தகவல்

ஆகஸ்ட் 1-15,2021

தீர்மானம் 3:மக்கள் பேற்றை அடக்கி ஆளுதல்

குடும்பச் சொத்தை உத்தேசித்தும், பெண்களின் உடல்நலனை முன்னிட்டும் கர்ப்பத்தடை அவசியம் என்பதைவிட, பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியம் என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தின் அடிப்படையில் ஒரு குழந்தைக்குமேல் இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதுபற்றி முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு மட்டுமே தனி உரிமையாக இருக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது; தேவைப்பட்டால், இதற்கான தனி சட்டத்தையும்கூட மத்திய அரசு இயற்றவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(10.03.2007இல் திருவொற்றியூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பெண்கள் விடுதலை மாநாட்டுத் தீர்மானம் எண் – 3)

 


 

பூமி நோக்கி வரும் விண் கல்!

கடந்த 2004ஆம் ஆண்டு நாசா அபோபிஸ் என்ற விண்கல்லைக் கண்டுபிடித்தது. இது மிக வேகமாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றும் 2029 முதல் 2036ஆம் ஆண்டுக்குள் இந்தப் பூமியைத் தாக்கலாம் என்றும் பீதியைக் கிளப்பினார்கள். பிறகு அந்த விண்கல் திடீரென வேகம் குறைந்துவிட்டதால் 2068ஆம் ஆண்டுக்குப் பிறகே பூமிக்கு வரக்கூடும் என்றார்கள். ஆனால், இந்த விண்கல் பூமியைத் தாக்கும் நாள் 2068ஆம் ஆண்டிலிருந்து மேலும் பின்னடையக் கூடும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

நாசாவுக்காக புவிக்கருகில் இருக்கும் பொருள்கள் தொடர்பாக ஆராய்ந்து வரும் டேவிடே பர்னோச்சியா என்ற வானியல் அறிஞர், ‘எங்கள் குழுவின் கணிப்புப்படி இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் அந்த விண்கல் பூமிக்கு வருவதற்கான வாய்ப்பில்லை’ என்றும், ‘2029ஆம் ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் முப்பத் திரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவில் இந்த விண்கல் பூமிக்கு மிக அருகே தெரியும்’ என்றும் அறிவித்திருக்கிறார்.

 


 

ஒரு வரிச் செய்திகள்

உலக அமைதிக்கான நோபல் பரிசு நார்வே அரசால் சிபாரிசு செய்யப்படுகிறது.

முதல் மோட்டார் ரோடு ரோலர் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது.

கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகளுக்கு மரினோ எனப்பெயர்.

காளான்களில் 70 ஆயிரம் வகைகள் உள்ளன.

முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் மீன்.

 


 

ஒரு வரிச் செய்திகள்

பாம்புகளே இல்லாத கடல் அட்லாண்டிக் கடல்

 நிக்கல் உலோகத்தை கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.

ஆண் குரங்குக்கு மனிதனைப் போல் தலையில் வழுக்கை விழும்.

ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால் தங்கம் கரைந்து விடும்.

ஒரு வரிச் செய்திகள்

நெருப்புக் கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறுசிறு கற்களை விழுங்கும்.

அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.

அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற முதல் பெண்மணி அன்னை தெரசா.

இரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாள்கள்.

 ஒரு வரிச் செய்திகள்

உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது முதலை.

பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது எறும்பு.

இந்தியாவில் அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம் கேரளா.

 


 

 எச்சரிக்கிறார் பெரியார்!

எனது 92ஆம் ஆண்டு செய்தியாக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் தேசம், மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. யாரும், எப்படிப்பட்டவரும் எந்த இழிவான காரியத்தைச் செய்யவும் பயப்படுவதில்லை. ஒழுக்கம், நேர்மை, நாணயம், அமைதி என்பது பெரும்பாலோரிடம் காண முடிவதில்லை. பொதுவில் பார்த்தால் நமது நாடுதான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடு என்று கருதத்தக்கதாய் இருந்து வருகிறது.

இதற்குக் காரணம் தி.மு.க. ஆட்சிதான் என்று உறுதியாய்க் கூறுகிறேன். எனவே, இதற்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமானால் அதை வேறு எந்த ஆட்சி வந்து மக்களை இன்றைய நிலைக்கு கேடில்லாமல் ஆளமுடியும்?

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்த ஆட்சிக்கு மாற்றம் ஏற்படுமானால் அடுத்து வர இருப்பது பார்ப்பன ஆட்சிதான் _ அதாவது வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தும் ஆட்சிதான். இது உறுதி; உறுதியேயாகும்.

– தந்தை பெரியார் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் அறிக்கையில் (17.9.1970)

 


 

 கடலும் ஒலியும்

காற்றில் பரவுவதைவிட அய்ந்து மடங்கு அதிக வேகத்துடன் கடல்நீரில் பரவுகின்றன ஒலி அலைகள். இரை பிடிக்க, வசிப்பிடத்துக்கு வந்து சேர, தனக்கான இடத்தை வரையறுக்க, இணை தேட, எச்சரிக்க, எதிரிகளைத் தாக்க எனப் பல்வேறு காரணங்களுக்காக ஒலி அலைகளைப் பயன்படுத்துகின்றன கடல்வாழ் உயிரினங்கள்.

கிட்டத்தட்ட 20,000 மீன் இனங்களால் நன்றாகக் கேட்க முடியும், 800 மீன் இனங்கள் ஓசையை உருவாக்கும் ஆற்றல் படைத்தவை. பல மீன் இனங்களின் ஒலிகள் பாடல் இசைப்பது போன்று உள்ளன. மிட்ஷிப்மன் என்ற மீன் மிக அழகாக இசை ஒலி எழுப்பி தன் இணையைக் கவரும்.

‘ஃபைண்டிங் நீமோ’ திரைப்படத்தில் ஒரு மீன் வரும். இது ஒரு கோமாளி மீன்(Clown fish). இதன் முட்டையிலிருந்து வெளியில் வரும் லார்வா, முதலில் ஆழ்கடல் பரப்பில்தான் சுற்றிக் கொண்டிருக்கும். லார்வாவிலிருந்து மீனாக உருமாறும் பருவம் வரும்போது, தன் தாய்வீடான பவளத்திட்டு எங்கே இருக்கிறது என்பதை சத்தங்களால்தான் தேடிக் கண்டுபிடிக்கும். ஒரு பவளத்திட்டு என்பது சந்தடியும் இரைச்சலும் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை சந்தை போன்றது. அந்த மிகை ஒலியைப் பின்தொடர்ந்து செல்லும் லார்வா, ஒரு வழியாக பவளத்திட்டை அடைந்தவுடன் தன் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிக்கும்.

 


 

ஒரு வரிச் செய்திகள்

¬             100 சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள் கண்ணாடி.

¬             கடல் நீரில் உள்ள உப்பின் அளவு 35 சதவிகிதம்.

¬             தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.

¬             மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.

¬             திரையரங்கு இல்லாத நாடு பூட்டான்.

¬             நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மி.லி. ரத்தம் பாய்கிறது.

¬             உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை டிரான்ஸ் – கனடா

(8 ஆயிரம் கி.மீ.)


 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணங்கள்

¨           தூக்கமின்மை, உணவில் அதிகளவு சர்க்கரையைச் சேர்த்துக் கொள்வது.

¨           மது அருந்துதல், மன அழுத்தம், உடல் பருமன், புகைபிடித்தல்

¨           உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது. கரோனா தடுப்பூசிகளைப் போடாமல் இருப்பது.

¨           கார்பனேட்டட் பானங்களைப் பருகுவது, சரியாக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிகமாக மருந்து மாத்திரைகளை உட்கொள்வது.

¨           புறஊதாக் கதிர்கள் மற்றும் கதிரியக்கம் நிறைந்த சூழலில் அதிக நேரம் வேலை பார்ப்பது.

 


 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

கொத்தமல்லி, நெல்லிக்காய்த் துவையல், பருப்புத் துவையல், வேப்பம்பூ ரசம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தி தரும்.

தயிர், மோர், வெண்ணெய், நெய், சத்துமாவுக் கஞ்சி, முருங்கைக்கீரை, காளான் சூப், காய்கறி சூப், நாட்டுக்கோழி சூப் நல்லது. நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்த தேநீர், சுண்டை வற்றல் குழம்பு சேர்த்துக் கொள்ளலாம்.

கேக், பன், பிரெட், நூடுல்ஸ், ஜங்க் ஃபுட்ஸ், குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைத்த சிப்ஸ், சாக்லேட் போன்ற பேக்கரி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பழச்சாறுகள் அருந்துவதாலும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

 


 

நிலவில் இணையதளம்

 நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் நாசா ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் 2038ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, நிலவில் ஆய்வு செய்வதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தி, அதற்குத் தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. அதற்காக தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு வணிக நிறுவனங்கள் உள்பட 14 அமெரிக்க நிறுவனங்களை கூட்டாளிகளாகச் சேர்த்துள்ளது. நிலவில் ஆய்வு செய்யும்போது விண்வெளி வீரர்கள் விண்கலத்துடன் தொடர்பு கொள்வதற்கும், ஹெச்.டி. தரத்திலான படங்களை அனுப்பவும் இத்தகைய தொழில்நுட்ப வசதிகள் உதவி புரியும் எனக் கூறப்படுகிறது.


 

மருத்துவக் காப்பீடுகள்  மறக்கக் கூடாத விஷயங்கள்

கோவிட் பேரிடர் காலத்தில் மருத்துவக் காப்பீடுகள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. பல காப்பீடுகள் இந்தப் பேரிடரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதனால், அரசாங்கம் அனைத்து காப்பீடுகளும் இந்த இடரையும் கணக்கில் கொண்டு வர வேண்டும் என்று கூறி இருக்கிறது. இப்போது பொதுவாக எடுக்கப்படும் மருத்துவக் காப்பீடுகளில் நாம் கவனிக்காமல் விடக்கூடியவற்றைப் பார்ப்போம்.

நம்மில் பலர், பல நேரம் வருமான வரி குறைப்பதற்கோ அல்லது ஏதோ ஒரு  லாபத்துக்காகவோ காப்பீடுகள் எடுக்கிறோம். இது மிகவும் தவறு. காப்பீடுகள் நம் நலனைக் கருத்தில் கொண்டு நம் தேவைக்கு ஏற்றபடி உள்ளதா என்பதை அறிந்துகொண்டு எடுக்கப்பட வேண்டும்.

காப்பீடுகள் பற்றிய விவரத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். வீட்டில் உள்ள அனைவருக்கும் எடுத்த காப்பீடு பற்றிய விளக்கம், எங்கே வைத்திருக்கிறீர்கள், என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்லிவிடுங்கள். அவற்றைப் பற்றிக் குடும்பத்தாரிடம் சொல்வது நமக்கு நன்மை பயக்கும்.


 

ரத்தப் பரிசோதனையில் புற்றுநோயைக் கண்டறியலாம்

பிரிட்டனில் நடந்த ஒரு மருத்துவ ஆய்வில், ரத்தத்தைப் பரிசோதிப்பதன் மூலம் அய்ம்பதுக்கும் அதிகமான புற்றுநோய் வகைகளை, அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும் முன்பே கண்டறியலாம் எனத் தெரிவித்துள்ளனர். 1200 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 99 சதவிகித முடிவுகள் துல்லியமான தீர்வைக் கொடுத்துள்ளன. இந்த ஆய்வின் மூலம் ஆரம்பக் காலத்திலேயே புற்றுநோயைக் கண்டுபிடித்து, உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். இந்த ஆய்வு முறை முழு வெற்றியை அடைந்தால், விரைவிலேயே நடைமுறைக்கு வரும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


 

 வாசகர் மடல்

 ‘உண்மை’ சூன் 16-30, 2021 படித்தேன். அது பற்றி எழுதுகிறேன். பல்கலைக்கழக மானியக் குழுவின் பாடத்திட்டத்தில் பார்ப்பனத் தன்மை கட்டுரை படித்தேன். அருமை.

‘இந்தியா’ என்னும் கருத்து அறிவியல் வரலாறு சார்ந்தது.

‘பாரத்’ என்பது புராணம் ? தொன்மம் சார்ந்தது. சமஸ்கிருத வைதீகம் சார்ந்தது. பிராமணிய அடிப்படையைக் கொண்டது.

ஆங்கிலேய ஆதிக்கத்தினை எதிர்ப்பது முதலில் தென்னகத்தில் – தமிழ் நாட்டில் நடந்துள்ளது என்பது மறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மதுரைதான் 2500 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஒரு வலிமையான அரசின் தலைநகரமாகவும், பண்பாட்டு, மொழி – இலக்கிய மய்யமாகவும் இருந்து வந்துள்ளது.

கணையம், நம் உடல் வளர்ச்சிக்கும், செரிமானத்திற்கும் தேவையான ஒரு முக்கிய உறுப்பு என்பதனை மருத்துவக் கட்டுரை எளிதாக விளக்குகிறது.

பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன் அவர்களின் பகுத்தறிவுப் பாடம் கவிதையை மனங்கொள்ளச் செய்து மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது.

மக்களவையில், மாநிலங்களவையில் பார்ப்பனர்கள் நிறைய உள்ளனர் என்பதை புள்ளி விவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது முக்கியமான ஒன்று.

– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி – 624 705

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *