அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (49) : சாபத்தால் மனித முகம் குரங்கு முகமாகுமா?

ஆகஸ்ட் 01-15 2019

சிகரம்

முன்னொரு காலத்தில், நாரதரும் பர்வத மகரிஷியும் பூலோக சஞ்சாரம் செய்தனர். அப்போது அவர்களுக்குள் ஓர் உடன்பாடு ஏற்பட்டிருந்தது. அதாவது, தங்களுக்குள் ஒளிவு மறைவு எதுவும் இருக்கக் கூடாது என்பதுதான் அது. அவர்கள், சஞ்சயம் என்னும் நகரை அடைந்தனர். அவர்கள் அந்நாட்டு அரசனால் உபசரிக்கப்பட்டார்கள். மழைக்காலமாய் இருந்ததால் அவ்விருவரும் அரண்மனையிலேயே தங்கினார்கள். அவன், தன் மகளும் பேரழகியுமான தமயந்தி என்பவளை அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தான்.

நாரதரது வீணாகானத்தைக் கேட்டு இலயிப்புற்ற தமயந்திக்கு அவரிடம் ஈடுபாடு ஏற்பட்டது. நாரதருக்கும் அவள்மீது பிரியம் ஏற்பட்டது. இவ்வாறாக ஒருவருக்கொருவர் நெருக்கம் ஏற்பட்டதால், தமயந்தி பர்வத மகரிஷிக்குச் செய்யும் பணிவிடைகளில் அசிரத்தை காட்டலானாள்.

அதனைக் கண்ணுற்ற மகரிஷி, “எனக்குத் தெரியாமல் நீர் அவள்மீது மோகம் கொண்டுள்ளீர்! என்னை வெறுக்கும் அவள்மீது காதல் வயப்பட்டதுமல்லாமல் அதை என்னிடமிருந்து மறைத்தும்விட்டீர். அதனால் உமக்கு குரங்கு முகம் ஏற்படட்டும்!’’ என்று சபித்துவிட்டார். நாரதரும் பதிலுக்கு அவருக்கு சுவர்க்கவாசம் கிட்டாமலிருக்குமாறு சபித்துவிட்டார். எனவே, அம்மகரிஷி எவரிடமும் சொல்லாமல் அரண்மனையை விட்டுப் போய்விட்டார்.

நாரதர் முகம் குரங்கு முகமாக மாறிய பின்னரும், தமயந்திக்கு அவர்மீது ஏற்பட்ட காதல் மாறவில்லை. அதை அறிந்த அரசன், அவளை வேறோர் அரச குமாரனுக்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தான். ஆனால், அவள் சம்மதிக்கவில்லை. பிடிவாதமாய் நாரதரையே மணந்துகொள்வேன் என்று தமயந்தி கூறியதால், மன்னன் அதற்கு இணங்கி நாரதருக்கும் அவளுக்குமே திருமணம் செய்து வைத்தான்.

அதற்குப் பின்னர் நாரதர் அவ்வரண்மனையிலேயே தங்கி, தமயந்தியோடு இன்ப வாழ்க்கை நடத்திவந்தார். ஆயினும், நாரதருக்கு, தமக்குக் குரங்கு முகம் இருப்பது மனத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. பின்னர் ஒரு சமயம், பர்வதமகரிஷி அங்கு வந்தார். அவர், தம்மால்தான் நாரதருக்கு அந்தக் கொடிய துன்பம் நேரிட்டது என்பதை உணர்ந்து, அவருக்குத் தாம் இட்ட சாபத்தைப் போக்கினார். நாரதரும் தாம் இட்ட சாபத்தைப் போக்கினார். நாரதருக்கு முன்பு இருந்தது போல் அழகான முகம் ஏற்பட்டதை அறிந்த தமயந்தியும் அவள் பெற்றோர்களும் பெருமகிழ்வுற்றார்கள். இவ்வாறாக, மாயையின் வலிமையினால், நாரத மகிரிஷியும் உலக வாழ்க்கையான இல்லற வாழ்க்கையில் இலயித்திருந்தார்.’’ என்கிறது இந்து மதத்தின் தேவி பாகவதம்.

அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டதே குற்றம். அப்படியிருக்க இதில் மாறி மாறி சாபம் விட்டுக் கொள்கிறார்களாம். இந்து மதத்தில் எந்தக் கடவுளாவது ஒழுக்கமான கடவுளா? இப்படிப்பட்ட கேவலமான மதம்; மதம் என்பதற்கே தகுதியில்லாதது. அப்படியிருக்க இந்துமதம் அறிவியலுக்கே அடிப்படை என்பது அதைவிட அபத்தம். ஆரியப் பார்ப்பனர்கள் தாங்கள் நினைத்தால் எப்படிப்பட்ட கேவலத்தையும் உயர்வாகக் காட்டுவர்; மிக உயர்ந்ததையும் மிகக் கேவலமாகக் காட்டுவர் என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள்.

சாபம் என்பது வார்த்தைகள். சொல்லப்படும் வார்த்தைகளால் மனித முகம் குரங்கு முகமாக மாறியது என்பது அறிவியலுக்கு எதிரான கருத்தல்லவா? அப்படியிருக்க இப்படிப்பட்ட மடமைக் கருத்துகளைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

வெட்டி, துண்டுகளாக வீசப்பட்டவன் மீண்டும் உயிர் பெற்று வருவானா?

தேவகிரி என்னும் பர்வதத்துக்கு அருகே உள்ள அக்கிரகாரத்தில் பரத்துவாஜ கோத்திரத்தில் பிறந்த சுதன்மன் என்பவன் இருந்தான். அவன் மனைவி சுதேகை கற்பில் சிறந்தவளாகத் திகழ்ந்தாள். கணவன் மனைவி இருவரும் சிவபெருமானிடம் பக்தி பூண்டு அவரைத் தினமும் வழிபட்டு வந்தனர்.

இத்தனை நற்குணங்களுடன் கூடியவர்களாக இருந்தாலும் புத்திரப்பேறு இல்லாது அவர்கள் வருந்தினர்.

சுதேகை மனம் ஒடிந்துவிட்டாள். தனக்குத் தான் அந்தப் பாக்கியம் கிடையாதென்றால் கணவன் ஏன் வருந்த வேண்டும்? அவனை மறுமணம் செய்து கொள்ளுமாறு தூண்டினாள்.

“சுதேகை, என்ன வார்த்தை கூறினாய்? உன்னை விட்டு இன்னொருத்தியிடம் இல்லறம் நடத்துவதா? இனி அந்த யோசனையை மறந்துவிடு’’ என்று கடிந்து கொண்டான் சுதன்மன்.

மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்கி சுதன்மன் குசுமையை மணந்தான். குசுமை கருவுற்று அழகிய ஆண்மகவைப் பெற்றாள்.

நாள்கள் செல்லச் செல்ல, சுதேகை அவற்றைக் கண்டபோது, அவள் உள்ளத்தில் மெல்ல பொறாமை தலைதூக்கியது. சுதன்மன் வீட்டுக்கு வந்தவர்கள் எல்லோரும் குழந்தையைக் கொண்டாடியதோடு குசுமையைப் பாராட்டிச் சென்றனர். அந்த வார்த்தைகளைக் கேட்கும்போது அவள் உள்ளம் வேதனையால் துடித்தது.

குமாரன் வளர்ந்து பெரியவனானான். ஒரு பெண்ணைப் பார்த்து மணம் செய்து வைத்தனர் பெற்றோர்கள். வீட்டிலே நிலவும் சந்தோஷம் சுதேகைக்குப் பொறுக்கவில்லை.

இளையாளின் குமாரன் உயிரோடு இருக்கும்வரை தனக்கு நிம்மதி ஏற்படாதென்று அவளுக்குத் தோன்றியது. அவனைக் கொன்றுவிடுவது என்று தீர்மானித்தாள்.

ஒரு நாள் இரவு யாரும் அறியாது மகனும் அவன் மனைவியும் படுத்துறங்கும் அறைக்குள் நுழைந்தாள் சுதேகை. இருவரும் அயர்ந்து நித்திரையிலிருந்தனர். சுதேகை மனத்திலே சிறிதும் இரக்கம் இல்லாதவளாய், குமாரனைப் பல துண்டுகளாகச் சேதித்து, அந்தத் துண்டுகளை எடுத்துச் சென்று, ஒருவரும் அறியாமல் குசுமை பூஜித்த லிங்கங்களைச் சேர்ப்பித்து வந்த தடாகத்தில் ஓரிடத்தில் போட்டுவிட்டு வந்துவிட்டாள்.

காலையில் கண்விழித்தபோது மருமகள் பக்கத்திலே படுத்திருந்த கணவனைக் காணாது திடுக்கிட்டு எழுந்தாள். எங்கும் இரத்தம் தேங்கியிருப்பதையும் மாமிசத் துண்டுகள் சிதறிக் கிடப்பதையும் கண்ட அவள் பதைபதைத்து உள்ளே ஓடினாள்.

குசுமையும் சுதன்மனும் சிவபூஜையில் ஈடுபட்டிருந்தனர். பெரியவளான சுதகை உள்ளே ஏதோ காரியத்தில் ஈடுபட்டிருந்தாள். அவளிடம் ஓடிவந்த மருமகள், “அம்மா உங்கள் பிள்ளையைக் காணவில்லை. அம்மா, படுக்கையில் ஒரே இரத்தமாகத் தேங்கிக் கிடக்கிறது. ஆங்காங்கே மாமிசத் துண்டுகள் இரைந்து கிடக்கின்றன’’ என்றாள்.

சிவபூஜை முடிந்து குசுமையும் சுதன்மனும் எழுந்துவர இரண்டு ஜாமங்கள் ஆயின. சுப்பிரியனுக்கு நேர்ந்த கதியைக் கேட்டபோது அவர்கள் இருவரும் மனமொடிந்து போய்விடவில்லை.

வழக்கம்போலக் குசுமை தான் பூஜை செய்த லிங்கங்களை எடுத்துக்கொண்டு தடாகத்தில் சேர்ப்பித்து வரப் புறப்பட்டாள். லிங்கங்களைக் குளத்திலே சேர்ப்பித்துவிட்டுத் திரும்பியபோது, ‘அம்மா’ என்று அழைக்கும் குரல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பினாள் குசுமை.

குளத்தின் நடுவிலிருந்து சுப்பிரியன் எழுந்து வருவதைக் கண்டாள். குசுமைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

“அம்மா, நான்தான் சுப்பிரியன். இறந்துபோன நான் உன் பூஜாபலத்தால் உயிர்பெற்று எழுந்து வருகிறேன். நானும் உன்னுடன் வீட்டுக்கு வருகிறேனம்மா!’’ என்று கூறினான் சுப்பிரியன் என்று இந்துமதம் கூறுகிறது.

துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட உடல் மீண்டும் உயிர் பெறாது என்பது அறிவியல். ஆனால், துண்டுகளாக வீசப்பட்டவன் மீண்டும் உடலுடன், உயிருடன் வந்தான் என்பது அறிவியலுக்கும், உண்மைக்கும் எதிரானது. அப்படியிருக்க இப்படிப்பட்ட மூடக் கருத்தைக் கூறும் இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

                                                   (சொடுக்குவோம்….)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *