கவிதை : உறுபழி சேர்க்கும் ஒன்றிய அரசு!

2022 கவிதைகள் ஜூன் 16-30 2022

– முனைவர் கடவூர் மணிமாறன்

மதவெறி கொண்டே மனிதம் மாய்த்திடும்
மானுடப் பற்றிலா மரநெஞ்சர்
உதவாக் கொள்கை உயர்த்திப் பிடித்தே
உறுபழி சேர்த்தார் ஆட்சிக்கே!

நாட்டின் நலன்கள் நன்றாய்க் காப்பதாய்
நவின்றே மக்களை ஏய்க்கின்றார்!
கூட்டணி அமைத்துக் குழப்பம் விளைத்தே
கொடுமை பற்பல இழைக்கின்றார்!

வடபுலத் தவர்க்கே வாய்ப்பை வழங்க
வஞ்சக வலையை விரிக்கின்றார்!
மடமைச் சேற்றுள் அழுந்திக் கிடப்பவர்
மதிப்பை விலைக்கே விற்கின்றார்!

நாணம் இன்றித் தனியார் சிலர்க்கே
நாட்டை அடகும் வைக்கின்றார்!
கோணல் மனத்தினர் கொள்கை அறியார்
குழியில் நாட்டைத் தள்ளுகின்றார்!

உலக நாடுகள் ஒருங்கே எதிர்ப்பினும்
உண்மை உணரா அறிவிலிகள்
கலகம் செய்வார் கசப்பை இனிப்பெனக்
கழறிக் காலம் கழிக்கின்றார்!

மண்டும் நெருப்பென இருக்கின்றார்;
மாநில உரிமைகள் பறிக்கின்றார்¢
பண்டைப் புகழை மாய்க்கின்றார்;
பகற்கன வொன்றில் மிதக்கின்றார்!

எட்டாண் டுகளாய் எதையும் செய்யார்
இந்தியைத் திணிக்க முனைகின்றார்;
ஒட்பமும் உறுதியும் உணர்வும் கொண்டே
ஒன்றிய அரசை வீழ்த்திடுவோம்!ஸீ