(அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மார்ச் 10)

மார்ச் 1-15 2022

பெருமைத்தாய் ஆனார் பிறந்து!

பெரு.இளங்கோ

தொன்றமிழர் தோன்றிட்ட தண்கடல்சூழ் தென்னிலங்கை

மன்னவனாம் ராவணன்றன் லீலாவைக் கொண்டாடி

ஒன்றியமே கண்டதிரச் செய்திட்ட வீரப்பேர்

அன்னைக்கோர் ஈடில்லை ஆம்.

 

துறவிகட்கும் மேலாய் துறவுதனைப் பூண்டு

 

திறம்படவே நாத்திகப் பேரியக்கம் தன்னில்

மறத்தாயாய்த் தாமிருந்து மானப்போர் செய்த

அறத்தாய் மணியம்மை ஆம்.

 

முன்னையும் பின்னையும் யாண்டுமே தோன்றிடா

தன்மதிப்புப் பேரியக்கத் தந்தை பெரியார்க்குத்

தன்னையே நன்கொடையாய்த் தந்திட்ட ஈகப்பேர்

அன்னைக்கோர் ஒப்பில்லை ஆம்.

 

விரிவுலகில் கும்மிருட்டாம் அறியாமை போக்க

அரிதாய்க் கிடைத்த அறிவுப்பேர் ஆசான்

பெரியாரைத் தாதிபோற் பேணியே காத்த

பெருந்தாய் மணியம்மை ஆம்.

 

அருமைத்தாய் அன்புத்தாய் ஆளுமைத்தாய்; மிக்க

கருணைத்தாய் கண்ணியத்தாய் காவல்தாய்; கொள்கை

உருவத்தாய் உண்மைத்தாய் ஆகியிம் மண்ணின்

பெருமைத்தாய் ஆனார் பிறந்து.

 

முந்தையர் யாரும் துணிந்திடாத் தொண்டேற்று

சிந்திக்கச் செய்தறிவைச் சீர்திருத்த வந்திட்ட

தந்தை பெரியாரின் தக்கதுணை யாகிவென்ற

விந்தை மணியம்மை ஆம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *