கவிதை : நான்கடி இமயம்

செப்டம்பர் 1-15,2021

கவிப்பேரரசு வைரமுத்து

 

 

சரித்திர மடியில் தங்கிக் கிடந்த

கருப்பிருள் போக்கிய காஞ்சி விடியலே

 

அழுகையை உலர்த்திய அண்ணனே உன்றன்

எழுதுகோல் துப்பிய எச்சிலே எங்கள்

 

தாகங் களுக்குத் தடாக மானது

சோக நெருப்பைச் சுட்டுத் தீய்த்தது

 

ஆயதோர் காலையில் ஆலய வீதியில்

நாயக னேஉன் நாத்திகம் கேட்க

 

தெய்வங்க ளெல்லாம் தேர்களில் வந்தன

பொய்தான் தாமெனப் புலம்பிப் போயின

 

அரிதாய்க் கிடைத்த அமுத சுரபியே

பெரிய சாவுனைப் பிச்சை கொண்டதே

 

கடற்கரை மணலில் கண்ணா மூச்சி

நடத்து கிறாயே நாங்கள் உன்னை

 

எப்படித் தொடுவது? எப்படி? நீதான்

உப்பு மணலுள் ஒளிந்துகொண் டாயே

 

அணையா விளக்கின் அடிவெளிச் சத்தில்

இணையிலாக் காவியம் எழுதுகி றாயா?

 

முத்தமி ழில்நீ முழங்கிய மொழிகளை

முத்துக் கடலலை மொழிபெயர்க் கின்றதா?

 

தூயவன் மேனியைச் சுமந்தகல் லறையே

நாயகன் பூமியே நான்கடி இமயமே

 

அன்னைத் தமிழின் ‘அ’கரம் போனபின்

என்ன கவிதைநான் எழுதப் போகிறேன்?

 

ஏழு வண்ணம் இருந்தும் வான வில்

வாழு வதற்கு வானமே இல்லையே

 

குறைந்து விடாமல் கோலம் இருக்க

வரைந்து வைத்த வாசலைக் காணோம்

 

கல்லறை வாசலே கதவுகள் திறநீ

பல்லவன் மேனியைப் பார்க்கப் போகிறேன்.

 

ஒருமுறை அன்னவன் உருவம் பார்த்தபின்

குருட னாகவும் கோடிச் சம்மதம்

 

கண்டதும் அண்ணனின் காலடிப் பூவில்

என்னையே மாலையாய் இடப்போ கின்றேன்.ஸீ

 

(கவிப் பேரரசு வைரமுத்து தனது 17ஆவது வயதில் அண்ணா நினைவிடத்தைப் பார்த்தபோது எழுதிய கவிதை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *