குலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்! இன்றேல் செத்தொழிவோம்!

ஜூன் 01-15

 

தந்தை பெரியார்

இந்த நாட்டை முதலில் முகலாயர்கள் ஆண்டார்கள். பிறகு வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள். வெள்ளைக்காரன் இங்கு பார்ப்பானால் வந்தான். பார்ப்பான் பேச்சையே கேட்டான். கடைசியில் வெள்ளைக்காரன் என்ன நினைத்தான் என்றால் பார்ப்பான் எல்லோரையும் ஏய்க்கின்றான். இந்த முட்டாள் ஜனங்கள் அவனுடைய ஏய்ப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள், என்பதாக. இப்படிப்பட்ட முட்டாள் மக்களை ஏய்த்து வரும் பார்ப்பானிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு அவனிடம் சாவி கொடுத்து விட்டுப்போனால் தங்களுக்கு லாபம் என்று கருதிப் பார்ப்பனரிடம் ஆட்சியை ஒப்புவித்தான். ஆனால் வெள்ளைக்காரன் கொஞ்சம் ஓரளவுக்குத் தமிழனுக்குப் புத்தி வர வசதி செய்து விட்டுப் போனான். இந்த வெள்ளைக்காரனாலும் சுயமரியாதை பிரச்சாரத்தினாலும் மக்களுக்குக் கொஞ்சம் புத்தி வந்தது.

ராஜாக்களுக்கும் கொஞ்சம் புத்திவந்தது. திருவாங்கூர் மற்ற ராஜ்யங்களில் கோவிலைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிடச் சொன்னார்கள். வெள்ளைக்காரன் இங்கு வந்ததும், பார்ப்பனர் தாம் பதவிக்கு வரும் மாதிரியில் ஏற்பாடுசெய்து கொண்டனர். அந்தப் படிக்கே கல்வி முறையையும் உத்தியோகத் தகுதியையும் ஏற்பாடு செய்து கொண்டனர், உதாரணமாக, ஒரு வக்கீல் வேண்டும் என்றால் 18 வருடம் ஆகும்; அதில் பார்ப்பான்தான் வக்கீலாக முடியும். காரணம் அவன் பிச்சையெடுத்தாவது அவன் மக்களைப் படிக்கவைக்க முடியும். அதற்கு அனுசரணை யாகவும், ஆதரவாகவும், அவன் ஜாதி உயர்வு இருக்கிறது. பல அக்கிரமங்கள் செய்து அவனே சகல உத்யோகத்தியோகங்களிலும் அமர்ந்தான்.

இவற்றையெல்லாம் மீறி இரண்டொரு நம்மவர்கள் படித்துவந்தனர். அதுவும் இந்தப் பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவில்லை. இதைத்தான் ஆச்சாரியார் அவர்கள் தமது திட்டமாகச் சொல்கிறார். அதாவது கிராம மக்களுக்குப் படிப்பு வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார்.

அவன் சிரைக்கணும், வெளுக்கணும், சட்டிப்பானை செய்யணும் என்று சொல்லிவிட்டார். உங்கள் ஊர்ப்பள்ளிக்கூடம் 3 மணிநேரம்தான்; மற்ற நேரமெல்லாம் நம் பிள்ளைகள் கழுதை மேய்க்க வேண்டும், இதற்குப்  பெயர் புது ஆரம்பக் கல்வித் திட்டமாம், இப்படிப்பட்ட திட்டத்தை எதிர்ப்பதற்குத்தான் ஈரோட்டில் மாநாடு கூட்டினோம். அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். சட்டப்படி போராட வேண்டும் என்று சர்க்கார் (அரசு) சொல்லுகின்றது. அதாவது சட்டசபைக்குச் சென்று மந்திரி பதவியைக் கைப்பற்றி இந்தத் திட்டத்தை மாற்றவேண்டும் என்று சொல்லுகிறது. சட்டசபைக்கு நாம் போகமுடியுமா? இன்னும் சொல்கிறேன்; யோக்கியன் சட்டசபைக்குப் போக முடியுமா? தேர்தலில்  நிற்பதற்கே முதலில் 250 ரூபாய் டிபாசிட் கட்ட வேண்டும்; பார்லிமெண்டுக்கு (நாடாளுமன்றம்) 500 ரூபாய் டிபாசிட் கட்டவேண்டும்; 200, 300 போலிங் ஆஃபீஸ்களுக்கு (வாக்குச்சாவடிகளுக்கு) ஆள் வைக்கவேண்டும்; அதற்கு ஆள் ஒன்றுக்கு 1 ரூபாய் கூலி என்றாலும் 300 ரூபாய் போல் வேண்டும்,

இவை எல்லாவற்றையும் விட நம் மக்களுக்கு ஓட்டுப்போடும்  (வாக்கு அளிக்கும்) தகுதியோ, அறிவோ இல்லாததால் நம் ஜனங்களுக்கு எது எப்படி ஆனாலும் சரி என்று 4 அணா கொடுத்தால்போதும் என்று தம் ஓட்டைப் போட்டு விடும் நிலையில் உள்ளவர்கள் ஆவர். இப்படி இருக்கும்போது யார் சட்டசபைக்கு வரமுடியும்? அப்படியும் போனால்தான் அங்கேபோய் என்ன செய்ய முடியும்? எடுத்துக்கொள்ளுங்களேன், சட்டசபையில் ஆச்சாரியாரின் கல்வித்திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேறியது.

ஆனால் ஆச்சாரியார் அவர்கள்.  இது ஒரு சிபாரிசு என்று கூறிவிட்டார். இப்படி இருக்கும்போது சட்டசபைக்குப் போய்த்தான் என்ன செய்யமுடியும்? அதோடு இந்த ஜனநாயகம் சட்டசபை என்பது எல்லாம் தேர்தலில் நிற்காதவர்களும், தேர்தலில் தோற்றவர்கள் எல்லாரும் மந்திரிகளாக வரக்கூடிய கேவலமான தன்மையில் இருக்கிறது. இந்த நிலைமை இருக்கும் போது சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? பெரிய புரட்சியின் மூலம்தானே காரியம் சித்தியாகும்? நம்மில் 100, 1000 பேர் பலியாக வேண்டி வந்தாலும் தயார் என்று கச்சைக் கட்டிக்கொண்டு முன் நின்றால்தானே முடியும்!

ஆந்திரா எப்படிப்பிரிந்தது? அங்கே போராடத் தயாராகி விட்டார்கள், எதற்கும். நேரு தாம் இருக்கின்ற வரை ஆந்திராவைப் பிரிக்கமுடியாது என்றார். அதற்குஆக ஆந்திர மக்கள் சும்மா இருக்கவில்லை. ரயிலை நிறுத்தினார்கள்; அதன் டிரைவரை உதைத்தார்கள்; ஒரு மாதம் வரை சரியான நேரத்துக்கு வண்டிபோக முடியவில்லை. பல சட்டத்துக்குப் புறம்பான செயல்களையெல்லாம் துணிந்து செய்து நஷ்டத்தை உண்டாக்கினார்கள், உடனே  ஆந்திராவைச் சட்புட்டென்று பிரித்துக் கொடுத்துவிட்டார்கள்.

மற்றும் காங்கிரஸ்காரர்கள் இம்மாதிரி காரியங்களைச் செய்து, அதாவது தாங்கள் ஆகஸ்டு கிளர்ச்சி செய்துதான் சுதந்திரம் பெற்றதாகக் கூறிவருகின்றனர், இதனால் தான் நானும் 3 மாத நோட்டீஸ் கொடுத்து சுட்டால் சுடட்டும் என்று போராட்டம் ஆரம்பிக்க இருக்கின்றேன்.

எப்படியும் இந்தக் கல்வித்திட்டத்தை ஒழித்துத்தீரவேண்டும். வாத்தியார்கள் எதிர்த்தார்கள்; அதோடு போனமாதம்

பஞ்சாயத்துத்தலைவர்கள் மாநாடு நடந்தது, 400பேர் கூடினார்கள்.

இதில் ஆச்சாரியார் அவர்கள் தந்திரமாக ஒரு ஆளை அனுப்பி அதில் பேசி ஏமாற்றப் பார்த்தார். ஆனால் அங்கே அந்த ஆளை வெளியேற்றச் சொல்லிக் கலவரம் நடந்து அந்த ஆள் வெளியேறும்படியாகிவிட்டது. மற்றும் ஜில்லா போர்டுகளும், முனிசிபாலிட்டிகளும் இதை எதிர்த்து தீர்மானம் போட்டன.  இவ்வளவுக்குப் பிறகும் ஆச்சாரியார் அவர்களும், நகரங்களுக்கும் இக்கல்வித்திட்டத்தை விஸ்தரிக்கின்றேன் என்று கூறுகிறார் என்றால், நம்மை  மடையர்கள் என்று கருதுவதைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஆகவேதான்  கிளர்ச்சிக்குப் படை திரட்டுகின்றோம். இரத்தம் சிந்தத் தயாராயிருக்கின்றோம். இப்போது ஆள்கிறவர்கள் பார்ப்பனர்; உதைப்பார்கள்; சுடுவார்கள்; எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் சட்டத்தால் செய்ய வேண்டியதெல்லாம் முடிந்துபோய்விட்டன.

ஆகவே அரசாங்கம் செய்யும் அக்கிரமங்களைச் சட்டத்தைமீறிக் காரியங்களைச் செய்துதான் நாம் போராட வேண்டியுள்ளது. அந்த நிலைமைக்குச் சர்க்காரே (அரசே) நம்மைக் கொண்டுவந்து விட்டுவிட்டது. ஒன்று அந்தப் படிப்புத் திட்டத்தை ஒழித்துக்கட்டு, அல்லது அங்கேயே சாவு என்று சொல்லி உங்கள் இளைஞர்களை அனுப்ப வேண்டும். தாய்மார்களும் களத்தில் குதிக்கவேண்டும்; இந்தப் போராட்டத்தில் இரண்டிலொன்று  பார்த்துவிட வேண்டியதுதான்.

23.2.1954 அன்று மெணசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார்பேருரை: (விடுதலை 26.2.1954)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *