நூல் அறிமுகம்

பிப்ரவரி 16-28

நூல்: இணையம் கற்போம்
ஆசிரியர்: முனைவர்    மு.இளங்கோவன்
வெளியீடு: வயல்வெளிப் பதிப்பகம்,
இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்),
கங்கை கொண்ட சோழபுரம் (வழி),
அரியலூர் மாவட்டம்\612 901
பக்கங்கள்:176 விலை:ரூ.100/-\

இளைய தலைமுறையினரிடம் இரண்டறக் கலந்துவிட்ட இணையத்தை மூத்த தலைமுறையினர் தெரிந்து கொள்வதன் அவசியம் பாங்குடன் விளக்கப்பட்டுள்ளது.

வானொலி, தொலைக்காட்சி, செல்பேசி போன்றன எப்படி ஆதிக்கம் செலுத்தி, மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றானதோ அதுபோல வரும் காலத்தில் இணையமும் இருக்கும் என்கிறார் நூலாசிரியர்.

இணையம் என்பதன் விளக்கம், அனைத்துத் துறைகளிலும் அரசாட்சி செய்யும் விதம், இணையத்தைப் பயன்படுத்தும் முறை, இணையதளப் பகுதிகள், மின்னஞ்சல் விளக்கம், உபயோகிக்கும் முறை ஆகியன விளக்கப்பட்டுள்ளன.
இணையத்தில் தமிழ் ஆட்சி செய்யத் தொடங்கிய காரணம், தமிழ் எழுத்துருக்களின் பயன்பாடு, தமிழ் இணைய தளங்களை ஆராய்வதற்குரிய வழிமுறைகள் இனிய எளிய நடையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

இணையத்தைப் பயன்படுத்த அடிப்படைத் தேவையான தமிழ்த் தட்டச்சு முறை நூல் படத்துடன் எளிய முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள தமிழ் வலைப்பதிவின் விளக்கம், விக்கிபீடியாவில் தமிழ்ச் செய்திகளை அறிதல், கற்றவர்கள் எப்படிப் பங்களிப்பது போன்ற விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன.  தமிழ்மொழியில் அகரமுதலியின் தேவை, இதுவரை வந்துள்ள தமிழ்மொழி அகரமுதலிகளின் விளக்கங்கள் இடம்பெற்று, பிறர் உதவியின்றி அனைத்துத் தகவல்களையும் எளிதில் அறிந்துகொள்ள உதவும் ஆசானாக – வழிகாட்டியாக உள்ளது.

இணையம் கற்றால் தமிழ்ச் சொல் வளத்தை உலகுக்கு வழங்க முடியும் என்ற நம்பிக்கையினையும் ஆர்வத்தினையும் இணைந்து செயல்படுத்தியிருப்பதே இணையம் கற்போம்.

ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரின் ஆற்றல் திறமைக்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டு!வேண்டிய மின்னஞ்சல், வலைப்பதிவுகளின் விவரங்களும் படங்களுடன் விளக்கப்பட்டு, கணினியை இயக்கத் துணைபுரிந்துள்ளன.

இணைய இதழ்களின் வகைகளும் அதனைப் பயன்படுத்த உதவும் முகவரிகளும் கொடுத்து வழி காட்டப்பட்டுள்ளது.  மேலும், இணைய உலகில் தமிழ் நூல்களின் பயன்பாடு பன்மடங்காகும் நிலைக்கு அடிக்கோடிடப் பட்டுள்ளது.

தமிழில் இணையக் குழுக்களின் தோற்றமும் வளர்ச்சியும் கூறப்பட்டு, வலைக்குழுப் படைப்புகள் அமைய வேண்டிய முறை அலசி ஆராயப்பட்டுள்ளது.  உலக மொழிகளில் இணையக் குழுக்கள் செயலாற்றிடும்விதம் விளக்கப்பட்டு, சீனாவைப் போல் நாமும் தமிழில் தேடுபொறியைக் கண்டுபிடித்து அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அறிஞர் அண்ணா       100 அரிய தருணங்கள்
தொகுப்பாசிரியர்:       என் அசோகன்
வெளியீடு:  அய்அய்பிஎம் பிரஸ்
48, கம்யூனிட்டி சென்டர், நாராய்ணா விகார், இண்டஸ்ட்ரியல் ஏரியா, ஃபேஸ்\1, புது டெல்லி – 110 028.
பக்கங்கள்:112 விலை:ரூ.75/-

பத்திரிகையாளர், முதல் அமைச்சர், நாடகாசிரியர், கதாசிரியர் என பன்முகங்களில் பரிணமித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவர் படைத்த _ எழுதிக் குவித்த எழுத்துகளால் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர்.
பேரறிஞருடன் இணைந்திருந்த நாள்களை நினைவு கூர்ந்துள்ள பெருமக்களின் மூலமாக, நூலினைப் படிப்போர் மனதில் அண்ணாவின் மீது அபரிதமான மேன்மையை _ மதிப்பை ஏற்படுத்தியுள்ளார் தொகுப்பாசிரியர்.

அரசு வாகனத்தைச் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தாத கொள்கையாளர்.  ஆடம்பர வாழ்க்கையை அறவே வெறுத்த அதிசய மனிதர்.  முதல் அமைச்சர் பதவி ஏற்றபோதுகூட தனது குடும்பத்தினர் பார்ப்பதற்காகச் சிறப்புச் சலுகைகள் வழங்காதவர்.

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதற்காக, ஜனநாயக ரீதியில் ஆட்சி அதிகாரத்தை விட்டு விலக வாய்ப்புள்ளதா என யோசித்தவர்.  தமிழிலேயே கையெழுத்துப் போட்ட தனிப்பெருந்தகையாளர்.  முதல் அமைச்சர் பதவியின் அதிகாரத்தினை எந்த இடத்திலும் தேவையின்றி உபயோகப்படுத்தாத உன்னதத் தலைவர்.

நோயால் துன்புற்றபோதுகூட வசதியான வீட்டில் தங்கி ஓய்வெடுக்கச் சொன்னதை மறுத்தவர்.  தூக்குத் தண்டனைக் கைதிக்குப் புதுவாழ்வளிக்க போப்பைச் சந்தித்து வாதாடிய மனித நேயர் அண்ணா.

அறிஞர் அண்ணாவின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்ட அவரது வாசகர்களுக்கு அரியதோர் தகவல்களைத் தந்திருப்பதே அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள்.


நூல்: பகுத்தறிவுச் சுடர் ஏந்துவீர்
ஆசிரியர்: ச.மு.செகதீசன்
வெளியீடு: காவியா பதிப்பகம்
சட்டநாதபுரம், சீர்காழி – 609 109, நாகை மாவட்டம்.
பக்கங்கள்:136 விலை:ரூ.65/-

தலை தாழ வைக்கும் தமிழனின் நிலைகளை விளக்கி, தலை நிமிர்ந்து தன்மானத்துடன் தமிழன் வாழ்வதற்கான அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.  அய்யா பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மூன்று பக்கக் கவிதை வரிகளில் முத்தாய்ப்பாக விளக்கப்பட்டுள்ளது.

பூனை குறுக்கே வருதல், பல்லி சத்தம், கைம்பெண் எதிரில் வருதல், கிரிக்கெட் மோகம் என்ற சமுதாய அவலங்களைச் சாடி வினா எழுப்பி, சிந்தித்து வீறு கொள்ளச் செய்துள்ளது.

இன்றைய சாமியார்களின் நிலை, பெண்கள் அவர்களிடம் ஏமாறும் முறைகளைக் கூறி, அவர்கள் செய்ய வேண்டிய செயல் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  வழக்காடு மன்றம் சாமியார்களின் இயல்புகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

நல்ல நேரம், கெட்ட நேரத்தினைப் பிரித்து வகைப்படுத்திக் காட்டியுள்ள விதம் அருமை!  கோயில்கள் உருவான தன்மையினை விளக்கி, இன்றைய இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கடவுள்களின் ஒழுக்கக்கேடுகளை விளக்கி பகுத்தறிவுப் பாதை காட்டப்பட்டுள்ளது.

இன்றைய சமுதாயச் சீர்கேடுகளை விளக்கியதோடு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பெரியாரின் கொள்கைகளால் _ பகுத்தறிவுக் கருத்துகளால் ஒளிர் விடுவதே பகுத்தறிவுச் சுடர் ஏந்துவீர்.

– குணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *