உணவே மருந்து

நவம்பர் 16-30,2021

தண்ணீர் என்னும் ஊட்டச்சத்து!

மனிதர்களின் உணவில் தண்ணீருக்கு முக்கிய இடம் உண்டு. உடலில் சரியான அளவில் தண்ணீர் இருப்பதன் மூலம் நமக்கு தசை ஆரோக்கியம், கழிவுகள் வெளியேற்றம், ரத்த ஓட்டம் என உடலின் அனைத்து இயக்கத்துக்கும் தண்ணீரின் பங்கு அளப்பரியது.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டரை லிட்டர் தண்ணீரையாவது ஒருவர் கண்டிப்-பாகக் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தண்ணீர் குடிப்பதால் நமக்கு என்னென்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

உமிழ்நீர் உற்பத்திக்குத் தண்ணீர் தேவை. உமிழ்நீர்ச் சுரப்பிகளின் செயல்பாடுகள் நன்றாக இருந்தால் உணவுகளை நன்றாக மென்று தின்பதற்கும் உயவுப்பொருளாகச் செயல்படும். சரியான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளாதபோது, வாய் வறண்டுபோகும். மேலும், உமிழ்நீர் சுரக்கவில்லையென்றால் தொற்றுநோய் பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.

மூட்டுகள் மற்றும் திசுகள் நன்றாக இயங்குவதற்கு தண்ணீரின் பங்கு முக்கியமானது. தண்ணீர் உயவுப்பொருளாகச் செயல்படுவதால் மூட்டுகள் இயக்கம் நன்றாக இருக்கும். இல்லையென்றால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட்டு, கால்வலி, நரம்புப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உடலில் தேங்கியிருக்கும் கழிவுப் பொருள்கள் சிறுநீர், மலம் மற்றும் வியர்வை மூலம் மட்டுமே வெளியேறுகிறது. அந்தக் கழிவுப் பொருள்கள் உடலில் தேங்காமல் வெளியேற வேண்டுமென்றால் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் கழிவுப் பொருள்கள் தேங்க ஆரம்பித்தால் உடல் பல நோய்களைச் சந்தித்து, மருந்துகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

நீர் இழப்பால் ஏற்படும் மிக முக்கிய பிரச்சனை மலச்சிக்கல். ஏனென்றால் உடலுக்குத் தேவையான நீர் கிடைக்காதபோது குடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு, கடினமாகும். அப்போது, உணவு கழிவுப் பொருள்கள் இயல்பாக வெளியேற முடியாமல் குடலில் கெட்டியாகச் சிக்கிக்கொள்ளும். இதனைத் தவிர்க்க தண்ணீரை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடலுக்குள் தண்ணீர் சரியான அளவில் இருக்கும்பட்சத்தில் உணவில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் கரைக்கப் படுகின்றன. அவை செரிமானத்தை ஊக்கப்-படுத்தி, உணவில் இருக்கும் சத்துகளை உறிஞ்சுவதற்கு உதவியாக உள்ளன. மேலும், அனைத்துப் பகுதிகளுக்கும் தேவையான சத்துகளை எடுத்துச் செல்வதில் தண்ணீரின் பங்கு இன்றியமையாதது.

குடிநீர் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உடலின் அனைத்துப் பகுதி-களுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து-களைக் கொண்டு சேர்க்க உதவுகிறது.

போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரகக் கற்கள் உருவாகாது. சிறுநீர்ப் பாதை தொற்றுகளில் இருந்து விடுபடுவதுடன், உயர் ரத்த அழுத்தப் பிரச்சனைகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.

உடல் எடையைச் சரியான அளவில் வைத்துக் கொள்வதில் தண்ணீர் முதன்மையாக உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலின் ஆற்றல் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

நீரிழப்பினால் சருமப் பாதிப்பு மற்றும் தோல் சுருக்கம் உள்ளிட்டவை ஏற்படும். மந்தமாக இருப்பதுபோல் தோன்றுவீர்கள். போதுமான அளவு தண்ணீரை எடுத்துக்கொண்டால் தோலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

குளிர்ந்த நீரை எடுத்துக்கொள்வதுடன் வெதுவெதுப்பான நீரை குடிக்கலாம். மேலும், தண்ணீரை உறிஞ்சிக் குடிப்பது நல்லது.  தண்ணீர் உடலுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவாகவும் அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *