கவிதை : உண்மை உணர்வாய்!

அக்டோபர் 1-15,2021

நிலம் இருந்தும் வளம் இருந்தும்

               வாட்டுதடா வறுமை – எங்கும்

               காட்டுதடா கருமை – நாட்டில்

நிதமும் நடக்கும் கொள்ளை யினால்

               சுருண்டதடா உலகம் – கண்டு

               மூண்டிடாதோ கலகம்!

 

காட்டைத் திருத்தி மலையைக் குடைந்து

               கழனி யாக்கினாய் அன்று – நல்ல

               கடமை யாற்றினாய் நன்று – ஆனால்

காட்டையும் மேட்டையும் திருத்திய உனக்கு

               கஞ்சிக்கு வழியில்லை இன்று – இதைக்

               கண்டு உணர்வது என்று?

 

பணம் பதவி படை இருந்தால்

               பணியுதடா உலகம் – அங்கே

               விளையுதடா கலகம் – இவர்கள்

பகல் கொள்ளை அடிப்ப தற்கு

               குறுக்குவழி தேர்தல் – அதில்

               குருட்டு மக்கள் ஓர்தல்!

 

உழைக்கும் மக்கள் உயர வில்லை

               உண்மைநிலை தேடு – இதை

               உடைக்கும் நிலை நாடு – இங்கே

உழைத் திடாமல் கூட்டம் ஒன்று

               ஊரைஏய்த்து வாழுது – நாளும்

               உழைக்கும் வர்க்கம் வாடுது!

 

இதைத்தான் அய்யா அன்றே சொன்னார்

               கேட்காததால் வந்த விளைவு – அதனால்

               தமிழர்க்கு வந்தது தாழ்வு.

இதனை மீட்டிட எழுந்துவா தமிழா

               நாளைய பொழுது நமக்கே – நல்ல

               விடியல் தெரியுது கிழக்கே.

 

மதத்தின் பெயரால் கடவுள் பெயரால்

               அடிமையானாய் அன்று – மீண்டும்

               விடிவுகாண்பாய் இன்று

மதமும் இல்லை கடவுள் பொய்யே

               உணர்ந்திடுவாய்  இது உண்மை – அதனால்

               விளைந்திடுமே பல நன்மை!

– எஸ்.துரைக்கண்ணு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *