங்கிய கு.மா.பாலசுப்பிரமணியம், எளிமையும் இனிமையும் கருத்தோட்டமும் கைகோத்து வரும் பாடல்களை வழங்கிய மருதகாசி எனப் பல்வேறு கவிஞர்கள் திரைப்பாக்களிலேயே முதிர்ச்சியும் கலைநயமும் தவழச் செய்த அருஞ்செயல் தமிழ்நாட்டின் தனிப் பெருமை-களில் ஒன்றாகும். எனினும் ஒரு பாவலரை மட்டுமே தமிழர் போற்றிப் புகழ்ந்து வருகிறார்கள்.
அந்தப் பாவலரின் திரைப்பாடல்திறம் சிறப்பு வாய்ந்தது என்பதில் மாறுபட்ட கருத்து நமக்கில்லை. ஆயினும் அவர் தமிழ்ப்புலமை மிக்கவர் எனக் கருதுதல் பிழை. தம்மைத் தமிழுக்கு அதிகாரியாகக் கருதி அவர் குமுதவாய் திறந்து மொழிந்த “உளறல்களை” இந்த இதழ் இப்போது வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது. 12.1.2022 நாளிட்டு வெளிவந்துள்ள இதழில் ஒரே கல்லில் இரு மாங்காய்களாகக் குறளையும் தமிழியக்கத்தையும் பழித்துரைத்த அவர் பிழையுரையை வெளியிட்டு மகிழ்ச்சி யடைந்துள்ளது.
தனித்தமிழ் “உண்மையான பொருளைத் தருவதில்லை’’ என்பது அந்தப் பாவலரின் கண்டுபிடிப்பு. இதற்குச் சான்றாகப் பல சொற்களைக் கூறி, இறுதியில் தமிழ்நாட்டு அரசு தன் இலச்சினையில் பொறித்திருக்கும் “வாய்மையே வெல்லும்’’ என்னும் தொடரில் குற்றம் கண்டுபிடித்துள்ளார்.
‘சத்யமேவ ஜயதே’ என்பதை ‘வாய்மையே வெல்லும்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்கிறார்.
சத்தியம் என்றால் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினாலும் நேர்மையாக இருத்தல் என்று பொருள்.
‘வாய்மை’ என்பது ‘வாய்ச்சொல் நேர்மை’ என்பதை மட்டும் குறிக்கும் என்கிறார்.
தம் கூற்றுக்குத் துணையாக,
“வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல்’’ -(குறள் 291) எனும் குறளை மேற்கோளாகக் காட்டுகிறார். இக்குறள்மூலம் மூன்றில் ஒரு பங்குதான் அவர் வாய்மையைப் புரிந்துகொண்டுள்ளார்.
மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் பொய்யாமையைக் கடைப்பிடித்தலே வாய்மையாகும்.
“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்’’ (குறள் 294)
“மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை.’’ (குறள் 295)
“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையான் காணப் படும்’’ (குறள் 298)
என்னும் குறள்பாக்களின் மூலம் உள்ளம், மனம், அகம் என மூன்று நிலைகளில் மனத்தால் பொய்யாமை, காத்தல், வாய்மை என்பதை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.””
“வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
தீமை இலாத சொலல்” (குறள் 291)
“பொய்ம்மையும் வாய்மைஇடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்’’ (குறள் 292)
என்னும் குறள்பாக்களில் மொழி(வாக்கு)வழி வாய்மை நுவலப்பட்டுள்ளது.
“பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்’’
“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று’’
என்னும் குறள்பாக்களின் வழிச் செயலால் வாய்மை காத்தல் கூறப்படுகிறது.
ஏனைய குறள்பாக்கள் மனம், மொழி, மெய் ஆகியவற்றால் வாய்மையறம் போற்றலை வலியுறுத்து-கின்றன. எனினும் எவ்விடத்தும் வாய்மை என்பதை “வாய்ச்சொல் நேர்மை’’யாகக் குறள் குறுக்கிக் குறைத்துக் காட்டியதாகக் கருதவோ வரையறுக்கவோ இல்லை.
வாய்மை தலையாய அறம்; அந்த அறம் ஏனைய அறங்களுக்கெல்லாம் தலைமைதாங்கும் சிறப்பு வாய்ந்தது என்பதே வள்ளுவர் கருத்து.
ஆங்கிலத்தில் Truthfulness, Veracity எனப்படுவதே வாய்மை, பொய்யாமை எனத் தமிழில் போற்றத்தக்கது. “வாய்மையே வெல்லும்’’ எனத் தமிழில் கூறப்படுவதைக் குறைகூறுவதன் உள்நோக்கம் அரசியல் காழ்ப்புணர்வு என்பது வெளிப்படை.
மறைந்த ஒரு கவிஞர் தமது வாழ்நாளிலேயே மறந்த ஒரு கூற்றுக்கு மறுவாழ்வு தந்து தமிழ் மறுமலர்ச்சி அடைய வழி வகுத்த தனித்தமிழ் இயக்கத்தைப் பழித்துரைக்கக் கீழ்ப்பாக்கத்தார் முயல்வது தகாது.
விற்பனை குறைந்து வருவாய் சரிந்துவரும் வேளையில் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வகையில் தமிழ்ப்பகை வளர்ப்பது மடமையிலும் மடமை.ஸீ