காப்பீடு செய்ய கருத்தில் கொள்ள வேண்டியவை

டிசம்பர் 16-31

– ஒளிமதி

“ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு, எதிர்பாராத இழப்பு ஏற்படும்போது கைகொடுக்கும் என்பதுடன், அது தரும் பாதுகாப்பு உணர்வு, வாழ்வின் நிச்சயமின்மை குறித்த உங்களின் நிகழ்காலப் பதற்றத்தையும் குறைக்கும். குறைந்த கட்டணத்தில் வாழ்வின் பெரிய நிம்மதி தரும் காப்பீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று முடித்தார் நிதி ஆலோசகர் ஸ்ரீதர்.

ஆயுள் காப்பீடு:-

“இன்று பலரும் ஆயுள் காப்பீட்டின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவர் எதிர்பாராத விதமாக இறக்க நேரிடும்போது இக்காப்பீடு அக்குடும்பத்தைக் காக்கும். ஆனால், ஆயுள் காப்பீட்டை பலரும் முதலீடாகக் கொள்கிறார்கள்… அது தவறு. ஆயுள் காப்பீடு எதிர்பாராத இழப்பை சரிசெய்வதல்ல. இழப்பினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ஈடுசெய்வது. எனவே, நிற்கதியாய் நிற்காமல் காப்பாற்றும் கருவி இது!

பிரீமியம் குறைவான மற்றும் கவரேஜ் தொகை அதிகம் கிடைக்கக் கூடிய டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதே புத்திசாலித்தனம். டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது கீழ்வரும் விஷயங்களைக் கவனிக்கவும்:

¨    பாலிசி எடுக்கும் நிறுவனத்தின் நம்பிக்கை மற்றும் நிர்வாகத்திறன்.
¨    இதுவரை அவர்களிடம் பலனடைந்த பாலிசிதாரர்கள் விவரங்கள்.
¨    க்ளெய்ம் பட்டுவாடா செய்த விகிதம்.
¨    வாடிக்கையாளர் ஆதரவு.
¨    பிரீமியத் தொகை.

இந்த அய்ந்து அம்சங்களின் அடிப்படையில் நான்கைந்து ஆயுள் காப்பீடு நிறுவனங்களை ஒப்பிட்டு, இறுதி முடிவெடுக்கவும்.
மருத்துவக் காப்பீடு:-

நோய்களும், விபத்துகளும் கட்டுப்பாடின்றி பெருகிவரும் இந்தச் சூழலில், அதனால் ஏற்படும் எதிர்பாராத செலவுகளைச் சந்திக்க, ஒவ்வொரு குடும்பமும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் (மெடிக்கல் இன்ஷூரன்ஸ்) எடுத்திருக்க வேண்டியது மிக அவசியம். இல்லையெனில், பல வருடங்களாகச் சேர்த்த சேமிப்பை சில நாட்கள் மருத்துவமனை செலவுக்குக் கொடுக்க வேண்டிவரும். சேமிப்பில்லாதவர்கள் கடனாளி ஆகாமல் தவிர்க்கும் அரிய வழி இது.

இதையெல்லாம் தவிர்க்கக் கை கொடுப்பது மருத்துவக் காப்பீடு. இதை எடுக்கும்போது, கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல. இந்தந்த நோய்க்கு இவ்வளவு க்ளெய்ம், இந்த நோய்களுக்கு எல்லாம் விலக்கு என்று, இன்ஷூரன்ஸ் நிறுவனத்தினர் குறிப்பிட்டிருக்கும் “டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்’களை தெளிவாகப் படித்த பின்னே, அதைத் தேர்ந்தெடுக்கவும். பெண்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு பிரத்யேக மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. மொத்தக் குடும்பத்துக்கும் ஒரே இன்ஷூரன்ஸாக எடுப்பதைவிட, இப்படிப் பிரித்து எடுத்துக்கொள்வது சிறந்தது.

அதேபோல் ஏதேனும் நோய் இருந்தால் அதை மறைத்து இன்ஷூரன்ஸ் எடுப்பதைவிட, வெளிப்படையாகச் சொல்லி எடுப்பதே சிறந்தது. அதற்கான பிரீமியத் தொகை சற்று கூடினாலும் அதை கட்டிக் கொள்ளலாம். அதனால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது நேர்மையாக இருப்பது, நமக்கு நல்லது என்ற புரிதல் வேண்டும்.

மேலும், பணத்தை க்ளெய்ம் செய்வதில் இரண்டு ரகங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் முக்கிய மருத்துவமனைகளுடன் தொடர்பில் இருப்பார்கள். அப்படி அவர்கள் நேரடி தொடர்பில் இருக்கும் மருத்துவமனைகளைத் தேர்வு செய்வதே சிறந்தது.

இதனால் இன்ஷூரன்ஸ் நிறுவனமே நேரடியாக பணத்தை மருத்துவமனையில் செலுத்திவிடும்.

இதில் இன்னொரு முறையுள்ளது. இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் ரசீதுகளைச் சமர்ப்பித்து நாம் பணத்தை க்ளெய்ம் செய்வது, இப்படி செய்யும்போது, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் நமக்கும் சில முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனால் முதல் ரகத்தை தேர்வு செய்வதே சிறந்தது.

இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் சம்பளம் பெறுகிறார்கள். கணவன், மனைவி இருவரும் சம்பாதிப்பதால், ஒரு தொகை செலவுக்குப் போக, மற்றொரு தொகை உபரியாக இருக்கும். அதை சேமிப்பாகவோ, முதலீடாகவோ மாற்றும் எண்ணம் இல்லாத, எண்ணம் இருந்தாலும் அதற்கான வழி தெரியாத அவர்கள் அதையும் அநாவசியச் செலவுகளில் கரைக்கிறார்கள். அவர்களிடம், 10 வருடங்கள் கழித்து அவர்கள் குழந்தையின் கல்விச் செலவு பற்றியோ, அவர்களின் ஓய்வு காலத்துக்கான திட்டமிடல் குறித்தோ கேள்வி எழுப்பினால், பதிலற்றவர்களாக நிற்பார்கள்.

எனவே, தங்கள் குழந்தைகளின் படிப்பு, திருமண செலவு, தங்களின் ஓய்வுகாலத்திற்கு வருவாய் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற காப்பீடுகளை செய்துகொள்வது சிறந்த வழியாகும். இது பதற்றம் தவிர்த்து நிம்மதி தரும். ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *