காமராசர் பற்றி தந்தை பெரியாரின் கணிப்பு!

அக்டோபர் 1-15,2021

 

“தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகின்றது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும் நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூற வேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் ஆகட்டும்; அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் _இவர்கள் ஆட்சியில் எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை.

தோழர்களே! நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.’’

(இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் நான்காவது மாநாடு தேவகோட்டையில் 9.7.1961இல் நடைபெற்றபோது தந்தை பெரியார் அவர்கள் பேசியது – ‘விடுதலை’ 18.7.1961)


காமராஜருக்கு வாழ்த்துக் கூற வேண்டும்!

கல்வி சம்பந்தப்பட்ட வரையில் எந்த நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் கடவுள் வாழ்த்து சொல்லுவதை நிறுத்திவிட்டு, காமராசருக்கு வாழ்த்துக் கூறவேண்டும். அவரது முயற்சியால்தான் இத்தனை பேரும் படிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அவர் காலத்தில்தான் பள்ளிகள் நாடெங்கும் திறக்கப்பட்டன. பட்டி தொட்டிகளிலெல்லாம் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. 5 மைலுக்கு ஓர் உயர்தரப் பள்ளி, 3 மைலுக்கு ஓர் உயர்தரப்பள்ளி என்று பள்ளிக்கூடங்களை ஆரம்பித்ததோடு கல்லூரி வரை இலவசக் கல்வி என்றாக்கி இதுவரை நம் மக்களின் கல்விக்கு இருந்து வந்த தடையை உடைத்தெறிந்ததன் பயன்தான் நம் மக்கள் இன்று 9 பேரிலிருந்து 50 பேர்கள் வரை படித்தவர்களாகும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்கு நன்றி தெரிவிக்கவே இக்காரியத்தைச் செய்த காமராசருக்கு முதலில் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டுமென்கிறேன்.

(5.7.1968 சேலம் நகராட்சி

உயர்நிலைப்பள்ளியில் மாணவர்

இலக்கிய மன்ற விழாவில் தந்தை பெரியார் ‘விடுதலை’ 5.8.1968)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *