வரலாற்றுச் சுவடு: பானகல் அரசர்!

2022 மற்றவர்கள் ஜுலை 01-15 2022

பானகல் அரசர் என்று அன்போடு அழைக்கப்பட்ட இராமராய நிங்காரு. அவர்களின் பிறந்த நாள் ஜூலை 9, 1866. சென்னை மாகாணத்தில் ஆறு ஆண்டுகால நீதிக் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தவர். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தில் அவர் காட்டிய ஆர்வமும், செய்த ஆக்க ரீதியான செயல்களும் அளப்பரியன!

அந்தக் காலகட்டத்தில் எல்லோரும் வங்காள நிருவாகத்தைத்தான் புகழ்வார்களாம்! வங்காளம் இன்று என்ன நினைக்கிறதோ _- எதைச் செய்கிறதோ, அதையேதான் நாளை இந்தியாவின் பிற பாகங்களும் நினைக்கும், செய்யும் என்று சொல்லப்பட்டது. அதை மாற்றி அமைத்தவர் பானகல் அரசர் என்று பிற்காலத்தில் போற்றப்பட்டார். அந்த அளவுக்கு பானகல் நிருவாகம் மேன்மை பெற்றது.

அந்தக் காலகட்டத்தில் மருத்துவத் துறை என்பது வெள்ளைக்காரர்கள், அடுத்துப் பார்ப்பனர்களின் கைகளில் கெட்டியாக இருந்தது. இதற்கொரு முடிவு காண வேண்டும் என்பதற்காக சர்ஜன் ஜெனரலின் செயலாளராக (Personal Asst.) ஒரு பார்ப்பனரல்லாதாரை பானகல் அரசர் நியமனம் செய்தார். சர்.சி.பி. இராமசாமி அய்யரும், கே.சீனிவாச அய்யங்காரும் அதனை எதிர்த்துக் கூக்குரல் போட்டனர். பானகல் அரசரோ அதை இலட்சியம் செய்யவே இல்லை.

சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகியவை அடியோடு அழிந்து போகப் போகிறது என்கிற காலகட்டத்தில் அவற்றிற்கெல்லாம் புத்துயிர் கொடுத்தார். கிராமப் பகுதியில் ஏழை – எளிய மக்களுக்கு இலவச மருத்துவ உதவி கிடைப்பதற்காக (Rural Medical Scheme) புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார்.
“கடவுள் ஆபத்தில் இருக்கிறார் – மதம் ஆபத்திலிருக்கிறது’’ என்று பார்ப்பன ஏடுகள் எல்லாம் ஒப்பாரி வைத்தன. அவர் உண்மையில் ராஜா அல்ல; அரசரும் அல்ல; பார்ப்பனரல்லாதாருக்கு அவர் ஆற்றிய தொண்டின் காரணமாக “ராஜா’’ என்று அழைக்கப்பட்டார்.

“ஒரு யுத்தம் முனைந்து வெற்றிக் குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் போர் வீரர்கள் சேனாதிபதியின் ஆக்ஞையை எதிர்பார்த்துத் திரும்பியபோது, சேனாதிபதி இறந்துபோய் விட்டார் என்கின்ற சேதி கிடைக்குமானால், அந்தச் சமயத்தில், அப்போர் வீரர்களின் மனம் எப்படித் துடிக்குமோ அதுபோல் – நமது தமிழ் மக்கள் துடித்திருப்பார்-கள்’’ என்று பானகல் அரசரின் மறைவு குறித்து தந்தை பெரியார் துடிதுடித்தார் என்றால், அப்பெருமகனாரின் சிறப்புக்கு வேறு என்ன அணிகலன் தேவை! வாழ்க பானகல் அரசர்!