மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (109)

2022 செப்டம்பர் 16 -30 2022 மருத்துவம்

நல்ல நேரமும் பிள்ளைப் பிறப்பும்!

மரு.இரா.கவுதமன்

இல்லாத ஒரு பொய் அறிவியலைக் கூறி, அப்பாவி மக்களிடம் ஜோதிடம், நாள், நட்சத்திரம் பற்றிக் கூறி, ஏமாற்றிப் பணம் பறிக்கும் இந்த ஜோதிடர் கூட்டத்தின் பேச்சை நம்பி ஏமாறும் பாமர மக்கள் இந்த அறிவியல் உலகில் இன்னும் இருப்பது மிகவும் பரிதாபம். இதை நம்பி, மூல நட்சத்திரம், செவ்வாய்தோஷம் என்றெல்லாம் பெண்களின் வாழ்க்கையையே அழித்துவரும் மூடர்களை என்னவென்று சொல்வது?

குழந்தையின்மை (Sterility) : திருமணமாகி, இயல்பான பாலியல் வாழ்க்கை (Sexual life) இருந்தும், எந்தவிதக் கருத்தடைச் சாதனங்களை பயன்படுத்தாத நிலையில் வேறு விதமான திட்டமிடலும் இல்லாமல் இருக்கும் நிலையில் ஓராண்டு குழந்தைப்பேறு ஏற்படவில்லை யென்றால், மருத்துவ ஆய்வுக்குச் செல்லுவதும், மருத்துவ அறிவுரை பெறுதலும் நலம். ஏறத்தாழ 10 சதவிகிதம் தம்பதிகளுக்கு மகப்பேறு உண்டாகும் பருவத்தில் குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படும் நிலை உண்டு. 30 சதவிகிதம் குழந்தையின்மைக்கு பெண்களிடம் குறைபாடும், அதே அளவு குறைபாடு ஆண்களிடமும் உண்டு. ஆனால், சமூக அளவில் ஏதோ குறைபாடு பெண்களிடமே உள்ளது போல் ‘மலடி’ எனப் பட்டம் சூட்டி, அவர்களை சமூக இழிவுக்கு ஆளாக்கும் கொடுமையைப் பார்க்கிறோம்.
சில வீடுகளில் இதையே சாக்காக வைத்து ஆணுக்கு மறுமணம் செய்து வைக்கும் கொடுமை–களையும் நாம் அறிந்திருக்கிறோம். 30 சதவிகிதம் பேருக்கு இருபாலருக்கும் குறை இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. சரியான காரணங்களை, இந்தத் தம்பதிகளின் குழந்தை இன்மைக் குறைபாட்டை அறிய முடியாத நிலை உள்ளதை மறுப்பதற்கில்லை. நாம் அறிந்த வகையில் ஏறத்தாழ 60சதவிகிதம் தம்பதிகள் குழந்தையின்மைக் குறைபாட்டிலிருந்து, மீண்டு மகப்பேறு அடையும் வாய்ப்பை இன்றைய மருத்துவம் வழங்கி உள்ளது. இந்த இணையர்களுக்கு மருத்துவக் காரணங்களால் தான் குழந்தையின்மை உண்டாகிறது. அந்தக் குறைபாட்டை நீக்கி விட்டால் குழந்தைப் பேற்றை அவர்கள் அடைய முடியும்.

பெண்களிடம் உள்ள குறைபாடுகள்: பொதுவாக குழந்தைப் பேறுக்குக் காரணமாக உள்ள உறுப்புகளில் உள்ள குறைபாடுகள் என்றும், ஊக்க நீர்க் (Hormones) குறைபாடு என்றும் பெண்களின் குறைபாடு-களாக அறியப் படுகின்றன.

குழந்தைப் பேறு உறுப்புகளில் குறைபாடுகள்: கருக்குழாய்களில் அடைப்பு, கருப்பையின் கழுத்தில் ஏற்படும் நோய்கள், கருப்பையில் உண்டாகும் கட்டிகள், கருப்பையில் காயத் தழும்புகள் (கருக்கலைப்பால் ஏற்படுபவை), கருப்பைப் புற்று நோய், கருப்பைக் கழுத்தில் புற்றுநோய், அவற்றைக் குணமாக்கச் செய்யும் ஊடுகதிர் (Radiation) மருத்துவம், புற்றுநோயைக் குணமாக்கும் மருந்துகள் (Chemotherapy) ஆகியவை குழந்தையின்மையை உண்டாக்குகின்றன.

ஊக்கிநீர்க் குறைபாடுகள்: ஊக்கி நீர்க் குறைபாடு கருமுட்டை சரியாகப் பக்குவமடைவதைத் தடுக்கும். சரியாகப் பக்குவமடையாத கருமுட்டையால் கருவுறுதல் நிகழாது. ஈஸ்ட்ரஜன், புரொஜெஸ்ட்ரான் குறைபாடுகளால் கரு முட்டை முழுவளர்ச்சி அடைவது தடைப்படுவதோடு, கருப்பைச் சுவரில் கருமுட்டை ஒட்டுவதையும் தடுக்கிறது. இந்த ஊக்கிநீர் (ஈஸ்ட்ரஜன்) குறைபாடு, கருமுட்டை வெளிப்பாட்டையும் (Ovulation) தடுக்கிறது. இக்குறைபாட்டால் நீர்க்கட்டிகள் (Polycystic ovary) ஏற்படும் நிலையும் உண்டாகி கருவுறுதலைத் தடுக்கிறது. ‘‘புரோலேக்டின்’’ (Prolactin) ஊக்கி நீர், இரத்தத்தில் அதிகளவு இருத்தல், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் குறைபாட்டால் ‘‘தைராக்ஸின்’’ சுரப்பு அதிகளவு சுரந்தாலும் (Hyperthyroidism) அல்லது குறைந்த அளவு சுரந்தாலும் (Hypothyroidism) மகப்பேறு வாய்ப்பைத் தடுக்கும்.

ஆண்களிடம் உள்ள குறைபாடுகள்: விரைகளில் சிரை வீக்கம் (Varicocele) ஆண்-களிடம் மலட்டுத் தன்மையை உண்டாக்கும். விரைகளுக்கு தமனிகள், சிரைகள் (Arteries and veins) இரத்த ஓட்டம் நிகழ்கிறது. விரைகளிலிருந்து சிரைகள் மூலம் இரத்தம் வெளியேறாத நிலையில், சிரைகளில் இரத்தம் தேங்கி, வீக்கம் ஏற்படும். உடல் வெப்பநிலையைவிட, விரைகளில் வெப்பநிலை குறைவாக இருக்க வேண்டும். அதனால்தான் இயற்கையிலேயே நம் உடலுக்கு வெளிப்புறமாக விரைப்பைகளில் விரைகள் அமைந்துள்ளன. அதனால் இறுக்கமான செயற்கை இழை உள்ளாடைகள் விரைகளின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும். விரைகளில், சிரைகளில் ஏற்படும் வீக்கம், ஆண் கரு உற்பத்தியையும், அது வெளியேறுவதையும் தடுக்கும். அதே போல இறுக்கமான ஆடைகள், விரைகளில் வெப்பத்தை அதிகமாக்கும் பொழுது ஆண் கரு உற்பத்தியைப் பாதிப்பதுடன், ஆண் கருக்-களின் வேகமான இயக்கத்தையும் தடுக்கும். ஆண் கருக்கள் வேகமான இயக்கம் தடைபடும் நிலையால், அவை கருப்பையை அடைவதில் தடை ஏற்படும். குழந்தையின்மைக்கு இது ஒரு முக்கியமான காரணமாகிறது.

சில பாரம்பரிய (Genitical Diseases) நோய்கள் எடுத்துக்காட்டாக நீர்க்கட்டிகள் (Cystic Fibrosis) அல்லது ஆண் கருக்கள் உற்பத்திக் கோளாறு, விந்துக் குழாய்களில் அடைப்பு போன்றவை ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். அதே போல் நோய்கள், மருந்துகள், மனத்தளர்ச்சி போன்ற காரணங்களால் ஏற்படும் ஆண் குறி விறைப்புத் தன்மைக் குறைபாடு, உடலுறவில் ஈடுபட முடியாத நிலையை உண்டாக்கும். இதனால் கருவுறும் வாய்ப்பு முற்றிலும் பாதிப்-படையும். சில ஆண்களுக்கு ‘‘விந்து முந்துதல்’’ (Pre-Mature ejaculation) நிலை இருக்கும். இதுவும் கருவுறுதலைத் தடுக்க வல்லது. ஆண் அணுக்களின் இயக்க வேகம் இயல்பான நிலையில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் விந்து நீரில் மிதந்து, வேகமாக நகர்ந்து கரு முட்டையைத் துளைத்து உட்புகும். வேகம் குறைவாகவோ, இயக்கம் குறைவாகவோ இருந்தால் கருவுறுதல் நிகழும் வாய்ப்பு குறைந்துவிடும். ஆண் அணுக்கள் இயக்க குறைபாடு (Asthenospermia) பெரும்பாலான ஆண் மலட்டுத்தன்மைக்குக் காரணமாகிறது. இயல்பான வேகத்தில் 40 சதவிகிதம் குறைந்திருப்-பின் ‘‘ஆண் அணுக்கள் இயக்கக் குறைபாடு (Asthenospermia) என்று மருத்துவர்கள் வகைப்படுத்துவர்.
சிலருக்கு விந்து வெளியேறுவதற்குப் பதில் சிறுநீர்ப்பைக்குள் சென்றுவிடும். (Retrograde ejaculation) சிலருக்கு ஆண் அணுக்கள் எண்ணிக்கைக் குறைபாடு (Oligospermia) இருக்கும். ஒரு மில்லி லிட்டரில்,
15 மில்லியன் ஆண் அணுக்கள் இயல்பான நிலையில் இருக்கும். இந்த அளவைவிடக் குறைந்திருப்பின் கருவுறுதல் நிகழும் வாய்ப்பும் குறைந்துவிடும். சில மருந்துகள், புராஸ்டேட் சுரப்பி வீக்கம், சிறுநீர்ப்பை, முதுகெலும்பில் அடிபடுதல் அல்லது முதுகெலும்பில் அறுவை மருத்துவம் போன்ற மற்றைய காரணங்-களால் ஆண் மலட்டுத்தன்மை (Male Sterelity) ஏற்படலாம். அதே போல் ஊக்கிநீர்க் குறைபாடும் (Hormone deficiency) மலட்டுத் தன்மையை உண்டாக்கும். ஆண்-களுக்கு ‘‘ஆன்ட்ராஜன்’’ (Androgen), ‘‘டெஸ்ரோஸ்டிரான்’’ (Testo Strero ne) போன்ற ஊக்கி நீர்கள் ஆண் அணுக்கள் உற்பத்தியையும், எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும். இந்த வகை ஊக்கி நீர்க் குறைபாடு மலட்டுத் தன்மையை உண்டாக்கும்.
அடிப்படையில் பெண்களைவிட ஆண்-களுக்கே மலட்டுத்தன்மை ஏற்படக் கூடிய நிலை இருக்கும். ஆனால், குழந்தை இல்லை என்றால் பெண் மீதே பழி சுமத்தப்படும் சமூகக் கொடுமையே நடைபெறும் நிகழ்வாக உள்ளது. ‘‘மலடி’’ என்றுதான் சமூகத்தில் சொல்கிறார்களே ஒழிய, ‘‘மலடன்’’ என்று யாரும் குறிப்பிடுவதில்லை. ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள்தான் ‘தோஷம்‘ உள்ளவர்கள், ‘‘விபசாரி’’ என்று பெண்ணுக்குத்தான் பெயர். தகாத உறவைக் கொண்ட ஆண்களுக்கு எந்தப் பெயரும் இல்லை. ‘‘விதவை’’ என்ற பெயர் உள்ளதே தவிர, ‘‘விதவன்’’ என்ற பெயர் எங்கும் இல்லை. குழந்தையின்மை என்ற பழி முழுதும் பெண்களின் மேல்தான் சுமத்தப்படுகிறதே தவிர, ஆண்களை யாரும் குறை சொல்வதில்லை. மருத்துவ ஆய்வுக்கு இணையர் இருவரும் வரவேண்டும் என்றால் ஆண்கள் ஒத்துழைப்பதில்லை. எங்கே தன் குறைபாடு தெரிந்து ‘‘ஆண்மை’’ இல்லை என்று தெரிந்து விடுமோ என்கிற அச்சம். இதுபோன்ற நிலைகளால்தான் குழந்தையின்மை என்ற குறைபாடு இருக்கும் நிலை. அறிவியல் முன்னேற்றத்தில் படிப்படியாக இந்த நிலையும் மாறிவருகிறது. மலட்டுத் தன்மைக்கான அடிப்படைக் காரணங்களைச் சரியான முறையில் ஆய்வு செய்து, கண்டறிந்து, அதற்கான மருத்துவம் செய்தால் பெரும்பாலான இணையர்களுக்கு குழந்தையின்மைக் குறைபாட்டைச் போக்க முடியும்!
(தொடரும்…)