வரலாறு படைத்தவர் காமராசர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

2023 கவிதைகள் ஜூலை 1-15, 2023

படிக்காத மேதையெனக் காம ராசர்
பாராட்டப் படுகின்றார்! என்றும் வாழ்வில்
நடிக்காமல் எளிமைக்கோர் எடுத்துக் காட்டாய்
நலத்திட்டம் பற்பலவும் நாளும் சேர்த்தார்!
துடிப்புடனே விடுதலைப்போ ராட்டம் தன்னில்
துணிவாக ஈடுபட்டார்! பள்ளி தன்னில்
படிக்கின்ற பிள்ளைகட்குப் பகல்நே ரத்தில்
பாங்குறவே சத்துணவு வழங்கச் செய்தார்!

சட்டமன்றம் நாடாளு மன்றம் தன்னில்
சால்புறவே உறுப்பினராய்ப் பெருமை சேர்த்தார்!
ஒட்பமுறப் பொதுத்தொண்டில் அறுப தாண்டாய்
உழைப்பாலே வரலாறு படைத்தார்; அந்நாள்
பெட்புறவே தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார்!
பேராயக் கட்சிக்குத் தலைமை ஏற்றார்!
நட்புணர்வைப் பெரியார்பால் கொண்ட தாலே
நல்பச்சைத் தமிழரென வாழ்த்துப் பெற்றார்!

பரம்பிக்குளம் ஆழியாறு மணிமுத் தாறு
பாலைவனப் பகுதியெலாம் சோலை யாகச்
சிறப்புடனே சாத்தனூர் கீழ்ப வானி
சீர்மிகுந்த அமராவதி வைகை சாத்தூர்
இருப்பிடத்தில் அணைகளினைக் கட்டு வித்தார்!
இரும்பாலை சேலத்தில் கொண்டு வந்தார்!
திருச்சியிலே தொழிற்சாலை பலவும் கண்டார்
தீரமுடன் நெய்வேலிச் சுரங்கம் தந்தார்!

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில்
வீறுடனே களம்கண்டார் வைக்கம் போரில்
கள்ளுக்கடை மறியலிலும் பங்கு பெற்றார்!
காழ்ப்புணர்வால் இராசாசி மூடிச் சென்ற
பள்ளிகள்ஆ றாயிரத்தைத் திறந்தார்! ஏழை
பங்காளர் என்றிவரும் அழைக்கப்
பெற்றார்!
உள்ளத்தால் உயர்ந்திட்ட தலைவர் மக்கள்
உள்ளத்தில் என்றென்றும் வாழ்வார் அன்றோ ?