கவிதை : ஆசிரியர் நீடுவாழ்க!

டிசம்பர் 1-15,2021

முனைவர் கடவூர் மணிமாறன்

மெய்யான தொண்டறத்தில் மேன்மை பெற்ற

               மேதினியே எந்நாளும் புகழ்ந்து பேசும்

அய்யாவின் நிழலான அணுக்கத் தொண்டர்;

               ஆசிரியர் அளப்பரிய ஆற்றல் மிக்கார்;

பொய்யுரைத்து வாழ்கின்ற புல்லர் தம்மின்

               புரட்டுகளை எடுத்துரைக்கும் புரட்சி யாளர்!

உய்வுக்கே வழிகாட்டும் உழைப்புச் செம்மல்;

               உயர்வான பகுத்தறிவுக் கொள்கை வேழம்!

 

சுறுசுறுப்பாய் எந்நாளும் இயங்கு கின்ற

               சுடரொளியாய்த் தமிழினத்தைப் பாது காக்கும்

பொறுப்பினையே வாழ்நாளில் ஏற்றுக் கொண்ட

               பொதுநோக்குக் கருவூலம்; ஆரியத்தின்

கரவுகளை, முகத்திரையைக் கிழித்து நம்மோர்

               கடமைகளை நினைவூட்டும் எழுச்சித் தென்றல்!

வெறுக்கின்ற சாதிமதப் பித்தர், பொல்லா

               வெறித்தனத்தை  நரித்தனத்தைச் சாடும் வீரர்!

 

ஒப்பரிய இயக்கத்தின் தலைமை ஏற்றே

               உண்மையினை நன்மையினை உரக்கப் பேசும்

செப்பரிய வரலாற்றுச் சிறப்பைக் கொண்டார்;

               செம்மாந்த தமிழ்மானம் மரபை மாண்பை

எப்போதும் அறிவுறுத்திக் குமுக நீதி

               இசைக்கின்ற நல்யாழாம்! தமிழர்க் கெல்லாம்

முப்பாலாய்ச் சிந்தனைகள் முழங்கும் நல்ல

               முனைப்புடைய ஆசிரியர் நீடு வாழ்க!

 

எற்றுக்கும் கலங்காதார்! தமிழைக் காக்க

               இந்திமொழி சமற்கிருத எதிர்ப்பைக் காட்டும்

பெற்றியினால் ஒன்றியத்தார் நடுங்கும் வண்ணம்

               பேசுகின்ற எழுதுகின்ற பெருமை மிக்கார்!

வெற்றிக்கும் விடியலுக்கும் போர்ப்பண் ஆர்க்கும்

               வீறார்ந்த ஆசிரியர் பிறந்த நாளில்

நற்பெரியார் உயர்தொண்டர் இளமை கொஞ்சும்

               நறுந்தமிழாய் வாழ்கவென வாழ்த்து வோமே!ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *