பெரியாரும் வ.உ.சி.யும் (பிறப்பு 5.9.187)

செப்டம்பர் 1-15,2021

ஆட்சி எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அரசனை விஷ்ணுவாய்க் கருதி, ஆட்சியை வேதக் கோட்பாடாகக் கருதி வாழவேண்டும் என்று இருந்த பார்ப்பனிய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானகரமாகவும், மகா இழிவாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில் தென்னாட்டில் முதன் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து, அரசியலை இகழ்ந்து துச்சமாய்க் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று, கலங்காமல் மனம் மாறாமல் வெளி வந்த வீரர்களில் முதன்மை வரிசையில், முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம். அதன் பலன் எப்படியோ ஆனாலும், அவராலேயே அநேக பார்ப்பனரல்லாத மக்கள் உண்மை வீரர்களாகவும், சுயநல மற்றவர்களாகவும் வெளிவர முடிந்தது.

தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப்பாரானால் லோகமானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டடம், சிதம்பரம் உருவச்சிலை, சிதம்பரநாதர் கோவில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில், காங்கிரஸ் பக்தர் வீடுகளில் சிதம்பரம் கருத்து, சிலை, சிதம்பரம் உருவப்படம் இருக்கும்படியான நிலையை அடைந்திருப்பார். ஆனால் அவர் பிள்ளை, அதுவும் சைவப் பிள்ளையானாலும் சூத்திரப்பிள்ளை ஆனதால், அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்காமல் இருந்தது என்பதோடு, அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது.

சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசாபிமான பார்ப்பனரல்லாதாரும் அறியட்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம். அரசியல் உலகம் அவர் இறங்கின காலத்தில் ஒரு விதமாகவும், இப்போது ஒரு விதமாகவும் இருக்கிறபடியால் ஓர் அளவுக்கு பார்ப்பனரல்லாத தேச பக்தர்களைப் பற்றி ஆறுதல் அடைகிறோம். எப்படியெனில், பார்ப்பனரல்லாத தேச பக்தர்களை பார்ப்பனர் ஓர் அளவுக்காவது, வேஷத்துக்காகவாவது அணைத்துத் தீர வேண்டிய நிலையில் வேறு பல இயக்கங்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டிருப்பதால் அதிகம் பயப்பட வேண்டியதில்லை.

ஆகையால், சிதம்பரம் பிள்ளையை ஓர் உதாரணமாகக் கொண்டு மற்ற தேச பக்தர்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்வார்களாக.

– ‘குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதிய துணைத் தலையங்கம், 22.11.1936

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *