கவிதை : நீட்டைத் தடுப்போம்!

மே 1-15,2022

பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன்

‘நீட்’டை வலிந்து திணிக்கின்றார் – தமிழர்

               நெஞ்சில் நெருப்பைக் கொட்டுகிறார்!

வாட்டி வருத்த நினைக்கின்றார் – நல்

               வாழ்வின் மேன்மை தடுக்கின்றார்!

 

முன்னர் நுழைந்த குலக்கல்வி – முக

               மூடியை அணிந்து வருகிறது!

என்றும் நஞ்சாம் மனுதருமம் – நம்

               இனத்தை அழிக்கப் பாய்கிறது!

 

இட ஒதுக் கீட்டை எதிர்க்கின்றார் – இங்கே

               ஏழைகள் படிப்பதை வெறுக்கின்றார்!

மடமை நோயில் உழல்பவரோ – தமிழ்

               மாண்பை மரபை அழிக்கின்றார் !

 

அனிதா தொடங்கி இருபதின்மர் – நீட்டால்

               ஆருயிர் தன்னை இழந்திட்டார்!

துணிந்து பொய்யை விதைக்கின்றார் – நாட்டைத்

               துயரக் கடலில் ஆழ்த்துகிறார் !

 

பொய்யும் புரட்டும் வெல்லாது – வட

               புலத்தோர் சூழ்ச்சி பலிக்காது

மெய்யாய் அரசியல் சட்டத்தை – நாளும்

               மிதித்தே வன்கொலை செய்கின்றார்!

 

குமரி தொடங்கிச் சென்னைவரை – அய்யா

               கொள்கைப் பரப்புரை மேற்கொண்டார்!

நமது ஆசிரியர் முழக்கத்தால் – நாட்டில்

               நாளை மலரும் பொன்விடியல்!

 

இறந்து விட்ட சமற்கிருதம் – என்றும்

               எதற்கும் உதவா இந்தியினைக்

கரவாய் நுழைக்க முயல்கின்ற – தீய

               கயமை நாடகம் அறிவோமே!

 

மாநில உரிமை பறிக்கின்றார் – இன

               மான வாழ்வைத் தகர்க்கின்றார்!

யானெனும் செருக்கில் ஆடுகிறார் – நாம்

               யாண்டும் ஏற்கோம்! வெல்வோமே!ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *