நூல் மதிப்புரை : இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?

மே 1-15,2022

நூல்: இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? (தொகுதி 1)

நூல் ஆசிரியர்: ப. திருமாவேலன்

பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம்,

6/84, மல்லன் பொன்னப்பன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5

தொலைபேசி: 94861 77208, 044-2848 2818.

பக்கங்கள்: 816

விலை: இரு தொகுதிகளும் சேர்த்து ரூ 1800/-

நூல் மதிப்புரை:

நாகராஜன் பொன்னுசாமி

பெரியாரியல் ஆய்வாளர்

*              தமிழ்நாட்டு வரலாற்றில் இருவர் மட்டும் தான் _ சமுதாய சுய சிந்தனையாளர்களாக _ தனித்துச் சிந்தித்து அவற்றைத் தனித்துவமாய் தெரிவித்தவர்கள்! அவர்கள் ஒரிஜினல்கள்! காப்பியடிக்க முடியாத சூரியன்கள்! ஒருவர் திருவள்ளுவர்; மற்றொருவர் பெரியார்!

*               இந்த இருவரையும், ஆரிய, பார்ப்பன, ஆதிக்க சக்திகள் வெல்வதற்கு இரண்டு வகையான சூழ்ச்சிகளை தொடர்ந்து செய்து வருகின்றார்கள்!

*               திருவள்ளுவரை _ தங்களவராக்க அவருக்கு பூணூல் அணிவித்தும், காவியுடை அணிவித்தும், வேதங்களில் உள்ளதை எடுத்தெழுதினார் எனப் பொய்யுரைத்து, அந்தத் தமிழரை _ ஆரியராக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்கள்!

*               பெரியாரை _ வேற்றுவராக்க அவரை அவமானப்படுத்தியும், சிலைகளில் காவிச் சாயம் பூசியும், அவதூறாகப் பேசியும், பொய்யுரைத்து, அந்தத் தமிழரை _ அந்நியராக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்கள்!

*              பெரியாரை அவமதிக்கும் வீணர்களுக்கு, வெறும் பதில் சொல்லி விலகிப் போகக் கூடாது, அவர்களுக்குப் பதிலடியும் படிப்பினையும் தரவேண்டும் என்கிற நோக்கில், ஏறத்தாழ 20 ஆண்டுகள் தொடர் உழைப்பாலும், அயராத முயற்சியாலும், நூற்றுக்கணக்கான நூல்களையும், ஆயிரக்கணக்கான ‘குடிஅரசு’, ‘விடுதலை’ இதழ்களிலிருந்து தகவல்களை அள்ளியெடுத்து _ இந்த நூலைப் படைத்துள்ளார்!

*              உச்ச நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு ஏதுவாகச் சமர்ப்பிக்கப்படும் _ பதில் மனுவாகவும், உச்சிக் குடுமி வாரிசுகள் போற்றும் மநுவுக்கு _ பதிலாகவும் இந்த நூலைப் படைத்துள்ளார் _ ப.திருமாவேலன்.

*               பெரியாரின் போர்வாளாக, பெரியாரின் தொண்டராக, பெரியாரின் வாரிசாக தனது கடமையை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார் திருமாவேலன்.

*              சுயமரியாதையுள்ள ஒவ்வொரு தமிழனும் இதைப் படித்தறியும் போது, பெரியாரின் உயரம் இன்னமும் அதிகமாகி விட்டதை உணருவார்கள்!

*              வரலாற்று வீரரை யாரென்று காட்டும் வரலாற்றுப் படைப்பு!

*              “இந்தியை எதிர்த்த பலரோ _ சமஸ்கிருதத்தை எதிர்க்கவில்லை! சமூகநீதியை ஆதரித்த பலரோ _ ஆரிய பார்ப்பனர்களின் அடாவடியைக் கண்டிக்கவில்லை! தமிழ்நாட்டு எல்லைக்காகப் போராடிய பலரோ _ வடவர், பனியா, மார்வாடி ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை! இம்மூன்றையும் ஒன்றாய்ச் செய்த ஒரே தலைவர் _ தந்தை பெரியார்!” …என்று நூலின் துவக்கத்தி-லேயே பெரியார் எப்படிப்பட்ட ‘தமிழர்’ என அடையாளம் காட்டுகிறார் திருமாவேலன்.

*               ‘பெரியார் போற்றிய பெரும் புலவர்கள்’ என்னும் தலைப்பின் கீழ் 90 புலவர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. இந்தத் தலைப்பு மட்டுமே தனியாக ஒரு நூலாக அமைவதற்கு வேண்டிய அளவு அரிய செய்திகளைக் கொண்டதாக உள்ளது.

பெரியார் பற்றி பெரும்புலவர்கள் சிலரின் பார்வைகள்:

1)            “பெரியார் தமிழ்நாட்டில், எல்லா தலைவர்களையும் விட பெரிய தியாகி’’

_- வ.உ.சி.

2)            “தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக தம் உடல், பொருள், ஆவியை எந்த கைம்மாறு கருதாது தந்தவர் இராமசாமி பெரியார்’’

_ மறைமலையடிகள்.

3)            “காந்தியை மிஞ்சிய அகிம்சாவாதியாகவும், சாக்ரடீஸையும் மிஞ்சிய சமுதாய சீர்திருத்தக்காரராகவும் பெரியார் விளங்குகிறார்’’                  _ திரு.வி.க.

4)            “தமிழுக்கு ஆபத்து வரும் போதெல்லாம், முன்னோடியாக நின்று அவ்வின்னலை, நீக்குதல் பெரியாரது இயல்பு’’

               _ மா. இராசமாணிக்கனார்.

5)            “தொண்டு செய்து பழுத்த பழம் | தூய தாடி மார்பில் விழும் | மண்டை சுரப்பை உலகு தொழும் | மனக் குகையில் சிறுத்தை எழும் | அவர் தாம் பெரியார்!’’

_ பாரதிதாசன்.

6)            “வள்ளுவர் வாக்கைப் பின்பற்றி தமிழ்நாட்டில் நடந்து காட்டும் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா ஒருவரே

_ கி.ஆ.பெ.விசுவநாதம்.

7)            “லெனின் சொல்கிறார் _ மக்களுடைய இதயத் துடிப்பை நேரிடையாக தேடிப் பிடித்து, எவன் தெரிந்து கொள்கிறானோ, அவன் உண்மையான கம்யூனிஸ்ட். அதுபோலவே பெரியாரும் மக்களின் போக்கை படித்து, அவர்களை முன்னுக்கு கொண்டு வர பாடுபடுபவர்’’

_ ப.ஜீவானந்தம்.

8)            “பழமையான மூடப்பழக்க வழக்கத்தில் பாழ்பட்ட நெஞ்சர்க்குப் புரியார் | படித்துணர்ந்து, பகுத்தறிவு கட்சி தன்னைப் பரவச் செய்து வரும் நெறியார் | இழிவை நீக்கும் ஈ. வெ. ராமசாமி என்ற எங்கள் தந்தை உண்மைப் பெரியார்!’’

_ உடுமலை நாராயண கவி.

9)            “வான்றவழும் வெண்மேகத் தாடி ஆடும் | வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை | ஆன்றவிந்த பெரியார்க்குப் பெரியார் எங்கள் அய்யாவுக்கிணை அவரே மற்றோர் இல்லை!’’ _ கண்ணதாசன்.

10)         “தமிழின் தொன்மை என்பதும், வளம் என்பதும் தமிழ் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் எந்த வகையில் உதவும் என்று கேட்டார்! இதுதான் இவரை மறைமலையடிகள் போன்ற வலதுசாரி தேசியவாதிகளில் இருந்து துல்லியமாக அடையாளம் காட்டுகிறது!’’ _ கவிஞர் இன்குலாப்.

*               “இத்தனை பெரும் புலவர்களால் பாராட்டுப் பெற்ற பெரியார் தமிழர் இல்லை என்றால் _ வேறு எவர் தான் தமிழராம்?

*              பெரியாரை தமிழுக்கு எதிரியாகவும், தமிழர்க்கும் எதிரியாகவும் கட்டமைத்து அவதூறு செய்யும் சாலையோர வேலையற்றதுகளுக்கும், பெரியாரை அவமதிக்கும் கோணல் புத்திகாரர்-களுக்காக:

இதோ ஒரு பட்டியல் :

*             கண்ணைத் திறந்து படிக்கட்டும். அறிவுக் கண்ணும் திறக்கட்டும்!

1)            1926 _ இந்தி வருவதே தமிழர்க்கு துரோகம் செய்யத்தான் என எச்சரித்தார்.

2)            1926 _ வடமொழிக் கலப்பில்லாத தனிச் செந்தமிழ் இனிக்கும் என்றார்.

3)            1927 _ சமஸ்கிருதம் நீக்கிய தமிழர் திருமண முறையை வலியுறுத்தினார்.

4)            1929 _ தமிழுக்கென ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென உணர்த்தினார்.

5)            1931 _ தமிழ் மருத்துவத்தை வளர்க்க வேண்டும் என வேண்டினார்.

6)            1938 _ இந்திப் போர் என்பது தமிழுக்காக, தமிழர் தன்மானத்திற்காக என அறைகூவல் விட்டார்.

7)            1938 _ தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கினார்.

8)            1941 _ தமிழ்நாட்டு மேடைகளில், தமிழிசை பாடப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

9)            1941 _ கல்வி திட்டத்தில் தாய் மொழியும், பொது மொழியாக ஆங்கிலம் போதிக்கப்-பட்டால் போதும் என்றார்.

10)         1945 _ தமிழ் மொழி உணர்ச்சி தான், தமிழ் மக்களை ஒன்று சேர்க்கும் எனக் கணித்தார்.

11)         1947 _ தமிழர் விழாவாக பொங்கலைக் கொண்டாட வேண்டும் என முதலில் அறிக்கை விட்டார்.

12)         1952 _ தாய் மொழியில் அனைத்தும் மொழிபெயர்க்க வேண்டுமென தலையங்கம் தீட்டினார்.

13)         1952 _ நீதிமன்றங்கள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றார்.

14)         1954 _ ‘ஸ்ரீ’ என்று எழுதாதே, ‘திரு’ என்று எழுது என அறிவுறுத்தினார்.

15)         1955 _ மக்கள் மொழியை விட்டு, வேறு மொழி மூலம் ஆட்சியை நடத்துகிற ஒரே நாடு _ உலகத்திலேயே தமிழ்நாடு தான் என வருந்தினார்.

16)         1955 _ தமிழ்நாட்டுக் கடவுளுக்கு தமிழ் புரியாதா? என கேள்வி கேட்டார்.

17)         1955 _ தமிழில் கல்லூரிப் படிப்பைத் தொடங்க வேண்டும் என ஆரம்பித்தார்.

18)         1956 _ தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

19)         1956 _ விஞ்ஞான நூல்களையெல்லாம் தமிழில் ஆக்கி மலை மலையாகக் குவிக்க வேண்டும் என ஆவல் கொண்டார்.

20)         1960 _ தாய்த் திருநாட்டிற்கு தமிழ்நாடு என்னும் பெயரில்லையே என கோபப்பட்டார்.

21)         1964 _ தமிழ் முன்னேற்றமடைந்து, உலக வரிசையில் வரவேண்டும் என்றால், தமிழையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என ஆலோசனை சொன்னார்.

22)         1965 _ கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியாக வேண்டும் எனக் கோரினார்.

23)         1966 _ ஜனநாயகம் என்பது வடமொழி. அதற்கு நேரான தமிழ் மொழிதான் ‘குடிஅரசு’. அப்படித்தான் எனது இதழுக்குப் பெயர் சூட்டினேன் என விளக்கினார்.

24)         1967 _ நம்மை தமிழும் இந்தியும் படிக்கச் செய்து விட்டு, பார்ப்பானும் பணக்காரனும் ஆங்கிலம் படித்து, பதவிக்குப் போய் விடுவார்கள் என எச்சரித்தார்.

25)         1972 _ ஆரியம் சமயத்துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலும், தமிழர்களுக்கு இன உணர்ச்சி பலப்படவில்லை என வகுப்பெடுத்தார்.

*               “தமிழன் பிரார்த்தனை செய்யும் கோயில்கள் ஒன்றிலாவது, தமிழனுக்கு மரியாதை கிடையாது” என தமிழர்கள் மீது அன்பும், பரிவும் கொண்டு பேசியவர் _ பெரியார்.

*               “சரித்திரம் எழுதுபவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் ஆனதால், தமிழர்களின் சரித்திரத்தை மறைத்து விட்டார்கள்!” என தமிழர்களின் வரலாற்று மீதும் அக்கறை கொண்டு பேசியவர் _ பெரியார்.

*              இப்போது சொல்லுங்கள்!

*               இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? … நூலை படித்த பின்பு, நீங்களும் அந்த கேள்வியைத்தான் கேட்பீர்கள்!

*               இதைப் படைத்த ப. திருமாவேலனுக்கு பெரியாரியவாதிகள் மட்டுமல்ல, தமிழினமே வாழ்த்தக் கடமைப் பட்டுள்ளது!

*              தோழருக்கு வாழ்த்துகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *