முகப்புக் கட்டுரை : அரித்துவாரில் கா(லி)விகளின் காட்டு விலங்குக் கூச்சல்!

ஜனவரி 1-15,2022

கவிஞர் கலி.பூங்குன்றன்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த டிசம்பர் 17 முதல் 19வரை (2021) “தர்ம சன்சத்’’ என்ற பெயரில் இந்து சாமியார்கள் மாநாடு.

முற்றும் துறந்தவர்களைச் சாமியார்கள் என்று நாமகரணம் சூட்டி அழைப்பார்கள்.

இவர்களோ ஹிந்து சாமியார்கள். மாநாட்டில் இவர்கள் பேசிய பேச்சினைக் கேட்கும் சக்தியிருந்தால் புழுபுழுத்த நாய்கள்கூட ஆற்றில், குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுவிடும்.

ஹிந்து மதத்தின் யோக்கியதாம்சம் எத்தனை டிகிரி இறக்கக் கோணத்தில் இருக்கிறது என்பதை எளிதில் தெரிந்துகொண்டு விடலாம்.

யதிர்சிங் ஆனந்த் என்ற சாமியாரின் பேச்சு இதோ:

“இசுலாமியர்களுக்கு எதிராக ஹிந்துக்கள் யுத்தம் நடத்த வேண்டும். 2029இல் இந்தியாவின் பிரதமராக ஒரு முஸ்லிம் வருவதைத் தடுக்க ஹிந்துக்கள் ஆயத்தமாக வேண்டும். இந்த மாநாட்டின் நோக்கமே 2029இல் இந்தியப் பிரதமராக ஒரு முஸ்லிம் வருவதைத் தடுக்கத்தான்’’ என்று தனது தடித்த நாக்கால் தம்பட்டம் அடித்திருக்கிறார்.

இவர்களாகவே ஒரு கற்பனைப் பிம்பத்தை உருவாக்கி_ அதன் அடிப்படையில் மதவாதத் திமிர்த் தண்டத்தை மக்களிடம் பரப்பி ஆங்காங்கே சிறுபான்மையின மக்களின் உயிரைப் பலி வாங்கச் செய்வதுதான் இந்தப் பாசிசக் கூட்டத்தின் அந்தரங்கம்.

மேலும் அந்தக் கேடு கெட்ட மனிதரின் சண்டியர்த்தனப் பேச்சைக் கேளுங்கள், கேளுங்கள்.

“நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் நாட்டின் சாலைகளில் முஸ்லிம்கள்தான் நடமாடுவார்கள். இதனைத்தான் கடந்த 23 ஆண்டுகளாக நான் பேசியும் வருகிறேன். அடுத்த 20 ஆண்டுகளில் 50% இந்துக்கள் முஸ்லிம்களாக மதம் மாற்றப்படுவார்கள்.

40% இந்துக்கள் கொல்லப்படுவார்கள். 10% இந்துக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களும் அமெரிக்கா, கனடா, அய்ரோப்பா அல்லது அய்.நா. அகதிகள் முகாம்களில் இருப்பார்கள். கோவில்கள், மடங்கள் எதுவும் இருக்காது. நமது தாய்மார்களும் சகோதரிகளும் வன்கொடுமை செய்யப்பட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்-படும் சூழ்நிலை வரும். இஸ்லாமிய ஜிகாத் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. நமது ஆயுதங்களை மறந்துவிட்டோம். இந்துக்களை ஆயுதங்கள்தான் காப்பாற்றும்.

ஆயுதங்களாலேயே நாம் வெல்வோம். இந்து மதத்தைப் பாதுகாக்க விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போல ஒரு இந்து பிரபாகரன், இளைஞர்களிடத்தில் உருவாக வேண்டும். அப்படி உருவாகும் இந்து பிரபாகரனுக்கு ரூ. 1 கோடி பரிசுத் தொகை தர தயாராக இருக்கிறேன். இந்து பிரபாகரனை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் ரூ.1 கோடி பரிசு தருகிறேன். இந்து பிரபாகரனாக ஓராண்டு நீடித்தால் என்னால் குறைந்தபட்சம் ரூ.100 கோடி பணத்தைத் திரட்டித் தர முடியும்’’ என்று ஊழிக் கூத்து ஆடித் தீர்த்துள்ளார்.

சாமியார்கள் என்றால் சாதுக்கள் என்று நினைத்து விடாதீர்கள். மாற்றார்களை சாகடிக்கும் கலையில் கற்றுத் துறைபோன காவிகள் _ காலிகள் என்பது நினைவிருக்கட்டும்!

இந்த ஹிந்து வெறிக்கூட்டம் மாவீரன் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்துவது எத்தனை அயோக்கியத்தனம்! சுதந்திரப் போராட்ட வீரன் எங்கே? சூதும், சூழ்ச்சியும் கூட்டாகச் சேர்ந்த இந்தச் கொலைவெறிக் கூட்டம் எங்கே?

இந்துக்களை ஆயுதங்கள்தான் காப்பாற்றுமாம். முஸ்லிம்களை ஆயுதத்தால் சந்திப்பார்களாம். என்ன பொருளில் கத்துகிறார்கள் என்பதை அறியாதவர்களா நாம்?

அவர்கள் நினைக்கும் முஸ்லிம்களை ஆயுதத்தால் சந்திக்கும் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.100 கோடி கூடத் திரட்டித் தருவாராம் ஒரு தனி சாமியார்.

ஆம், பணம் அவர்களுக்குத் தண்ணீர்ப் பட்ட பாடு. பட்டு மெத்தைக்குள் பணத்தைப் பஞ்சாகத் திணித்துப் பரலோகம் போகக் காத்திருக்கும் இந்தக் காலிகளுக்குப் பெயர்தான் காவி வேட்டி சாமியார்கள்.

பணம் பாதாளம் வரை பாயும் என்பது அவர்களின் திட்டம். பா.ஜ.க. அதிகாரச் சிவிகையில் இருக்கும்போது பணம் எல்லாம் ஒரு பொருட்டா இவர்களுக்கு?

போதும் போதாததற்கு கண்ணால் ஒரு சிமிட்டு சிமிட்டினால் கொட்டிக் கொடுக்க, கார்ப்பரேட்டுகளுக்கா பஞ்சம்?

முடிந்து விடவில்லை; இன்னும் சில சாமியார்கள் தங்கள் ஊத்தை வாயைத் திறந்து கொலைவெறி நெருப்புக்குப் பெட்ரோல் ஊற்றி இருக்கிறார்கள். இதோ அவர்கள்…

இந்தக் கூட்டத்தில் ரூர்கியைச் சேர்ந்த சாகர் சிந்துராஜ் மகராஜ் பேசுகையில், “நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது ஆயுதங்-களுடன் செல்லுங்கள். எப்போதும் ஆயுதங்-களுடன் நடமாடுங்கள்… உங்களை யாரேனும் தாக்க வந்தால் உயிருடன் போக விடாதீர்கள்’’ என்றார்.

ஆனந்த் மகராஜ் பேசுகையில், “ஹரித்துவார் ஹோட்டல்களில் கிறிஸ்துமஸ், ஈத் பண்டிகைகளைக் கொண்டாட அனுமதிக்கக் கூடாது. இந்தப் பண்டிகைகளைக் கொண்டாட அனுமதிக்கும் ஹோட்டல்களின் ஜன்னல்-களையும் சொத்துகளையும் அதன் உரிமையாளர்கள்-தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய கோரிக்கைகளை அவர்கள் ஏற்காவிட்டால் 1857 சிப்பாய்ப் புரட்சி போல ஒரு யுத்தம் நடத்த வேண்டும்’’ என்றார்.

ஜூனா அகாடாவின் மகாமண்டலேஸ்வரர் சுவாமி பிரபோத் ஆனந்த் கிரி பேசுகையில், நமக்கு வேறு வழியே கிடையாது. மியான்மரைப் போல இனச் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். ஒவ்வொரு இந்துக்களும் ஆயுதமேந்த வேண்டும்’’ என்றார்.

நிரஞ்சனி அகாடா மகாமண்டலேஸ்வரர் அன்னபூர்னாமா பேசுகையில், “2029ஆம் ஆண்டு இந்த நாட்டின் பிரதமராக ஒரு முஸ்லிம் வந்துவிடக் கூடாது. அவர்களது மக்கள் தொகையை நாம் அழிக்க வேண்டும். நாம் கொலை செய்வதற்கும் சிறைக்குப் போகவும் தயாராக இருக்க வேண்டும். நம்மிடம் 100 வீரர்கள் இருந்தால் 20 லட்சம் பேரை நம்மால் தோற்கடிக்க முடியும். இப்படியான உணர்வுதான் சனாதன தர்மத்தைப் பாதுகாக்கும்’’ என்றார்.

பீகாரின் தர்மதாஸ் மகராஜ் பேசுகையில், “இந்தியாவும் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானும் போல முஸ்லிம் நாடாக மாறி வருகிறது. நான் மட்டும் எம்.பி.யாக இருந்திருந்தால் நாதுராம் கோட்சே போல மன்மோகன்சிங் மீது என் துப்பாக்கியில் இருக்கும் 6 தோட்டாக்களும் பாய்ந்திருக்கும்’’ என்றார்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று உலக நாடுகள் நம்பித் தொலைக்கின்றன. போகும் போக்கைப் பார்த்தால் ஜனநாயகம் என்பதை பாசிச நாயகமாக்கி, நாட்டைப் படுகுழிக்குள்  தள்ளி விடுவார்களோ என்று கருத வேண்டியுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தன் அருகில் வைத்துக் கொண்டு, தலைநகரான டில்லியில் அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா நாகரிகமாகச் சொன்ன வார்த்தைகள் நினைவிருக்ககிறதா?

குடியரசு தினவிழாவில் கலந்துகொள்வதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது பயணத்தின் இறுதி நாளான ஜனவரி 27ஆம் தேதி (2015) டெல்லியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். (அப்போது பிரதமர் மோடியும் அருகில் இருந்தார்.)

ஒபாமா என்ன கூறினார்?

“மிக அற்புதமான, பன்பமுகத்தன்மை கொண்ட அழகான நாடாக இந்தியா உள்ளது. இங்கு பார்த்த ஒவ்வொரு கலாச்சாரத்தையும் கண்டு நானும் மிஷேலும் (ஒபாமாவின் வாழ்விணையர்) வியப்படைந்தோம்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மதக் கோட்பாடுகளும், அவர்களது கலாச்சார நிகழ்ச்சிகளும் தொடர்ந்து குறி வைக்கப்-படுகின்றன. இந்தியா¢ல் பலதரப்பட்ட மத நம்பிக்கைகளால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சகிப்புத் தன்மையின்மையை இந்தியாவின் விடுதலைக்காகப் பாடுபட்ட மகாத்மாகாந்தி கண்டிருந்தால் அதிர்ந்து போயிருப்பார்.’’ நாட்டின் வளர்ச்சிக்கு மத சகிப்புத்தன்மை மிகவும் அவசியம்’’ என்று வலியுறுத்தி இருந்தார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்த உண்மையான பேச்சு துரதிர்ஷ்டவசமானது என்று பா.ஜ.க. தெரிவித்தது நினைவிருக்கிறதா?

ஹரித்துவாரில் சாமியார்கள் கக்கிய விஷம் சாதாரணமானதல்ல. சங்பரிவார் வளையத்துக்குள் இருக்கும் விசுவ ஹிந்து பரிஷத் என்பதே சாமியார்களின் அணிதான். பா.ஜ.க.வோடு நகமும் சதையுமாக உள்ள ஒன்றுதான்.

எந்தத் தைரியத்தில் அவர்கள் இப்படி-யெல்லாம் பேசியுள்ளனர்?

எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை _ ஒட்டும் உறவும் இல்லை என்று கூறுவார்-களேயானால், இந்நேரம் என்ன செய்திருக்க வேண்டும்? ஆயுதக் கலாச்சாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளத் தூண்டும் சாமியார்கள்  மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டாமா?

உண்மை என்னவென்றால் வன்முறை என்பது அவர்களின் வழிமுறை.

450 ஆண்டுகால வரலாறு படைத்த இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் முன்னின்று அடித்து நொறுக்கியவர்கள் நாடறிந்த ‘பெரிய மனிதர்கள்’ அல்லவா! லிபரான் ஆணையம் அளித்த குற்றவாளிகளின் பட்டியலில் வாஜ்பேயி உள்பட 68 பேர் இடம் பெறவில்லையா?

இந்த அபாயகரத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பது எப்படி?

ஆம், இதிலும் தந்தை பெரியார் பிறந்த தமிழ்மண்தான் நாட்டை மீட்டெடுக்க வேண்டும். கடந்த 24ஆம் தேதி அன்று சென்னைப் பெரியார் திடலில் நடந்த விடுதலைச் சிறுத்தைகளின் விருது வழங்கும் விழாவிலும் சரி, 27ஆம் தேதி அதே பெரியார் திடலில் நடந்த பொதுவுடைமைப் போராளி தோழர் தா.பாண்டியன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் சரி, மதச்சார்பற்ற அணியைச் சேர்ந்தவர்கள் (முதல் அமைச்சர் அவர்கள் உள்பட, இரண்டாவது நிகழ்ச்சியில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உள்பட) தெரிவித்த ஒருமித்த கருத்து _ இந்திய ஒன்றியத்திற்கே நாம் வழிகாட்ட வேண்டும். மதச்சார்பற்ற ஒளி விளக்கை ஏந்தி இந்தியாவின் கழுத்தைக் கவ்விப் பிடித்துள்ள இந்து மத கோரத்தன இருளை விரட்டி விரட்டியடிக்க வேண்டும்!  என்ற கருத்து இந்தக் காலகட்டத்தில் மிக மிக முக்கியமானது _ முக்கியமானதே!

கடந்த காலங்களில் சாமியார்களின்

வன்முறைப் பேச்சுகள்! 

19.02.2020

குஜராத் ஆனந்த மாவட்டத்தில் உள்ள சுவாமி கிருஷ்ண்ஸ்வரூப் தாஸ்ஜி மதக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, “மாதவிடாய் காலத்தில் கணவருக்கு உணவு சமைக்கும் பெண்கள் அடுத்த ஜென்மத்தில் பெண் நாய்களாகப் பிறப்பார்கள். அந்த உணவை உண்ணும் கணவன்மார்கள் அவர்களது அடுத்த ஜென்மத்தில் காளை மாடுகளாகப் பிறப்பார்கள். என்னுடைய கருத்தை நீங்கள் விரும்பாவிட்டாலும் அதற்காக வருத்தப்பட மாட்டேன்.

பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது தவம் செய்வதைப் போன்றது. இது சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இதெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று விரும்பவில்லை. ஆண்களும் உணவு சமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இது உங்களுக்கு உதவும்’’ என்று கூறினார்.

15.10.2021

உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் உள்ள மடம் ஒன்றின் தலைவர் நரசிங்கநாத் சரஸ்வதி என்ற சாமியார், “அரசியலில் ஆண்கள் உள்ளனர், பெண்கள் ஏன் அரசியலில் இருக்கிறார்கள் என்றால் ஆண் அரசியல்வாதி-களுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளத்-தான் பெண்கள் அரசியலில் இருக்கிறார்கள்.

இது இயற்கை. இல்லை என்றால் ஆண் அரசியல்வாதியால் நிலையாக இருக்க முடியாது. அது எந்தக் கட்சியாக இருந்தாலும் பெண் அரசியல்வாதிகள் ஆண் அரசியல்வாதிகளுக்குச் சேவை செய்வதற்காகத்தான் இருக்கிறார்கள், எந்த ஒரு பெண் அரசியல்வாதியும் தனித்துச் செயல்பட்டால் அது கேடில் முடியும்’’ என்று கூறினார். பிறகு இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. என் நாக்கில் அவ்வப்போது சனி வந்துவிடும் ஆகையால் சிலவற்றிற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று கூறினார்.

06.03.2019

கர்நாடக மாநிலம், மங்களூருவில் ‘இந்து சமாஜோத்சவா’ என்ற பெயரில் இந்து மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் சாமியாரும், விசுவ ஹிந்து பரிஷத் தலைவருமான பாலிகா சரஸ்வதி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “இந்தியாவில் இருந்தால் இந்துவாக இரு, இல்லையென்றால் விசுவாசமற்ற தேசத்துரோகிகள் ஆவீர்கள், இந்தியாவில் இருந்துகொண்டு இந்துக்களாக மாறமாட்டோம் என்று சொல்பவர்கள் _ வேறு நாட்டின் மதங்களைப் புகழ்கிறவர்கள் அந்த நாட்டுக்குச் செல்லட்டும், நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்விற்குக் காரணம் பெண்கள் ஆடை அணிவதுதான், அவர்கள் நமது இந்துமதம் கூறியபடி ஆடை அணிந்தால் அவர்களை மதித்து கையெடுத்துக் கும்பிடுவார்கள். இந்துக் கலாச்சாரத்தை விட்டு வேறு கலாச்சாரத்தின்படி ஆடைகள் அணிந்தால் பாலியல் வன்கொடுமைகள் நடக்கத்தான் செய்யும். இதில் ஆண்களை மட்டும் குறை சொல்லக் கூடாது’’ என்று பேசினார்.

10.12.2021

“பிற மதத்தவரின் தலையை வெட்டுங்கள்!’’

சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜாவில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரபல சாமியார் பரமாத்மானந்த், பா.ஜ.க தலைவர்கள் முன்னிலையில் பேசியது:

“நான் ஒரு துறவி. எதைப் பற்றியும் கவலை இல்லை. நம் வீடுகளில் கோடரி வைத்துள்-ளோம், அது எதற்காக என்றால், பிறமதத்தவர்-கள் நம் மக்களை மதம் மாற்ற வந்தால் அவர்களின் தலையை வெட்டத்தான். ஒரு சாமியாராக இருந்து கொண்டு வெறுப்பைத் தூண்டுவதாக என் மீது குற்றம் சாட்டலாம். சில நேரங்களில் தீயைப் பற்ற வைக்க வேண்டிய தேவை உள்ளது. சர்ச்சை புதிதல்ல. வீடு, தெரு, கிராமம் எங்கேயாவது மதமாற்றம் செய்வோரைப் பார்த்தால் மன்னிப்புக் கொடுக்க வேண்டாம். தடுத்து நிறுத்தி வெட்டுங்கள், பிறகு பேசுங்கள். நமது மதத்தைக் காப்பது நம் கடமை. அதற்கு நாம் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்’’ என்றார்.

18.03.2015

உத்தரப்பிரதேசம் லக்னோவில் உள்ள பெராயிச் நகரில் விசுவ ஹிந்து பரிஷத் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சாத்வி பிராச்சி என்ற இந்து மதத் துறவி பேசியதாவது…

“பாரத் மாதா கீ ஜே’’, “வந்தே மாதரம்’’ என்று சொல்லாதவர்கள், மாடு அறுப்பவர்கள் போன்றோர் இந்த நாட்டில் வாழ்வதற்கு உரிமையில்லை.

காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தால் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து விடவில்லை. வீர சவர்க்கார் போன்ற வீரர்களின் முயற்சியால்தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் இரண்டு குழந்தைகளை மட்டும் பெற வேண்டும். இஸ்லாமியர்கள் இரண்டுக்கு மேல் பெற்றால் அவர்களுக்கு அரசு உதவிகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். பசுவதை தடைச் சட்டம் அமலாக்கப்பட வேண்டும். இதற்காக எத்தனை உயிர்களையும் எடுக்கலாம்’’ என்று கூறினார்.

12.12.2014

சாத்வி நிரஞ்சன் 2014_-2019 காலகட்டத்தில் மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் 12.12.2014 அன்று டெல்லி சட்டசபைத் தேர்தலில் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தபோது, “இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் சட்ட விரோதமாகப் பிறந்தவர்கள். அவர்கள் இம்மண்ணுக்கானவர்-கள் அல்லர். நாம் அனைவரும் ராமருக்குப் பிறந்தவர்கள். உங்களுக்கு ராமர் ஆட்சி வேண்டுமா, சட்ட விரோதமாகப் பிறந்தவர்-களின் ஆட்சி வேண்டுமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

31.01.2019

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில், காந்தியின் உருவப் பொம்மையை அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பூஜா சகுன் பாண்டே துப்பாக்கியால் சுட்டார்.

உருவப் பொம்மையில் வைக்கப்பட்டிருந்த சிவப்பான திரவம் ரத்தம் போல் வழிந்து ஓடியவுடன், அந்த உருவப் பொம்மை மீது பெட்ரோலை ஊற்றிக் கொளுத்தினார்கள்.

இதை வீடியோவாகவும் வெளியிட்டனர். சுடும்போது, “நாதுராம் கோட்சே வாழ்க’’ என்று இந்தியில் முழக்கமிட்டனர். அத்துடன் கோட்சே உருவப் படத்துக்கு மரியாதையும் செலுத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனையடுத்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

“முஸ்லிம்களின் தலைகளைத் துண்டிப்பேன்!’’ வருண்காந்தி கக்கிய நஞ்சு!

“இது எனது கை (கையை உயர்த்தியபடி). காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை அல்ல. இது தாமரையின் சக்தி. தேர்தல் முடிந்ததும், முஸ்லிம்களின் தலைகளை இது துண்டிக்கும். ஜெய் ஸ்ரீராம்! யாராவது இந்துக்களை நோக்கி விரலை நீட்டினால், யாராவது இந்துக்கள் பலவீனமானவர்கள் என்று நினைத்தால், கீதையில் சொன்னபடி அவர்களின் தலைகளை வெட்டுவேன்! அமெரிக்காவில் ஒசாமா பின்லேடனைப் பிடிக்க முடியாமல் போகலாம். தேர்தலுக்குப்பின் வருண் ஏராளமான ஒசாமாக்களைப் பிடிப்பான்.’’

17.03.2009 தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வருண்காந்தி

பாபர் மசூதி இடிப்புக்கு முதல் நாள் (05.12.1992) லக்னோவில் வாஜ்பேயி என்ன பேசினார்?

“நாளை என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்களின்மீது அமர்ந்து கொண்டு யாரும் பக்திப் பாடல்களைப் பாட முடியாது. மண்ணைச் சமன்படுத்தி, அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்ய வேண்டும்.’’

அதே நாளில் எல்.கே.அத்வானி லக்னோவில் என்ன பேசினார்?

ஏற்றுள்ள உறுதி மொழியை நிறைவேற்ற தியாகத்தைச் செய்ய வேண்டும் என்றால் அதையும் செய்வோம். அரசாங்கத்தைத் தியாகம் செய்ய வேண்டுமென்றால் அதையும் நாங்கள் செய்வோம். ஆனால் நம்முடைய பொறுப்பை நிறைவேற்றுவதைக் கைவிட மாட்டோம்.

காந்தி குறித்து அவதூறு கருத்து – காளிசரண் மகராஜ் விளக்கம்

மகாராஷ்டிராவின் அகோலா என்ற இடத்தைச் சேர்ந்தவர் காளிசரண் மகராஜ் என்ற அபிஜித் சரக்.

ஹிந்து அமைப்பின் தலைவரான இவர், சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, மகாத்மா காந்தி குறித்து அவதூறான கருத்துகளையும், நாதுராம் கோட்சே குறித்து உயர்வான கருத்துகளையும் கூறினார்.

இதற்கு, காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. மகாராட்டிரா சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. காளிசரண் மகராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் உறுதி அளித்தார்.

மகாராஷ்டிராவின் அகோலா மற்றும் சத்தீஸ்கரின் ராய்ப்பூர் ஆகிய இடங்களில் காளிசரணுக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் 28.12.2021 அன்று காளிசரண் மகராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

“மகாத்மா காந்தி குறித்து அவதூறுக் கருத்து கூறியதாக போலீசார் என்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நான் பேசியதில் எந்தத் தவறும் இருப்பதாக நினைக்கவில்லை.

என் கருத்துக்காக வருந்தவில்லை. நான் காந்தியை வெறுக்கிறேன்.’’ இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

காளிசரண் மகராஜை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராய்ப்பூர் எஸ்.பி., பிரசாந்த் அகர்வால் தெரிவித்தார்.

– ‘தினமலர்’ 29.12.2021, பக்கம் 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *