காட்டுமிராண்டி மொழி என்றவர்தான் கணினி மொழியாக்கினார்!

2024 கட்டுரைகள் மற்றவர்கள் ஜனவரி 16-31, 2024

– வி.சி.வில்வம்

“தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார்”, எனப் பல ஆண்டுகளாய் குதிக்கிறார்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள். சமஸ்கிருதமே உயர்ந்தது என்கிறது ஒரு கூட்டம். அதற்கு இவர்கள் பதில் சொல்வதில்லை. தமிழை நீஷ பாஷை (இழிந்த மொழி) என்கிறது அக்கிரஹாரம். அதற்கும் இவர்கள் பதில் சொல்வதில்லை; உணர்ச்சியற்றுக் கிடக்கிறார்கள்!
ஆனால், வளர்ச்சிப் பார்வையில், ஆய்வு நோக்கில் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார்! உடனே குதிக்கிறார்கள். பெரியார் எப்படிச் சொல்லலாம் என 50 ஆண்டுகளாய்க் கதறுகிறார்கள். தாவிய நேரத்தில் தமிழுக்கு ஏதாவது செய்திருக்கலாம்!

பகுத்தறிவுத் தமிழ்!

நாம் பேசுவது பகுத்தறிவுத் தமிழ்! இவர்கள் பேசுவது பக்தித் தமிழ்! பார்ப்பனர்களும் தமிழர்களே என்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
பெரியாரிடம் மொழி உணர்ச்சி இருக்கிறதா? பண்பாட்டுக் கூறுகள் இருக்கிறதா? என்கிறார்கள். இந்தக் கேள்விகள் சிதைந்து போகாமல் பாதுகாக்கிறார்கள். திராவிடர் இயக்கம் நம் எல்லோருக்கும் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தது. அதன் பிறகும், இவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் இல்லாமல் இருப்பது வருத்தமான ஒன்று! வன்மம் நீங்க வாசிப்பு முக்கியம் என்பதே வரலாறு!

இந்தியா என்பது வெங்காயம்!

பல மாநிலங்கள், பல மொழிகளின் கூட்டுதான் இந்தியா! ஒவ்வொரு மாநிலமாகப் பிரிந்து போனால், உரிந்து உரிந்து போனால் இந்தியா என்பதே வெங்காயம் தான்! உரிக்க, உரிக்க என்ன மிஞ்சும்?

அனைத்து மாநில மக்களையும் “இந்தியா” என்கிற பெயரில் இணைத்து வைத்திருக்கிறார்கள். ஏதோ… ஒன்றாக இருக்கிறார்களே தவிர, யாருக்கும் தேசப்பற்று முட்டவில்லை. கல்வி, வேலை, பொருளாதாரம் என வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் “பாரத் மாதா கீ ஜெய்” சொல்ல எங்கே நேரமிருக்கிறது?

அந்த ரகசியம்!

இந்நிலையில் இங்கு அண்டிப் பிழைக்க வந்த பார்ப்பனர்கள், இந்தியாவில் நமக்கென்று ஒரு மாநிலம் இல்லையே? நமக்கென்று ஒரு மொழி இல்லையே? எனக் கவலைப்பட்டார்கள். இந்த ரகசியம் மக்களுக்குத் தெரிந்தால், நம் பிழைப்பு நாறிடுமே என அஞ்சினார்கள்.

எதையும் குழப்பி விடுவது, திரித்து விடுவது, வரலாற்றை மாற்றுவது என்பதில் ஆரியம் தானே முதலிடம்! எனவே தாங்கள் நாடோடிகள் என்பதை மறைக்க இந்தியா, இந்தியா என்றும், தேசம், தேசம் என்றும், அதில் பக்தியைக் கலந்து, கிரிக்கெட்டைப் புகுத்தி, பாகிஸ்தானை வம்புக்கிழுத்து, கார்கிலில் போர் தொடுத்து, எல்லையில் இராணுவ வீரன் நிற்கிறான் எனத் தூண்டி, தேசபக்தியை உண்டைக் கட்டியாய் ஊட்டி‌விட்டார்கள்.

பார்ப்பனர்களின் இந்தத் தலைமுறைக்கு, நாம் பிழைக்க வந்த இனம் என்பதே தெரியுமா என்று தெரியவில்லை. அந்தளவுக்கு வரலாற்றைக் கருவறைக்குள் புதைத்துவிட்டார்கள்!
மாநிலமும், மொழிகளும்!

ஒவ்வொரு மாநில மக்களும், “தங்கள் மாநிலம்” எனப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதற்காகவே இந்தியா என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல “தங்கள் தாய்மொழி” என உரிமைக் கோரக்கூடாது என்பதற்காகவே “ஹிந்தி” திணிக்கப்படுகிறது. ஹிந்தி என்பது ஒரு மொழியே அல்ல; அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் அது! இன்னும் சொன்னால் ஹிந்தி என்னும் பெயரில் இறந்து போன “சமஸ்கிருதம்” தான் அதில் இருக்கிறது!

ஆக, இந்நிலையில் இருந்து பார்க்கும் போது, வட மாநிலங்களை ஆரியம் அர்ச்சனை செய்து முடித்துவிட்டது. தென்னிந்தியாவில் வாழ்வா, சாவா எனப் போராடுகிறது; பல நேரங்களில் அவமானப்பட்டு நிற்கிறது! குறிப்பாகத் தமிழ்நாட்டில் கூனிக் குறுகி நிற்கிறது ஆரியம்!

எங்கள் தலைவர்கள்!

அவர்களின் இந்தித் திணிப்பு நோக்கத்தை அறிந்த திராவிட இயக்கங்கள் அதை உள்ளே நுழையவிடவில்லை. சிம்ம சொப்பனமாக இருந்தார்கள் நம் தலைவர்கள். தொண்டர்கள் பலரோ உணர்ச்சிவயப்படாமல், நிதானித்து, பொறுமையாக, கொள்கை முழக்கமிட்டு தீயில் கருகி வெந்தார்கள். “ஒரு மொழியைத் தடுக்க உயிரையும் கொடுப்பார்களா?”, என உலகமே வியந்து பார்த்தது. இது மொழிப் பிரச்சினை அல்ல; எங்கள் வாழ்வாதாரம் என்றனர் தமிழினத் தலைவர்கள்!

செய்தவை எல்லாம் திராவிடம் பேசிய தமிழர் தலைவர்கள்! அக்கிரகாரத்தில் அமர்ந்து கொண்டு ‘பண்டைய உலகம் பார், பாராண்ட மண் பார்’ என வீர வசனம் பேசுகிறார்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.

பார்ப்பன வஞ்சகம்!

1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கினாலும், 1926 ஆம் ஆண்டிலேயே ‘குடிஅரசி’ல், “ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, வடமொழி உயர்வுக்கு வகை தேடவே பார்ப்பனர்கள் இந்தியைத் திணிக்கிறார்கள்”, என்று எழுதினார் பெரியார்!

இவர்களின் இந்தி ஆண்டிருந்தால் தமிழும் தழைத்திருக்காது; தமிழ்நாடும் பிழைத்திருக்காது! ஏன் இந்தப் போலித் தமிழ்த் தேசியவாதிகளே உருவாகி‌ இருக்க மாட்டார்கள். இன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தங்கள் தாய் மொழியை அழித்துவிட்டு, இந்தியைச் சுமந்து கொண்டிருக்கின்றன!

நன்றாக யோசித்துப் பாருங்கள்! தங்களுக்கு ஒரு மொழி இல்லையே என்கிற வஞ்சகத்தில், இந்தியாவின் பல மொழிகளையும் அழித்தார்கள் பார்ப்பனர்கள். ஆனால் தமிழ்நாட்டில் இன்னமும் தமிழ் உயிர் வாழ்கிறது, ஏன்… உலகத்தையே சுற்றி வருகிறது! இதற்கு யார் காரணம்? திராவிட இயக்கத் தலைவர்கள் தானே காரணம்! குறிப்பாகத் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றாரே பெரியார் அவர்தானே காரணம்! இதைச் சுயமாகச் சிந்தித்து அறிய முடியாவிட்டாலும், சிந்தித்தவர்கள் எழுதியதையாவது படிக்கலாமே?

அறிவு மொழி!

எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்து, பக்தித் தமிழைப் பகுத்தறிவுத் தமிழாக்கி, அதையே அறிவுப்பூர்வமாகவும், அறிவியல்பூர்வமாகவும் உருவாக்கி, இன்றைக்குக் கணினித் தமிழாக மாறியதற்கு ஒரே காரணம் திராவிட இயக்கமன்றி வேறு யார்?
இதுமட்டுமா நடந்தது? சிந்து சமவெளி, ஹரப்பா பகுதிகளில் வாழ்ந்த திராவிடர்களை, அவர்களின் வரலாற்று அடையாளத்தைத் தொடர் பிரச்சாரங்களின் மூலம் தமிழர் தம் நெஞ்சங்களில் நிலை நிறுத்தியது திராவிடர் இயக்கம் அல்லவா! “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி” எனக் கையை உயர்த்தி, நரம்பு புடைக்கக் கத்தினால் மட்டும் போதுமா?

தமிழ்ச் சொல் ஆட்சி

அக்கிராசனர், பிரசங்கம், நமஸ்காரம் என்று பேசித் திரிந்ததை, தலைவர் என்றும், சொற்பொழிவு என்றும், வணக்கம் என்றும் மாற்றியது திராவிடர் இயக்கம் அல்லவா! நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், அரங்கண்ணல் போன்ற தமிழ்ப் பெயர்கள் எப்படி வந்தன? பெரியார் ஏற்படுத்திய உணர்ச்சி அல்லவா!
தமிழர் வீட்டுத் திருமணங்களைத் தமிழர்கள் ஏன் நடத்துவதில்லை என்றும், தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்றும் கேட்டு, பார்ப்பனர்களையும், அவர்கள் மொழியான சமஸ்கிருதத்தையும் ஓட ஓட விரட்டியவர் பெரியார் அல்லவா! இவை முழுமையாக மாறாவிட்டாலும், இந்தியாவிற்கே முன்மாதிரி தமிழ்நாடு அல்லவா!
எந்த வகையிலும் தமிழ் வளர்ச்சிக்கு நீங்கள் அள்ளிப் போடவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்; கிள்ளிப் போட்ட ஒன்றிரண்டு இருந்தாலும் சொல்லுங்கள்!

பண்பாட்டு மாற்றம்!

மாயவரம், திருமறைக்காடு, திருமுதுகுன்றம், புளியந்தோப்பு, சிற்றம்பலம், குடமுக்கு என்று அழகழகாய் இருந்த ஊர் பெயர்களை எல்லாம் மாற்றினார்களே? இதுகுறித்து எந்தப் போலித் தமிழ்த் தேசியவாதிகள் கவலைப்பட்டார்கள்? அல்லது நீங்கள் தூக்கிப் பிடிக்கும் எந்த மன்னர்கள்தான் கவலைப்பட்டார்கள்? அருண்மொழி வர்மன் என்கிற அழகிய தமிழ்ப் பெயரை, இராஜராஜ சோழன் என சமஸ்கிருதத்தில் மாற்றியவரைத் தானே நீங்கள் ஆகா, ஓகோ எனப் புகழ்கிறீர்கள்!

வட இந்தியாவில் இருந்து பார்ப்பனர்களை அழைத்து வந்து சமஸ்கிருதப் பள்ளியைத் தொடங்கி, வேதம் கற்க வழிவகை செய்தவர்கள் தமிழ் மன்னர்கள். தமிழர்கள் படித்துக் கொண்டிருந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைப் பார்ப்பன ராஜாஜி மூடிய போது, காமராஜரை ஆட்சியில் அமர்த்தி, மூடிய பள்ளிகளைத் திறக்க வைத்தவர் பெரியார் தானே! அதன் பிறகு தானே கல்வியில் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது தமிழ்நாடு!

தமிழர் திருநாள்!

அதேபோல தமிழர்களுக்குச் சொல்லிக் கொள்ள ஒரு விழா இருந்ததா? மதத்தின் பெயரால் ஆயிரமாயிரம் குப்பைகள் இருந்தன. அவை அறிவையும், பணத்தையும் ஒரு சேர கரைத்தன. மனிதனின் பகுத்தறிவுக்கு ஏற்ற ஒரே விழா பொங்கல் என்றும், அதுவே தமிழர் திருநாள் என்றும், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும் இழந்த வரலாற்றை மீட்டவர் தந்தை பெரியார் அல்லவா!

ஆக, தமிழர் தம் நாகரிகம், கலாச்சாரம், மொழி அனைத்திலும் பார்ப்பனப் பண்பாடு ஊடுருவி இருந்தது. அதை உடைத்து எறிந்தவர் பெரியார்! மீண்டும் அந்த ஆர்.எஸ்.எஸ் பண்பாட்டைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அதற்கு இந்தப் போலித் தமிழ்த் தேசியவாதிகளும் உதவுகிறார்கள்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராகச் செயல்படுவோரை அப்புறப்படுத்துவோம்! என்றும் பெரியார் மண் என்பதை நிரூபிப்போம்!

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு,
தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்!