ஆயிரமாயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உருவாக்குவோம்!

ஜூன் 01-15

 

தந்தை பெரியார் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு, பிறந்தது முதல் திராவிடர் கழகத்தவர். பிஞ்சுப் பருவத்திலிருந்தே இயக்கப் பணிகளில் ஈடுபாடு கொண்டு போராட்டங்களில் பங்கேற்றவர்.

புதுமைச் சிந்தனையும், எழுத்தாற்றலும் மிக்கவர். இதழியல் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். 2003-ஆம் ஆண்டு முதல் உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்குப் பொறுப்பேற்றார்.

பின்னர் 2006-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் தமிழரசு இதழில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். எனினும், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில செயலாளராகப் பொறுப்பேற்று பன்னாட்டுத் தொடர்புகளை மேம்படுத்தினார். உண்மையில் தொடர்ந்து கட்டுரைகளை வழங்கிவந்தார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் பெருமக்கள் குறித்த செம்மொழிச் சிற்பிகள் நூல உருவாக்குவதில் பெரும்பங்காற்றினார்.

பல்வகை ஆற்றலுடன் ஊக்கமிகு உழைப்பை வழங்கிய தி.பெரியார் சாக்ரடீசு சென்னையில் மே 8 அன்று நடைபெற்ற சாலை விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மே 12 மாலையில் அவர் காலமானார். மருத்துவமனையிலும் பெரியார் திடலிலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். பல்வேறு இயக்கத்தவர்களும் உணர்வாளர்களும் பங்கேற்கும் வண்ணம் சென்னை பெரியார் திடலில் வைக்கப்பட்டு, மே 14 அன்று காரைக்குடியில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. அவரது மறைவுக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கை உணர்வுபூர்வமானது. அதில்,

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளியும், தந்தை பெரியாரின் தன்மான இயக்கத்தைத் தலை தாழாது தூக்கிப்பிடித்த பெரியார் பெருந்தொண்டருமான காரைக்குடி (கல்லுக்கட்டி) என்.ஆர். சாமி என்ற மாபெரும் ஆலமரத்து அருங்கிளையின் விழுதான எங்கள் அன்புச் செல்வன் பெரியார் சாக்ரடீசை (வயது 44) விபத்து பதம் பார்த்து விட்ட நிலையில், எப்படியாவது பிழைத்துவிட மாட்டாரா என்று ஏங்கித் துடித்த எங்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாரே!

அவரை வளர்த்து ஆளாக்கிய அவரின் பெற்றோர்களான தந்தை சாமி.திராவிடமணியும், தாய் ஜெயா அம்மையாரும், வாழ்விணையர் இங்கர்சாலும், ஒரே அன்பு மகள் தமிழீழமும்,  அவரது சகோதரர்கள் மற்றும் பெரியப்பா, சித்தப்பா குடும்பத்தார்கள், அதைவிட இயக்கத்தோடு பின்னிப்பிணைந்த உறவால் எங்களையும், இப்படித் தவிக்கவிட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்று எண்ணும்போது எழுதக்கூட எனது கையும், மனமும் ஒத்துழைக்க மறுக்கின்றனவே! பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!  உன் இழப்பை எப்படி  நாங்கள் சரிசெய்வோம்?

எங்கள் இயக்கக் கொள்கை குலக்கொழுந்தே, என் பணியில் பெரும்பகுதியை ஏட்டுத்துறையில் எடுத்துக்கொண்டு உதவிய எனது இளம் ஏந்தலே! எனக்குரிய நம்பிக்கையான செய்திப் புறாவாக எப்போதும் பறந்துவந்து, தந்து, உன் கடமையாற்றிப் பறந்து போவாயே; அதுபோல இப்போதும் சொல்லாமல் விடைபெறாமல் சென்றுவிட்டாயே -எங்கள் கொள்கைத் தங்கமே!

கொண்ட தலைமைக்கும், கொள்கைக்கும் நெறிதவறாது ஒரு கவசத் தொண்டராக இருந்து, பெற்ற தந்தையைவிட எம்மை உற்ற தந்தை தாயாகவே கருதி, பெரியார் திடல் முகவரியாகவே வாழ்ந்த எங்கள் இலட்சிய முகமே! உன்னைப் பறித்தெடுத்த இயற்கையின் கோணல் புத்தியை எப்படித்தான் விமர்சிப்பது, எங்களுக்கே புரியவில்லையே!

திடலில் பல அறிஞர்கள் இறையனாரும், கு.வெ.கி.ஆசானும், ஆளுமைக்குரிய ஆளவந்தார், பொருளாளர் சாமிதுரை, கல்வியாளர் சிவராசன்களும் எம்மை விட்டுப் பிரிந்த நிலையிலும் இதோ நம் கொள்கைப் பரப்ப நம்பிக்கை நட்சத்திரங்களான பெரியார் சாக்ரடீசைப் போன்ற இளம்புலிகள் உள்ளனரே என்று நாங்கள் பெற்ற ஆறுதலையும் பறித்துவிட்டாயே! நீ மறைந்து விட்டாயா? நம்பமுடியவில்லையே!  எனது மற்றொரு துரைசக்ரவர்த்தி ஆகிவிட்டாயே!

எப்படித்தான் தாங்குவதோ, எங்களுக்கே இப்படியென்றால் உங்கள் குருதிக் கொள்கைக் குடும்பம், வாழ்விணையர், எம் பேரப்பிள்ளைகள் இவர்களுக்கு யார்தான் ஆறுதலும், தேறுதலும் கூறுவது?  எல்லோரும் சேர்ந்து வழியனுப்பக் கூடாத அந்த வசீகரக் கொள்கைத் தங்கக் கட்டியை வழியனுப்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டதே… அந்தோ!

வழியில்லாமல் விழிநீரைத் துடைத்து, கட்டுப்பாட்டின் சின்னமான இராணுவ வீரனுக்கு வீர வணக்கம் கூறி, ஒருவருக்கொருவர் தேற்றமுடியாத நிலையிலும், பெரியாரின் கொள்கை உறுதித் துணையோடு இலட்சியப் பயணத்தை தொடர்ந்து, மேலும் ஆயிரம் ஆயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உருவாக்குவோம்! உறுதி கொள்ளுவோம்!!!

புரந்தார்கண் நீர் மல்க, உன்னை வழி அனுப்பும் உன் கொள்கைக் குடும்பத்து முகவரியாளன், உண்மை இதழின் ஒவ்வொரு வளர்ச்சிப் பக்கத்திலும் என்றும் வாழ்வாய்- வாழ்ந்துகொண்டே எம்முடன் பயணிப்பாய்! என்ற ஆறுதலுடன் கி.வீரமணி என்று குறிப்பிட்டுள்ளார்.

எண்ணற்ற புதிய படைப்பாளிகளை உருவாக்கிய அவருக்கு உண்மை வாசகர்களின் சார்பில் வீரவணக்கம் தெரிவித்தாலும் ஆசிரியரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் இன்னும் ஆயிரம் ஆயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உறுவாக்குவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *