சமூகநீதி நாள்: செப்டம்பர் 17

அக்டோபர் 16-31,2021

தந்தை பெரியாரை வீடு வீடாகக் கொண்டு போவது கட்டாயம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

சமூகநீதி நாள் 17.9.2021  அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரை வெளியிட்டு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் ஆற்றிய உரை.

‘பெண் ஏன் அடிமையானாள்?’

தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சொல்வார்கள், பெரியாரை அதிகம் படித்தவர் அவர். தந்தை பெரியார் பற்றி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அத்தனையையும் அவர்கள் படித்திருப்பார்.

கூட்டங்களில் நாம், பெண்ணிய சிந்தனைகளைப்பற்றி சொல்லும்பொழுது, அதற்கு எதிரான மனநிலை உள்ளவர்கள் பேசினார்கள் என்றால்,

உடனே ராகுல் காந்தி அவர்கள், ‘‘ஜோதி, இன்னும் நீ ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தைக் கொடுக்கவில்லையா?’’ என்று கேட்பார்.

அந்த நூலைப் படியுங்கள் என்று மற்றவர்களிடம் சொல்வார். அந்த அளவிற்குத் தீவிரமான பெரியாரியச் சிந்தனைகளைக் கொண்டிருப்பது என்பது, காங்கிரஸ் கட்சிக்குள்ளே, குறிப்பாக பெண்களுக்குப் பல்வேறு விதமான வாய்ப்புகளையும், சம வாய்ப்புகளையும் உரு வாக்கிக் கொடுப்பதற்கான சூழலை, அவர் மனதில் பெரியார் விதைத்திருக்கிறார் என்பதைப் பெருமை யோடு நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

முக்கியமாக, பெரியார் எந்த அளவிற்கு சிந்தித்து இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால், வியப்பாக இருக்கும். நூறாண்டுகளுக்கு முன்பு, பெரியார் சொன்ன பல விஷயங்களை, நூறாண்டுகளுக்குப் பிறகும் நம்மால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், பெண்களுக்கு மட்டுமல்ல, இந்த சமூகம் தலைமுறை தலைமுறையாக நூற்றாண்டு காலமாக நம்முடைய மண்டைக்குள் நிறைய விஷயங்களைத் திணித்திருக் கிறார்கள். அது வழி வழியாக டி.என்.ஏ. மூலமாக நமக்கு வருகிறது.

பெண்கள் என்றால், இப்படித்தான் இருக்கவேண்டும்.

சமூகம் என்றால், இதுமாதிரியான ஜாதியப் படிநிலையோடுதான் இருக்க-வேண்டும். யார் என்ன சொன்னாலும், அவர்களுடைய அந்தஸ்தைப் பொறுத்து, அவர்கள் வகிக்கும் பொறுப்பைப் பொறுத்து, நாம் கேள்வி கேட்காமல், ஒத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்று பல்வேறு விஷ விதைகள் நம்முடைய மூளையில் ஊன்றப்பட்டு இருக்கின்றன. அதையெல்லாம் களைந்து பார்த்து சிந்திப்பது என்பது மிகக் கஷ்டமாகும். அதிலும் நூறாண்டுகளுக்கு முன்பு நாம் சிந்தித்திருந்தாலும், அதை வெளியில் சொல்ல முடியாது.

பெரியார் இல்லை என்றால், இதுபோன்ற நிலை வந்திருக்காது

ஆனால், அதை வெளியில் சொல்லுகின்ற தைரியம், பகுத்தறிவு, கலகக்குரல் பெரியாருக்கு இருந்தது. அதனால்தான், என்னைப் போன்று, சகோதரி சுலோச்சனா போன்று பலர் இங்கே வந்து நின்று பேச முடிகிறது. பெரியார் இல்லை என்றால், இதுபோன்ற நிலை வந்திருக்காது.

பெண்களோ, ஆண்களோ நம்முடைய மனத் தடைகளை முதலில் உடைக்க-வேண்டும். இடைவெளி வெளியிலும் இருக்கிறது, மனதிற்குள்ளும் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு அடியை நாம் முன்னால் வைக்கிறபொழுது, வழிவழியாக நம்முள் இருக்கின்ற மரபணுக்குள் இது தவறு என்றுதான் சொல்லும். அந்த மரபணுக்களை உடைப்பதற்கு ஏதாவது ஒரு விஷயம் நமக்குத் தேவைப்படுகிறது. அதுதான், சகோதரர் செந்தில்குமார் குறிப்பிட்டதுபோல, பெரியாரின் கைத்தடி.

என்னுடைய அப்பா ஒரு நாத்திகர், பெரியாரிஸ்ட். என்னுடைய அம்மா, ஒரு காந்தியவாதியினுடைய பெண். கல்லைக் கண்டால்கூட அதைக் கும்பிட வேண்டும் என்று சொல்வார். இதுபோன்ற ஒரு குடும்பப் பின்னணியில் இருந்துதான் நான் வளர்ந்தேன்.

ஒருபோதும் என் தாயின் கடவுள் நம்பிக்கையில் என் அப்பாவோ அல்லது என் அப்பாவின் நாத்திக நம்பிக்கையில் என் அம்மாவோ குறுக்கிட்டது இல்லை.

மனத்தடைகளை உடைப்பதற்குத் தந்தை பெரியாரே எனக்கு ஒரு வழிகாட்டி!

ஆகவே, இரண்டும் கலந்த சூழல் எங்கள் குடும் பத்தில் இருந்தது. பெண் என்றால், மட்டம்; ஆண்களைச் சார்ந்துதான் இருக்க-வேண்டும் என்கிற சூழல் எங்களுடைய வீட்டில் எப்பொழுதும் இருந்ததில்லை.

அப்படிப்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்தால்கூட, நமக்கு நிறைய மனத்தடைகள் இருக்கின்றன. பெண்-களுக்கு திட்டமிட்ட வரைமுறையை வைத்திருக்கிறார்கள். இப்படித்தான் உட்காரவேண்டும்; இப்படித்தான் உடை அணியவேண்டும்; இப்படித்தான் சிந்திக்க-வேண்டும், இப்படித்தான் பேசவேண்டும் என்கிற மனத்தடைகள் நமக்குள் இருக்கின்றன. அந்த மனத்தடைகளை உடைத்தால் மட்டும்தான், நாம் வீட்டை விட்டு முதலில் வெளியில் வர முடியும். பிறகுதான், நாம் சமூகத்தை எதிர்கொள்ள முடியும்.

அந்த மனத்தடைகளை உடைப்பதற்குத் தந்தை பெரியாரே இன்றைக்கு வரைக்கும் எனக்கு ஒரு வழி காட்டியாக இருக்கிறார். பெரியார் இல்லை என்றால், அந்த மனத்தடைகளை என்னைப் போன்ற பல பெண்கள் தலைமுறை தலைமுறையாக உடைத்திருக்கவே முடியாது. இன்னும் பல தலைமுறையைச் சேர்ந்த பெண்களுக்குப் பெரியாரின் கைத்தடிதான் ஊன்று கோலாகவும், வழிகாட்டியாகவும் இருக்கப் போகிறது என்பதை நான் இங்கே துணிச்சலோடு பதிவு செய்கிறேன்.

பெரியார் தமிழ் மண்ணில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்

ஏன் பெரியார் என்ற பெயர், பல பேரை பதைபதைக்க வைக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும்.

வெறுப்பை விதைப்பவர்களின் மத்தியில், அவர் அன்பை விதைக்கிறார்.

கேள்வி கேட்காமல், எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்லு-கின்ற ஒரு சித்தாந்தத்தின் முன்பு, எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க வேண்டும்; நான் சொன்னாலும், கேள்வி கேட்க-வேண்டும் என்று சொல்லுகின்ற ஒரு சித்தாந்தத்தைப் பெரியார் தமிழ் மண்ணில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.

பாசிச சக்திகளுக்கு மிகப்பெரிய வயிற்றெரிச்சல்

பெரியாரின் பிறந்த நாள் -சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டு இருப்பதை, இன்றைக்குத் தமிழகமே கொண்டாடுகிறது. அதுதான் இன்றைக்குத் தமிழகத்தில் வேரூன்ற வேண்டும் என்று நினைக்கின்ற பாசிச சக்திகளுக்கு மிகப்பெரிய வயிற்றெரிச்-சலை ஏற்படுத்துகிறது என்று நான் நினைக்கின்றேன்.

இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே இந்தியாவில் இருக்கின்ற மக்கள், தமிழ்-நாட்டில் உள்ள மக்கள் மிகத் தீவிரமான சிந்தனை உள்ள மக்களாகத்தான் இருந் திருக்கிறார்கள்.

எப்படி பெரியார் என்கிற ஓர் ஊரறிந்த நாத்திகர் இன்றுவரை கொண்டாடப் படுகிறாரோ – அதேபோல, தெருவெங்கும் தெய்வங்கள் இருக்கின்ற ஒரு தேசத்தில், வெளிப்படையான  நாத்திகரான நேரு, 17 ஆண்டுகள் பிரதமராக இருந்திருக்கிறார். தமிழ்நாட்டில் கலைஞர் அவர்கள் அய்ந்து முறை முதலமைச்சராக இருந்திருக் கிறார்.

பொதுவாகவே மக்கள் பெரியாரிய சிந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்-களாகத்-தான் இருக்கிறார்கள். அவர் கள் கடவுள் மறுப்பாளராக இருக்கிறார்களா, இல்லையா என்று தெரியாது. ஆனால், பெரியாருடைய ஒட்டுமொத்த சிந்தனைகளையும் நிராகரிக்-கின்ற ஒரு சமூகம், இந்தி யாவில் இல்லை என்பதுதான் என்னுடைய ஆழமான நம்பிக்கை.

அந்த நம்பிக்கைதான் இன்றைக்கு நம் முன்பு இருக்கின்ற ஒரு கடைசி ஆயுதம் என்று நான் நினைக் கின்றேன்.

எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி!

இன்றைக்கு சமூகநீதிக்கு ஆபத்து, ஒரு நுணுக்கமான முறையில் வருகிறது. பெரியாருடைய பிறந்த நாளை சமூகநீதி நாளாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தபொழுது, எங்களைப் போன்றவர்-களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

என்னைப் போன்றவர்கள் நாடாளு-மன்றத்தில் சென்றபொழுது, நாடாளுமன்றம் கற்றிடங்களுக்கெல் லாம் அப்பாற்பட்ட ஒரு நாடாளுமன்றமாக இருக்கிறது என்பது தெரிய வந்தது.

சில நேரங்களில், சுப.வீ. அண்ணன் சொன்னதை கேட்டிருக்கலாமோ என்று நினைக்கக்கூடிய நாடாளு மன்றமாகத்தான் அது இருக்கிறது.

நாம் படித்த, நாம் கேட்ட அந்த மாதிரியான ஒரு அய்டிலிஸ்ட்டிக்கான நாடாளுமன்றமாக இன்றைக்குக் கிடையாது.

இன்றைக்கு இருக்கின்ற நாடாளு-மன்றத்தில், எந்தக் குரலுக்கும் மதிப்பு கிடையாது. எந்த சமூகத்திற்கும், எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மதிப்பு கிடையாது.

இரண்டே இரண்டு பேர்தான் இதை ஆள்கிறார்கள் என்று நாம் நம்புகிறோம். அது மிகமிகத்தவறு. அரசினுடைய சித்தாந்தங்கள்தான் அந்த இரண்டு பேரை இயக்குகின்றன. அவர்கள் மிக நுணுக்கமான வடிவங்களில் வருகிறார்கள்.

பெண்களை அதிகாரப்படுத்துவதில், அய்ந்து விஷயங்கள் இந்தியாவில் முன்னணியில்…

எதெல்லாம் நம்மை அதிகாரப்படுத்து-கின்றது என்பது நமக்குத் தெரிந்ததுதான். குறிப்பாக பிற்படுத்தப் பட்ட சமூகங்களை, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங் களை, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டு இருக்கின்ற சிறுபான்மையினர் போன்ற சமூகங்களை, பெண்களை அதிகாரப்-படுத்துவதில், அய்ந்து விஷயங்கள் இந்தியா வில் முன்னணியில் இருந்திருக்கின்றன.

ஒன்று, கல்வி

இரண்டாவது, இட ஒதுக்கீடு

மூன்றாவது, வேலைவாய்ப்பு

நான்காவது, அந்த வேலைவாய்ப்புகளை உருவாக் குகிற விவசாயம்,

அய்ந்தாவது, சிறுகுறு நடுத்தரத் தொழில்கள்.

மேற்சொன்ன அய்ந்து விஷயங்களையும் குறி வைத்து இன்றைக்கு நடைபெறுகின்ற ஒன்றிய அரசு அழித்துக்கொண்டிருக்கிறது.

அந்த அய்ந்தை மட்டுமல்லாமல், அடுத்ததாக மொழி, இனம், கலாச்சாரம், வரலாறு போன்ற இடத்திற்கு வருகிறார்கள். ஆக, இந்த இரண்டில்தான் அவர்கள் அரசாங்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

வேறு எப்போதையும்விட, இப்போது பெரியாரை வீடு வீடாகக் கொண்டு செல்லவேண்டிய கட்டாயம்

ஆகவேதான், வேறு எப்போதையும்விட, இப்போது வீடு வீடாக பெரியாரை கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

அவர்கள் சொல்கிறார்கள், ‘‘பாரதீய ஜனதாவின் சிந்தனைகளை வீடு வீடாக எடுத்துச் செல்லுவோம்’’ என்று.

அவர்கள் வீடுவீடாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லுவது பாரதீய ஜனதாவினுடைய சிந்தனையல்ல. கிட்டத்தட்ட நூறாண்டு காலமாக ஆர்.எஸ்.எஸ். கனவு கண்ட ஒரு சித்தாந்தத்தைத்தான் அவர்கள் வீடு வீடாக எடுத்துச் செல்கிறார்கள்.

அதற்கு எதிராக, நாம் பெரியாரைத்தான் தமிழ்நாட்டு மண்ணில் வீடு வீடாக எடுத்துச் செல்லவேண்டும். அப்பொழுதுதான் இந்த மண்ணை நம்மால் காப்பாற்ற முடியும். இந்த மண்ணிலிருந்து வேரூன்றி எழுந்தி ருக்கின்ற சமூகநீதியைக் காப்பாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்.

அந்த அளவிற்கு, இன்றைக்கு அவர்கள் மிக நுணுக்கமான வடிவங்களில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம், தமிழகத்தில் வேர் பிடிக்கவேண்டும் என்று அவர்கள் மிகத் தீவிரமாக வேலை செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

வட மாநிலங்களில் பெரியார்,நாராயண குரு போன்றவர்கள் இல்லையே: ராகுல் காந்தி!

வட மாநிலங்களில் பல்வேறு பொறுப்பு-களில் பயணம் செய்திருக்கிறேன், காங்கிரஸ் கட்சியின் சார்பாக.

அப்பொழுது ராகுல் காந்தி சொல்வார், தமிழ்நாட் டிற்கும் – மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? கேரளாவிற்கும் – மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? என்று!

தமிழ்நாட்டில் ஒரு பெரியார் இருந்தார்; கேரளாவில் ஒரு நாராயண குரு இருந்தார். அந்த மாதிரியான சீர் திருத்தவாதிகள் யாரும் வடமாநிலங்களில் இல்லாததும் நமக்கு ஏற்பட்டு இருக்கின்ற ஒரு பின்னடைவு என்று சொல்வார்.

பெரியாருடைய சமூகநீதி அரசியல் – சமூக சீர்திருத்த அரசியல்

என்றைக்குமே தேர்தல் அரசியல், வாக்கு வங்கி அரசியல், அதிகார அரசியல் ஆகியவற்றிற்கு எல்லாம் ஓர் எல்லை உண்டு. ஆனால், அந்த எல்லையைத் தகர்த்தெறியக் கூடிய ஓர் அரசியல் என்பது பெரியாரு டைய சமூகநீதி அரசியல்- _ சமூக சீர்திருத்த அரசியல்.

அதனால்தான், கட்சிகள் மாறலாம் _- காட்சிகள் மாறலாம் ஆனால், பெரியாருடைய சமூகநீதியும் – பெரியாருடைய பெண்களுக்கான குரலும் அவருடைய பகுத்தறிவுச் சிந்தனைகளும் -சுயமரியாதைச் சிந்தனைகளும்தான் தமிழ்நாட்டை இன்றைக்குக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

கண்ணுக்குத் தெரியாத வாளுக்கு எதிராக, பெரியார் என்கிற ஒரு கேடயம் – ஒரு கைத்தடி!

ஆர்.எஸ்.எஸ். என்கிற சித்தாந்தத்தை, அவர்கள் வீசுகின்ற கண்ணுக்குத் தெரியாத வாளுக்கு எதிராக, பெரியார் என்கிற ஒரு கேடயம் _ ஒரு கைத்தடி இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு எழுந்து நிற்கிறது.

அதனால்தான், பெரியாரை அவர்கள் கடுமையாகத் தாக்குகிறார்கள். அவர்கள் தாக்குவது என்பது பெரியார் என்கிற ஒரு தனி நபரை அல்ல. அது அவர்களுக்கும் தெரியும்.

பெரியார் என்கின்ற ஒரு சித்தாந்தம் _- தமிழ் மண்ணில் விதைக்கப்பட்டு இருக்கிற ஒரு விதையை, அதன் வளர்ச்சியை, அந்த வளர்ச்சி இருக்கும் வரைக்கும், ஆசிரியர் அய்யா போன்றவர்கள், இங்கே இருக்கின்ற கருஞ்சட்டைப் படையினர் எல்லாம் அந்த விதைக்கு நீரூற்றிக்கொண்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அவர்-களைத் தொந்தரவு செய்கின்றது. அவர்களை மாற்றுவதற்கு இன்னும் அதிகமாக பணிகளைச் செய்யவேண்டும்.

அதற்காக என் போன்றவர்கள் முன்னெடுக்கவேண்டும். உங்களைப் போன்றவர்கள் ஆதரிக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

பெரியாரின் பணியை அவர் விதைத்த சமூகநீதியின் விதையை முன்னெடுப்போம்!

அதுமட்டுமல்ல, தந்தை பெரியார், காங்கிரஸ் கட்சி யின் தலைவராக இருந்து,  வெளியேறியவர். அவர் விட்டுச் சென்ற பணியை, பெருந்தலைவர் காமராஜர் தொடர்ந்தார். எங்களைப் போன்ற இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களும், காங்கிரஸ் கட்சிக்கு உள்ளும், வெளியிலும், பெரியாரின் பணியை அவர் விதைத்த சமூகநீதியின் விதையை முன்னெடுப்போம் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உரையாற்றினார்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *