எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (97)

ஏப்ரல் 1-15,2022

பெரியார் பர்வையில் பாரதி

நேயன்

 

நம் தமிழ்நாட்டில் அண்மையில் பாரதியின் பிறந்த நாளை பல இடங்களில் கொண்டாடினார்கள். அப்போது அவரை ஒரு தெய்வமாகப் பாவித்து அவருடைய படத்துக்கு மாலைபோட்டுத் தூப தீப நைவேத்தியங்கூட சிலர் செய்தார்கள். இப்படி எல்லாம் செய்வதற்கு பார்ப்பனரின் சூழ்ச்சிப் பிரச்சாரமும், பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிக்கையுமே காரணமென்றும், மற்றபடி இவர்கள் பாரதியைப் பற்றியோ அல்லது அவருடைய பாடல்களைப் பற்றியோ அறிந்து கொண்டாடப்பட்டதல்லவென்றும் எடுத்துக் காட்டவே இக்கட்டுரையை எழுதத் துணிந்தோம். ஆகையால் வாசகர்கள் இதைப் படித்த பின்பாவது தாங்கள் அக்கொண்டாட்டங்–களில் கலந்துகொண்டதன் அறியாமையை உணர்ந்து அதற்குத் தக்கபடி நடந்து-கொள்ளுவார்களாக.

பாரதி தமிழ்ப் புலமை பெற்றவர் அல்லர்!

பாரதிக்கு கவி இயற்றவல்ல அறிவு சிறிது உண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவரைப் பற்றி இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யும்படியான அளவுக்கு மேதாவித்தன்மை எதுவும் அவரிடம் இருந்ததென்றோ, அவர் உயர்ந்த ஞானமும் ஒழுக்கமுள்ளவரென்றோ, இன்னும் சிலர் விளம்பரம் செய்கிறபடி எந்தவிதத்திலும், அண்மைக் காலத்தில் தோன்றி, மறைந்துபோன தமிழ்ப் புலவர்களைப் போல ஆற்றல் படைத்தவரென்றோ யாரும் சொல்ல முடியாது. அப்படியிருந்தும் ஏன் அவரைப் பற்றி இவ்வளவு கூச்சல் போட வேண்டும் என்றும் கேட்கலாம். அதைத்தான் இங்கு ஆராய விரும்புகிறோம்.

முக்கிய காரணம், அவர் ஒரு பார்ப்பனர் என்பதேயாகும். எப்படியென்றால், ஒரு பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனா யிருந்தாலும், ஒழுக்கங்கெட்டவனாயிருந்தாலும் துர்ப்பழக்கமுடையவனாயிருந்தாலும் பேடியா யிருந்தாலும், பித்துக்கொள்ளியாயிருந்தாலும் அவனைப்பற்றி அவனுடைய குற்றங்களை யெல்லாம் மறைத்து ‘இந்திரன்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் உயர்த்திப் பேசி, எழுதி அதன்மூலம் தங்கள் இனப்பிழைப்புக்கு வழிதேடிக் கொள்கிறார்கள். இந்த அடாத காரியத்துக்குத் தகுந்த வசதிகள் அவர்களுக்குத் தாராளமாய் இருக்கின்றன.

பாரதியின் அறிவுக்கு ஒவ்வாக் கருத்துகள்

பாரதி ஏதாவது அறிவுக்குப் பொருந்திய பாடல் எழுதியிருக்கிறாரா? என்று பார்த்தால் அதுவும் இல்லையென்று நன்கு விளங்கும். ‘எல்லோரும் ஓர் இனம்’ என்றும், ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’யென்றும் என்னவோ வாய்க்கு வந்ததை அளந்து தள்ளியிருக்கிறார்! நடை முறைக்கும், அனுபவத்துக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லாத விஷயங்களையே சொல்லியிருக்கிறார். அவரைப் பாமர மக்கள் புகழ்வதற்குக் காரணம், அவர்களுடைய மூடப்பழக்க வழக்கங்களை வளர்க்கத் தக்கதாகவும், மனு நீதியை உயிர்ப்பித்து நிலைநாட்டக் கூடியதாகவும் அவருடைய பாடல் இருப்பதே ஆகும்.

மனு ஆட்சியை ஆதரிப்பவர்

எப்படியென்றால் இதிகாசம், புராணம், வேதம், சாஸ்திரம் முதலியவற்றை அப்படியே தழுவி அவற்றில் அடங்கியிருக்கும் விஷயங்களை இக்காலத்துத் தேவைகளை அதில் கலக்கி, அதற்குத் தகுந்தாற்போல வேஷம் மாற்றிக் காட்டி அவர் பாடல் எழுதியிருப்பதே யாகும். மனு ஆட்சி எப்படியாவது ஏற்பட வேண்டுமென்று பார்ப்பனர்கள் இரவும் பகலும் கனவு கண்டுகொண்டிருக்கும்போது, அதற்கு உதவியாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களை பார்ப்பனர்கள் கைநழுவ விடுவார்களா?

பெண்களுக்கு எதிரானவர்

பாரதி அநேக பாடல்களைக் குடிவெறியில் பாடியிருக்கிறாரே தவிர, நிதான புத்தியோடு பாடவில்லை என்று எளிதில் புரிந்து கொள்ளலாம். பெண்களைப் பற்றி வானளாவப் புகழ்ந்து பல பாடல்கள் செய்திருக்கிறார். ஆனால், பெண்களைப் பற்றி அவரது அந்தரங்க சுத்தியான அபிப்பிராயம் மிகக் கேவலமானது என்பது அவரது கிளிக்கண்ணியில் “பெண்களின் கூட்டமடி’’ என்ற தன்னை மறந்து உண்மையைக் கக்கியிருப்பதிலிருந்து தெரிகிறது.

பார்ப்பன மேன்மையே அவரது நோக்கம்

பார்ப்பனரைப் பற்றி பாரதியின் உண்மையான அபிப்பிராயம் என்னவென்றால், பார்ப்பனரே உயர்ந்த வகுப்பினரென்றும், இந்தியா அவர்களுக்குச் சொந்தமான சொத்து என்றும், அவர்களுடைய ஆரிய பாஷையே உயர்ந்ததென்றும் கருதியே வந்திருக்கிறார் என்பதுதான். பார்ப்பனரின் நிலையை உயர்த்த வேண்டு மென்பதே அவருடைய நோக்கமென்றும் தெரிகிறது.  அவருக்குப் பார்ப்பானுடைய சுகமே லட்சியமென்பதாகத் தெரிகிறது என்பதற்கு ஆதாரமான சொற்களை அவர் தேசியப் பாடல்களிலிருந்து மட்டும் இந்த சந்தர்ப்பத்தில் எடுத்துக்காட்டி இக்கட்டுரையை முடிக்கின்றோம்.

பாட்டின் தலைப்பும், அதில் வரும் அடியும் கீழே தருகின்றோம்.

வந்தே மாதரம்: ஆரிய பூமியில்…

பாரத நாடு: யாகத்திலே தவவேகத்திலே…

நாட்டு வணக்கம்: துங்கமுயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்தது மிந்நாடே

பாரததேசம்: மந்திரங் கற்போம்… (குட்டிக் காந்தியின் வினைத் தந்திரம். வி.க.)

தொழில்: பிரம்மதேவன் கலையிங்கு நீரே… விண்ணினின்று எமை வானவர் காப்பார்…

எங்கள் நாடு: பன்னருமுபநிடத

               நூல்கள் எங்கள் நூலே

               உன்னத ஆரிய நாடெங்கள் நாடே…

வந்தே மாதர மொழிபெயர்ப்பு:

               கமல மெல்லிதழ்களிற் களித்திடுங்கமலை நீ…

எங்கள்தாய்-: நாவினில் வேதமுடையவள்…

               வெண்மை வளரிமையாசலந்தந்த

               விறன்மகளா மெங்கள் தாய்…

பாரத மாதா: முன்னையிலங்கை அரக்கர் அழிய,

               ஆரிய ராணியின் சொல், ஆரிய தேவியின் தோள்;

               போர்க்களத்தே பரஞான மெய்க் கீதை.

திருப்பள்ளியெழுச்சி: தெள்ளிய அந்தணர்

               வேதமும் நின்றன…

தசாங்கம்: ஆரிய நாடென்றே யறி…

நவரத்தின மாலை: ஆணிமுத்துப் போன்ற

               மணி மொழிகளாலே… (சமஸ்கிருதம்)

மகாத்மாவின் துவஜம்: ஆரியக்காட்சி ஓர் ஆனந்த மன்றோ…

               செந்தமிழ் நாட்டுப் பொருநர் _ கொடுந்தீக்கண்

               மறவர்கள், சேரன்நன் வீரர்,

               சிந்தை துணிந்த தெலுங்கர் _ தாயின் சேவடிக்கே

               பணி செய்திடு துளுவர் (ஆரியருக்கு அடிமைகள்)

லஜபதிராய்: ஆதி மறை தோன்றிய நாடெந்நாளும்

               நீதி மறை வின்றி நிலைத்த திருநாடு

               ஆரியர்தம் தர்ம நிலை ஆதரிப்பான்

               ஆரியர் பாழாகா தருமுறையின் உண்மை தந்த…

திலகர்: அன்போடோதும் பெயருடையாரின்

கிருஷ்ணன் துதி: என்னரும் புகழ் கீதை யெனச் சொலும்

               எங்களாரிய பூமியெனும்…

கிருஷ்ணன் ஸ்தோத்திரம்: ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே…

               ஆரிய நீயுன் அற மறந்தாயோ…

               வெஞ்செய லரக்கரை வீட்டிடு வோனே வீரசிகாமணி ஆரியர் கோனே…

ஆங்கிலப் பயிற்சி: அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கிங் கருவருப்பாவதே

               இயல்புணர்த்திய சங்கரனேற்றமும்

               பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்..

நாட்டுக் கல்வி: மந்திரவேதத்தின் பேரொலி…

தமிழ்த்தாய்: உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்…

(சமஸ்கிருதமே உலகில் சிறந்த பாஷை என்பது கருத்து)

புதுவருஷம்: ஆரிய நாட்டினர் ஆண்மையோடி யற்றும்…

என்று இவ்வாறாக ஆரிய மேன்மையையே _ பார்ப்பனியத்தின் மேன்மையையே அவரது நோக்கமாக எழுதியிருக்கிறார்.

ஆகவே, பாரதிக்கும் கனம் ஆச்சாரியாருக்கும் தோழர் சத்தியமூர்த்தியாருக்கும், பார்ப்பன சூழ்ச்சி. பார்ப்பன ஆதிக்கப்புத்தி ஆகியவற்றில் எவ்வித வித்தியாசமும் காண முடியவில்லை.

(பாரதியைப் பற்றி 1937இல் ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் எழுதிய கட்டுரை 26.10.1962 ‘விடுதலை’யில் மீண்டும் வெளிவந்தது.)

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *