சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…

ஏப்ரல் 16-30

 

நூல்: பெரியார் என்னும் இயக்கம்

ஆசிரியர்: தா.பாண்டியன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.

தொலைபேசி: 044-26251968, 26258410,26241288

பக்கங்கள்: 92, விலை: ரூ.80/-

 

 [இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள மூத்த, முதிர்ந்த தலைவர்களில் ஒருவர் தோழர் தா.பாண்டியன் எம்.ஏ., பி.எல். சிறந்த சிந்தனையாளர்; ஆற்றல்மிகு எழுத்தாளர் – கேட்டார் பிணிக்கும் சொற்பொழிவாளர். எல்லாவற்றையும்விட உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாத வாய்மையாளர். 85ஆவது வயதில் அவர் அண்மையில் எழுதியுள்ள சிறந்த நூல். பெரியார் என்னும் இயக்கம் என்ற அற்புத காவியம். அதில் ஒரு முக்கிய பகுதியை இங்கே தருகிறோம். படித்து, சிந்தித்துப் பயனுறுக.

– ஆசிரியர்]

பெரியாரையும் விமர்சிக்கும்!

அண்மைக்காலமாகச் சில தலித் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் பெரியாரின் முழு இயக்கத்தையும் புரிந்துகொள்ள முயற்சிக்காமல், அவர் தலித்துகளுக்கு நன்மை செய்யவில்லை; தலித்துகளை ஒடுக்கி மோதிக் கொண்டேயிருக்கிற பிற ஜாதியாருக்கு இடஒதுக்கீடு கேட்டு, அவர்களுக்காகத்தான் பதவிகளைப் பெற்று கொடுத்திருக்கிறார் என்று விமர்சனம் என்ற பெயரால் ஆதாரமற்ற அடிப்படையில்லாத ஒரு குற்றச்சாட்டைக் கூறியுள்ளனர். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுமையிலும் தலித் அமைப்புகளில் உள்ள சில தீவிரவாதிகள்; பொதுவுடைமை இயக்கமும் தலித் உழைப்பாளர்களைப் போராட்டங்களில் முன்னிறுத்தி பலி கொடுத்த தன் கட்சியை வளர்த்துக் கொண்டது என்றும், கம்யூனிஸ்டுகள் தங்களது புரட்சிக்கு, விஞ்ஞானிகள் தங்கள் சோதனைச் சாலையில் தவளைகளையும், எலிகளையும், முயல்களையும் எவ்வாறு அறுத்து படித்துக்கொள்ள பயன்படுத்துகிறார்களோ அதேபோல் தலித்துகளை தஞ்சையில், தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களில் கீழ்வெண்மணி வரை தலித்துகளைப் பலி கொடுத்து, கம்யூனிஸ்ட் கட்சி பட்டம் சூட்டிக் கொண்டது என்று பேசியவர்களையும், எழுதியவர்களையும் பார்த்துள்ளேன்.

இந்தத் தவறான பார்வைக்கு அவர்களது அனுபவக்குறைவே காரணம். தந்தை பெரியார் தலித்துகள் உட்பட, பிற நூற்றுக்கணக்கான ஜாதியினரையும், பார்ப்பனர்கள் அடிமைகளாகத்தான் நடத்தி வந்த ஆதிக்கத்திலிருந்து அனைவரையும் விடுவிப்பதுதான் பெரியாரின் நோக்கம் ஆகும்.

கம்யூனிஸ்டுகளின் லட்சியமும் அதுவே. ஆனால், தலித் அமைப்புகளில் சிலர் இதைத் தவறாகப் புரிந்துகொண்டதற்கு சூழலும் காரணமாக இருக்கிறது.

பாடுபடும் தலித் மக்கள் காடுகளில்  _ வயல்களில் உழைக்கிற இடங்களில் பார்ப்பனர்களைச் சந்திப்பது இல்லை முரண்பாடும் ஏற்படுவது இல்லை. ஆனால், காடுகளில் வயல்களில் உழைக்கிற இடங்களில் தலித்துகள் வேலை செய்யும்போது அங்குதான் கவுண்டரும் இருக்கிறார். வன்னியரும் இருக்கிறார். தேவரும் இருக்கிறார். முதலியாரும் இருக்கிறார். அதாவது அக்கம்பக்கத்தில் சேர்ந்து வேலை செய்ய வேண்டியவர்களாக இவர்கள்தான் உள்ளனர்.

எனவே, இயல்பாகவே மோதுதல், சச்சரவு, போட்டி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ஒரு தலித்தின் ஆடு வன்னியர் ஒருவரின் வரப்பில் புல்மேய்ந்து விட்டது என்பதற்காகவும் சண்டை வரலாம். இதேபோல் வடபுலத்திலும் ஜாட்டுகள், தாக்கூர்கள், யாதவ்கள் ஆகியோருக்கு எதிராகத்தான் தலித்துகளுக்கு பகைமை உறவு ஏற்படுகிறது.

இதனால்தான் மாயாவதி அம்மையாரே, பார்ப்பன ஜாதியாரோடு தேர்தல் கூட்டு வைத்தார். ஆனால், ராம்விலாஸ் பஸ்வானோடு உறவு கொள்ள மறுக்கிறார்.

நம் தமிழ்நாட்டில்கூட விடுதலை சிறுத்தைகள் தொல்.திருமாவளவன் தலைமையில் இயங்குகிறது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தலைமையில் இயங்குகிறது. ஜான் பாண்டியன், பூவை மூர்த்தி, அருந்ததியர் சங்கம் என்று பல பிரிவுகளாக இயங்கும் இவர்கள் ஏன் ஒன்றுபட முடியவில்லை என்பதை நிதானமாக சிந்தித்தால், பெரியாரையும் பொதுவுடைமை கட்சியையும் சரிவர ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதும் புரியும்.

முதலில் கண்ணாடி முன் நின்று, உங்கள் முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். பெரியார் போன்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு, தானாகத் தேடிவந்த பதவிகளையும் துறந்துவிட்டு, புரட்சிகரத் துறவியாய் நமக்கென வாழ்ந்த நல்லறிஞரைப் புகழாவிட்டாலும், இல்லாத பழியைச் சுமத்தாதீர்கள் என வேண்டுகிறேன். பெரியாரின் தனித்துவம்

பொதுவாகப் பெரியார் கடவுள் மறுப்பாளர்; மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்; ஜாதி ஒழிக்கப் போராடியவர்; பார்ப்பன எதிர்ப்பாளர் என்று மட்டுமே பலரால் அடையாளப்படுத்தப் படுகின்றார்.

பெரியார் இவையனைத்தையும் தன்னுள் கொண்ட ஓர் இயக்கமாக வளர்ந்தவர். தந்தை பெரியார் இவற்றையெல்லாம் நான்தான் தொடங்கினேன்; நான்தான் செய்கிறேன் என்று என்றும் கூறியது இல்லை. எல்லோரும் வாருங்கள்; சிந்தியுங்கள்; செயலாற்றுங்கள்; மனிதர்களாக ஆகுங்கள் என்றுதான், பேசியும் எழுதியும் வந்தார்.

பெரியாருக்கு முன்பே பல நாடுகளில் கடவுள் மறுப்பாளர்கள் பலர் இருந்துள்ளனர். ப்யூயர்பாக், வால்டேர், இங்கர்சால், எப்பிக்கூரஸ், ரஸ்ஸல், ஜாக் லண்டன் போன்றோர் பலர் இருந்துள்ளனர். கார்ல் மார்க்சும், ஏங்கல்சும் பலரை மேற்கோள் காட்டியுள்ளனர்.

அண்மைக் காலத்தில், கருந்துகளைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றுள்ள விஞ்ஞானிகள் கடவுள் இல்லை எனக் கூறியுள்ளனர். 15.3.2018 அன்று காலமான ஸ்டீபன் ஹாக்கிங்ஸும் கடவுள் மறுப்பாளர்தான். ஆக, பலர் பல காலங்களில் அக்கருத்துக்காக எழுதி வந்துள்ளனர். போராடியும் வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரிடமிருந்தும் பெரியார் மட்டும்தான் ஒரு பெரும் மாறுதலை உண்டாக்கியிருக்கிறார். கடவுள் மறுப்பாளர்கள் அதுகுறித்து பேசியிருக்கிறார்கள். எழுதியுமிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இறந்த பின்பு, அதே பணியைத் தொடர்வதற்கு எந்த ஒரு அமைப்பையும் உருவாக்கியது இல்லை.

பெரியார்தான் உயிருடன் உள்ளபோதே சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் எனத் தொடங்கியவர். அந்த அமைப்புக்காக ஏராளமான சொத்துக்களைச் சேர்த்து வைப்பதில் கவனம் செலுத்தினார்.

அரசியலில் அல்லது பொது வாழ்க்கையில் பங்கேற்றுச் சொத்து சேர்த்துக் கோடீஸ்வரர்களான பலருடைய வரலாற்றைக் கண்ணாரக் காண்கிறோம்.

ஆனால், பெரியார் ஒருவர்தான் தன் குடும்பச் சொத்தையும், பொது வாழ்க்கைப் பணியைச் செய்வதற்காகப் பலருக்கும் பயிற்சி கொடுப்பதற்காகத் தன் சொந்தப் பணத்தை வாரி வாரிச் செலவிட்டவர். அத்துடன் கழகத்துக்காக நிதி சேர்த்துச் சொத்துக்களும் வாங்கி, அவற்றை யாரும் தனக்குப் பின்னால் கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காகக் கண்டிப்பான விதிகளைக் கொண்ட அறக்கட்டளையைப் பதிவு செய்து பணத்தை வங்கியில் எவரும் எளிதாக எடுக்கக்கூடாத முறையில், சட்டப் பாதுகாப்புடன் பூட்டி வைத்தார் பெரியார்.

அவர் வாழும்போதே பல கல்வி நிறுவனங்களையும் அமைத்தார். அவருடன் பணிபுரிந்த பெரியாரின் நம்பிக்கைக்குரிய ஆசிரியர் வீரமணி, அப்பணியை அம்மையார் மணியம்மையுடன் சேர்ந்து தொடர்ந்து நடத்தி, பொறியியல் கல்லூரியையும் கட்டியுள்ளார். கலைக் கல்லூரியும் உண்டு. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும் உண்டு. இன்றைக்கும் குடிஅரசு பதிப்பகம் நாள் தவறாமல் விடுதலை பத்திரிகையை வெளியிட்டு வருகிறது. சிறு பிரசுரங்களையும் வெளியிடுகிறார்கள். இவற்றுக்கெல்லாம் எங்கிருந்து நிதி கிடைக்கிறது என்று கேட்டால், பெரியார் ஒவ்வொரு பணிக்கும் நிரந்தர வைப்புநிதி வைத்து, அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு இப்பணிகளை தொடரச் செய்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

இது வேறு எவரும் செய்யாத பெரும் காரியம்.

பொதுவாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து அதைப் பயன்படுத்தி சில காரியங்களைப் பலர் செய்கிறார்கள். ஆனால், இந்தப் பெரிய மனிதர் மட்டும்தான் அதிகாரப் பற்றை உதறிவிட்டு துறவிக் கோலத்திலே வாழ்ந்தவர்; தாம் சேர்த்த பணத்தைக் கொண்டு நற்பணிகள் பல செய்ய, நிரந்தர அமைப்பு ஒன்றை உருவாக்கிவிட்டுப் போயுள்ளார் என்பது அவரது தனித்துவத்தைக் காட்டுகிறது. இந்த ஒரு செயல், அவருக்கு வழங்கப்பட்ட பெரியார் என்ற பட்டம் ஏன் தாய்க்குலத்திடமிருந்து பிறந்தது என்பதற்கான மூலம் இப்போது புரிகிறது.

தந்தை பெரியார் திருச்சியில் மழலையர் பள்ளியிலிருந்து தொழிற்கல்வி வரை படிக்க விடுதியோடு கூடிய கல்விக் கூடமொன்றை அமைத்துள்ளார். அங்குப் பெற்ற தாய் தந்தையரால் வேண்டாம் அல்லது வளர்க்க முடியவில்லை எனக் குப்பைத் தொட்டியில் அல்லது தெருவில் வீசியெறியப்பட்ட குழந்தைகளையும் தேடி எடுத்து வந்து அங்கு விடுதியில் தங்கிப் படிக்க வைக்கிறார்கள். அவ்வாறு வரும் பிள்ளைகளின் அப்பா யார் அம்மா யார் என்பது தெரியாது. எனவே என்ன சாதி என்ன மதம் என்பதும் தெரியாது. ஆனால் கல்வித் துறையின் விதிகளின்படி அப்பா அம்மா பெயர்கள் எழுதப்பட வேண்டும் அல்லவா! நாம் இல்லையென்றால் சாதிப் பெயரைக் கேட்டு அவர்களே எழுதி விடுகிறார்கள் அல்லவா? இந்தப் பள்ளிக் கூடத்திலேதான், அந்தக் குழந்தைகள் அத்தனைக்கும் தந்தை என்ற பெயரைக் குறிக்கும் முறையில் அக்குழந்தைகளின் பெயர் பதிவு செய்யப்படுகிறது. இது ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்து தொட்டில் திட்டம் என அறிவிப்பதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்பட்டு வரும் அறிவுக் கோவிலாகும்.

இதை மனிதநேயத்தின் உச்சம் என்போமா! அருங்குணத்தின் சர்வாம்சம் என்போமா! அன்பு, அருள், இரக்கம், பரிவு என மனிதருக்குள்ள அத்தனை நற்குணங்களும் பால்போல் வடிவதை நம் கண்முன்னால் காணமுடிகிறது.

இதைத்தான் ஷேக்ஸ்பியர் விவீறீளீ ஷீயீ லீனீணீஸீ ளீவீஸீபீஸீமீ என்று வருணித்தார். இதில் அன்பின் சிகரத்தையும் காண்கிறோம். அறிவின் ஒளிவிளக்கையும் கண்டு மகிழ்கிறோம். இவருக்கென்று ரத்த வாரிசுகள் யாராவது இவரது பெயரை அல்லது இவரது சொத்தை வைத்து இந்த மண்ணில் தங்களை வளர்த்துள்ளனரா எனப் பார்த்தால், தடியூன்றிய அந்தத் தனிமனிதர், தன் பெயரைக் கூறி, உறவு சொல்லி அதன் பயனாய் யாருக்கும் இடம் தந்தது இல்லை என்பது அவரது இணையற்ற சீலத்தைக் காட்டுகிறது. இவரை அரசியல் அறிஞராகவும் பார்க்கலாம். சிறந்த முனிவராகவும் தரிசிக்கலாம்.

சுருங்கச் சொன்னால், நம் அனைவரையும் விடுவிக்க, தன் வாழ்வை அர்ப்பணித்த நாம் நேரில் காண, வணங்க வாய்ப்பையும் தந்த பெரியார் எனும் பெரியார், உண்மையில் பெரியாரின் பெரியார்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *