ஒப்பற்ற சுயசிந்தனையாளர் பெரியார்

டிசம்பர் 16-31, 2020

பெரியாரில் பெரியார்
தம் நிலை விளக்கம்போலத் தந்தை பெரியார் அவர்கள் அவ்வப்போது வெளியிட்டிருக்கும் கருத்துகள் அவர் தம் உள்ளத்தைக் காட்டும் பளிங்கு முகங்களாகத் திகழக் காண்கிறோம். அப்பளிங்கு முகங்களில் காணப்படும் அவர் தம் அகச் செவ்வியை நோக்குந்தோறும் அவர் தம் பண்பாடு அம்மவோ! எத்துணை விழுமியது என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
என் உடல் நிலையும் எனது முடிவை அவசரப்படுத்துகிறது. நான் (எனது உடல் நிலை) படுக்கையில் இருக்கவேண்டியவன். ஆனால் என்னால் படுக்கையில் இருக்க முடியவில்லை. ஏனெனில் படுத்துக் கொண்டே முடிவு பெற எனக்கு இஷ்டமில்லை – இஷ்டமே இல்லை. நடமாடிக்கொண்டு முடிவுபெற வேண்டுமென்றே முடிவு செய்து நடமாடுகிறேன்.
(விடுதலை தலையங்கம், 10.02.1968)

தமது 90ஆவது வயதில் பலவகையிலும் உடல் வேதனையால் துன்புற்ற நிலையில், அவர் வெளியிட்டிருக்கும் இக்கருத்துகள் அவர் உள்ளத்தில் ஒரு பகுதியை வெளிப்படுத்தக் காண்கிறோம். தாம் நடமாடாமல் படுத்த படுக்கையாக இருக்க வேண்டியவர் என்பதைத் தம் உடல் தமக்குணர்த்தக் காண்கிறார் பெரியார். ஆனால், தம்மால் படுக்கையிலிருக்க முடியவில்லை என்கிறார். ஏன்? உடல் முழுதும் புண்ணா? படுத்தால் அப்புண் வலி தாங்க முடியவில்லையா? அவையெல்லாம் ஒன்றுமில்லை. படுக்கையில் இருக்க முடியாத நிலை அவர் உடலுக்கில்லை; அவர் உள்ளமே அந்நிலையில் இருக்கிறது. இறுதி மூச்சு உள்ள வரையில் தம் கடமையை ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உறுதி படைத்த பெரியாரின் வைரமனம் நோயாலும், முதுமையாலும் மெலிந்து, நலிந்து, நைந்த நிலையிலும் உடலைப் படுக்கவிடவில்லை என்பதுதானே அதன் பொருள். படுத்துக் கொண்டு முடிவு பெற இஷ்டமேயில்லை என்கிறாரே. நடமாடிக் கொண்டே முடிவுபெற வேண்டும் என்று நடமாடுவதாகக் கூறுகிறாரே. அதன் பொருள் என்னவென்று நினைக்கிறீர்கள்? கடமையைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். கடமையைச் செய்வதிலேயே தம்முடைய முடிவு ஏற்பட வேண்டும் என்பதுதானே? இப்போது அவர் உள்ளம் தெரிகின்றதல்லவா? அதன் உண்மை புரிகின்றதல்லவா? இத்தகைய பண்பட்ட உள்ளமுடையாரைக் கருதித்தான் வள்ளுவர் பண்புடையார் பட்டுண்டு உலகம் என்று கூறினார். ஆம்; மெய்தான்; பெரியார் என்னும் அப்பண்புடையார் தமிழ் உலகில் தோன்றியதனாலேதான் தமிழ் உலகம் இன்று இந்த அளவாவது வாழ்கின்றது.
முடியும்வரை கடமை செய்யவேண்டும் என்று கருதினாரே பெரியார்.

அக்கடமை என்னவென்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைத் தெரிந்து கொண்டால் தான் அப்பண்பாட்டின் மேன்மை துலங்கும்.
ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல், மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அத்தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணிசெய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு கொள்கையையும், திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.

(உயர்ந்த எண்ணங்கள் இறுதிப் பக்கம்)
வேறு சில பெருமக்களைப்போல் அரசியல் போன்றவற்றில் தாம் ஆற்றவேண்டிய கடமைகளை இவர் சிறப்பாகக் கருதவில்லை. ஏனென்றால் நிலம் சமமாக இருந்தால்தான் அல்லது செம்மையாக இருந்தால்தான் அதில் பயிரிடுதல், வீடு கட்டுதல் போன்றவற்றைப் பற்றிப் பொறுப்பும் அறிவுமுள்ள ஒருவர் எண்ணவேண்டி வரும். அந்நிலம் மேடு பள்ளம் உடையதாய்க் காடும் கரம்புமாய்ச் சேறும் சகதியுமாய்க் கல்லும் முள்ளும் நிறைந்ததாய் இருக்குமானால் அந்நிலத்தைச் செப்பனிட்டுப் பண்படுத்துவதுதான் அத்தகையோரது முதற்கடமையாகும். அதன் பிறகே அதில் பயிரிடுவதா? என்ன பயிரிடுவது? கட்டடம் கட்டுவதா? எத்தகைய கட்டடம் கட்டுவது? என்பன போன்றவற்றையெல்லாம் எண்ணுவது தகும். பெரியார் தம் பணிக்கு உரியதாக முதலில் எல்லை கோலிக்கொண்ட நிலம் தமிழ் சமுதாயமாகும். அது உலகில் உள்ள ஏனைய பல சமுதாயங்களைப் போல் பொதுவான சீர்மையும் அற்றதாய் இருப்பதோடு, ஜாதி, சமயம், சாத்திரம், சட்டம், அரசியல், பொருளியல், அறிவு போன்ற ஏராளமான துறைகளில் இழிவடைந்தும் இருக்கக் கண்டார்.

மேலும் அச்சமுதாய மக்கள் அவற்றை எல்லாம் இழிவென்று கருதாததோடு, அவற்றை தமக்கு ஏற்றனவென்றும், இயல்பாகத் தமக்குரியன வென்றும் கருதி இருந்ததோடு, அதிலிருந்து தாம் விடுபட வேண்டும், முன்னேற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் அற்றவர்களாய் இருக்கக் கண்டார். சேற்றிலே சுகம் காணும் எருமைகளைப்போல் இழிவில் சுவையும், ஏற்றமும் காணும் இச்சமுதாய மக்களை முன்னேற்றுவதற்கு முதலில் செய்யவேண்டியது அவர்களை அவ்விழிவினின்றும் கரையேற்றி உலகிலுள்ள ஏனைய சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டேயாகும். அத்தொண்டைச் செய்வதற்கு இதுவரை எந்தக் கடவுளோ, கடவுளின் அருள்பெற்றவர்களோ சமுதாய, சமய சீர்திருத்தவாதிகளோ, அரசியல்வாதிகளோ, மற்றவர்களோ யாரும் முன்வராததினால் தாமே அதனைத் தம்மேற் போட்டுக் கொண்டு அதில் முழுமூச்சாக ஈடுபட்டு அதிலேயே தம் வாழ்வின் இலட்சியத்தையும், அமைதியையும், இன்பத்தையும் கண்டு அதே பணியாக இருந்து வந்தார். ஆகவே பெரியார் அவர்கள் பிறர்க்கென வாழ்வதையே தம்மினிய வாழ்வாக அமைத்துக் கொண்டிருப்பதால் அத்தொண்டினைச் செய்யாத நாளெல்லாம், செய்ய நேராத நாளெல்லாம், செய்ய இயலாத நாளெல்லாம் தாம் வாழாத நாளாகவும், இன்பமும் அமைதியும் பெறாத நாளாகவும், துன்ப நாளாகவுமே இருக்கக் கண்டார். அதனாற்றான் இறுதிவரை மக்கள் பணி செய்துகொண்டே இருந்து மறைந்தார்.

பெரியாருக்குத் தொண்டு, மக்களுக்காகவே என்பதுதான் கருத்தே தவிர, தொண்டு புகழுக்காக, தொண்டு பாராட்டிற்காக, தொண்டு பட்டம் பதவிகளுக்காக, தொண்டு கடவுள் அருளுக்காக என்பன போன்ற வேறு எந்த நோக்கமும் இல்லாமல் அதில் அவர் ஈடுபட்டு இருந்தார். மக்களிடம் பெறும் புகழைக்கூட அவர் விரும்பவில்லை. ஏனெனில் பக்குவமற்ற இழிந்த மக்களிடம் புகழை எதிர்பார்க்கும் யாரும் உண்மையான தொண்டாற்ற முடியாது என்பது பெரியாருக்குத் தெரியும். திராவிட மக்களுடைய இழிவு நீங்க வேண்டும் என்பது தவிர, அக்கவலை ஒன்று தவிர, பெரியாருக்கு வேறு எக்கவலையும் இல்லையென்பதோடு வேறு தாம் அடைய வேண்டியதாக ஏதும் இருப்பதாகவும் அவர் நம்பவில்லை.

(இன இழிவு ஒழிய இஸ்லாமே நன் மருந்து – என்ற நூலிலிருந்து)
இவ்வாறு தொண்டாற்றத் தொடங்கிய பெரியார் தம் குறிக்கோளையும் அதை அடையத் தாம் வகுத்துக் கொண்ட நோக்கம், முறை போன்றவற்றையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்தியே வந்திருக்கிறார். தாம் பின்னால் மறைந்து நின்று கொண்டு வேறு சிலரைத் தூண்டிவிட்டு எச்செயலையும் அவர் செய்ததில்லை செய்யச் சம்மதித்ததுமில்லை அதற்கு வேண்டிய சக்தி, வசதி போன்றவை தம்மிடமில்லையென்பதை அவரே ஒப்புக் கொள்கிறார். இயல்பிலேயே அவற்றிற்குத் தகுதியில்லாத பெரியார் அத்தகுதியற்ற நிலையிலேயே தம்மை வைத்துக் கொள்ளுவதில் இறுதிவரை விழிப்பாகவே இருந்திருக்கிறார். அதனாற்றான் பிறவித் தொண்டரான பெரியார் தம் மறைவு வரையிலும் மன்பதைக்கு அன்பராய், மக்கள் ஊழியராய்த் திராவிடத் திருத்தொண்டராய் வாழ்ந்திருக்கிறார்.
(குடிஅரசு 24.11.1940)

தம் தொண்டு வாழ்க்கையில், பல நேரங்களில், வெவ்வேறு கட்சிகளையும், வெவ்வேறு தலைவர்களையும், ஆதரித்தும், பாராட்டியும், எதிர்த்தும், ஒழித்தும் வந்திருக்கிறார். இதை மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறவர்கள் குழம்பக் கூடும்; திகைக்கக் கூடும்; முரண்பாடு இருப்பதாகக் கருதக் கூடும். மக்கள் நலமே குறிக்கோளாகக் கொண்ட பெரியார் அதற்குத் தேவையானவைகளை அவ்வப்போது ஆதரித்தும் பாராட்டியும் வந்திருக்கிறார். தம்மால் ஆதரிக்கப்பட்டவைகளும், மற்றவைகளும், மற்றவர்களும் மக்கள் நலனுக்கு மாறானவைகளாக ஊறு விளைவிப்பவர்களாகத் தோன்றினால் அந்நொடியிலேயே வேறு எதைப் பற்றியும் கவலைப்படாது அவைகளையும், அவர்களையும் எதிர்ப்பதிலும் ஒழிப்பதிலும் ஈடுபட்டிருக்கிறார்.
(விடுதலை, 01.06.1954)

அத்தகைய போக்கு அவரிடத்தில் இருந்ததால்தான் அவர் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தபோது போக்குவரவுக்கு இடையூறாக இருந்த கட்டடங்களையும் மரங்களையும் துணிந்து அகற்றினார். அதனால் ஊரிலிருந்த நல்லவர்கள், நண்பர்கள் போன்ற பலருடைய எதிர்ப்பையும் பெற வேண்டியவரானார். மரத்தில் பேயிருப்பதாகச் சொல்லி அதனை ஏலத்தில் எடுக்கவோ வெட்டவோ, பிறர் மறுத்தபோது தாமே அதனை ஏலத்தில் எடுத்து வெட்டுவித்தார். அப்போதும் பொறாமைக்காரர்கள் சும்மாயிராமல் தலைவரே குறைந்த விலையில் மரங்களை ஏலம் எடுத்துக் கொண்டார் என்று அரசுக்குத் தெரிவித்துத் தொல்லை தந்திருக்கிறார்கள்.
(விடுதலை, 06.11.1967)

இப்படி ஒரு மரத்தை அகற்றியதற்கே இவ்வளவு உள் நோக்கமும், எதிர்ப்பும் காட்டியிருக்கிறார்கள் என்றால் பெரியாரின் பிற பெருஞ்செயல்களுக்கு எத்தனை இடையூறுகளை அவர்கள் விளைவித்திருப்பார்கள் என்று நாம் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

பெரியார் பணத்தாசை பிடித்தவர், பணஞ்சேர்ப்பதிலேயே குறியாய் இருப்பவர் என்றெல்லாம் நாக்கு நரம்பில் உணர்ச்சி யில்லாதவர்களெல்லாம் கூறியதை நாம் கேட்டிருக்கிறோம். பெரியார் என்னும் பெரும் பண்பாளர் தாமே அதுபற்றிக் கூறுவதை இங்குக் காணலாம்.

எப்போதும் என்னிடம் என் பணம் என்று ஒன்றுமில்லை. நான் பொதுப் பணிக்கு வந்த போது என்னிடமிருந்த பணத்தை – சொத்தை யெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்து விட்டதால் இயக்கப் பணத்தில்தான் நான் சாப்பிடுவது முதல் எல்லாமுமாகும். நீங்கள் கொடுத்த பணத்தைத்தான் கல்லூரிக்கும் மருத்துவமனைக்கும் வழங்கினேனே தவிர, என் பணம் எதுவும் இல்லை. அது பொது நன்மைக்கானது என்று பார்த்து (பொது) இயக்கப் பணத்தை அதற்காகச் செலவிட்டேன்.
(விடுதலை, 18.08.1968)

தம் குடும்பச் சொத்தையும், தம்மை நம்பித் தமக்காகத், தம்மிடம் பிறர் கொடுத்தவற்றையும் பொதுவுக்கே ஆக்கிவைத்துப் பொதுநலம் விளைத்த அப்புனிதரை இச்சமுதாயம் என்றும் மறக்காது.
தேசிய இயக்கத்தைப் பெரியார் குறைகூறியபோதெல்லாம் பெரியாருக்கு நாட்டுப் பற்றும், அரசியல் அறிவும் இல்லையென்று தெளிவில்லாதவர்கள் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். பெரியாருக்கு நாட்டுப்பற்று இருந்தது; அரசியல் அறிவு இருந்தது என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டிய அவசியம் யாருக்குமில்லை. ஆனால், அவற்றை அவர் ஒதுக்கியதுபோல் காணப்பட்டதற்குக் காரணமே அவற்றைவிட அவர் சிறப்பாகக் கருதியது சுயமரியாதையும் சுதந்திர உயர்வுமேயாகும். என்னுடைய சுயமரியாதைக்கும் சுதந்திரத்திற்கும் தேசாபிமானத்தையும் இராஜிய ஞானத்தையும் கூட விற்கத் தயாராய் இருக்கிறேன்.
(குடிஅரசு, 05.06.1927)

என்னும் பெரியாரின் கூற்று மேற்கூறிய கருத்தைத் தெளிவுறுத்தக் காணலாம். சுயமரியாதைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் அவர் தம்மையே அழித்துக் கொள்ளத் தயங்காதவர். ஆதலால் அவருக்கு நாட்டுப்பற்றும் மற்றவைகளும் பொருட்படுத்தக் கூடியன அல்ல. தம்முடைய சுயமரியாதையையும் உரிமையையும் ஒப்புக்கொள்ளாத எந்த இடத்திலும் அவர் இருக்க விரும்பமாட்டார், அதனாற்றானே பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார். தம் மக்கள் சுதந்திர உணர்வும், சுயமரியாதை உணர்வும் பெற்று இழிவு நீங்கி உயர வேண்டும் என்று பாடுபட்ட பெரியார் தம்மளவில் அவற்றை விட்டுக்கொடுக்க எவ்வாறு இணங்குவார்? உண்மையில் நரகம் என்று ஒன்றிருந்தால், அல்லது அதைவிடக் கொடிய துன்பங்கள் நிறைந்த இடம் ஒன்று இருக்குமானால் அங்குச் சுயமரியாதை உள்ள ஒரு மனிதனாகத் தாம் வாழமுடியுமானால் இங்கு வாழ்வதைவிட அங்குச் சென்று வாழவும் தாம் தயார் என்றுக் கூறுகிறார்.
(குடிஅரசு, 01.05.1948)

இவ்வாறு பெரியார் தம்மைப்பற்றி வெளிப்படுத்தும் கருத்துகளைப் பார்க்கும்போது பெரியார் தன்னலமற்ற தாளாளர் என்று அனைவரும் எண்ணுவர். ஆனால் பெரியாரோ அதனையும் மறுக்கிறார்.
எனக்குச் சுயநலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன். என்னுடைய ஆசையும் சுயநலமும் எல்லையற்றன. திராவிடச் சமுதாய நலனையே என்சொந்தச் சுயநலமாக எண்ணியிருக்கிறேன். அச்சமுதாயத்திற்கு வேண்டிய செல்வமும், பதவியும் என்றிவற்றில் அளவற்ற ஆசை கொண்டிருக்கின்றேன். அந்தச் சுயநலத்திற்காகவே நான் உழைக்கிறேன். (விடுதலை, 15.01.1955)

திராவிடச் சமுதாயத்தின் மொத்த நலத்தையே தம் சுயநலமாக்கிக் கொண்டு வாழ்ந்த பெரியாரைப்போல் மற்றொரு பண்பாட்டாளரை நாம் எங்குக் காணப் போகிறோம்? எப்போது காணப்போகிறோம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *