கல்பாத்தியும் தெருவில் நடக்க தடையும்

2023 பெரியார் மே 1-15,2023 வரலாற்றுச் சுவடுகள்

– ‘குடிஅரசு’ ஏட்டின் பதிவிலிருந்து

மலையாளம் ஜில்லாவைச் சேர்ந்த பாலக்காடு முனிசிபல் எல்லைக்குள் கல்பாத்தி என்கிற பாகம் பிராமணர்கள் முக்கியமாய் வசிக்கும் பாகம். அது பல தெருக்களை உடையது. அத்தெருக்கள் எல்லாம் முனிசிபாலிட்டியாரைச் சேர்ந்தது. அதைப் பழுது பார்த்தல், பராமரித்தல் எல்லாம் முனிசிபல் செலவிலேயே நடந்து வருகிறது. அப்படி இருந்தும் அங்கிருக்கும் பிராமணர்கள் அத்தெருவின் வழியாய்‘பஞ்சமர்கள்’ என்று சொல்லுவோர்களையும் ‘தீயர்’ என்று சொல்லுவோர்களையும் நடப்பதற்கு விடுவதில்லை.

அத்தெருக்களின் முகப்புகளில் உள்ள பல வியாபாரக் கடைகளிலும் பிராமணர்கள் வந்து சாமான்கள் வாங்கினால் அதைத் தங்கள் வீட்டுக்குத் தூக்கிச் செல்ல மகமதியக் கூலிகளையாவது, கிறிஸ்துவக் கூலிகளையாவது அமர்த்தி எடுத்துக்கொண்டு போவதே தவிர, மேற்படி இந்துக் கூலிகளை எடுக்க விடுவதில்லை.இதற்காகவே அக்கடைகளுக்குப் பக்கத்தில் மகமதிய, கிறிஸ்துவக் கூலிகள் அதிகமாய் நின்று கொண்டிருப்பார்கள்.

அல்லாமலும், அந்த வீதிகளில் உத்தியோகஸ்தர்களும் குடி இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கும் ஆபீஸ் சம்பந்தமான காகிதம் போக்குவரத்து முதலியவைகளுக்கும் மகமதிய, கிறிஸ்துவ, பிராமண, நாயர் ஆகிய ஜாதியிலேயே குமாஸ்தா, பியூன் முதலியவர்களை நியமித்துக் கொள்ளுவதே அல்லாமல் தீயர், ஈழவர் என்கிற வகுப்பார்களை நியமிப்பதில்லை. தவிரவும் சென்னையிலிருந்து கள்ளிக்கோட்டைக்குப் போய்க் கொண்டிருக்கும் நேர் ரஸ்தாவில்தான் பாலக்காடு டவுன் பெரிய கடைவீதி இருக்கிறது. அக்கடைவீதிதான் பெரிய மண்டிக்கடை, மளிகைக் கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, பலகாரக்கடை, வெத்திலை பாக்குக்கடை, புகையிலை மண்டி முதலிய வியாபாரங்கள் நடக்கும் வியாபார ஸ்தலமாய் இருக்கிறது. இதுவும் முனிசிபல் பொது ரஸ்தாவாகும். இதிலும் சேரி மக்கள் முதலிய சில தாழ்ந்த ஜாதியார் என்போர்கள் நடக்கக்கூடாது. இந்தக் கடை வீதிகளிலும் மேற்படி தாழ்ந்த ஜாதியார் கூலிவேலை செய்யவுங் கூடாது.

தங்களுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கவும் கூடாது. வேறு யாரிடமாவது, ஒரு மகமதியர் மூல
மாகவோ, கிறிஸ்துவர் மூலமாகவோ ‘உயர்ந்த ஜாதி’ இந்து மூலமாகவோதான் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால், இந்தக் கடைவீதியில் தான் சர்க்கார் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது.

திருட்டு, கொலை, கொள்ளை, போர்ஜரி, விபசாரம் முதலிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியாகவோ, தண்டித்த கைதியாகவோ இருந்தால் அந்த வீதி வழியாக போலீஸ் ஸ்டேஷனுக்குப் போலீஸ்காரர்கள் கைவிலங்கிட்டோ சங்கிலியில் பிணைத்துக் கட்டியோ கூட்டிக்கொண்டு போவதை அடிக்கடி பார்க்கலாம்.

யோக்கியமானவன்தான் அவ்வழியில் நடக்கக் கூடாது. இவ்விஷயங்களைப் பற்றி சுமார் 7, 8 வருஷங்களுக்கு முன் ஒரு தடவை சில கனவான்கள் யோசித்து கல்பாத்தி வழியாக சில தாழ்ந்த வகுப்பார் என்கிறவர்களை அழைத்துச் செல்ல முயற்சித்தார்கள். அதுசமயம் கல்பாத்தி பிராமணர்கள் “பொது கடை வீதிகளில் பிராமணரல்லாதவர்களான மகமதியர், கிறிஸ்துவர்கள், ஈழவர்கள் உள்பட அநேகம் பேர் இருக்கிறார்கள். அந்த வழியிலேயே தாழ்ந்த ஜாதியார் நடக்கக்கூடாது என்று அவர்கள் சொல்லும் போது, நாங்கள் மாத்திரம் எப்படி எங்கள் தெருவில் நடக்கவிடுவோம்’’என்றார்கள். அதன் பிறகு உடனே சிலரில் தாழ்ந்த ஜாதியாரை அழைத்துக் கொண்டு கடைவீதியின் வழியாய் நடக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால், அந்தக் கடைவீதியானது பெயருக்கு மாத்திரம் பல வகுப்புக்காரர்கள் அடங்கிய வியாபாரக் கூட்டக்காரரால் வியாபாரம் செய்யப்பட்ட வீதியாயிருந்ததே ஒழிய, ஏறக்குறைய எல்லா முக்கிய வியாபாரிகளும் கல்பாத்தி முதலிய பிராமண அக்கிரகாரங்களில் உள்ள பிராமணர்களிடத்தில் கடன் வாங்கியவர்களாகவே இருந்ததால் அந்தப் பிராமணர்களின் இஷ்டத்திற்கு விரோதமாய் நடக்க சக்தியற்றவர்களாகவே இருந்து அந்தப் பிராமணர்கள் தயவுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டியவர்களானதால் இந்த வியாபாரிகள் கடைவீதியிலும் தாழ்ந்த ஜாதிக்காரர் பிரவேசித்ததைத் தடுத்தார்கள். தடுத்ததோடு பிரவேசித்த தாழ்ந்த வகுப்பார்களை நன்றாய் அடித்தார்கள்.

அதன்மேல் பிராது ஏற்பட்டு அடித்ததற்காக சில செல்வமும் செல்வாக்கும் உள்ள வியாபாரிகள் அபராத தண்டனையும் அடைந்தார்கள். அதற்குப் பிறகு எவரும் செல்லவும் தடுக்கவும் பிரவேசிக்கவுமில்லை. சென்ற வருஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்திற்குப் பிறகு மறுபடியும் கல்பாத்தி அக்கிரகாரத்திற்குள் ஈழவர்கள் பிரவேசிக்க முயன்றார்கள்.
அதுசமயம் சட்ட சபையிலும் எல்லா பொது ரஸ்தாவிலும் எல்லா ஜாதியாரும் போகலாம் என்று ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றினார்கள். அது அமலுக்கு வரும்போது சட்ட மெம்பர் சர். சி.பி. ராமசாமி அய்யர் தயவில் “வேலையிருந்தால்தான் போகவேண்டும்” என்கிற வியாக்கியானம் செய்யப்பட்டுப்போய் அந்தத் தீர்மானம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

பிறகு சில ஈழவர்கள் ஆரிய சமாஜத்தில் சேர்ந்து மதம் மாறி அவ்வழியே நடந்தார்கள். அவர்கள் மீதும் பிராது கொடுக்கப்பட்டு விடுதலை ஏற்பட்டது.

இப்போது மறுபடியும் விடுதலை பெற்ற அதே ஆசாமி, அதாவது ஸ்ரீமான் சங்கரன் என்னும் பத்திரப் பதிவு இலாகா குமாஸ்தா தன் எஜமானன் வீட்டுக்குச் சர்க்கார் காரியமாய்ப் போகும் போது சில பிராமணர்கள் அவரை வழிமறித்து உபத்திரவம் செய்து அவர் நடந்த வீதியை பரிசுத்தம் செய்வதற்கென 10 ரூபாய்க்கு ஒரு பிராமிசரி வாங்கிக் கொண்டு விட்டு விட்டார்கள். இதைப்பற்றி நியாய ஸ்தலத்தில் பிராது நடந்து கடைசியாக இவ்வாரத்தில் தடுத்த பிராமணர்களுக்கு ஆள் ஒன்றுக்கு 30 ரூபாய் வீதம் அபராதமும் போடப்பட்டது.

இத்தோடு இது முடியும் விஷயமாகவும் இல்லை. மறுபடியும் கடைவீதிகளில் தாழ்ந்த ஜாதியார் நடக்கக்கூடாது என்பதைச் சிலர் வற்புறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனாலும் இதுசமயம் பாலக்காடு பெரிய கடைவீதி வியாபாரிகள் சுலபத்தில் ஏமாறக்கூடியவர்கள் அல்ல. தாங்கள் சென்ற தடவை தடுத்ததே நியாயமில்லை என்பதை நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். ஆதலால் சீக்கிரத்தில் தாழ்ந்த வகுப்பாருக்குக் கடைவீதி பிரவேசமாவது கிடைக்குமென்று நம்புகிறோம்.

-‘‘குடிஅரசு’’ – கட்டுரை – 16.05.1926