ஜாதி – தனி மனித வழிபாடு – பெண்ணடிமை தமிழ் சினிமா: எங்கே செல்லும் இந்தப் பாதை? – 2

அக்டோபர் 01-15

– கை.அறிவழகன்

1) தனி மனித வழிபாடு நோக்கிய நாயகத் தோற்றம்.

முதல் காரணி எப்படியான தாக்கம் விளைவிக்கிறது அல்லது எப்படி உள்ளீடு செய்யப்படுகிறது என்பது குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் ஏறக்குறைய எல்லா வேலைகளையும் அவர்களே செய்து முடித்து விடுகிறார்கள். தன்னுடைய தந்தையை இழிவுபடுத்தும் ஒரு குழுவை அல்லது தனி மனிதனை ஒரு கல்லெறிந்து தாக்குவதில் தொடங்கி கட்டிடங்களை நொறுக்கி, கடைகளைப் பந்தாடி, பேருந்துகளைத் துரத்தி, ரயில் வண்டிகளின் மீதேறி ஓடி, விமானங்களைக் கயிறு கட்டிப் பற்களால் நிறுத்தி நூற்றுக்கணக்கானவர்களை அடித்துத் துவைத்து கடைசியில் அவர்கள் வெற்றி பெறுகிற காட்சியில் ஒரு தமிழ்த் திரைப்படம் பெரும்பாலும் முடிவுக்கு வருகிறது. இத்தகைய திரைப்படங்களின் கதாநாயகர்கள் சொல்ல வருகிற செய்தி, நான் ஒருவனே அனைத்து ஆற்றல்களும் நிரம்பிய மனிதன் , எனக்கான வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மிக மோசமான ஆபத்து நிறைந்த உள்ளீடு. இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் பெரும்பாலான கதாநாயகர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள், இதைத்தான் செய்ய வேண்டும் என்று அவர்களின் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவர்களை அழுத்துகிறார்கள்.

கூலிக்காரனில் தொடங்கி எந்திரன் வரையில் தொடர்ச்சியாக இப்படி ஒரு காட்சிப்படுத்தலை தமிழ்த் திரைப்படங்களுக்குப் பொதுமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சமூகத்தில் ஒரு தனி மனிதனே அவனது வெற்றிக்கும், தோல்விக்கும் முழுமுதற் காரணி என்கிற வகையில் கதாநாயகர்களின் பிம்பம் வலிந்து உருவாக்கப்படுகிறது. அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் முதற்கொண்டு கடைநிலைத் தொழிலாளியாக வாழ்க்கை நடத்துகிற எல்லாக் கதாநாயகர்களும் நமது சமூகத்தில் முன்னர் உலவுகிற கடவுள் என்கிற பிம்பத்தைப் போலவே எல்லா அதிகாரங்களையும் பெற்ற ஒரு முழு ஆற்றலாகத் திரைப்படங்களில் காட்டப்படுகிறார்கள். இத்தகைய ஒரு சித்தரிப்பு உளவியல் வழியாக திரைப்படங்களைப் பார்க்கிற யாருக்கும் ஓர் அழுத்தத்தைத் தோற்றுவிக்கும். குறிப்பாக குழந்தைகளும், இளைஞர்களும் முழு அதிகாரம் பெற்றவர்களாக மாற விரும்புகிறார்கள். கல்வி, தொழில், பொருளாதாரம், சமூகம் அரசியல் போன்ற பல்வேறு புறக்காரணிகளை அப்படியே இருத்திவிட்டு ஏதாவது ஒரு வழியில் நாயகத் தோற்றம் பெற வேண்டும் என்கிற போலியான ஓர் அக உலகைக் கட்டமைக்கும் இந்தத் தனிமனித வழிபாட்டு முறையை விட்டு வெகுதூரம் விலகிச் செல்ல வேண்டிய நிலையில் நமது திரைப்படங்கள் இருக்கின்றன.

அடிப்படைத் தகுதிகளான வாசிப்பு, அதன் மூலமாகப் பெறுகிற கருத்தியல் வடிவங்கள், கருத்தியலின் மூலம் கட்டமைக்கப்படுகிற அரசியல், அரசியலால் நிகழும் சமூக மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் ஆகியவற்றை நுட்பமாகச் சொல்லி விளங்க வைக்க முடிகிற ஓர் ஊடகத்தில் நிகழ்கிற இத்தகைய எதிர்மறை இயக்கம், ஒரு போலியான தனி மனித ஆற்றல் வழிபாட்டு மனநிலையை நோக்கித் தனது பார்வையாளர்களை நகர்த்தி சமூக வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகவே மாறும் என்றே கருதப்பட வேண்டியிருக்கிறது.

பார்வையாளர்கள் விரும்புவதால்தான் இத்தகைய தொடர்ச்சியான திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. நுட்பமான மனித உளவியலையும், கலை சார்ந்த புதிய வடிவங்களையும் தேடி அடைந்து அவற்றை வணிக ரீதியிலும் வெற்றி பெற வைக்கும் புதிய வழங்குதிறன்களை நோக்கி நமது தமிழ்த் திரைப்படத்தின் இயக்குனர்கள் செல்லும் போதுதான் பார்வையாளனின் மனநிலையில் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை உண்டாக்க முடியும். அண்மைக் காலங்களில் வந்திருக்கிற அவள் பெயர் தமிழரசி, அங்காடித் தெரு, வெண்ணிலா கபடிக் குழு, பேராண்மை போன்ற திரைப்படங்கள் _ இத்தகைய மாற்றத்தைப் படைக்க விரும்புகிற சில இளம் தலைமுறை இயக்குனர்களை நமக்கு அடையாளம் காட்டினாலும், அவர்கள் செல்ல வேண்டிய பாதை இன்னும் வெகு தூரத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது.

2) பெண்களின் வாழ்க்கை நிலை குறித்த தொடர் புறக்கணிப்பு.

தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்த வரையில் பெண்கள் என்கிற சொல்லாடலே முழுக்க ஒரு பண்டமாக்கப்பட்டிருக்கிறது. பெண்களின் உடலும் சரி, பெண்களின் உளவியலும் சரி, ஓர் ஆணைச் சார்ந்து அல்லது ஓர் ஆணுக்காகவே இயங்குகிற நிலையில் நமது திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது. பெண்களின் உளவியலை அல்லது பெண்களின் இயக்கத்தை நேர்மையாகச் சித்தரிக்க அல்லது முயற்சி செய்த ஒரு திரைப்படத்தைக்கூட அண்மைக்காலங்களில் நம்மால் கண்டறிய முடியாது. மிகப்பெரிய நடிகர்களால்கூட இருபத்தோராம் நூற்றாண்டில் பொம்பளைன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும்ங்கிற மாதிரியான வசனங்களை, எந்தக் கூச்சமும் இன்றி வெள்ளித் திரைகளில் முழக்கி அதற்குக் கைதட்டலும் பெறுகிற ஒரு நிலையில் நமது தமிழ்த் திரைப்படங்கள் இருப்பது குறித்து நம்மில் யாருக்கும் அதிக அக்கறை இல்லை. ஏறத்தாழ பெண்கள் முதன்மை தலித்துக்கள் என்கிற அளவில் நமது திரைப்படங்கள் நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருப்பது நமது சமூக வளர்ச்சிக்கு எந்த வகையில் பயனளிக்கப் போகிறது என்பது குறித்து துறைசார்ந்த அறிஞர்கள் சிந்திக்க வேண்டியது ஒரு மிகப்பெரிய தேவை மட்டுமன்றி அவசியமும் கூட. இந்தியச் சமூகத்தில் அல்லது தமிழ்ச் சமூகத்தில் பெண்களுடைய வாழ்க்கை முறை, வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் அவர்கள் சந்திக்கிற இடர்ப்பாடுகள், கல்வி மற்றும் வளர்ப்பு முறைகளில் நிகழும் புறக்கணிப்பு, பாலியல் வழியாக ஏமாற்றப்படுகிற அவலங்கள், அவர்களின் அரசியல் குறித்த விழிப்புணர்வின்மை, இலக்கியம் அல்லது மற்ற கருத்துலக வரிசையில் நிகழ்கிற தொடர்ச்சியான ஆளுமை இழப்பு என்று பெண்களை மய்யப்படுத்தி எடுக்கப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் இன்னும் அப்படியே உறைந்து கிடக்கின்றன.

எல்லா அதிகாரமும் படைத்த ஒரு நாயகனின் கனவுகளுக்கு நீரூற்றி பாடல்களில் ஆடைக் குறைப்பை நிகழ்த்தும் நாயகிகளை மட்டுமே நமது திரைப்படங்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன. அவற்றைத் தாண்டி இன்னும் ஒரு அடிகூட எடுத்து வைக்காத நிலையில் இது குறித்த பரவலான விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும்கூட.

– (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *