ஆய்வு : பிறப்பால் பிராமணன் என்பதை மறுக்கும் பூணூல் சடங்கு!

2022 ஆகஸ்ட் 01-15 2022 கட்டுரைகள்

சிகரம்

ஆரியர் உருவாக்கிய பொருளற்ற மூட விழாக்களில் பூணூல் விழாவும் குறிப்பிடத்தக்க வொன்று. பார்ப்பான் வாழ்வின் நான்கு கட்டங்களில் முதன்மையான பிரமச் சரியத்திற்குத் தொடர்புடையது இது.
திருமணமாகாத மாணவர் பருவத்தில் பார்ப்பன இளைஞன் வேதங்களை முழுமை-யாகக் கற்றுக் கொள்ளுவதற்கெனத் தன் குருவுடனேயே தங்கி வாழக் கடமைப்பட்டவன்.
அவன் கருவான காலத்திலிருந்து ஆசானிடம் கற்று முடித்துத் திருமணம் பண்ணிக் கொள்ளும் வரையிலான பிரமச்சரியக் கட்டத்தில், அவனின் பெற்றோரிடமிருந்து அவன் மீது படியும் பாவக் கறையினைக் கழுவிக் கொள்ளும் வண்ணம் கீழ்க்கண்ட 12 தூய்மைப்படுத்தும் சடங்குகள் வற்புறுத்தப்-படுகின்றன.
கர்ப்பதானம், புண்சவனம், சீமந்தோநயனம், ஜாதகர்மம், நாமகரணம், நிஷ்க்கரணம், அன்னப்ராசனம், சுதகர்மம், உபநயனம், சமாவர்த்தனம், கேசந்தம், விவாஹம்.
இவற்றுள் சட்டக் கட்டாயமாகக் கருதப்-படும் முகாமையான இரண்டு சடங்குகள் சுதகர்மமும் உபநயனமும் ஆகும். இவ்விரண்டிலும் ஒரு சிறு குடுமியை விட்டு வைத்து, தலையில் நடுவட்ட மழிப்பு நிகழ்த்தும் சுதகர்மத்திற்கும் மேலாக உபநயனம் என்னும் பூணூல் அணியும் சடங்கு மதிக்கப்படுகிறது. பூணூல் அணியும் முன்பு வரை அவன் சூத்திரத் தன்மையுடன் இருப்பதாயும், அணிந்தவுடன் அவன் இரண்டாம் முறையாகப் புதிய பிறப்பு எடுப்பதாயும் தத்துவம் கற்பிக்கப்படுகின்றது. இதை அச்சிறுவனின் எட்டாம் அகவையிலேயே நடத்திவிடலாம்.
பிராமணன் பிறப்பாலா? பூணூல் சடங்காலா?
பருத்தி நூல்கள் மூன்றினை ஒன்றாகச் சுருள் செய்து மாலை வடிவமாக்கிப் பார்ப்பனச் சிறுவனின் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வரையிலும் குறுக்கே அணிவிக்கப்படும் முப்புரி நூலுக்கு யக்ஞோப விதா எனப் பெயர்.
இச்சடங்கின் தொடக்கத்தில் பார்ப்பனச் சிறுவன் சூரியனுக்கு எதிரே நின்று மும்முறை தீ வலம் வரவேண்டும். பிறகு குரு காயத்ரி மந்திரத்தைப் பத்து முறை ஓதி யக்ஞோபவிதா முப்புரிக்குத் தெய்வத்தன்மை ஏற்றிவிட்டு, அதனைப் பையனை மாட்டிக் கொள்ளச் செய்வார். பூணூலணிந்த புதிய பிறவி, தனக்கும் தன் ஆசானுக்கும் தேவையான உணவுக்கென்று விழாவில் வந்து குழுமியுள்ள கூட்டத்தினரிடம் பிச்சை கேட்டுக் கையேந்துவான்.
பின்னர் சாவித்ரி ஜெபம் பண்ணுமாறு குரு அவனைப் பயிற்றுவித்து, வேதமோதி சமயச் சடங்குகளை நிறைவேற்றும் தகுதியை அவனுக்கு உண்டாக்குவார். இறுதியாக அவனுடைய இடையில் மூஞ்சைப் புல்லால் திரிக்கப்பட்ட அரைஞாண் கட்டப்பட்டு பூணூலணியும் உபநயனச் சடங்கு முடிக்கப் பெறுகிறது.
அதன்பின் அவன் பிராமணன் ஆகிறான். அப்படியென்றால் பிறப்பால்தான் பிராமணன் உருவாகிறான் என்பது பூணூல் சடங்கின் மூலம் மறுக்கப்படுகிறது.
பூணூல் சடங்கால்தான் பிராமணன் உருவாகிறான்; பிறப்பால் எல்லோரும் சூத்திரர்தான் என்றால், பூணூல் சடங்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் என்பது மோசடி அல்லவா? தப்பு அல்லவா? அப்படியாயின் பூணூல் சடங்கு செய்யும் எவனும் பிராமணன் ஆகலாம் என்பதுதானே சரி?
க்ஷத்திரியரும், வைசியரும் தங்களை முப்புரி நூல் அணியும் சடங்கிற்கு உட்படுத்திக் கொண்டு இரு பிறப்பாளர் பட்டியலில் இணைந்து கொண்டாலும், இன்று நடை-முறையில் இவ்விரு வர்ணத்தாரும் சூத்திரராகவே கருதப்படுவதேன்?
இத்தகைய புல்லிய பூணூலைத்தான் ஆவணி அவிட்டத்தின்போது புதுப்பித்துக் கொள்ளு கின்றனர். ஒரு சிலரால் மட்டுமே மேற்-கொள்ளப்படும் இந்த நாணங்கெட்ட சடங்கிற்காக நாட்டிலுள்ள பல்லாயிரக் கணக்கான பள்ளிகளும், அரசுப் பணிமனை-களும் மூடிக் கிடக்க வேண்டுமாம். எத்துணை விரயம்!ஸீ