கொள்கை வேழம்

டிசம்பர் 01-15

மேடையில் ஏறி நின்று மேதகு கருத்தை எல்லாம்
கோடையின் மழையைப் போலே
கொட்டிய சிறுவன் அன்று!
ஓடையில் விரைந்து நீராய்
ஓடிய வயதின் பின்பும்
மேடையில் பெரியா ரியலை
முழங்கிடும் தலைவர் இன்று!

காரிருள் நீக்கு தற்குக்
காற்றிலே சொல்வி தைத்த
பேரறி வாளன் எங்கள்
பெரியாரின் அருமைத் தொண்டர்
ஊரெலாம் சுற்றிச் சுற்றிச்
உழைப்பினை மக்கட் கீந்த
சீர்மிகு தந்தை கண்ட
சிறியநற் கொள்கை வேழம்!

தந்தையின் கொள்கை என்றும்
தளர்வுறா திருந்து காத்து
முந்தைய அவரின் பேச்சு
முழுவதும் முனைந்து சேர்த்து
சிந்திடும் வியர்வை எல்லாம்
சீர்தமிழ் இனத்திற் கென்றே
தந்திடும் நமது வீர
மணியவர் வாழ்க! வாழ்க!!

– சுப.வீரபாண்டியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *