கவிதை : கருத்தாளர் பெரியாரின் கண்ணின்மணி வாழ்க!

2022 கவிதைகள் டிசம்பர் 1-15 2022

‘பெரியார் பேருரையாளர்’ அ. இறையன்

வரலாறு காணாத விறலேறு பெரியாரின்
வழிவந்த வீர மணியே!
தரமார்ந்த புடமிட்ட தங்கமாய் உருப்பெற்ற
தரணிபுகழ் சூழும் மணியே!
அரவமெனச் சீறிவரும் ஆரியரின் படைநோக்கி
அறைகூவும் ஆற்றல் மணியே!
உரமாகி நீராகி உயரறிவுச் சோலையை
உண்டாக்க உஞற்றும் மணியே!

உய்வறியாத் தமிழர்தமை உய்விக்கும் ஒருகொள்கை
உளங்கொண்ட உறுதி மணியே!
மெய்நோத லுற்றாலும் மென்நகையால் அதைவென்று
மேன்மேலும் ஒளிரும் மணியே!
செய்யாமற் சொல்லுவோர் செறிகின்ற திருநாட்டில்
செயலான்ற சீர்த்தி மணியே!
அய்யாவின் மெய்யியலை அனைத்துலகும் தொழப்பயணம்
அயராது தொடரும் மணியே!

எண்ணாத் தமிழர்நிலை எண்ணிட்ட அறிவாசான்
இசைமண்டும் எச்ச மணியே!
மண்வாழ்பு ழுக்களென மாக்களென வதிவோரின்
மதிப்போங்க இயற்றும் மணியே!
பெண்ணாளை மடமைநிறை பேதையாய் வைப்போரைப்
பெருஞ்சாடல் புரியும் மணியே!
விண்ணேறும் காலத்தில் வேதமதம் ஏனென்று
வினவிடும் வெற்றி மணியே!
பணியில்மணி! எதிர்கொள்கைப் பகையோரும் பாராட்டும்
பணிவுமணி வாழ்க! வாழ்க!
துணிவுமணி தொண்டாற்றும் தோழர்தமை மதிக்கின்ற
தூயமணி வாழ்க! வாழ்க!
பிணித்ததொரு சாதிவேர்ப் பெயர்க்குமுறை காட்டியவர்
பெற்றமணி வாழ்க! வாழ்க!
கணித்தறிய வொண்ணாத கருத்தாளர் பெரியாரின்
கண்ணின்மணி வாழ்க! வாழ்க! றீ