நூல் மதிப்புரை – ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்

2023 செப்டம்பர் 1-15,2023 நூல் மதிப்புரை

– பொ. நாகராஜன்

நூல் : ‘ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு 
ஓர் அச்சுறுத்தல்’ 
ஆசிரியர் : ஏ.ஜி. நூரானி  
தமிழில் : ஆர். விஜயசங்கர், – பாரதி புத்தகாலயம், 
முதல் பதிப்பு – 2022  
பக்கங்கள் : 820 – விலை: ரூ 800/-

கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவின் மீது சூழ்ந்திருக்கும் இருள் இந்துத்துவம்! இந்துத்துவத்தின் மூலமாக இந்து ராஷ்ட்ரம் அமைக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு துவக்கப்பட்டது தான் ஆர்.எஸ்.எஸ்!

“இந்து ராஜ்யம் என்பது உண்மையாக அமைந்தால் அது இந்த நாட்டின் பேரழிவாக முடியும் என்பதில் சந்தேகமில்லை!’’ ..என எச்சரிக்கை செய்தவர் டாக்டர் அம்பேத்கர்! அந்த எச்சரிக்கையை உணர்ந்து அதை விளக்குவதற்காக எழுதப்பட்ட ஒரு பெரிய ஆவணப் படைப்பே இந்த நூல் !

இந்த நூலின் ஆசிரியர் ஏ.ஜி. நூரானி -1930இல் பிறந்தவர். அரசியல் சட்ட நிபுணர், வழக்கறிஞர், புகழ் பெற்ற பத்திரிகையாளர். ஆங்கில தினசரிகளிலும் ஃபிரண்ட் லைன் போன்ற இதழ்களிலும் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதிப் பெயர் பெற்றவர். பல அரசியல் முக்கியத்துவம் பெற்ற நூல்களை எழுதியவர். காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாவுக்காகவும், கலைஞர் கருணாநிதிக்காகவும் நீதிமன்றங்களில் வாதாடியவர்!

இந்த நூலின் தேவையையும், முக்கியத்துவத்-தையும் தனது முன்னுரையில் விரிவாக எழுதும் போது, “ஆர்.எஸ்.எஸ். மத நல்லிணக்கத்திற்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை! அது ஜனநாயக ஆட்சி முறைக்கு அச்சுறுத்தல்! அதைவிட மோசமாக இந்த தேசம் கட்டமைக்க நினைத்த இந்தியாவிற்கே அது ஓர் அபாயம்!’’ …என அபாய மணியை அடித்து, இந்தியர்களை உலுக்கி எழுப்புகின்ற பாங்கில், ஒரு பொறுப்பான இந்தியராக நூலை எழுதியுள்ளார் – ஏ.ஜி. நூரானி!

நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் ஆர். விஜயசங்கர். இடதுசாரி சிந்தனையாளர். முற்போக்கு எழுத்தாளர். ஃபிரண்ட் லைன் ஆங்கில இதழின் ஆசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றியவர். பல நூல்களைப் படைத்துள்ளார். ஏராளமான மொழியாக்கம் செய்துள்ளார். அவரை இந்த நூல் மிகப் பெரிய வாசகர் வட்டத்திற்கு கொண்டு சென்று விட்டது!

விஜயசங்கர் தனது முன்னுரையில், “அரசியல் அமைப்பு அல்ல என்று கூறிக்கொண்டே(ஆர்.எஸ்.எஸ்) ஓர் அரசியல் கட்சியை (பா.ஜ.க) தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மத்தியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, தன்னுடைய இந்து ராஷ்ட்ரா கனவை நோக்கி ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு விரைவாக நகர்கிறது என்ற வரலாற்றை தமிழ் வாசகர்கள் அறியச் செய்வது தான், இந்த மொழிபெயர்ப்பின் முக்கிய நோக்கம்!’’ …எனத் தெளிவுபடுத்தி, அதற்கான கடமையைச் சரியாக முடித்துள்ளார்! பாராட்டிற்குரியவர்!

இந்த நூலை இந்து மத அரசியல் அமைப்புகளின் என்சைக்ளோபீடியா என்று அழைத்தால் மிகையாகாது! ஆர்.எஸ்.எஸ். மட்டுமின்றி மற்ற அமைப்புகள் பற்றியும் நிறைய தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தாய் அமைப்பு முதல் பேரன் அமைப்பு வரை விவரங்கள் கிடைக்கின்றன!

ஆர்.எஸ்.எஸ்ஸின் தாய் நிறுவனம் இந்து மகா சபையை (HMS) 1907இல் லாலா லஜபதி ராய் பஞ்சாபில் தோற்றுவித்தார். ஹெட்கேவர் தலைமையில் 1925இல் நாக்பூரில் துவக்கப்பட்டது ஆர்.எஸ்.எஸ். (RSS). ஷியாமா பிரசாத் முகர்ஜி 1951இல் ஜனசங்கை (JS) தோற்றுவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். முயற்சியால் 1964இல் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) துவக்கப்பட்டது. வாஜ்பேயும் அத்வானியும் 1980இல் பாரதிய ஜனதா கட்சியை (BJP) துவக்கினார்கள். விஸ்வ ஹிந்து பரிஷத் முயற்சியால் 1984இல் பஜ்ரங் தள் (BD) துவக்கப்பட்டது!

ஆர்.எஸ்.எஸ். – நாக்பூரில் 1925இல் விஜயதசமி அன்று ஹெட்கேவரால் துவக்கப்பட்டது.

அதில் பி.எஸ். மூஞ்சே, வி.டி. சாவர்க்கரின் மூத்த சகோதரர் பாபாராவ் சாவர்க்கர், எல்.வி. பரஞ்சிபே, பி.டி.தாக்கூர் ஆகியோரும் இருந்தனர். இவர்கள் அனைவருமே இந்து மகா சபையின் ஊழியர்கள்!

ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கியக் கொள்கைகள்:

இன, கலாச்சார மேன்மை கோட்பாடு; ராணுவத்திற்குக் கொடுக்கப்படும் அழுத்தம்; மத இலட்சிய வாதம் நிறைந்த அதீத தேசிய வாதம்; தேசிய ஒற்றுமை, தேசியம் என்ற கருத்தாக்கதிலிருந்து மத அல்லது இனச் சிறுபான்மையினரை ஒதுக்கி வைத்தல்; சமஸ்கிருதத்தை எல்லா மொழிகளுக்கும் மேலாக உயர்ந்த இடத்தில் வைத்தல்; இறுதியாக இந்து ராஷ்ட்ராவை நிறுவுதல் !

ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டு முக்கிய வழிகாட்டி நூல்கள் ஒன்று 1923இல் வி.டி. சாவர்க்கர் எழுதிய இந்துத்துவா. இரண்டு 1966இல் கோல்வால்கர் எழுதிய – சிந்தனைக் கொத்து.

இன்றும் பெரிதாக விவாதத்திற்குள்ளாகும் சொல் -இந்துத்துவா அல்லது இந்துத்துவம். ஆர்.எஸ்.எஸ்ஸின் பைபிளாகக் கருதப்படும் இந்துத்துவா என்ற நூலை 1923இல் சாவர்க்கர் வெளியிட்டார். இந்துத்துவா என்றால் என்ன ?

“இந்துத்துவா என்பது ஓர் அரசியல் கோட்பாடு! அது மதக் கோட்பாடு அல்ல! இந்து மக்களைத் தனியாக அடையாளப்படுத்தும் வகையில் அவர்களின் கலாச்சார, வரலாற்று, அரசியல் அம்சங்களை மொத்தமாக வெளிப்படுத்தும் செயல்!”… என சாவர்க்கரே விளக்கம் தந்துள்ளார்!

கோல்வால்கர் எழுதிய சிந்தனைக் கொத்து நூலில் சிறுபான்மையினருக்குத் தரப்பட்ட அச்சுறுத்தலான அறிவுரை :

அந்நிய சக்திகளுக்கு ( மதத்தினருக்கு ) இரண்டே வழிகள் தான் உள்ளன. அவர்கள் தேசிய இனத்தில் (இந்துக்களுடன்) அய்க்கியமாகி அதன் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தேசிய இனம் அனுமதிக்கும் வரை அவர்கள் அந்த இனத்தின் கருணையில் வாழ்ந்து, அது விரும்பும் போது வெளியேற வேண்டும் ! “ …
ஓகோ.. புதிய குடியுரிமைச் சட்டம் இந்தக் கொள்கையை நிறைவேற்றத் தானோ?

ஆர்.எஸ்.எஸ். – மற்றும் இந்துத்துவா தீவிர மதவாத அமைப்புகளின் திட்டத்தையும் செயல்பாடுகளையும் நன்கு உணர்ந்த அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இவ்வாறு கூறினார், “இந்தியாவின் அபாயம் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல! வலதுசாரி இந்து மதவாதமே!’’… இந்தக் கொள்கையைப் பகிரங்கமாகத் தெரிவித்த காரணத்தினால் தான் இன்றும் நேருவை சங்கிகள் சாடுகின்றார்கள்!

நூலில் கிடைத்த கடலளவுத் தகவல்களிலிருந்து கற்றுக் கொண்டதும் பெற்றுக் கொண்டதுமான கையளவுத் தகவல்கள்:

ஆர்.எஸ்.எஸ்ஸைத் தோற்றுவித்த ஹெட்கேவரின் இந்து மத மீட்டெடுப்பு வாதம் | சாவர்க்கரின் இந்துத்துவா கொள்கை விளக்கம் | பி.எஸ். மூஞ்சே இத்தாலிக்குச் சென்று முசோலினியைச் சந்தித்த பின் ஆர்.எஸ்.எஸ். ராணுவப் பயிற்சிப் பள்ளியை உருவாக்கியது | சாவர்க்கர் காந்தியை ஒரு போலியான ஆன்மிக வாதத்தால் நாட்டைக் குழப்புபவர் என்றது |

அந்தமான் சிறையிலிருந்து பிரிட்டிஷாருக்குச் சாவர்க்கர் எழுதிய மன்னிப்பு கடிதங்கள் |

கோல்வால்கரின் சிந்தனைக் கொத்து நூல் | நேரு ஆர்.எஸ்.எஸ்ஸை வெறுக்கக் காரணங்கள் | நாதுராம் கோட்சேயால் காந்தி சுடப்பட்டு மரணம் | முதன்முறையாக ஆர்.எஸ்.எஸ்க்கு தடை |கோட்சே, சாவர்க்கர் கூட்டாளிகள் காந்தி கொலை சதி வழக்கில் கைது | கோட்சேயை விசாரிக்கும் போது நீதிபதி ஆத்மசரண் அழுத வேடிக்கை | சாவர்க்கர் விடுதலையின் பின்னணி | கோல்வால்கர் நேருவுக்கு எழுதிய மடல்கள் | நேரு படேலுக்கு எழுதிய மடல்கள் | இந்தியாவில் நடந்த மதக் கலவரங்கள் |அகிம்சையைக் காப்பாற்ற வன்முறையைப் பயன்படுத்துவது அவசியம் என வியாக்கியானம் செய்த கோல்வால்கர் | ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தில் புகுந்த ஆர்.எஸ்.எஸ் | இந்திரா கொண்டு வந்த அவசரநிலை பிரகடனம் | இரண்டாவது முறையாக ஆர்.எஸ்.எஸ்க்கு தடை |

தடைக்குப் பின் இந்திராவை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ் | மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்து சிறையிலிருந்து வெளியே வந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் | புதிதாகத் தோன்றிய ஜனதா கட்சியில் இணைந்த ஜனசங் | ஆர்.எஸ்.எஸ் ஒரு கலாச்சார இயக்கம் என சர்ட்டிபிகேட் அளித்த வாஜ்பேயி | ஜனதா கட்சியைச் சிதைத்த ஆர்.எஸ்.எஸ் | பாரதிய ஜனதா கட்சி பிறப்பு | பாபர் மசூதி பிரச்சினையைக் கையிலெடுத்தஆர்.எஸ்.எஸ். | அத்வானி ரதயாத்திரை செயல்பாடுகள் | ராம் ஜென்ம பூமி விவகாரம் வெடித்துக் கிளம்பியது | பாபர் மசூதியை இந்துத்துவா சக்திகள் இடிப்பு |

மூன்றாவது முறையாக ஆர்.எஸ்.எஸ்க்கு தடை | ஆர்.எஸ்.எஸ் பெரிய அளவில் வளர ஆரம்பித்த விவரங்கள் | குஜராத் கலவரம் | கலவரத்துக்குப் பின் குஜராத்தின் மோடி நிருவாகம் ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுப்பாட்டுக்குள் | பிரதம வேட்பாளராக அத்வானியை ஏற்காத ஆர்.எஸ்.எஸ் |
இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக

மோடியைத் தேர்வு செய்த ஆர்.எஸ்.எஸ் | ஆர்.எஸ்.எஸ். -பாபா ராம்தேவ் , அன்னா ஹசாரே கூட்டணி | நாட்டில் கொலை செய்யப்பட்ட இடதுசாரி
சிந்தனையாளர்கள் | ஆர்.எஸ்.எஸ்ஸை தொடர்ந்து குஷிப்படுத்தும் மோடியின் செயல் திட்டங்கள் |

2015இல் நாடெங்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் 51,335 கிளைகள் தினந்தோறும் பயிற்சி நடத்தும் நிலையானது | 38 நாடுகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளைகள் உள்ளன | மோடியின் ஆட்சியில் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம் | 2025இல் நடக்கவிருக்கும் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவுக்காக இந்தியாவைத் தயார் செய்கிறார் மோடி | என பற்பல தகவல்கள் !

நூலில் ஏ.ஜி. நூரானி எழுத மறந்த மிக முக்கியமான தகவல் ஒன்றை இங்கு நினைவூட்டுகிறேன்:
ஆர்.எஸ்.எஸ்ஸைத் தோற்றுவித்த ஹெட்கேவர், ஆர்.எஸ்.எஸ்ஸின் மூளையாக இருந்த கோல்வால்கர், காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே மற்றும் காந்தி கொலைச் சதியின் திரை மறைவு உந்து சக்தியான சாவர்க்கர்.

இந்த நால்வருமே மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்பவன் பிராமணர்கள் !
பிராமணர்கள் சாத்வீக குணம் கொண்ட நல்லவர்கள் என்பது நமது பொதுப் புத்தியில் ஆயிரம் ஆண்டுகளாக ஏற்றப்பட்டுள்ளது என்பதையும் இங்கே நினைவு கூர்கிறேன் !

ஆர்.எஸ்.எஸ் தோற்றம் பற்றியும், இந்துத்துவா, கிளை அமைப்புகள் பற்றியும், செயல்பாடுகள், அதன் தலைவர்கள் பற்றியும், தீவிர வளர்ச்சி, அதனால் ஏற்படும் அச்சுறுத்தல் பற்றியும் மிகவும் சிறந்த முறையில், அறிவார்ந்த முறையில், ஆதாரங்களைக் கொண்டு ஒரு தேர்ந்த வரலாற்று ஆசிரியரைப் போல எழுதப்பட்ட, நூலாசிரியர் ஏ.ஜி. நூரானியின் இந்த படைப்பு – ஒரு சிறந்த மேற்கோள் புத்தகம் (Reference book)!
இந்த நூலுக்காக ஏ.ஜி. நூரானிக்கு முனைவர் பட்டம் வழங்க வேண்டும் !

நூலை தமிழில் மொழியாக்கம் செய்த ஆர். விஜயசங்கர் மிகவும் எளிமையான மொழியில் எல்லோரும் படிக்கும் வகையில் தனது நடையை அமைத்துள்ளார்! அவருக்கு நமது பாராட்டுகள்! அவரது பணி மேலும் தொடர வாழ்த்துகள் !

நூலின் பெயரோ – ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்!

நூலின் பொருளோ – இந்துத்துவாவிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க அறிவுறுத்தல்! ♦