அக்டோபர் 16-31

உடலும் அறிவியலும்

– சோம. இளங்கோவன்

உடல் பற்றிய அறிவியல் புரிதலும் வளர்ச்சியும் மிக விரைவாகப் பல எல்லைகளைத் தொட்டும், தாண்டியும் சென்று கொண்டுள்ளன. அதைப் புரிந்து கொள்ள பெரிய அறிவியல் படிப்பெல்லாம் தேவையில்லை,

யாவரும் எளிதில் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதில் ஓப்ரா பணி செய்து வருகின்றார்.

உலகெங்கும் பல பல்கலைக்கழகங்களும், மருத்துவ நிறுவனங்களும் முக்கியமான ஆராய்ச்சிகளில் பல்லாண்டு காலமாகப் பணியாற்றியதன் விளைவுகளை நாம் அனுபவித்து வருகின்றோம்.

சோதணைக் குழாயில் உற்பத்தியான குழந்தைகள் இன்று வளர்ந்து பல துறைகளில் உள்ளனர்.

 

ஓப்ரா தனது 25 ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தான் அறிந்து கொண்ட மிகவும் முக்கியமானவற்றைப் பாடமாக மக்களுக்கு எளிதாகப் புரிய வைக்கும் முயற்சியில் அக்டோபர் 10 முதல் துவங்குகின்றார்.  “ஓப்ராவின் உயிர் பற்றிய வகுப்புகள்” என்று தனது “ஓன்” (Oprah Winfrey Network)  OWN தொலைக் காட்சியில் வார நாட்களில் வகுப்பு நடத்த உள்ளார். இது அமெரிக்காவில் உள்ளவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக அறிவிக்கப்பட்டு பத்து லட்சம் பேர் மட்டும் சேரக் கூடியது என்று அறிவித்த உடனேயே சேர்ந்து விட்டனர்.( நானும் சேர்ந்துள்ளேன்). மற்றவர்கள் பார்வையாளராகப் பார்க்கலாம். இதில் முக்கியமாக மக்கள் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றி, பெரிதாக்கி, பொருள் சேர்த்து முழுமையான மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு வாழ வழி காண்போம் என்பதே மய்யக் கருத்தாக இருக்கும்.

உடலைப் பற்றிய முக்கியக் கருத்துகள் நல்ல உணவு, எளிதாகத் தொடர்ந்து செய்யக் கூடிய உடற்பயிற்சி, மன அமைதிக்கான வழி வகைகள் என்பன தெளிவாகி வருகின்றன. இதில் உணவு பற்றியதைச் சென்ற இதழில் பார்த்தோம்.

உடற்பயிற்சி நாள்தோறும் எளிதாகத் தொடர்ந்து செய்வதாக இருப்பது முக்கியம். பலர் உடற்பயிற்சி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பார்கள், ஆனால் செல்ல மாட்டார்கள். மன அமைதி பற்றி ஏமாற்றிப் பிழைப் போர்தான் மிகுதியாக உள்ளனர். மன அமைதிக் கான வழிகளை மிகவும் எளிதாக அனைவரும் அவரவர் இல்லங்களிலேயே செய்யலாம். நமது மூளைக்கு 4 பெரிய ரத்தக் குழாய்கள் உடலின் 20 விழுக்காடு ரத்தத்தைத் தொடர்ந்து கொண்டு செல்கின்றன.

அந்த மூளைக்கு ஓய்வு கொடுப்பது நல்ல தூக்கம்தான். அதற்கடுத்து செய்ய வேண்டியது மன அமைதிப் பயிற்சிகள். அமைதியான இடத்திலே நன்கு அமர்ந்து மனதை ஒருமைப்படுத்தி உள்ளங்கால் விரல்களில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக அந்தப் பகுதியை மட்டுமே சிந்தித்து மூச்சு விட வேண்டும்.

ஒவ்வொரு பகுதிக்கும் மூன்றிலிருந்து அய்ந்து முறை மூச்சு விட்டு, அப்படியே கணுக்கால், கால்கள், முட்டி, தொடை, வயிற்றின் கீழ்ப் பகுதி, மேல் பகுதி, நெஞ்சு, கை விரல்கள், மணிக்கட்டு, கைகள், தோள் பட்டை, கழுத்து, பின் தலை, தலை மேல் பகுதி, முகம் , கண்கள், மூக்கு என்று வந்து, பின்னர் 15 முறை மூச்சை மட்டுமே காற்று நுரையீரல் உள்ளே புகுவதைக் கவனித்து மூச்சை இழுத்து வெளியே விட வேண்டும். இதைத் தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் அனைவரும் பழகிவிடலாம். பெரிய வித்தை ஒன்றும் கிடை யாது. இரண்டு மூன்று மாதங்களில் மன அழுத்தம் குறைவது நன்கு தெரியும்.

நாம் என்னதான் முயற்சி செய்தாலும் சில உடல் பகுதிகளுக்கு வயதாவதையோ, கோளாறாவதையோ தடுக்க இயலாது. அதற்கு என்ன செய்ய முடியும் ?

ஓப்ரா எப்போதும் போல ஒரு சிறந்த பயிற்சியாளரை வைத்து எழுதச் சொல்லி அறிவியல் வளர்ச்சி எங்கே செல்கிறது என்பதில் பதினோரு முக்கிய ஆராய்ச்சிகள் பற்றி வெளியிட்டுள்ளார்.  கிரட்சம் ரோனால்ட் என்ற அம்மையார் புகழ் பெற்ற நியூயார்க் டைம்சு பத்திரிகையில் எழுதும் உடல் பற்றிய எழுத்தாளர். அவர் ஓப்ரா நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர். அவர் எழுதியுள்ள உடலை மாற்றக்கூடிய அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிப் பார்ப்போம்.

1.மின்னணுக் கண்கள்: சிலருக்குக் கண் பார்வை போய்விடும். மூளையின் பகுதியான கண் திரை வீணாகிவிடும். கண்களே மூளைக்குச் செய்தி சொல்லும் “காமிராக்கள்” தானே. ஒரு செயற்கைக் காமிரா மூலம் செய்தி அனுப்பலாமே என்று ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த மிகச் சிறிய காமிராவும் அது விழித் திரைக்கு அனுப்பும் செய்தி மூளைக்கு அனுப்பப்படும் மிகச் சிறிய மின்னணுக் கருவியும். இது சிலருக்குப் பொருத்தப்பட்டு வெற்றிநடை போடுகின்றது.

2. முடி நிறம்: பலருக்கு இளமையிலேயே முடி வெளுத்து விடுகிறது. அந்தக் கவலையிலேயே அவர்கள் “கிழவர்கள்” ஆகி விடுகிறார்கள். இதைத் தடுக்க இப்போது பலரும் முடியை நிறம் மாற்றி அடித்துக் கொள்கின்றனர். அது சில நாட்களுக்குத்தான் வரும். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் முடி நிறத்தை நிர்ணயிக்கும் துகள்களைக் கண்டுபிடித்துள்ளனர். சில ஆண்டுகளில் இதைப் பயன்படுத்தும் முறையையும் கண்டு நிரந்தர நிற மாற்றத்திற்கு வழி தேடுகின்றனர்.

3. சொந்தமான புதிய பற்கள்: பலருக்குப் பற்கள் விழுந்து விடுகின்றன. அழகான செயற்கைப் பற்கள் வைத்துக் கொள்ளலாம். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பல் விழுந்த குழியிலே “ஸ்டெம் செல்”, உயிற் வளர்ச்சிப் பொருள் இவற்றை வைத்து சொந்த புதிய பற்களையே எலிகளுக்கு வளரச் செய்துள்ளனர். நமக்கும் அது பயன்படுங் காலம் வரும். அய்ந்தாண்டிலேயே வரலாம் என்று சொல்கின்றார்கள்.

4. நுரையீரல்கள்:- சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல் மாற்று அறுவைகள் நாள்தோறும் நடக்கின்றன. நுரையீரல்களும் பல ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பின் வெற்றி பெற்று வருகின்றது. ஆனால், இவை கிடைப்பது அரிதாக உள்ளது. ஆகவே, பாசுடன் நகர அறிவியலாளர்கள் ஸ்டெம் செல்களிலிருந்து நுரையீரல்கள் வளர்க்கும் ஆராய்ச்சிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஆராய்ச்சிகள் பல ஆண்டுகள் ஆகலாம், ஆனால் முயற்சி தொடர்கின்றது.

5. நினைவாற்றல் தடுப்பு மருந்து: – இப்போது பெரிய மருத்துவ ஏமாற்றம். “மறதி நோய்” தடுப்பதாக உள்ளது. இந்த மறதி நோய் வந்தவர்கள் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர். மருத்துவச் செலவும், அவர்களின் கண்காணிப்பும் பெரிய சவாலாக உள்ளது. இவர்களின் மூளையில் கரை தோன்றி அடைத்து விடுகின்றது. அதைத் தடுக்க மூக்கு வழியே உறிஞ்சும் தடுப்பு மருந்தை ஃகார்வேர்டு மற்றும் டெல் எவிவ் ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர். மறதி நோய் தாக்கப்படும் சுண்டெலி வகைகளுக்கு இந்த மருந்தைச் செலுத்தியதில் அந்தக் கரைகள் குறைந்துள்ளன.

இது மனிதர்களுக்கு 2014இல் பயன்படுத்தப்படலாம் என்று எதிர் பார்க்கின்றனர்.

6. கொழுப்பால் உடல் இளைத்தல்:- நமது உடல்களில் கொழுப்பு செல்கள் நிறைய உள்ளன. அந்தக் கொழுப்பு செல்களில் கொழுப்பு நிறைய சேர்ந்து அவை பெரிதாகி விடுகின்றன. ஆனால், உடலின் அனைத்து செல்களும் ஒரே செல்லில் இருந்து தோன்றியவை ஆதலால் பல செய்திகள் டி.என். ஏ.க்களால் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. இந்த செல் செய்தி நுணுக்கத்தை ஜான் ஃகாப்கின்சு பல்கலைக் கழக ஆராய்ச்சி யாளர்கள் பயன்படுத்தி  குண்டாக உள்ள வெள்ளை எலிகளின் கொழுப்புச் செல்லிலிருந்த டி. என். ஏ.வைக் கொஞ்சம் மாற்றியுள்ளனர். இவை மூளையின் தலைமைப் பகுதியான ஃகைப்போ தெலாமசு என்ற தலைமைச் செய்திக் கணினியில் மாற்றம் ஏற்படுத்தி என்னதான் சாப்பிட்டாலும் இந்த எலிகள் குண்டாகாமல் ஒல்லியாகும் செய்தியை உடலுக்கு அனுப்பிவிடுகின்றன. இது மனித டி. என். ஏ.வுக்கும் பொருந்தும் என்கின்றனர்.

7. தசையும் வயதும்-: 40 வயதிற்குப் பின் நமது தசை ஆண்டிற்கு ஒரு விழுக்காடு குறைந்து விடுகிறது. இளமை முறுக்குடனே இருக்க அனைவர்க்கும் ஆசைதான். என்ன உடற்பயிற்சி செய்தாலும் வயதானால் தசை குறைவதைத் தடுப்பது கடினம். ஆனால், மையோஸ்டேடின் என்ற புரதத்தின் உயிரணுவைக் கொஞ்சம் மாற்றிவிட்டால் இந்தத் தசை முதிர்ப்பைத் தடுக்கலாம் என்று கண்டுள்ளனர்.

8. கொழுப்பும் நுண்ணறிவும்: – கொழுப்பும் நமது உடலின் செல்தான். அந்த செல்லை வளர்ச்சிக் கட்டுப்பாட்டுப் பொருளுடன் கலந்து ஊற வைத்து மூளை செல்களான நியூரான்களாக்கிவிடும் மாற்றத்தை பிரேசில் நாட்டு அறிஞர்கள் கண்டுள்ளனர். கொழுப்பு செல்லையே மூளை செல்லாக மாற்றிச் செலுத்திவிட்டால் மூளையின் நினைவாற்றல் குறையாமல் நுண்ணறிவுடன் வாழ முடியும். இது இன்னும் அய்ந்தாண்டு களிலேயே வர முடியும் என்கிறார்கள்.

9. முழு உரு கருப்பை-: கருப்பையின் சில செல்களை உண்டாக்கியுள்ளார்கள். ஆனால், அவை அவ்வளவு திறமையுடன் இருப்பதில்லை. அதனால் முழு கருப்பையை சோதனைக் குழாயில் உண்டாக்கி இருக்கின்றார்கள். இது கருப்பை மாதிரியே முட்டைகள் உற்பத்தி செய்யும். இள வயதில் முட்டை தயாரிக்க முடியாமல் இருக்கும் பெண்களுக்கு ஓர் புதிய அன்பளிப்பாகும்.

10. -காந்த முழங்கால்கள்: முழங்கால் மூட்டு தேய்வது மிகவும் பொதுவாக அனைவர்க்கும் வரக்கூடியது. அதற்கு எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடக்கின்றன உலகெங்கும். சில செல்களை வளர்த்து உள்ளே செலுத்தினால் மூட்டு தேய்வதைத் தடுக்கலாம். ஆனால், உள்ளே செலுத்தும் செல்கள் எங்கே வேண்டுமோ அங்கில்லாமல் மூட்டு முழுவதுமாகச் சென்று  பயனில்லாமல் போய் விடுகின்றன. இதற்கு என்ன செய்தார்கள் என்றால், எந்த இடத்திலே மூட்டு தேயாமல் இருக்க இந்த செல்கள் இருந்து வளர வேண்டுமோ அந்த இடத்திலே சின்னக் காந்தத்தைப் பொருத்திவிடுவார்கள். அந்த செல்களை காந்தத்திற்குச் சென்றடையுமாறு காந்தத்தைப் பாய்ச்சிவிடுவார்கள். பின் அந்த செல்கள் அங்கேயே வளர்ந்து மூட்டு தேயாமல் இருக்கும்.

11. அறிவான கணுக்கால் மூட்டு-: கால் இழந்தவர்களுக்குக் கணுக்கால் மூட்டு பொருத்துவது பயன்பெற வேண்டுமானால் அது பல விதங்களில் திரும்ப வேண்டும். கணுக்காலைப் பல விதத்தில் திருப்பிப் பாருங்களேன். நமக்கு மிகவும் எளிதாக உள்ளதை மாற்று கணுக்கால் பூட்டப் பெற்றவர்கள் எப்படிச் செய்ய முடியும்? சிகாகோவின் உலகப் புகழ் பெற்ற மறு பயிற்சி ஆராய்ச்சி மய்யம் கணினியில் இயங்குமாறு கண்டுபிடித்துள்ளனர். ஒரு கணினி படம் இருக்கும். அதில் என்னென்ன மாதிரி அசைக்கின்றார்களோ அப்படியே மூட்டும் அசையும். இதைப் பழகிக் கொண்டதும் எளிதாகிவிடும். நமது மூட்டுகளைப் போலவே அவர்களும் பயன்படுத்தலாம்.

இதையெல்லாம் படித்தால், இதெல்லாம் நடக்கக்கூடியதா? என்ற கேள்விதான் வரும். ஆம்! நிலாவில் மனிதன் கால் வைக்கப் போகின்றான் என்று முன்பு யாராவது சொல்லியிருந்தால் நம்பியிருப்போமா? அந்த நிலவுப் பயணம்தான் பல இதய மானிட்டர்களுக்கு வழி வகுத்தது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

இதையெல்லாம் “ஓ” சிறப்பாக அனைவர்க்கும் புரியும்படிச் சொல்லும் போது பல நோயாளிகள் நமக்கும் விரைவில் விடிவு வரும் என்று நம்பிக்கை பெறுகின்றனர்.

அறிவியல் வளர்ச்சியில் நாம் அறியாமலேயே பல நமக்குப் பயன்படுகின்றன. வளரட்டும் அறிவியல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *