பார்ப்பனரும் தொன்மங்களும்

டிசம்பர் 16-31- 2013

– மதிமன்னன்

அருப்புக்கோட்டையில் ஓர் அரசுப் பணியாளர். மார்க்சிய அறிவுடன் சீரிய பகுத்தறிவாளர். தீவிர பெரியாரிஸ்ட். தமிழ்நாடு மின் வாரியத்தில் பணி புரிகிறார். ஏதோ ஓர் அமைப்பின் சார்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தப் போவதாகவும் அதில் நான் இந்தியா இவன் மதமா? அவன் மதமா? இந்தியா எவன் மதம்? என்ற தலைப்பில் பேச வேண்டும் என்றார். அவர் எனக்கு அறிமுகமானவர் அல்லர். என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார். எங்காவது போய்ப் பேசிச் சிக்கலாகிவிடக் கூடாது என்கிற, வழக்கமான பழக்கத்தில் அருப்புக்கோட்டை கழகத் தோழர் விடுதலை ஆதவனிடம் கேட்டேன். தோழர் மதி.கண்ணன் நல்ல பகுத்தறிவாளர், நீங்கள் தாராளமாகக் கலந்துகொள்ளலாம் என்று கூறியதோடு, கலந்துகொள்ள வேண்டும் எனவும் கூறிவிட்டார். நான் ஒப்புதல் தந்தேன்.

கருத்தரங்கம் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராசர் சிலைக்கு எதிரில் உள்ள வசதியான அரங்கில். காலையில் நான் உள்பட சிலர், மாலையில் சி.பி.அய். தோழர் மகேந்திரன் உள்பட சிலர். கருத்தரங்கத்திற்கு இரண்டு நாள் முன்னதாக மதி.கண்ணன் பேசினார். என் பேச்சைத் தட்டச்சு செய்து அனுப்ப முடியுமா? எனக் கேட்டார். பேச்சை எழுதுவதோ, எழுதி வைத்துப் படிப்பதோ நான் அறியாதது. நான் விரும்பாததும் கூட. என்றாலும் அவர் கேட்ட மாதிரியே செய்து தந்தேன்.

கருத்தரங்க நேரத்திற்கு முன்னதாகவே என் வழமைப்படி சென்று விட்டேன். அரங்கம் செல்லும் வழியில் நூல்கள் விற்பனைக்கடை விரித்திருந்தார் ஒருவர். நான் ஒரு புத்தகப் புழு. புத்தகங்களை மேய்ந்தேன். என் பெயர் போட்ட ஒரு சிறிய நூல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. எனக்கே வியப்பு. எடுத்துப் பார்த்தேன். நான் பேசப்போகும் பேச்சு நூலாக உள்ளது. இதற்காகத்தான் மதி.கண்ணன் தட்டச்சு செய்து கேட்டார் என்பது அப்போதுதான் விளங்கியது.

நான் பேசினேன். படித்தேன். முப்பது மணித்துளிகள் பேசினேன். கேள்வி நேரம் என்றார்கள். கேள்விகள் கேட்டார்கள். முதல்    கேள்வியே, பார்ப்பனர் என்று மரியாதை இல்லாமல் குறிக்கிறீர்களே, ஏன்? என்பது. பார்ப்பனர், பார்ப்பான் என்பது மரியாதைக் குறைவான சொல் அன்று, நல்ல தமிழ்ச்சொல், இலக்கியத்தில் ஆளப்பட்டுள்ள தூய தமிழ்ச் சொல் என்பதையெல்லாம் விளக்கினேன். திருக்குறள், சிலப்பதிகாரம், குறுந்தொகை ஆகியவற்றின் வரிகளை எடுத்துக்காட்டிப் பதில் இறுத்தேன். அந்தத் தோழருக்குத் திருப்தி இல்லை போலும், துணைக் கேள்வி எழுப்பினார். இங்கிலீஷ் ஏட்டின் ஆசிரியர் பார்ப்பனர் ஒருவர் பெயரைச் சொல்லி அவர் போன்ற நல்லவர்களே உங்கள் கண்களில் படவில்லையா எனப் படபடத்தார். நான் விளக்கம் கூறிப் பேசினேன். (விவரம் நாகரிகம் கருதித் தவிர்க்கப்பட்டது).

பார்ப்பனர் என்று திராவிடர் கழகத்தினரும் தீவிர பெரியாரியவாதிகளும் மட்டுமே விளிக்கின்றனர். மற்றையோர் பிராமணர் எனப் பயன்படுத்துகின்றனர். பெரியார் சொன்னார், அவரைப் பிராமணன் என்று சொன்னால் நம்மைச் சூத்திரன் என்று ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார். அந்தச் சொல்லுக்கு எதிர்ச் சொல் இதுதானே! சூத்திரன் என அழைத்துக் கொண்டால், தாசி மகன் உள்பட ஏழு பெயர்களில் ஒன்றை ஏற்றுக் கொண்டதாகி விடுமே! எனவே தவிர்க்கிறோம். ஆனாலும் அதனை வசைச் சொல் எனக் கருதிச் சிலர் கோபப்பட்டனர். இன்னமும் கோபப்படுகின்றனர். சில நாள்களுக்கு முன் சீரங்கத்தில்கூட 23 பேர் கொண்ட மாபெரும் மக்கள் திரள் முன்பு நின்று பேசிய பேச்சாளர் கூடப் பேசினாராம். சீரங்கம் அல்லவா? பேச்சு தடை இல்லாமல் அவர்கள் பேசலாமே! அதனால்!

ஆனால் உண்மை என்ன?

கற்றோய்த் துடுத்துப் படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப நிற்போர் எனப் பாடுகிறது முல்லைப் பாட்டு.

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பாக்கமும் என விளக்குகிறது தொல்காப்பியம்.

ஆறுவகையான பார்ப்பனர் யார் என்பதை விளக்குகிறது நம்பியகப் பொருள் (பாடல் 213) தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலியென்றீங் கிங்கறுவரும் சாற்றிய களவில் கூற்றிற் குரியர் என்கிறது பாடல் வரிகள்.

ஓதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல் (தனக்காக), வேள்வி செய்தல்(பிறர்க்காக) ஈதல், ஏற்றல் எனும் ஆறு செயல்களைப் புரிவோர் இவர்கள் எனப் பதிற்றுப் பத்து கூறுகிறது.

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
என்று குறுந்தொகை (பாடல் 156) பாடுகிறது.
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
நெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்
என்று ஒலிக்கிறது சிலப்பதிகாரம்.

பார்ப்பினி எனப் பார்ப்பனப் பெண்ணைஅழைப்பதை பாசண்டன் யான் பார்ப்பினி தன்மேல் என்று சிலப்பதிகாரமே காட்டுகிறது.

மாபெரும் பாத்திரம் பார்ப்பினி சாவி

கப்புடைக் கழித்து வருவோன் என்று இரட்டைக் காப்பியத்தில் மற்றொன்றான மணிமேகலை கூறுகிறது.

பார்ப்பார் தவறே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தோர் இளையார் பசுப்பெண்டிர்

என்று ஆசாரக்கோவை பலவீனமானவர்களைப் பட்டியல் போடுகிறது.

பார்ப்பார் மறை ஓதுக என்றும் பார்ப்பனக் குறுமகன் போலத்தாமும் என்றும் அய்ங்குறுநூறு கூறுகிறது.

வேள்விப் பாகம் உண்ட பைங்கப் பார்ப்பான் என்று அவிர்பாகம் உண்ட அய்யரைக் குறிப்பது பரிபாடல்.

திருந்துகேளாய் முழுதிர்தமுது பார்ப்பான் அஞ்சின முதுபார்ப்பான் என்று கலித்தொகை வருணிக்கிறது.
நின் முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்கார் என்று நைச்சியமாகப் பார்ப்பான் பேசியதைப் புறநானூறு (பாடல் 43) காட்டுகிறது.

வேளாப் பார்ப்பான் வாவரந்துமித்த என அகநானூறு பேசுகிறது.

மாலதியும் பார்ப்பானொடு, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட, பார்ப்பன வாகை குடியேற்புற என்பனவெல்லாம் சிலம்புப் பரல்கள். படுபொருள் வவ்விய பார்ப்பான் இவன் என இடுசிறை கோட்டத்து இட்டார் என்று கூறுவதும் சிலப்பதிகாரம் தான்!
இலக்கியச் சான்றுகளை இன்னும் ஏராளம் காட்டலாம். என்றாலும், அவாள் திட்டுகிறோம் என்றே நினைத்து நடந்து கொள்கிறார்கள். இதற்காகவே சிலர், பிராமணர் என்று சொல்லாமல் பிராமின் என்று இங்கிலீசில் சொல்லி… அவர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்கிறார்களாம்!

இலக்கிய அறிவும் ஆய்வுப் பட்டறிவும் நிரம்பப் பெற்ற பேராசிரியர்கள் பலரின் கருத்து, சங்ககாலம் தொடங்கி இன்றுவரை பொருள் மாறாமல் நின்று நிலவிடும் சொற்கள் பரதவர் என்பதும் பார்ப்பனர் என்பதும் மட்டுமே என்கின்றனர். கடலோரத்தில் வாழ்ந்துகொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவோர் பரதவர் என்றே இன்றுவரை குறிக்கப் பெறுவதைப் போலவே பார்ப்பனர் என்பதும் ஈராயிரம் ஆண்டாக நிலைபெற்றுள்ளது என்பதே பெருமைக்குரியதாக அல்லவா கருதப்பட வேண்டும்! பார்ப்பனரின் வாதூல கோத்ரம் வாதூளி என்றும் பாரத்வாஜ கோத்ரம் நெடும்பாரதாயன் எனும் பெயராலும் கவுண்டில்ய கோத்ரம் கவுணியன் எனும் பெயராலும் கவுதம கோத்ரம் கோதமன் என்ற பெயராலும் இலக்கியங்களில் காணப்படுகிறதே!

பசுமாடுகளைக் கயிற்றால் பிணைத்து ஓரணியில் கட்டப்பட்ட நிலைக்குக் கோத்ரம் என்று வடமொழியில் கூறுவர். பசுக்களை மேய்த்துக் கொண்டு இங்கே நுழைந்தவர்கள் இன்றளவும் அதையே தங்களுக்கான அடையாளமாக _ இனக் குழுப் பெயர்களாக வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். அதைத் தமிழ் இலக்கியம் பொத்தி வைத்துத் தருகிறது. அவை மட்டும் இனிக்கின்றன, பார்ப்பான் மட்டும் கசக்கிறது என்றால்… ஏன் இந்த இரட்டை நிலை?

வேள்வி செய்யாத பார்ப்பனர்களும் இருந்ததை வேளாப் பார்ப்பான் எனும் சொல் பிரித்துக் காட்டுகிறது. இன்றளவும் அண்ணாவிப் பார்ப்பனர்கள் என்ற பெயரில் வேதமே படிக்கக் கூடாத பார்ப்பனர்களும் இருக்கிறார்களே! கந்துவட்டித் தொழில் மட்டுமே செய்யக்கூடிய, செய்ய வேண்டிய கல்லிடைக் குறிச்சிப் பார்ப்பனர்கள் இருக்கிறார்களே! வேளாப் பார்ப்பான் வாள் அரந்துமிய எனும் அகநானூற்று வரிகள் (பாடல் 94) சங்கறுத்துப் பிழைத்த பார்ப்பனர்களைக் குறிப்பிடுகிறதே! சண்டையிடும் அரசர்க்கிடையே தூது சென்ற பார்ப்பனர்களையும், காதல் வயப்பட்ட தலைவன் தலைவியிடையே தூதுபோன பார்ப்பனர்களையும் தூதொய் பார்ப்பான் என்று அகநானூறு (பாடல் 337) அறிமுகப்படுத்துகிறதே! (படிக்க: பண்பாட்டு அசைவுகள் -_ பேரா.தொ.பரமசிவன்)

வேதத்தைப் பார்ப்பதால், பார்ப்பான் என வந்தது எனச் சில பேராசிரியர்களின் கூற்று. பார்ப்பும் பறழும் பறப்பவற்றில் இளமை என்கிறது தொல்காப்பியம். எனவே பார்ப்பார் எனும் சொல்லுக்கு இளையர் என்பதே பொருள் என்கிறார் பேரா. தொ.பரமசிவன்.

அவரே எழுப்புகிறார், பார்ப்பார் யாருக்கு இளையர்? அவருக்கு மூத்தவர் யார்?

விடையை இலக்கியத்தில் தேட இயலாது. கள ஆய்வுதான் விடைகாண துணை செய்யும் என்கிறார், அவரே! தென் மாவட்டங்களில் வழங்கும் சொல்லடையைச் சுட்டிக் காட்டுகிறார்: பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பார் இல்லாமல் கீழ்ச்சாதி ஆனான் எனும் சொல்லடை ஒரு காலத்தில் பறையர் பெற்றிருந்த சமூக உயர்வுக்கான சான்றாகும் என்கிறார். (அதே நூல் பக்கம் 180) பறை எனும் இசைக்கருவியை இசைத்ததால் பறையர் எனும் பெயரைப் பெற்ற மக்கள் பார்ப்பனர்க்கு மூத்தவராக இருந்த நிலை மாறி, இன்றைக்கு இழி நிலைக்குத் தள்ளப்பட்டது எவ்வாறு?

வரலாறு எங்காவது இதுபற்றிப் பேசுகிறதா? சிறு குறிப்பாவது உள்ளதா? வரலாறு என்பதே, ஆள்வோரின் வரலாறாக, அரசுகளின் வரலாறாக, அரசர்களின் வரலாறாக மட்டும் தானே உள்ளது? சாம்ராஜ்யங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்தான் வரலாறாக உள்ளது என்பதுதான் மேலைநாட்டுப் பேராசிரியர்களின் கருத்து. எல்லாமே வர்க்கப் போராட்டங்களின் வரலாறு எனக் கூறிவிட்டார் கார்ல் மார்க்ஸ்.

அப்படியானால் சாமான்யர்களின் வரலாறு எங்கே தெரியும்? அவர்களின் நினைவுகளில் தங்கி, தேங்கி சடங்குகளாக, கதைகளாக, புராணங்களாக, இதிகாசங்களாகத் தெரிய வருகின்றன. புராண, இதிகாசங்கள் என்பவை யெல்லாமே புனைவுகளாகவும் புளுகுகளாகவும் உள்ளன. தன்னல ஆதிக்கச் சக்திகள் இவற்றை ஆக்ரமித்துத் தங்களின் வக்கிரத்தைத் திணித்துப் புகுத்திப் பரப்பி வெற்றி பெற்றன. அவற்றை வரலாறு என்று மதவாதிகள் கூறிக் கொண்டிருக்கின்றனர் இந்தியாவில்!

இலியது, ஒடிசி போன்ற மேலைநாட்டு இதிகாசங்கள் வரலாறு எனும் அந்தஸ்தைப் பெறவில்லை. அந்நாட்டில் அறிவுள்ளோர் அதிகம். அதனால், நேர்மாறான நிலை இங்கு. ராமன் பெயரால் அரசியலே நடக்கிறது 100 ஆண்டாக. கிருஷ்ணன் ஆண்ட துவாரகா எங்கே என்று கடலுக்குள் போய் ஆய்வு நடத்த குஜராத் அரசு திட்டம் போடுகிறது. சரசுவதி நதி எங்கே என, கோடிக்கணக்கில் கொட்டி வீணாக்கிய வாஜ்பேயி போல! இதிகாசம் என்றால், நடந்த வரலாறு என்று அரும்பத உரை தருகிறது பாபநாசத்துப் பத்தாம் வகுப்புப் பெயில் பார்ப்பனன் சிறீ சிறீ ரவிசங்கர் எனும் பார்ப்பனர்!

மக்கள் சமூகத்தின் கடந்தகால வாழ்வு அனுபவம், முரண்கள், சிந்தனைப் போக்கு, போன்ற பலவற்றைத் தொன்மங்களில்தான் (MYTH) கட்டி வைத்துள்ளது. உலகச் சமுதாயம் முழுமையுமே இம்மாதிரித் தொன்மங்களைக் கொண்டுள்ளது. பிரளயம், உலகம் அழிவு, மீளவும் உயிர்ப்பு ஏற்பட்டமை பற்றிய யூத, கிறித்துவ இனத்தாரின் தொன்மங்கள் போலவே (இந்திய) இந்து இனத்தாரின் தொன்மங்களும் அமைந்துள்ளதை ஒப்பு நோக்கலாம்.

அப்படிப்பட்ட தொன்மங்கள், பார்ப்பனர் (பிரமனின்) படைப்புக் கடவுளின் வாயிலிருந்து வந்ததாகக் கூறும். அத்தோடு நிறுத்தி அந்தச் சமூக உயர்வைக் கூறிப் பெருமைப்படுவதோடு நில்லாமல், பிற சமூகத்தவரைக் கீழ்ப்படியில் நிறுத்திக் கீழானவர்களாக்கும் தீய எண்ணத் தொன்மமாகவும் அமைந்துள்ளது நேர் மாறாக கேரளாவில் உள்ள அடித்தள மக்களின் தொன்மம், பறையர்களை மூத்த பிராமணன் என்று கூறுகிறது.

தமிழ்நாட்டின் தொன்மம் இதுதான்: அண்ணனும் தம்பியுமாக இரு பார்ப்பனர்கள். அண்ணன் கோவில் அர்ச்சகர். கடவுளுக்குப் படையலாகத் தினமும் பொங்கல் செய்வார். பொங்கல் செய்யும்போது அங்கொரு பசுமாடு வந்து நிற்கும். அதன் உடலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் எடுத்து பொங்கலுடன் கலந்து ரத்தப் படையல் நடத்துவார் அர்ச்சகர். பொங்கலைக் கடவுளா தின்கிறது? சும்மா காட்டிவிட்டுத் தன் வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவார். தம்பி, தன் மனைவி ஆகியோருடன் அர்ச்சகரும் தின்பார்.

மாடு வருவதையும் ரத்தம் எடுப்பதையும் தூரத்தில் இருந்து பார்த்தவர்கள், தம்பியிடம் போட்டுக் கொடுத்துவிட்டனர். உன் அண்ணன் மாட்டை அறுத்து மாட்டுக்கறி உண்டுவிட்டு உங்களுக்கு மட்டும் அரிசிப் பொங்கலைத் தருகிறான் என்று வத்தி வைத்தனர். இதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் மூத்தவன் மனைவி. முழுகாமல் இருந்த அவளுக்கு மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. கணவனிடம் கண்டிஷன் போட்டுக் கேட்டாள் மாட்டுக்கறி கொண்டு வரவேண்டும் என்று. மசக்கைக்காரி மனதில் தோன்றும் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பது மரபு. அர்ச்சகர் மாட்டை அறுத்தான். கறி சமைத்து வீட்டுக்குக் கொண்டு வந்தான். அண்ணன் மாட்டை அறுத்துக் கறியாக்கிப் பொங்கலில் கலந்து வீட்டுக்கு எடுத்துப் போவதை மறைந்திருந்து தம்பி பார்த்து விட்டான். பொங்கலைச் சாப்பிட மறுத்துவிட்டான். அறுபட்ட பசுமாடும் செத்துவிட்டது.

செய்தி அறிந்த ஊரார் பஞ்சாயத்துக் கூட்டினார்கள். செத்த மாட்டை அர்ச்சகரே அப்புறப்படுத்த வேண்டும், ஊரைவிட்டுப் போய்விட வேண்டும் என்று தீர்ப்பானது.
அண்ணனாகிய அர்ச்சகப் பார்ப்பான் ஊரைவிட்டுப் போகும்போது, ஒருவர் கேட்டாராம், இனிமேல் கோவிலைப் பார்ப்பது யார் என்று! என் தம்பி பார்ப்பான் என்று கூறிவிட்டுப் போய்விட்டானாம்.

வேற்றூருக்கு வந்த அண்ணனுக்கு ஊர்க்காவல் பணியும் ஊர்க்கூட்டத்திற்கு மக்களுக்குச் சேதி தெரிவிக்கும் பணியும் ஒதுக்கித் தரப்பட்டதாம். தன் பணியை எளிதாக்கும் வகையில் பறை ஒன்று செய்து அதனைப் பயன்படுத்தினானாம். அதனால் அவனைப் பறையன் என்று அழைத்தார்களாம். (படிக்க: THE MYTHS OF ORIGIN OF THE INDIAN UNTOUCHABLES – ராபர்ட் டெலீஜ் எழுதியது)

அதுசரி, பார்ப்பனர் மாட்டிறைச்சி உண்பார்களா? உண்டார்கள் என்பதற்கு வேதங்களும், அய்ந்தாம் வேதமான பாரதமும் நிறைய சான்றுகளை வைத்துள்ளன. போதாக்குறைக்கு இந்துமதம் எங்கே போகிறது என்று கேட்டு அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரி பிட்டுப்பிட்டு வைத்துவிட்டார்.

இதோ வரலாற்றுச் சான்று: பார்ப்பனர்கள் பஞ்ச திராவிடர் என்றும் பஞ்சகவுடர் என்றும் இருபெரும் பிரிவினராம். இவர்களில் பஞ்ச திராவிடர்கள் கறி தின்ன மாட்டார்கள். பஞ்ச கவுடர்கள் மீனும் ஊனும் உண்பவர்கள். ஒரிசா, வங்காளம் போன்ற மாநிலங்களில் இவர்கள்தாம் நிறைந்திருக்கின்றனர்.

பொதுவாகப் பார்ப்பனர்கள் ஏழு முனிவர்களின் சந்ததியினர் எனும் தொன்மம் இருக்கிறது. அத்ரி, பிருகு, குத்சர், வசிஷ்டர், கவுதமர், தாச்யபர், ஆங்கிரசர் என்போர் முனிவர்கள். வேறு ஒரு தொன்மத்தின்படி குத்சர் இல்லாமல் அகஸ்தியருக்கு இடம் உண்டு. இம்முனிவர்களைச் சேர்ந்த 18 கணங்களும் (CLAN) சுமார் 230 கோத்ரங்களும் உண்டு.

பார்ப்பனர்கள் ஒரே ஜாதியினர் அல்ல. அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் எனும் மூன்று பிரிவினர் மட்டுமல்ல. இவர்களில் மொத்தம் 1886 உள் பிரிவுகள் (SECTS) உள்ளன.

புதுவைப் பல்கலைக்கழக, மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் ச.பிலவேந்திரன் தொகுத்து வெளியிட்ட சனங்களும் வரலாறும் எனும் நூலில் பல்வேறு தொன்மங்களைப் படித்தறியலாம்.

பனைமரம் தமிழ்நாட்டின் அரச மரம் (STATE TREE). சிறிதளவு நீர் இருந்தாலும் அல்லது நீரே இல்லாமல் போனாலும் பனை வாழும். வளரும். சிறுநீர் கழித்தாலும் அதைக் கொண்டே வாழும் எனப் பனை மரத்தைச் சிறப்பித்துப் பேசுவர். அதனால் தந்தை பெரியார் தம் கழகத்தை /இயக்கத்தைப் பனை மரத்துக்கு ஒப்பிட்டார். அந்தப் பனை மரத்தைப் பார்ப்பனரோடு தொடர்புபடுத்திய தொன்மம் ஒன்றும் உண்டு. குமரி மாவட்ட நாடார் மத்தியில் வழங்கி வருகிறது.

காட்டில் சுனை ஒன்றை உருவாக்கி வலங்கையர்களைக் காளை வளர்த்து வந்ததாம். அச்சுனை நீரை ஒரு பார்ப்பனனும் அவன் மனைவியும் குடித்தனராம். ஆத்திரம் கொண்ட காளி, அத்தம்பதியினரைத் தலைகீழாக நட்டுவிட்டதாம். அவையே ஆண்பனையாகவும் பெண்பனையாகவும் இருக்கின்றனவாம்.

பனை மரம் ஏறும் தொழிலை இழிவான தொழிலாகக் கருதும் உயர்ஜாதி மனோபாவத்தைப் பழிதீர்க்கும் செயலாக இக்கதை கட்டப்பட்டிருக்கலாம். பதநீர் இறக்கப் பனை மரத்தில் ஏறும் ஆண், பார்ப்பனப் பெண் ஒருத்தியைக் கட்டிப் பிடித்துத் தழுவி ஏறுகின்றனர் எனும் நிலையையும் இக்கதையில் பொதிந்து வைத்துள்ளது இத்தொன்மம்.

உயர்வு கற்பித்துக் கொண்டு மற்ற சமூகத்தினரை இழிவு செய்யும்போது, மிதிபடும் புழுகூட கொட்டும் என்பதைப்போல பாதிக்கப்பட்ட சமுதாயத்தினர் இத்தகைய பழிதீர்க்கும் தொன்மங்களை உருவாக்கி விட்டனரோ!

இந்தத் தொன்மங்களும் புராண, இதிகாச அந்தஸ்து பெற்றுவிட்டால், சம்பூகன் கொலை, தாடகை வதம், சூர்ப்பநகை மானபங்கம் போன்றவற்றிற்குப் பழிதீர்க்கும் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டு ராமாயணம் போலவே உலகெங்கும் பரப்பப்படலாம் அல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *